மூச்சுத்திணரல் நோய் From Wikipedia, the free encyclopedia
ஈழை நோய் அல்லது ஈளை அல்லது மூச்சுத்தடை நோய் (Asthma, ஆஸ்துமா) என்பது நுரையீரலில் ஏற்படும் நீடித்த/நாட்பட்ட (chronic) அழற்சியினால் மீண்டும் மீண்டும் வரக்கூடிய (recurrent) மூச்சு எடுத்தலில்/விடுதலில் சிரமத்தைக் கொடுக்கும் மூச்சுத்திணறல்/மூச்சிரைப்பு நிலை ஆகும். இதற்கு முக்கியக் காரணம் சுவாசக் குழாய்களின் உட்படலத்தில் ஏற்படும் வீக்கத்தால் காற்று உட்சென்று வெளியேறும் பாதையில் ஒடுக்கமேற்பட்டு காற்றின் ஓட்டத்தில் ஏற்படும் வீழ்ச்சியாகும். சுவாசக் குழாய்களைச் சுற்றியிருக்கும் தசைகளில் ஏற்படும் மீளும் தன்மை கொண்ட (reversible) சுருக்கம் மற்றும் இறுக்கம் போன்றவையும், நுரையீரலில் ஏற்படும் அழற்சியினால் ஏற்படும் புண்பட்ட நிலை, வீக்கம் என்பனவும் அசெளகரியமான நிலையை ஏற்படுத்தும். இதன் தீவிரத்தன்மையும் (severity) நிகழ்வுகளுக்கிடையிலான இடைவெளியும் (frequency) மனிதனுக்கு மனிதன் வேறுபடும். இந்த நோய் எல்லா வயதினரிலும் காணப்படுவதாயினும் பொதுவாக குழந்தைகளிலேயே ஆரம்பிக்கும்[1]. இந்த நோயின் முக்கியமான அறிகுறிகளாக இழுப்பு, இருமல், நெஞ்சு இறுக்கம், விரைவான குறுகிய மூச்சு என்பன அமைகின்றன. மீண்டும் மீண்டும் இந்த நோயின் பாதிப்புக்கு உட்படுபவர்களுக்கு தூக்கமின்மை, பகலில் களைப்பு போன்றவை இருப்பதால், அவர்களால் தமது நாளார்ந்த செயல்களைச் சரிவரச் செய்ய முடியாத நிலை காணப்படும்.
இந்த ஈழை நோயானது தொய்வு, இழுப்பு, முட்டு, சுவாச முட்டு, இழைப்பு நோய், மூச்சுத் தடை நோய், மூச்சுப் பிடிப்பு நோய் என பல்வேறு பெயர்கள் கொண்டு அழைக்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் கொடுத்துள்ள 2011 ஆம் ஆண்டு மே மாத அறிக்கையின்படி, உலகில் 235 மில்லியன் மக்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்தது[2]</ref>. ஏனைய நீடித்த/நாட்பட்ட நோய்களுடன் ஒப்பிடுகையில் இறப்பு வீதம் குறைவாக இருப்பினும், 2005 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 255000 மக்கள் இந்நோயால் இறந்திருப்பதை உலக சுகாதார நிறுவனம் உறுதிப்படுத்தியிருந்தது[3][4]. குழந்தைகளில் வரும் நாட்பட்ட நோய்களில் மிக அதிகளவில் இருப்பதும் இந்நோயே என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது[2]. அத்துடன் இந்நோயுள்ளவர்களில் 80% மானவர்கள் குறைவான, அல்லது குறைவான-நடுத்தரமான வருமானம் கொண்ட நாடுகளில் இருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் கூறுகின்றது[2].
ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகையில் 7 சதவீத மக்களை ஆஸ்துமா பாதித்துள்ளது.[5][6] பிரித்தானிய மக்களில் 6.5 சதவீத மக்களும் உலகளவில் மொத்தம் 300 மில்லியன் மக்களும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.[7]அமெரிக்காவில், ஒரு வருடத்தில் 4000 மக்கள் இறப்பதற்கு இந்த ஈழைநோய் காரணமாக உள்ளது. 2025 ஆம் ஆண்டில் உலகில் 100 மில்லியன் மக்கள் இந்நோயினால் பாதிக்கப்படக்கூடும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது[3]
இந் நோய் தீவிரமடையும் நிலையில் அவசரச் சிகிச்சையாக குறுகிய காலத்திலேயே செயல்புரியும் பீட்டா-2 இயக்கிகள் சுவாசத்தோடு உள்ளிழுக்கப்படும். ஈழைநோயைத் தூண்டும் காரணிகளான ஒவ்வாமை ஊக்கிகள் அல்லது அதிவேகமாக வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றைத் தவிர்ப்பதன் மூலமாக ஈழைநோய்ப் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கலாம். அவசியமேற்பட்டால் கார்டிகோஸ்டீராய்டுகள் (corticosteroids) மற்றும் நீண்ட நேரம்வரை செயல்புரியும் பீட்டா-2 இயக்கிகள் போன்றவை சுவாசத்தின் வழியாக உள்ளிழுக்கப்படுதல் போன்ற மருந்துச் சிகிச்சையின் மூலமாகவும் ஈழைநோயின் பாதிப்பைத் தடுக்கலாம்.[8][9] லூக்காட்ரியன் (Leukotriene) எதிர் மருந்து, கார்டிகோஸ்டீராய்டுகளை விட ஆற்றல் குறைவானது. ஆனால் இதைப் பயன்படுத்துவதினால் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது. மெப்போலிஸுமாப் (mepolizumab) மற்றும் ஓமாலிஸுமாப் (omalizumab) போன்ற ஒற்றையணு பிறபொருளெதிரி மருந்துகள், சில நேரங்களில் ஆற்றல் வாய்ந்தவையாக உள்ளன. நோய் வரப்போகின்றது என்பதை முதலே தெரிந்துகொண்டு தகுந்த நேரத்தில் தகுந்த சிகிச்சையை எடுப்பது இந்நோயில் மிகவும் பலனளிப்பதாய் உள்ளது.
