கின்னஸ் உலக சாதனை, பத்மஸ்ரீ, பத்மபூஷண், பல தேசிய விருதுகள்..பெற்ற பன்மொழி, பல்துறை வித்தகர், S.P.B. From Wikipedia, the free encyclopedia
எஸ். பி. பாலசுப்பிரமணியம் (S. P. Balasubrahmanyam; 4 சூன் 1946 – 25 செப்டம்பர் 2020), இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகரும், இசையமைப்பாளரும், நடிகரும், தயாரிப்பாளரும் ஆவார். இவர் எஸ்.பி.பி. (SPB) என்ற முன்னெழுத்துகளாலும் எஸ். பி. பாலு என்றும் பரவலாக அறியப்படுகிறார். இவர் தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி மற்றும் மலையாளத் திரைப்படங்களில் அதிகமாகப் பணியாற்றியுள்ளார்.[7] 1966 முதல் திரைப்படங்களில் பாடத் தொடங்கி, 40,000 இற்கும் அதிகமான பாடல்களை 16 இந்திய மொழிகளில் பாடியுள்ளார்[8] இவர் "பாடும் நிலா" என்று அழைக்கப்படுகிறார்.[9]
எஸ். பி. பாலசுப்ரமணியம் | |
---|---|
2013 இல், எஸ். பி. பாலசுப்ரமணியம் | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் |
பிற பெயர்கள் | பாடும் நிலா[1] |
பிறப்பு | [2] நெல்லூர், சென்னை மாகாணம் (தற்போது ஆந்திரப் பிரதேசம், இந்தியா)[3][4][5] | 4 சூன் 1946
இறப்பு | 25 செப்டம்பர் 2020 74) சென்னை, தமிழ்நாடு, இந்தியா | (அகவை
இசை வடிவங்கள் | பின்னணிப் பாடகர்[2] |
தொழில்(கள்) | பாடகர், பின்னணிப் பாடகர், பின்னணி பேசுபவர், நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், இசையமைப்பாளர் |
இசைத்துறையில் | 1966–2020[6] |
இணையதளம் | இணையத்தளம் |
இவர் கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் ஆறு சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்கான தேசியத் திரைப்பட விருதுகளையும்; ஆந்திர மாநிலத்தின் 25 நந்தி விருதுகளையும், மற்றும் பல கருநாடக, தமிழ்நாடு அரசு விருதுகளையும் பெற்றுள்ளார்.[10][11] அத்துடன், பிலிம்பேர் விருது, ஆறு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் ஆகியவற்றையும் வென்றுள்ளார்.[12][13] உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.[14][15][16][17] 2012 ஆம் ஆண்டில், இந்தியத் திரைத்துறைப் பங்களிப்புகளுக்காக என்.டி.ஆர் தேசிய விருது இவருக்கு வழங்கப்பட்டது.[18] 2016 ஆம் ஆண்டில் இந்தியத் திரைப்பட ஆளுமைக்கான வெள்ளி மயில் விருது வழங்கப்பட்டது.[19][20][21][22] இந்திய அரசு இவருக்கு பத்மசிறீ (2001), பத்ம பூசண் (2011) விருதுகளையும் வழங்கிச் சிறப்பித்தது.[23] சனவரி 2021இல் இவருக்கு இந்தியாவின் குடிமை விருதுகளில் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூசண் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.[24] நவம்பர் 2021இல் இவருக்கு பத்ம விபூசண் விருது இவரின் மறைவிற்குப் பின்பு இந்திய அரசால் வழங்கப்பட்டது.[25] இவரது மகன் எஸ். பி. பி. சரண் விருதினைப் பெற்றுக் கொண்டார்.
