இரண்டாம் உலகப் போர்
நேச நாடுகளுக்கும், அச்சு நாடுகளுக்கும் இடையில் 1939–45 காலகட்டத்தில் நடைபெற்ற உலகப் போர் / From Wikipedia, the free encyclopedia
இரண்டாம் உலகப்போர் என்பது 1939 முதல் 1945 வரை நடைபெற்ற ஓர் உலகப் போர் ஆகும். அனைத்து உலக வல்லமைகள் உள்ளிட்ட உலக நாடுகளில் பெரும்பாலானவை இதில் பங்கெடுத்தன. இவை அச்சு நாடுகள் மற்றும் நேச நாடுகள் என இரண்டு எதிரெதிர் இராணுவக் கூட்டணிகளை உருவாக்கின. இரண்டாவது உலகப் போரானது ஓர் ஒட்டுமொத்தப் போர் ஆகும். இதில் 30 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 10 கோடிக்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் நேரடியாகப் பங்கெடுத்தனர்.
|
||||||||||||||||||||||||
இப்போரில் பங்கெடுத்த முக்கிய நாடுகள் தங்களது ஒட்டுமொத்த பொருளாதார, தொழில்துறை மற்றும் அறிவியல் செயலாற்றலைப் போர் வெற்றிக்குப் பயன்படுத்தின. இதனால் இராணுவம் மற்றும் குடிசார் வளங்களுக்கு இடையேயான வேறுபாடானது மறைந்து போனது. இப்போரில் விமானங்கள் ஒரு முக்கியப் பங்காற்றின. மக்கள் தொகை மிகுந்த மையங்கள் மீது குண்டு வீசவும், எக்காலத்திலும் போரில் பயன்படுத்தப்பட்ட 2 அணு ஆயுதங்களை வீசவும் பயன்படுத்தப்பட்டன.
மனித வரலாற்றில் இதுவரை அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய சண்டையாக இரண்டாம் உலகப் போர் திகழ்கிறது. 7 முதல் 8.5 கோடிப் பேர் இதில் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் குடிமக்களாக இருந்தனர். இனப்படுகொலை (பெரும் இன அழிப்பு உட்பட), பட்டினி, படுகொலைகள் மற்றும் நோய் காரணமாக கோடிக்கணக்கானோர் இறந்தனர். அச்சு நாடுகளின் தோல்விக்குப் பிறகு செருமனி மற்றும் சப்பான் ஆக்கிரமிக்கப்பட்டன. செருமானிய மற்றும் சப்பானியத் தலைவர்களுக்கு எதிராகப் போர்க் குற்றத் தீர்ப்பாயங்கள் நடத்தப்பட்டன.
இரண்டாம் உலகப் போருக்கான காரணங்கள் விவாதத்திற்குரியதாக உள்ளன. ஆனால், இரண்டாம் இத்தாலிய-எத்தியோப்பியப் போர், எசுப்பானிய உள்நாட்டுப் போர், இரண்டாம் சீன-சப்பானியப் போர், சோவியத்-சப்பானிய எல்லைச் சண்டைகள், ஐரோப்பாவில் பாசிசத்தின் வளர்ச்சி மற்றும் முதலாம் உலகப் போர் முதல் ஐரோப்பாவில் அதிகரித்து வந்த பதட்டங்கள் ஆகியவை முக்கிய காரணங்களாக விளங்கின. இரண்டாம் உலகப் போரானது பொதுவாக 1 செப்டம்பர் 1939 அன்று தொடங்கியதாகப் பொதுவாகக் கருதப்படுகிறது. அன்று தான் இட்லர் தலைமையிலான நாசி செருமனியானது போலந்து மீது படையெடுத்தது. இதைத் தொடர்ந்து, 3 செப்டம்பர் அன்று செருமனி மீது ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்சு போர்ப் பிரகடனம் செய்தன. ஆகத்து 1939இன் மோலடோவ்-ரிப்பன்டிராப் ஒப்பந்தத்தின் கீழ் செருமனி மற்றும் சோவியத் ஒன்றியம் போலந்தைப் பிரித்துக் கொண்டன. பின்லாந்து, எஸ்டோனியா, லாத்வியா, லித்துவேனியா மற்றும் உருமேனியா ஆகிய பகுதிகள் முழுவதும் தங்களது தாக்கம் கொண்ட பகுதிகளைக் குறிப்பிட்டன. 1939இன் பிற்பகுதி முதல் 1941ஆம் ஆண்டின் ஆரம்பம் வரை ஒரு தொடர்ச்சியான படையெடுப்புகள் மற்றும் ஒப்பந்தங்கள் மூலம் செருமனி