நாட்பட்டுத் தடைச்செய்யும் நுரையீரலுக்குரிய நோய் மற்றும் நாட்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி ஆகியவற்றைப் போல் அல்லாமல் ஈழைநோயின் அழற்சி மீளக்கூடியதாக இருக்கும். காற்றேற்ற விரிவு போல் இல்லாமல் ஈழைநோயானது மூச்சுக்குழாய்களைப் பாதிப்பதே அல்லாமல் மூச்சுச் சிற்றறைகளைப் பாதிப்பதில்லை. ஈழைநோயானது காற்றுவழிகளில் ஏற்படும் ஒரு பொதுவான நாட்பட்ட கோளாறாகும் என்று தேசிய இதயம் நுரையீரல் மற்றும் இரத்த நிறுவனம் வரையறுக்கிறது. மாறுபடும் நிலை, மற்றும் திரும்பத் திரும்ப ஏற்படும் அறிகுறிகள், காற்றோட்ட அடைப்பு, மூச்சுக்குழாய்ச் சிரை ஹைப்பர்ரெஸ்பான்சிவ்னஸ் (hyperresponsiveness) (பிராங்கஇசிவு) மற்றும் ஒரு அழற்சியாக கருதப்படுகிறது.[10]
வளர்ந்த நாடுகளில் இருக்கும் பொதுமக்கள் ஈழைநோய்த் தாக்கநிலையின் மேல் தங்கள் கவனத்தைத் தற்போது திருப்பியுள்ளனர். நகர்ப்புறக் குழந்தைகளில் நான்கில் ஒரு பங்கு குழந்தைகள் இந்த நோயினால் பாதிக்கப்படுவதே இந்நோய் அதிவேகமாகப் பரவுவதற்கான காரணமாகக் கருதப்படுகிறது.[11]
ஒரு நொடியில் வேகமாக வெளிவிடக்கூடிய மூச்சின் கனஅளவு (FEV1) மற்றும் மூச்சுவிடுதல் வீதத்தின் உச்சநிலை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்நோயானது வகைப்பிரிக்கப்படுகிறது.[12]
ஆஸ்துமா நோயின் தீவிரத்தன்மையை வகைப்பிரித்தல் [12] | ||||
நோயின் தீவிரத்தன்மை | அறிகுறி நிகழ்வெண் | இரவுநேர அறிகுறிகள் | மூச்சுவிடுதல் வீதத்தின் உச்சநிலை அல்லது FEV1 குறித்து முன்னுரைத்தல் | மூச்சுவிடுதல் வீதத்தின் உச்சநிலை அல்லது FEV1னின் மாறுபடும் தன்மை |
---|---|---|---|---|
இடைவிட்டு நிகழுதல் | < ஒரு வாரத்தில் ஒரு முறை | ≤ ஒரு மாதத்தில் இருமுறை | ≥ 80% முன்னுரைக்கப்படுகிறது | < 20% |
லேசாக தொடர்ந்து இருத்தல் | > ஒரு வாரத்திற்கு ஒருமுறை ஆனால் < ஒரு நாளில் ஒருமுறை | > ஒரு மாதத்தில் இருமுறை | ≥ 80% முன்னுரைக்கப்படுகிறது | 20–30% |
மிதமாக தொடர்ந்து இருத்தல் | தினமும் (நோயின் தீவிரம் வழமையான தொழிற்பாடுகளைப் பாதிக்கும்.) | > ஒரு வாரத்திற்கு ஒருமுறை (தூக்கத்தைக் குழம்பலாம்.) | 60 – 80 % வரை முன்னுரைக்கப்படுகிறது | 30% |
நோயின் தீவிரத்தன்மை தொடர்ந்து இருத்தல் | தினமும் (நோயின் தீவிரம் அடிக்கடி தெரியும். வழமையான தொழிற்பாடுகள் குறைந்துவிடும்.) | அடிக்கடி (இரவில் ஏற்படும் அசெளகரியம் அதிகரிக்கும்.) | < 60% முன்னுரைக்கப்படுகிறது | 30% |
ஈழை நோய்க்கான அறிகுறிகளை அந்த நோய்ப்பாதிப்புக்கு உட்பட்டவர்கள் அறிந்திருப்பது மிகவும் முக்கியமாகும். அந்த நோயின் ஆரம்ப அல்லது குறைந்த அறிகுறிகளைக் (mild symptoms) கண்டறிவதன் மூலம் அதைத் தொடர்ந்து வரக்கூடிய தீவிரநிலையை ஒருவர் கட்டுப்படுத்த முடியும். மேலும் தீவிரமடையும் அறிகுறிகளையும் கண்டறியத் தவறினால் நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலையும், உயிராபத்துக்கு உட்பட வேண்டிய நிலையும் ஏற்படலாம். இந்நோய்க்கான அறிகுறிகள் சரியாக வெளிப்படும் முன்னரே ஆரம்பநிலையில் சில மாற்றங்களை நோயாளியில் காண முடியும். அவையாவன:
இவ்வகை அறிகுறிகளை கண்டுகொள்வதன் மூலம் தீவிரமான ஈழை நோய்த் தாக்கத்தை தவிர்க்கலாம். இந்நோய் ஆரம்ப நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு அதிகரிக்கும்போது சுவாசக் குழாய்கள் சுருக்கமடைந்து அழற்சிக்குட்பட்டு சளியினால் நிரப்பப்படும். அப்படித் தோன்றும் அறிகுறிகளாவன:
இவற்றைக் கவனித்து சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிடின் சுவாசக் குழாய்களில் மேலும் ஏற்படும் ஒடுக்கமானது நோயாளி சாதாரண தொழிற்பாடுகளை மேற்கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளிவிடும். அத்துடன் சில தீவிரமான அறிகுறிகளும் தோன்றும். அவையாவன:
எனவே ஆரம்ப நிலையிலேயே சிகிச்சையைப் பெற்றுக் கொள்ளுதல் இங்கே மிகவும் அவசியமாகின்றது. அத்துடன் நோயின் தீவிரத்தை அதிகரிக்கவல்ல நிலைகளை அல்லது பொருட்களைக் கண்டறிந்து அவற்றைத் தவிர்த்தலும் முக்கியமாகும். [13]
அறிகுறிகள் | மிதமான | நடுத்தரமான | தீவிரமான | உடனடியாக நிகழும் சுவாசப் பிடிப்பு |
---|---|---|---|---|
விழிப்புநிலை | கிளர்ச்சி நிலையைக் காட்டக்கூடும் | கிளர்ச்சி நிலை காணப்படும் | கிளர்ச்சி நிலை காணப்படும் | குழப்ப அல்லது மந்தநிலை |
மூச்செடுக்க முடியாமை | நடக்கும்போது | பேசும்போது | ஓய்வுநிலையில் கூட | |
பேச்சு வெளிப்படும் முறை | வசனங்கள் | சொற்றொடர்கள் | சொற்கள் | |
மூச்சிரைப்பு | நடுத்தரம் | பெரிய சத்தமாக | பெரிய சத்தமாக | இருக்காது |
துணைத் தசைகள் | பொதுவாகப் பாவிக்கப்படாது | பாவிக்கப்படும் | பாவிக்கப்படும் | |
சுவாசவீதம் (/நிமிடத்துக்கு) | அதிகரிக்கும் | அதிகரிக்கும் | அடிக்கடி >30 | |
நாடித் துடிப்பு (/நிமிடத்துக்கு) | 100 | 100-120 | >120 | <60 (Bradycardia) |
PaO2 | Normal | >60 | <60 ,possible cyanosis | |
PaCO2 | <45 | <45 | >45 | |
மிகத் தீவிரமான ஈழை நோய்த்தாக்கத்தின் போது நோயாளிக்கு போதியளவு உயிர்வாயு/ ஆக்சிசன் (oxygen) கிடைக்கப் பெறாமையால் நோயாளி நீல நிறத்திற்கு மாறக் கூடும். அத்துடன் நெஞ்சுவலியால் பாதிக்கப்படுவதுடன் தன்னுணர்விழந்த நிலைக்குச் செல்லவும் நேரும். உணர்விழந்த நிலையை அடைய முன்னர் நோயாளியால் அங்கங்களில் உணர்ச்சியற்ற ஒரு நிலையையும் உள்ளங்கைகளில் ஈரலிப்புத் தன்மையையும் உணர முடிவதுடன் பாதங்கள் குளிர்ந்து போகும். இந்நிலை மேலும் தீவிரமடையும்போது வழமையான சிகிச்சைகள் எதுவும் பலனளிக்காத நிலையையடைந்து சுவாசம் முற்றிலுமாக நின்று இறப்பு நிலைக்குப் போக வேண்டி நேரலாம்.
நோயின் தீவிர நிலையில் அறிகுறிகளும் தீவிரமாக இருப்பினும் இரு தாக்கங்களுக்கிடையில் நோயாளிகளில் எவ்வித அறிகுறிகளும் வெளித் தெரியாமல் இருக்கும் சந்தர்ப்பங்களும் உண்டு[15].