பாலசுப்பிரமணியம் 2020 செப்டம்பர் 25 இல் கோவிடு-19 தொற்றினால் பாதிக்கப்பட்டுக் காலமானார்.[26][27]
பாலசுப்பிரமணியம், தெலுங்குக் குடும்பத்தை சேர்ந்த, எஸ். பி. சாம்பமூர்த்தி, சகுந்தலம்மா தம்பதியருக்கு மகனாக சென்னை மாகாணம், நெல்லூர் மாவட்டம், கொணடம்பேட்டை (இன்றைய ஆந்திரா மாநிலத்தில்) மாநிலத்தில் பிறந்தார்.[28][29][30][31][32][33][34] இவருடைய தந்தை சாம்பமூர்த்தி, அரிகதை காலட்சேபக் கலைஞர் ஆவார். இவருடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்களும் ஐந்து சகோதரிகளும் இருக்கின்றனர். இவர்களில் பாடகி எஸ். பி. சைலஜா இளைய சகோதரி ஆவார்.[35][36][37] மகன் எஸ். பி. பி. சரணும் பிரபலமான ஒரு பாடகரும், நடிகரும், தயாரிப்பாளரும் ஆவார்.[38]
பாலசுப்பிரமணியம் இசை ஆர்வத்தை இளவயதிலேயே வளர்த்து, தன் தந்தை அரிகதை வாசிக்கும் பொழுது கவனித்து, ஆர்மோனியம், புல்லாங்குழல் போன்ற இசைக் கருவிகளை வாசிக்கவும் தேர்ச்சி பெற்றார். இவர் பொறியாளர் ஆக வேண்டும் என்ற நோக்கத்தோடு அனந்தபூர், ஜே.என்.டி.யு பொறியியல் கல்லூரியில் மாணவனாக சேர்ந்தார். குடற்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பாலசுப்பிரமணியம் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படித்தார்.[8][39]
இசையில் அதிக நாட்டம் கொண்ட பாலசுப்பிரமணியம், கல்லூரியில் படிக்கும் போதே பல பாடல் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளைப் பெற்றார். 1964 ஆம் ஆண்டு சென்னையை மையமாகக் கொண்ட தெலுங்கு கலாச்சார நிறுவனம் நடத்திய இசை நிகழ்ச்சியில் பாடி முதல் பரிசைப் பெற்றார். ஆரம்பகாலத்தில் மெல்லிசைக் குழு ஒன்று நடத்தி வந்தார். இக்குழுவில் அனிருத்தா (ஆர்மோனியம்), இளையராஜா (கிட்டார், ஆர்மோனியம்), பாஸ்கர், கங்கை அமரன் (கிட்டார்) போன்றோர் பங்கு பெற்றனர்.[40] இவர்களோடு சேர்ந்து எஸ்பிபி இசை நிகழ்ச்சிகளையும் நாடகக் கச்சேரிகளில் பாடல்கள் பாடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தார். எஸ் பி கோதண்டபாணி, கண்டசாலா ஆகியோர் நடுவராக இருந்து பங்குபெற்ற பாடல் போட்டியில் சிறந்த பாடகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[41][42][43] அடிக்கடி இசையமைப்பாளர்களை சந்திப்பதும், பாட வாய்ப்புக் கேட்பதுமாக இருந்த இவருக்கு முதல் போட்டி பாடல் பி. பி. ஸ்ரீனிவாஸ் பாடிய 'நிலவே என்னிடம் நெருங்காதே' என்ற பாடலாகும்.[44] பி. பி. ஸ்ரீனிவாஸ் இவருக்கு தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம், சமசுகிருதம், ஆங்கிலம், உருது போன்ற பல மொழிகளில் தனது பாடல்களை எழுதிக் கொடுத்துள்ளார்.[45]