பெரும்பாலான ஐரோப்பியக் கண்டப் பகுதியை வென்றோ அல்லது கட்டுப்பாட்டின் கீழோ கொண்டு வந்தது. இத்தாலி மற்றும் சப்பானுடன் (பிற நாடுகளுடன் பின்னர்) அச்சு நாடுகளின் கூட்டணியை உருவாக்கியது. வட மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கப் படையெடுப்புகள், மற்றும் 1940இன் நடுப்பகுதியில் பிரான்சின் வீழ்ச்சிக்குப் பின் போரானது முதன்மையாக ஐரோப்பிய அச்சு நாடுகளுக்கும், பிரித்தானியப் பேரரசுக்கும் இடையில் பால்கன்களில் போர், பிரிட்டன் வான் சண்டை, ஐக்கிய இராச்சியம் மீதான த பிளிட்ஸ் மற்றும் அத்திலாந்திக் யுத்தம் ஆகியவையாகத் தொடர்ந்தது. 22 சூன் 1941இல், ஐரோப்பிய அச்சு நாடுகள் சோவியத் ஒன்றியம் மீது படையெடுப்பதற்குச் செருமனி தலைமை தாங்கியது. இதன் மூலமாகக் கிழக்குப் போர்முனையைத் திறந்தது. இதுவே வரலாற்றின் மிகப் பெரிய நிலப் போர் முனையாகும்.
ஆசியா மற்றும் பசிபிக் பகுதியை ஆதிக்கத்துக்குள் கொண்டு வருவதை இலக்காகக் கொண்டிருந்த சப்பான் 1937இல் சீனக் குடியரசுடன் போரைத் தொடங்கியது. திசம்பர் 1941இல் அமெரிக்கா மற்றும் பிரித்தானிய நிலப்பரப்புகளைத் தாக்கியது. அதே நேரத்தில், தென்கிழக்காசியா மற்றும் நடு பசிபிக் பகுதிகளுக்கு எதிராகத் தாக்குதல்களைத் தொடங்கியது. முத்துத் துறைமுகத்திலிருந்த ஐக்கிய அமெரிக்கக் கப்பல் குழு மீதான தாக்குதலும் இதில் அடங்கும். இது சப்பான் மீது ஐக்கிய அமெரிக்கா போர்ப் பிரகடனம் செய்வதற்கு இட்டுச் சென்றது. தங்களது ஆதரவைத் தெரிவிப்பதற்காக ஐரோப்பிய அச்சு நாடுகள் ஐக்கிய அமெரிக்கா மீது போரை அறிவித்தன. சீக்கிரமே, சப்பான் மேற்கு பசிபிக் பகுதிகளைக் கைப்பற்றியது. 1942ஆம் ஆண்டின் மிக முக்கியமான மிட்வே யுத்தத்தில் தோற்றதற்குப் பிறகு, சப்பானின் முன்னேற்றங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. பிறகு, செருமனி மற்றும் இத்தாலி வட ஆப்பிரிக்காவிலும், சோவியத் ஒன்றியத்தின் சுடாலின்கிராட் யுத்தத்திலும் தோற்கடிக்கப்பட்டன. 1943இல் குறிப்பிடத்தக்க பின்னடைவுகளைச் சந்தித்தன. இதில் செருமனி கிழக்குப் போர் முனையில் அடைந்த ஒரு தொடர்ச்சியான தோல்விகள், சிசிலி மற்றும் இத்தாலியக் கண்டப் பகுதி மீது நேச நாடுகளின் படையெடுப்பு, பசிபிக் பகுதியில் நேச நாடுகளின் தாக்குதல்கள் ஆகியவையும் அடங்கும். இது அச்சு நாடுகள் தங்களது தன் முனைப்பை இழப்பதற்கு இட்டுச் சென்றது. அனைத்து போர் முனைகளிலும் பின் வாங்கும் கட்டாய நிலைக்கு அவற்றைத் தள்ளியது. 1944இல் செருமனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சு மீது மேற்கு நேச நாடுகள் படையெடுத்தன. அதே நேரத்தில், தான் இழந்த நிலப்பரப்புகளைச் சோவியத் ஒன்றியம் மீண்டும் பெற்றது. தனது கவனத்தைச் செருமனி மற்றும் அதன் கூட்டு நாடுகளின் மீது திருப்பியது. 1944-45இல் ஆசியக் கண்டப்பகுதியில் சப்பான் புதிதாக வென்ற பகுதிகளை இழக்க ஆரம்பித்தது. அதே நேரத்தில், நேச நாடுகள் சப்பானியக் கடற்படைக்குச் சேதம் விளைவித்தன. மேற்கு அமைதிப் பெருங்கடலின் முக்கியமான தீவுகளை நேச நாடுகள் கைப்பற்றின.