ஈழை நோய்க்கான அடிப்படைக் காரணங்கள் மிகச் சரியாக இது தான் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாததாக உள்ளது. சூழல் காரணிகளுடன் மரபியல் காரணிகளும் இணைந்தே இந்த ஈழை நோயை ஏற்படுத்துகிறது[16]. இந்தக் காரணிகள் நோயின் தீவிரத் தன்மையையும் சிகிச்சைக்கான பலனையும் மாற்றுகின்றது[17]. சில சூழல், மரபியல் காரணிகள் ஆராய்ச்சிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருப்பினும் வேறு பல காரணிகள் இன்னமும் உறுதிப்படுத்தப்படாத நிலையிலேயே உள்ளன. மிகவும் இலகுவாக தாக்குதலுக்கு உள்ளாகக் கூடிய நுரையீரலுக்கு ஆபத்து வரக்கூடும் என்ற நிலையில் நுரையீரலுக்குச் செல்லும் காற்று வழியானது தற்காப்பு நோக்கில் சுருங்கி மூடிக் கொள்ளப் பார்ப்பதாகக் கருதப்படுகிறது. கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில், உயிரியல் வேதியியல் மூலக்கூற்று உயிரியல் பிரிவிலிருந்த புரொஃப்பெட் (Profet) என்பவர் மனித உடலின் நோய் எதிர்ப்புத் தொகுதியானது ஒவ்வாமை ஊக்கிகளை (allergens) தமக்கான அச்சுறுத்தலாகவே கருதுவதாகக் கூறினார்[18]. இதனால் ஈழை நோயானது கூர்ப்பின் வழி தோன்றிய உடலின் ஒரு தற்காப்பு இயங்கு முறையாகக் கொள்ளப்படலாம். இதன்வழி சுவாச வழிக்கான மாசுபடுத்திகள் அகற்றப்படும்போது அல்லது குறைக்கப்படும்போது இந்நோயினால் ஏற்படும் பிரச்சனைகளும் குறையும் என்று கூறப்படுகின்றது.
நோய்க்கான பொதுவான காரணங்கள்:
மேலும் இந்நோயைத் தீவிரப்படுத்தக் கூடிய ஏனைய காரணிகளாவன:
சிறுவயதிலேயே குழந்தைகள் காப்பகங்களுக்கு குழந்தைகள் போவதன் காரணத்தினால் வைரசு சார்ந்த சுவாசத்திற்குரிய தொற்றுநோய்கள் அதிகமாக ஏற்படலாம். இது போன்ற சுவாசத்திற்குரிய நோய்த்தொற்றடைந்த குழந்தைகள் ஈழை நோய்த்தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. இந்த கருத்திலிருந்து முரண்பாடான முடிவுகள் வெளியானாலும் இந்த பாதுகாப்பு மரபு ரீதியாக சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று எண்ணப்படுகிறது.[19][24][25]
இந்நோயில் மரபணுக்கள் தொடர்பான ஒரு குறிப்பிட்ட ஆய்வில் கிட்டத்தட்ட 100 மரபணுக்களுக்குத் தொடர்பிருப்பதாகக் கூறப்பட்டது[28]. ஆனாலும் இப்படியான ஆய்வுகள் தற்செயலாக நடந்தது அல்ல என்பதை உறுதிப்படுத்த மீண்டும் செய்யப்பட வேண்டியது அவசியமாகும். 2005 ஆம் ஆண்டின் இறுதியில் 6 அல்லது அதற்கு மேற்பட்ட வேறுபட்ட மக்களிடம் நடத்திய ஒரு ஆய்வில் 25 மரபணுக்களிற்கும் ஈழை நோய்க்கும் இடையிலான தொடர்பு அறியப்பட்டது[28].
|
|
|
|
|
இவற்றில் அனேகமான மரபணுக்கள் நோய் எதிர்ப்புத் தொகுதியுடன் தொடர்புள்ளதாகவோ அழற்சியை மாற்றவல்லவையாகவோ இருக்கின்றன. ஆனாலும் எல்லா மக்கள் கூட்டத்திலும் ஒரே வகையானவையாக இருக்கவில்லை[28]. இப்படிப்பட்ட சிக்கலான இடைத் தொடர்புகளை மேலும் ஆய்வில் ஈடுபடுத்த வேண்டும்.
சில ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி சில மரபியல் வேறுபாடுகள் குறிப்பிட்ட ஒரு சூழ்நிலையிலேயே நோயை உண்டாக்கும் வல்லமையைப் பெறும். இல்லாத பொழுதில் நோயை உருவாக்கும் திறனற்றதாய் இருக்கும்[16].