பாலசுப்பிரமணியம் பின்னணிப் பாடகராக முதன் முதலில் 1966 ஆம் ஆண்டு திசம்பர் 15 தேதி சிறீ சிறீ சிறீ மரியாத ராமண்னா(1967) என்ற தெலுங்குத் திரைப்படத்திற்காக எஸ். பி. கோதண்டபாணியின் இசையில் பாடினார்.[46][47] இப்பாடல் பதிவான எட்டாம் நாளில் கன்னடத்தில் நக்கரே அதே சுவர்க என்ற திரைப்படத்திற்காகப் பாடினார்.[48] இவரது முதலாவது தமிழ் பாடல் எம். எஸ். விஸ்வநாதன் இசையில் எல். ஆர். ஈஸ்வரியுடன் ஓட்டல் ரம்பா என்ற திரைப்படத்துக்காகப் பாடிய "அத்தானோடு இப்படி இருந்து எத்தனை நாளாச்சு" என்பதாகும். ஆனால் இத்திரைப்படம் வெளிவரவில்லை. அடுத்ததாக 1969 இல் சாந்தி நிலையம் படத்தில் வரும் இயற்கையெனும் இளையகன்னி என்ற பாடலை ஜெமினி கணேசனுக்காகப் பாடினார். ஆனால் இப்படம் வெளிவரும் முன்பே எம்.ஜி.ஆருக்காக அடிமைப் பெண் திரைப்படத்தில் பாடிய ஆயிரம் நிலவே வா பாடல் வெளிவந்தது.[49][50][51] இதுவே இவர் பாடி வெளிவந்த முதலாவது திரைப்படம் ஆகும்.[52] எஸ். ஜானகியுடன் இவர் பாடிய முதலாவது பாடல் கன்னிப் பெண் (1969) படத்துக்காக "பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில்" என்பதாகும். இதன் பின்னர் இவர் ஜி. தேவராஜனால் கடல்பாலம் என்ற திரைப்படம் மூலம் மலையாளத் திரைத்துறைக்கும் அறிமுகமானார்.[53]
பாலசுப்பிரமண்யம் 1979 இல் வெளிவந்த சங்கராபரணம் என்ற திரைப்படத்திற்காகப் பாடல்களைப் பாடியதன் மூலம் உலகளவில் பிரபலமானார். சங்கராபரணம் தெலுங்கு திரையுலகில் சிறந்த திரைப்படமாகக் கருதப்படுகிறது.[54] கே. விஸ்வநாத்தின் இயக்கத்தில் வெளிவந்தது. விஸ்வநாத் பாலசுப்பிரமணியத்தின் பெரியப்பா மகன் ஆவார். இத்திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் கே. வி. மகாதேவனால் கருநாடக இசை மெட்டுகளில் உருவாக்கப்பட்டது. பாலசுப்பிரமணியம் முறையாக கர்நாடக இசையைக் கற்கவில்லை என்றாலும் கேள்வி ஞானத்தை வைத்து சங்கராபரணம் பாடல்களைப் பாடினார்.[55] இத்திரைப்படத்திற்காக இவர் தனது முதலாவது சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்கான தேசியத் திரைப்பட விருதைப் பெற்றார்.[56] இவரது முதலாவது இந்தி மொழித் திரைப்படம் ஏக் தூஜே கே லியே (1981) இவருக்கு இரண்டாவது தேசிய விருதையும் பெற்றுக் கொடுத்தது. கே. பாலசந்தர் இதனை இயக்கினார்.[11]
பாலசுப்பிரமணியம் தமிழ்த் திரைப்படங்களுக்கு நிறையப் பாடல்களை பாடினார், குறிப்பாக இளையராஜாவின் இசையில் எஸ். ஜானகியோடு இணைந்தும், தனித்தும், சக பின்னணிப்பாடகர்கள் மற்றும் பாடகிகளுடன் சேர்ந்தும் 70களின் இறுதி முதல் 80களிலும் பல பாடல்களைப் பாடினார்.[57][58][59] தமிழ் திரையிசையில் இளையராஜா, பாலசுப்பிரமணியம், ஜானகி இணைப்பில் வெற்றிப்பாடல்கள் நிறைய உள்ளன. இவற்றில் கருநாடக இசையமைப்பில் வெளியான சலங்கை ஒலி (1983) பாடல்களுக்கு இளையராஜாவும் பாலசுப்பிரமணியமும் தேசிய விருதுகள் பெற்றனர். சிப்பிக்குள் முத்து (1986), உருத்திரவீணா (தெலுங்கு, 1988) இவர்கள் இருவருக்கும் மீண்டும் தேசிய விருதுகளைப் பெற்றுக் கொடுத்தன.[60] இளையராஜா மட்டுமல்லாது இடைக்காலத்தில் இசையமைத்த எல்லா இசையமைப்பாளர்களின் இசையிலும் பின்னணி பாடியிருக்கிறார்.[61]