செருமனி ஆக்கிரமித்திருந்த நிலப்பரப்புகள் விடுதலை செய்யப்பட்டது மற்றும், மேற்கு நேச நாடுகள் மற்றும் சோவியத் ஒன்றியம் செருமனி மீது படையெடுத்தது ஆகியவற்றுடன் ஐரோப்பாவில் போரானது முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. சோவியத் துருப்புகளிடம் பெர்லின் வீழ்ந்தது. இட்லர் தற்கொலை செய்து கொண்டார். 8 மே 1945 அன்று செருமனி நிபந்தனையற்ற சரணடைவை ஏற்றது. 26 சூலை 1945இன் போதுசுதாம் அறிவிப்பின் நிபந்தனைகளுக்கு சப்பான் சரணடைய மறுத்ததைத் தொடர்ந்து, ஐக்கிய அமெரிக்கா சப்பானிய நகரங்களான ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது முறையே 6 மற்றும் 9 ஆகத்து மாதத்தில் முதல் அணு குண்டுகளை வீசியது. சப்பானியத் தீவுக்கூட்டம் மீது ஏற்படப்போகும் படையெடுப்பை எதிர்கொள்ளும் நிலை, மேற்கொண்ட அணுகுண்டு வீச்சுகளுக்கு ஆளாகும் நிலை மற்றும் மஞ்சூரியா மீது படையெடுப்பதற்கு முன்னர் சோவியத் ஒன்றியம் சப்பானுக்கு எதிராகப் போருக்குள் நுழைவதாக அறிவித்தது ஆகியவை காரணமாகச் சரணடையும் தனது எண்ணத்தை 10 ஆகத்து அன்று சப்பான் அறிவித்தது. 2 செப்டம்பர் 1945 அன்று ஒரு சரணடையும் ஆவணத்தில் கையொப்பமிட்டது.
இரண்டாம் உலகப்போரானது உலகின் அரசியல் சார்பு மற்றும் சமூக அமைப்பை மாற்றியது. பன்னாட்டு ஒத்துழைப்பை உருவாக்கவும், எதிர்காலச் சண்டைகளைத் தடுக்கவும் ஐக்கிய நாடுகள் அவையானது நிறுவப்பட்டது.[1] வெற்றி பெற்ற உலக வல்லமைகளான சீனா, பிரான்சு, சோவியத் ஒன்றியம், ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகியவை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பினர்களாக உருவாயின. சோவியத் ஒன்றியமும், ஐக்கிய அமெரிக்காவும் எதிரெதிர் வல்லரசுகளாகத் தோன்றின. இது கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலப் பனிப்போருக்கான தளத்தை அமைத்தது. ஐரோப்பிய அழிவை ஒட்டி ஐரோப்பாவின் பெரிய சக்திகளின் தாக்கமானது குறைந்தது. ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் குடியேற்ற விலக்கத்தைத் தொடங்கி வைத்தது. தொழில்துறை சேதமடைந்த பெரும்பாலான நாடுகள் பொருளாதார மீட்சி மற்றும் விரிவை நோக்கி நகர்ந்தன. குறிப்பாக ஐரோப்பாவில், எதிர்காலச் சண்டைகளை முன்னரே தடுத்து நிறுத்தும் முயற்சியாகவும், போருக்கு முந்தைய எதிர்ப்பை நிறுத்தவும், ஒரு பொதுவான அடையாள உணர்வை உருவாக்கவும் அரசியல் மற்றும் பொருளாதார இணைப்பானது தொடங்கப்பட்டது.