மரபு சார்ந்த தனிப்பண்பான CD14 ஒற்றை நியூக்ளியோட்டைட்டு பல்லுருத்தோற்றம் (Single Nucleotide polymorphism – SNP), C-159T, மற்றும் அகநச்சின் (ஒரு பாக்டீரியா சார்ந்த உற்பத்திப்பொருள்) வெளியாக்கம் ஆகியவை ஈழைநோய் தொடர்பான மரபணு-சூழல் இடைத்தொடர்பை மீண்டும் மீண்டும் தெளிவாகக் காட்டும் எடுத்துக்காட்டுகளாகும். அகநச்சு வெளியாக்கம் எல்லோருக்கும் ஒரேமாதிரியாக இருப்பதில்லை. அது நபருக்கு நபர் வேறுபடுகிறது. சுற்றுப்புறத்தில் உள்ள புகையிலைப் புகை, நாய்கள் மற்றும் பண்ணை ஆகியவற்றை உள்ளிட்ட பல சுற்றுச்சூழல் சார்ந்த மூலங்களினால் ஏற்படலாம். CD14 C-159Tல் ஒருவரின் மரபணு வகை மற்றும் அகநச்சு வெளியாக்கத்தின் அளவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஈழைநோயின் ஆபத்துகள் மாற்றமடைகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.[29]
ஈழை நோயை மிக எளிமையாக வரைவிலக்கணப்படுத்துவதானால் மீளக்கூடிய சுவாச வழித்தடை எனலாம். மீளும் தன்மையானது தன்னிச்சையான இயல்பாகவோ அல்லது சிகிச்சை மூலமாகவோ ஏற்படலாம். அதியுயர் வெளிமூச்சு ஓட்ட வீதம் (Peak Expiratory Flow Rate, PEFR) என்பதே நோயறிதலுக்கான அடிப்படையான அளவீடாக உள்ளது. ப்ரிட்டிஷ் தோரோசிக் சொஸைட்டி (British Thorasic Society) யானது அதியுயர் வெளிமூச்சு ஓட்ட வீதத்துக்கான கீழ்வரும் திட்ட அளவைகளை நோயறிதலுக்காகக் கொண்டுள்ளது[30].
பொதுவாக மருத்துவ வரலாறு, மற்றும் மருத்துவ பரிசோதனைகள் மூலம் ஒரு மருத்துவர் இந்த ஈழை நோயைக் கண்டறிவார். அரிக்கும் தோலழற்சி நோய், ஒவ்வாமை நோய்த் தாக்கத்திற்கு ஆளானவர்களாயின் இந்த ஈழை நோய்க்கான சந்தேகம் வலுப்படும். உடலுக்கான காற்றுவழி அளவீடானது சிறு குழந்தைகளில் செய்ய முடியாது. இது அதியுயர் வெளிமூச்சு ஓட்ட வீதம் என அழைக்கப்படும். இதனை அளக்கும் கருவி பீக் ஃப்ளோ மீட்டர் ஆர் ஸ்பைரோமெட்ரி (peak flow meter or spirometry) எனப்படும். பெரியவர்களிலேயே இந்தக் கருவி மூலம் பரிசோதிக்க முடியும். ஆயினும் சிறு குழந்தைகளிலேயே இந்நோய் பொதுவாகக் கண்டறிப்படுகிறது.
குழந்தைகளுக்கு மூச்சிரைத்தல் சத்தம் அல்லது மூச்சுக்காற்று வெளிவிடும் போது ஏற்படும் மிகவும் அதிகமான சத்தம் ஆகியவற்றை ஈழை நோய் அறுதியிடல் செய்வதற்குப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். திரும்பத்திரும்ப ஏற்படும் மூச்சிரைத்தல், சுவாசித்தலில் உள்ள சிரமம், மார்பு இறுக்கமடைதல் அல்லது இரவுப் பொழுதுகளில் மோசமடையும் இருமல் வரலாறு ஆகியவற்றை நோய் அறுதியிடல் செய்வதற்கு பயன்படுத்திக்கொள்கின்றனர். உடற் பயிற்சி, சளி, புகை மற்றும் மன உளைச்சல் போன்ற தூண்டிகளின் வெளியாக்கம் அல்லது வானிலையில் மாற்றம் நிகழுதல் ஆகியவற்றின் போது குழந்தையுடைய அறிகுறிகள் மோசமடைகிறதா என்பதும் மருத்துவருக்கு தெரிந்திருக்கவேண்டும்.[31]
அறுதியிடலுக்கு தேவையான மற்ற முக்கிய தகவல்களாவன: எந்த வயதில் அறிகுறிகள் ஏற்பட ஆரம்பித்தது மற்றும் அவை எப்படி அதிகமானது, மூச்சிரைத்தல் ஏற்படும் விதம் மற்றும் நேரம், அறிகுறிகளின் காரணத்தினால் குழந்தை எத்தனை முறை மருத்துவமனைக்கோ அவசரச் சிகிச்சைப் பிரிவிற்கோ செல்லவேண்டியிருந்தது. குழந்தை அறிகுறிகளுக்காக சுவாசக்குழாய் விரிப்பி (Bronchodilator) மருந்தை எப்போதாவது எடுத்துக்கொண்டதா, அப்படியாயின் குழந்தையில் அந்த மருந்திற்கான விளைவின் தன்மை.[31]