1989 முதல் பாலசுப்பிரமணியம் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்குப் பின்னணி பாடிவந்தார். மைனே பியார் கியா (1989) இந்திப் படம் பெரும் வெற்றி பெற்றது.[62] இத்திரைப்படத்தில் எல்லாப் பாடல்களையும் இவரே பாடினார். எல்லா பாடல்களும் வெற்றி பெற்றது மட்டுமல்லாது தில் தீவானா பாடல் சிறந்த பின்னணிப் பாடகருக்கான பிலிம்பேர் விருதினையும் இவருக்கு வாங்கி கொடுத்தது. இவர் 90களிலும் காதல் ரசனையோடு கானின் திரைப்படங்களுக்கு பாடினார்.[63] இவற்றில் குறிப்பிடத்தக்கதாக ஹம் ஆப்கே ஹைன் கௌன் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது.[64] இப்படத்தில் லதா மங்கேசுக்கருடன் இவர் பாடிய திதி தேரா தேவர் தீவானா பாடல் மிகவும் பிரபலமானது. இவற்றின் மூலம் பாலசுப்பிரமணியம் இந்திய அளவில் மிகச்சிறந்த பின்னணிப்பாடகர்களில் ஒருவராக இனங்காணப்பட்டார்.[65][66][67][68][69][70]
௭ஸ் பி பாலசுப்பிரமணியம் 1990களில் இசையமைப்பாளர்களான தேவா, வித்யாசாகர், எம். எம். கீரவாணி , எஸ். ஏ. ராஜ்குமார், பரத்வாஜ் போன்றோரின் இசையில் நிறைய பாடல்களைப் பாடினார். ஆனால் மிகப்பெரிய வெற்றி என்று சொன்னால் அது ஏ. ஆர். ரகுமான் இசையில் பாடிய பாடல்களாகும்.[71] ஏ ஆர் ரகுமானின் முதலாவது படமான ரோஜாவில் மூன்று பாடல்களைப் பாடினார். இதற்குப் பிறகு நிறையப் பாடல்களை ரகுமானின் இசையில் நீண்ட காலமாகவும் பாடிவந்தார். புதிய முகம் திரைப்படத்தில் "ஜுலை மாதம் வந்தால்" பாடலை அனுபமாவோடு பாடினார்.[72] கிழக்குச் சீமையிலே திரைப்படத்தில் "மானூத்து மந்தையிலே மாங்குட்டி" பாடல் நாட்டுப்புற நடையில் வித்தியாசமாகப் பாடினார். டூயட் படத்தில் ஏறத்தாழ எல்லா பாடல்களையும் பாடினார். மின்சார கனவு படத்தில் "தங்கத்தாமரை மகளே" பாடலுக்காக சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருது இவருக்கு 1996 ஆம் ஆண்டு கிடைத்தது. இதுதான் இவருக்கு கிடைத்த ஆறாவது தேசிய விருதாகும்.[73][74]
பாலசுப்பிரமணியம் இசையமைப்பாளர் அம்சலேகாவின் இசையில் கன்னட திரைப்படங்களுக்கு பாடல்கள் பாடியுள்ளார். அம்சலேகாவின் பருவ காலம் ஒரு வெற்றிப் படமாக அமைந்தது. நிறையப் பாடல்களை அம்சலேகாவின் இசையில் பாடினார். இவருடைய ஐந்தாவது தேசிய விருது அம்சலேகாவின் இசையில் பாடியதற்காக கிடைத்தது. கனயோகி பஞ்சக்சரி காவாயி (1995) திரைப்படத்தில் "உமண்டு குமண்டு" பாடலுக்காக, சிறந்த பின்னணிப் பாடகருக்கான இந்திய தேசிய விருது அம்சலேகாவின் இந்துஸ்தானி இசையில் பாடியதன் மூலம் பெற்றார்.[60]
எஸ் பி பி 2000ஆம் ஆண்டிற்கு பிறகு இளைய தலைமுறை இசையமைப்பாளர்களான யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ்,டி. இமான், ஜி. வி. பிரகாஷ்குமார், நிவாஸ் கே. பிரசன்னா, அனிருத் ரவிச்சந்திரன், பிரேம்ஜி அமரன் போன்றோரின் இசையமைப்பில் பாடினார்.[75][76][77]