குழந்தைகளின் அறிகுறிகள் குறித்து அவர்களுடைய பெற்றோர்களிடம் குழந்தை மருத்துவர்கள் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். குழந்தைகள் 6 அல்லது 7 வயதிற்கு மேலானவையாக இருக்கும்போது குழந்தைகளிடமிருந்தே மருத்துவர்கள் அவர்களுடைய அறிகுறிகளைக் குறித்து கேட்டு தெரிந்துகொள்ளலாம்.[32]
வயதுவந்தவர்களுக்கும், பெரிய குழந்தைகளுக்கும் செயற்கை மூச்சுப்பொறி (spirometry) அல்லது காற்றோட்ட உச்சநிலை மானி (peak flow meter) எனும் சுவாசவழித் தடையை பரிசோதிக்கும் கருவிகளைக் கொண்டு நோய் அறுதியிடல் செய்யப்படலாம். இந்த கருவிகளின் மூலம் தினசரி மாற்றங்கள் மற்றும் சுவாசக்குழாய் விரிப்பி மருந்தானது சுவாசம் வழியாக உள்ளிழுக்கப்பட்ட பிறகு மீளும் தன்மை ஏதாவது ஏற்படுகிறதா என்பதைப் பார்க்கப் பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்க ஒன்றியத்தின் தேசிய மூச்சடைப்பு நோய் கல்வி மற்றும் தடுப்பு திட்டம் (NAEPP) மூலமாக வெளியான புதிய வழிகாட்டல்களில் செயற்கை மூச்சுப்பொறியைப் பயன்படுத்துவதற்கான பரிந்துரைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவையாவன: ஆரம்ப நிலை அறுதியிடலின் காலகட்டத்தில்; சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டு அறிகுறிகள் கட்டுப்படுத்தப்பட்டப் பிறகு; கட்டுப்படுத்தப்பட்ட அறிகுறிகள் மறுபடியும் ஏற்படும் போது மற்றும் ஒவ்வொரு 1 அல்லது 2 ஆண்டுகளுக்கும் தொடர்ச்சியாக இச்சோதனைகள் செய்யப்படுவது அவசியம்.[33]
மூச்சுவிடுதல் சார்ந்த உச்சநிலை பரிசோதனையை வழக்கமான தேடிக்காணல் (screening) வழிமுறையாக NAEPP வழிகாட்டல்கள் பரிந்துரைக்கவில்லை. ஏனெனில், செயற்கை மூச்சுப்பொறியை விட இது மிகவும் அதிகமான மாறுபடும் தன்மையுடையதாக உள்ளது. எனினும் உடற் பயிற்சியினால் தூண்டப்படும் ஈழை நோய் பாதிப்புக்கு மட்டுமே இளம் நோயாளிகளுக்கு இந்த காற்றோட்ட உச்சநிலை பரிசோதனை பயனுள்ளதாக இருக்கும். இந்த பரிசோதனை ஓய்வில் இருக்கும் போதும் (அல்லது தொடக்க நிலை) உடற் பயிற்சிக்கு பிறகும் செய்யப்படலாம். தினசரி சுய-கண்காணிப்புக்கும், புதிய மருந்துகளின் செயல்திறனை பரிசோதிக்கவும் இது பயன்படுத்தப்படலாம்.[33] காற்றோட்ட உச்சநிலை அளவுகள் வரைப்படத் தாளில் அறிகுறிகளின் பதிவுகளுடன் சேர்த்து குறித்து வைக்கப்படலாம். மென்பொருள் விளக்க அட்டவணையைப் பயன்படுத்தியும் காற்றோட்ட உச்சநிலை அளவுகள் குறித்து வைக்கப்படலாம். இதன் மூலம் நோயாளிகள் அவர்களுடைய காற்றோட்ட உச்சநிலை அளவுகளை குறித்து வைத்துக்கொண்டு அந்த தகவல்களை அவர்களுடைய மருத்துவரிடம் அல்லது தாதியிடம் காண்பிக்க உதவும்.[34]
அவசரப் பிரிவில் மருத்துவர்கள் காப்னோகிராஃபி (Capnography) யைப் பயன்படுத்தலாம். இது கரியமிலவாயு அல்லது காபனீரொட்சைட்டு,[35] மூச்சுவழியாக வெளியேற்றப்பட்ட அளவை அளவிடுவதற்கு பயன்படுத்தப்படுகிறது. இதனோடு கூட அளவிடும் பல்ஸ் ஆக்ஸ்மெட்ரியும் (Pulse Oximetry) பயன்படுத்தப்படுகிறது. இது ஆக்சிசனை எடுத்துச்செல்லும் ஈமோகுளோபின் எனப்படும் இரத்தப் புரதத்தில் ஆக்சிசனேற்றத்தை அளவிட உதவுகிறது. இதன் மூலம் சிகிச்சைக்கு நோய் நிலையானது எவ்வாறான விளைவைக் காட்டுகிறது என்பதையும் நோய் பாதிப்பின் தீவிரத்தன்மையையும் தீர்மானிக்க முடிகிறது.
மிகவும் சமீபத்தில் மூச்சுவழியாக வெளியேற்றப்படும் நைட்ரிக் ஆக்ஸைடு ஆய்வு செய்யப்பட்டது. இது ஈழை நோயிலுள்ள சுவாசவழி வீக்கத்திற்கான மூச்சு பரிசோதனை சுட்டிக்காட்டியாக ஆய்வு செய்யப்பட்டது.