2013-ஆம் ஆண்டு வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் என்ற திரைப்படத்தில் நடிகர் சாருக் கானுக்காக விசால்-சேகரின் இசையில் "நிக்கல் நா சாயி சென்னை எக்ஸ்பிரஸ்" என்ற தலைப்புப் பாடலை பாடியுள்ளார். இப்பாடல் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு இவர் இந்தி திரையிசையில் பாடியதாகும்.[78][79] பாலசுப்பிரமணியம் 2015ஆம் ஆண்டு சனவரி மாதம் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்திற்கு ஆந்திர மாநிலத்தின் தூதராக நியமிக்கப்பட்டார்.[80] இவர் மதங்களை கடந்து பக்திப்பாடல்கள் பல பாடியுள்ளார், இதற்காக 2015ஆம் ஆண்டுக்கான கேரள அரசின் "அரிவராசனம்" விருது பெற்றார்.[81][82][83]
மே 2020 இல், கோவிட்-19 பெருந்தொற்று சூழலில் பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவர்கள், இராணுவத்தினர், காவல்துறையினர் மற்றும் அரச ஊழியர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இளையராஜாவின் இசையில் "பாரத் பூமி" என்ற பாடலைப் பாடி வெளியிட்டார்.[84] இக்காணொளிப் பாடலை 2020 மே 30 இல் இளையராஜா இந்தி, தமிழ் மொழிகளில் அவரது அதிகாரபூர்வ யூடியூப் கணக்கில் வெளியிட்டார்.[85][86]
பாலசுப்பிரமணியம் கமல்ஹாசன் தமிழில் நடித்த மன்மத லீலை தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்ட போது, கமல்ஹாசனுக்காக இரவல் குரல் (பின்னணிக் குரல்) கொடுத்தார்.[87] இதனைத் தொடர்ந்து கமல்ஹாசனுக்காக 120 தெலுங்குத் திரைப்படங்களில் பின்னணிக்குரல் கொடுத்துள்ளார்.[88] அத்துடன், இரசினிகாந்து, விஷ்ணுவர்தன், சல்மான் கான், பாக்யராஜ், மோகன், அனில் கபூர், கிரீஷ் கர்னாட், ஜெமினி கணேசன், அர்ஜுன், நாகேஷ், கார்த்திக், ரகுவரன் ஆகியோருக்கும் பல்வேறு மொழிப் படங்களில் இரவல் குரல் கொடுத்துள்ளார். தெலுங்கு தசாவதாரம் படத்தில் மொத்தம் 10 கதாபாத்திரங்களில் ஏழு பாத்திரங்களுக்கு (பெண் பாத்திரம் உட்பட) பின்னணிக் குரல் கொடுத்து சாதனை புரிந்தார்.[89] அன்னமய்யா, சிறீ சாயி மகிமா ஆகிய திரைப்படங்களுக்காக இவருக்கு சிறந்த பின்னணிக் குரலுக்காக நந்தி விருது வழங்கப்பட்டது.[90] ஸ்ரீ ராம ராஜ்யம் தமிழ்த் திரைப்படத்துக்காக 2012 ஆம் ஆண்டில் நந்தமூரி பாலகிருஷ்ணாவுக்காக இரவல் குரல் கொடுத்தார். காந்தி தெலுங்குத் திரைப்படத்தில் பென் கிங்ஸ்லிக்காக இரவல் குரல் கொடுத்தார்.[91]
தெலுங்கு உண்மைநிலை நிகழ்ச்சி தொலைக்காட்சி நிகழ்ச்சியான படுதா தீயாகாவை பாலசுப்பிரமணியம் தொகுத்து வழங்கினார். இது இவரது தொலைக்காட்சி அறிமுகத்தை குறித்தது. 1996 முதல் தொடங்கி, ஆந்திரா மற்றும் தெலங்காணாவிலிருந்து பாடும் திறமைகளை வெளிப்படுத்திய பெருமைக்குரியது. உஷா , கௌசல்யா , கோபிகா பூர்ணிமா , மல்லிகார்ஜுன் , ஹேமச்சந்திரா , என்.சி கருண்யா , ஸ்மிதா போன்ற தெலுங்கு பாடகர்கள் நிகழ்ச்சியில் அறிமுகமானனர். கன்னட உண்மைநிலை நிகழ்ச்சி தொலைக்காட்சி நிகழ்ச்சியான எட் தும்பி ஹடுவேனுவையும் இவர் தொகுத்து வழங்கினார்.[92] பதலனி உண்டி, எண்டாரோ மகானுபஹ்லுலு மற்றும் ஸ்வரபிஷேகம் போன்ற பிற நிகழ்ச்சிகளிலும் பாலசுப்பிரமணியம் தோன்றினார்.[93] தமிழகத்தில் உண்மைநிலை நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியின் இசைவானில் இளையநிலா எயார்டல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலும் பங்கெடுத்தார்.