பெரிய எழுத்துக்கள்=== மாற்று நிர்ணய அறுதியிடல் === ஒருவருக்கு ஈழை நோயின் தாக்கம் இருக்கிறது என்று அறுதியிடல் செய்வதற்கு முன்னதாக அதற்கு இணையான மற்ற சாத்தியக்கூறுகளும் கருத்திற்கொள்ளப்படும். நோயாளியின் வரலாற்றைப் பதிவு செய்யும் மருத்துவர், நோயாளி மூச்சுகுழல் ஒடுக்கிகள் (சுவாசவழியை குறுகலாக்கும் மருந்துப்பொருட்கள், எ.கா. எதிர் அழற்சி பொருட்கள் அல்லது [36] ஏதாவது தெரிந்தே பயன்படுத்துகிறாரா என்பதைப் பரிசோதிக்க வேண்டும். வயதான நோயாளிகளுக்கு சோர்வு, இருமல் அல்லது சுவாசித்தலில் சிரமம் போன்ற அறிகுறிகள் இருக்கும். இவை அனைத்தும் (Chronic obstructive pulmonary disease – COPD), இதயச் செயலிழப்பு (Heart Failure) அல்லது வயதாகுதல் (Aging) ஆகியவற்றுடன் தவறாகத் தொடர்புப்படுத்தப்படலாம்.[37]
நுரையீரல் சிரை செயல்பாட்டுப் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு, மார்பக ஊடுகதிர் அல்லது வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி போன்ற கதிரியக்கம் சார்ந்த பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. நுரையீரல் தொடர்பான மற்ற நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளைத் தவிர்ப்பதற்காக இந்தப் பரிசோதனைகளைச் செய்வது அவசியமாக உள்ளது. அவ்வப்போது மூச்சுக்குழாய் சிரை மிகை ஏற்புத்தன்மையை (hyperresponsiveness) மதிப்பிடுவதற்காக மெத்தாகோலீன் (methacholine) அல்லது ஹிஸ்டமின் மூச்சுக்குழாய் சிரை சாலன்ஞ் பரிசோதனையில் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் இப்பரிசோதனை செய்யப்படலாம்.
நாட்பட்ட நுரையீரல் சிரை தடைசெய்யப்பட்ட நோய் என்பது ஈழை நோயின் அறிகுறிகளுடன் ஒத்த ஒரு நோயாகும். நாட்பட்ட நுரையீரல் சிரை தடைசெய்யப்பட்ட நோய் பின்வருவனவற்றோடு தொடர்புள்ளது: அதிகமான சிகரெட் புகைக்கு வெளிப்படுத்தப்படல்; வயதான நோயாளி; சுவாசக்குழாய் விரிப்பி மருந்து வழங்கப்பட்டப் பிறகு அறிகுறி மீளும் தன்மை குறைவாயிருத்தல் (செயற்கை மூச்சுப்பொறியின் மூலம் அளவிடப்பட்டவாறே); மற்றும் மரபு வழி ஒவ்வாமையின் குடும்ப வரலாற்றினால் நோய் ஏற்படுதலின் சாத்தியக்கூறுகள் குறைதல்.[38] நோய்க்குறித்தொகுப்புகள் உள்ள பலருக்கு ஈழை நோயும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஈழை நோய் சார்ந்த நோய் அறுதியிடல் செய்யப்பட்டவர்களில் பலருக்கு நோய்க்குறித்தொகுப்பும் அதிகமாகிக்கொண்டே போவதும் கண்டுபிடிக்கப்பட்டது.
விழுங்கும் கோளாறு காரணத்தினால் நேரடியாகவோ, அல்லது இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய் அல்லது அமிலப் பின்னோட்ட நோய் (acid reflux) காரணத்தினால் மறைமுகமாகவோ உணவோ அல்லது காற்று தவிர்ந்த வேறு பதார்த்தங்களோ மூச்சுக் குழாயினுள்ளே செல்லும்போது ஏற்படும் அறிகுறிகள் ஈழை நோயில் தோன்றும் அறிகுறிகள் போன்று இருக்கலாம். ஆனால் அங்கே சில நேரங்களில் காய்ச்சலும் ஏற்படும். இது ஒருவகை நுரையீரல் அழற்சி இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது. இது நேரடியான விழுங்கற் கோளாறு திருத்தியமைக்கப்பட்ட [39] மூலம் அறுதியிடல் செய்யப்படலாம். மிகவும் தேர்ந்த பேச்சுச் சிகிச்சையாளரின் மூலம் உணவு எடுத்துக்கொள்ளும் சிகிச்சை செய்யப்படுவதன் வாயிலாக சிகிச்சையளிக்கப்படலாம். இரையக உண்குழலிய எதிர்வினை நோய்ப்பாதிப்பு உள்ளவர்களுக்கு அமில எதிர்ப்பிகளின் மூலம் சிகிச்சையளிக்கப்படலாம்.