பாலசுப்பிரமணியம் தென்னிந்திய மொழிகளில் எழுபதுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.[94][95] தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி இந்நான்கு மொழிகளில் நாற்பத்தைந்து திரைப்படத்திற்கு மேல் இசையமைத்துள்ளார்.[96][97][98].[99]
நாற்பதாயிரம் பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார்.[8][100][101] ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்றிருக்கிறார். எஸ். பி. பி. முறையாக கர்நாடக இசையைப் பயின்றது இல்லை என்றாலும் சங்கராபரணம் என்ற படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றார். இதுவரை தேசிய விருதினை நான்கு மொழிகளுக்குப் பெற்ற ஒரே திரைப்படப் பின்னணிப் பாடகர் இவர் ஒருவரே. பிலிம்பேர் விருதினை ஒரு முறையும் பிலிம்பேர் விருது (தெற்கு) மூன்று முறையும் பெற்றுள்ளார். மேலும் இவர் தமிழக மற்றும் கர்நாடக அரசுகளின் பல மாநில விருதுகளும் ஆந்திர அரசின் நந்தி விருதினை 25 முறையும் பெற்றார். இவர் 1981 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றிருக்கிறார்.[102][103] எஸ் பி பி எந்த பாடகரும் செய்யாத சாதனைகளை இந்திய திரையிசையில் செய்திருக்கிறார். இவர் 1981 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதி கர்நாடகா, பெங்களூரில் உள்ள பதிவரங்கில் காலை 9 மணியில் இருந்து இரவு 9 மணி வரை ஒரே நாளில் 21 பாடல்களை கன்னட மொழி இசையமைப்பாளர் உபேந்திர குமாருக்காக பாடி சாதனை செய்துள்ளார். மேலும் தமிழ் மொழியில் 19 பாடல்களையும் (ஒரேநாளில்), இந்தி மொழியில் 16 பாடல்களையும் (6மணி நேரத்தில்) பாடி சாதனை செய்திருக்கிறார். இவைகளெல்லாம் இவருடைய குறிப்பிடத்தக்க சாதனைகளாகும்.[104][105]
இவர் இந்திய திரையிசையில் செழுமையான வாழ்க்கையை மிக கடின உழைப்பால் உருவாக்கிக் கொண்டார்.[106] இவர் 1970 களில் இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன் இசையில் இணைந்து தமிழ் மற்றும் மலையாள மொழிப்பாடல்களைப் பாடியுள்ளார்.[107] தமிழ் திரைப்பட நடிகர்களான எம். ஜி. ராமச்சந்திரன், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் என பல நடிகர்களுக்கு 1970களில் பின்னணி பாடியுள்ளார்.[108] இவர் அப்பொழுது பிரபலமாக இருந்த பின்னணிப்பாடகிகளான பி. சுசீலா, எஸ். ஜானகி, வாணி ஜெயராம் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இவர்களோடு பல ஜோடிப்பாடல்களை பாடியுள்ளார்.
பாலசுப்பிரமணியம் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இவருடைய மனைவி பெயர் சாவித்ரி, மகள் பல்லவி, மகன் எஸ். பி. பி. சரண். சரண் பின்னணி பாடகர், நடிகர், சின்னத்திரை தொடர் நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு வளர்ந்து வருகிறார்.[109][110]
இவருக்கு 2020 ஆகத்து 5 அன்று, கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களில் மோசமடைந்த அவரது உடல்நிலை, பின்பு கொஞ்சம் கொஞ்சமாக சகஜ நிலைக்கு வந்தது மற்றும் வாய் வழியே சாப்பிடும் அளவுக்கு இவருடைய உடல்நிலை தேறியது. ஆனால் திடீரென்று 2020 செப்டம்பர் 24 அன்று, இவருடைய உடல்நிலை மீண்டும் மோசமடைந்ததை தொடர்ந்து, இவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல், 2020 செப்டம்பர் 25 அன்று, இவருடைய உயிர் மதியம் 1:04 மணிக்கு பிரிந்தது.[111][112]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.