ஈழை நோயினால் அவதியுறும் பெரும்பாலான குழந்தைகளுக்கு அடையாளம் கண்டுகொள்ளக்கூடிய ஒவ்வாமைத் தூண்டல் இருக்கும். குறிப்பாக 2004 ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஆய்வொன்றின் பரிசோதனை முடிவுகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 71 சதவீதத்தினரில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஒவ்வாமை ஊக்கிகளினால் இந்நோய் ஏற்பட வாய்ப்பிருந்திருப்பதாகக் கூறுகிறது. 42 சதவீதத்தினரில் மூன்றுக்கும் மேற்பட்ட ஒவ்வாமை ஊக்கிகளினால் ஈழை நோய் ஏற்பட்டிருக்கலாம் என்று பரிசோதனை முடிவுகள் வெளியானது.[40]
பெரும்பாலான இந்த தூண்டல்கள் நோயாளியின் வரலாற்றிலிருந்து அடையாளம் கண்டுகொள்ளப்படலாம். எடுத்துக்காட்டாக தூசியினால் ஏற்படும் காய்ச்சல் மற்றும் மகரந்த ஒவ்வாமை ஆகியவற்றின் விளைவால் இந்நோய் உள்ள நோயாளிகளில் பருவகால அடிப்படையில் தான் அறிகுறிகள் உண்டாகும். செல்லப்பிராணிகளினால் ஏற்படும் ஒவ்வாமைகள் இருப்பவர்களுக்கு வீட்டைவிட்டு வெளியே இருக்கும் போது அறிகுறிகள் குறைய வாய்ப்பிருக்கிறது. தொழில் சார்ந்த ஈழை நோய் இருப்பவர்களுக்கு அவர்கள் வேலைக்குப் போகாமல் வீட்டில் விடுமுறையில் இருக்கும்போது நோய் குணமடையலாம். ஒவ்வாமை பரிசோதனைகள் செய்வதன் மூலம் தவிர்க்கக்கூடிய அறிகுறி தூண்டல்களை அடையாளம் கண்டுபிடிக்கலாம்.
இதயம், நுரையீரல், இரத்த சார்ந்த அமெரிக்க தேசிய நிறுவனத்தினால் ஈழை நோயானது நான்கு வகைகளாக வகை பிரிக்கப்படுகிறது அவையாவன: இடைவிட்டு நிகழுகின்ற நிலை, லேசாக நிலைத்திருத்தல், மிதமாக நிலைத்திருத்தல் மற்றும் கடுமையாக நிலைத்திருத்தல். அடிக்கடி நிகழும் இரவு நேர அறிகுறிகளுடன், ஈழை நோய் அவ்வப்போது அதிகரித்தல் போன்ற அறிகுறிகள் தொடர்ந்து காணப்பட்டால் "கடுமையாக நிலைத்திருக்கும் ஈழை நோய்" உள்ளது என்று அறுதியிடல் செய்யப்படுகிறது. இந்த நிலையின் காரணத்தினால் உடல் ரீதியான செயல்பாடு குறைகிறது. நுரையீரலின் செயல்பாடு PEV அல்லது FEV1 பரிசோதனைகளின் முடிவு 60 சதவீதத்திற்கு குறைவாக இருப்பதுடன், PEF வேறுபாடு 30 சதவீதத்திற்கு அதிகமாக இருக்கும். இந்த அளவீடு இருந்தால் கடுமையாக நிலைத்திருக்கும் ஈழை நோய் உள்ளது என்பதைக் கண்டறியலாம்.
படை நோய் மற்றும் தூசியினால் ஏற்படும் ஒவ்வாமை போன்ற ஈழை நோயுடன் தொடர்புடைய நோய்களை ஆய்வு செய்வதன் மூலம் ஈழை நோய் எதனால் ஏற்படுகிறது என்பதற்கான காரணத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. தூசு, புரத ஒவ்வாமை உள்ளவர்களுக்கும், இந்த நோய் குடும்ப வரலாற்றில் கொண்டிருப்பவர்களுக்கும் ஈழை நோய் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது;[41] இதன் காரணத்தினால் ஒருவருக்குத் தூசினால் ஏற்படும் ஒவ்வாமை உண்டாகும் ஆபத்து 5 மடங்கு வரை அதிகரிப்பதுடன் ஈழை நோய் ஏற்படும் ஆபத்து 3-4 மடங்காக அதிகரிக்கிறது.[42] 3 முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு ஒவ்வாமைகளுக்கான தோல் பரிசோதனையின் முடிவு நேர்மறையாக இருந்தால், அது ஈழை நோய் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது. அதே வயது வரம்புள்ள குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு புரதம் E அதிகமாக இருந்தாலும் ஈழை நோய் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது.[43] வயது வந்தவர்களுக்கு பல ஒவ்வாமை ஊக்கிகளினால் ஒவ்வாமை ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது என்பது தோல் பரிசோதனையில் கண்டறியப்படும்போது, அந்த நபர்களுக்கு ஈழைநோய் ஏற்பட அதிக வாய்ப்பிருப்பதும் அறியப்பட்டுள்ளது.[44]
ஏனெனில் ஒவ்வாமை ஊக்கிகளின் உணர்திறனுடன், அதிகமான ஒவ்வாமை சார்ந்த ஈழை நோய் தொடர்புடையதாக உள்ளது. மேற்கத்திய வீடுகளின் உட்புறத்தில், ஒவ்வாமை ஊக்கிகள் அதிகமாகக் காணப்படுகின்றன. குழந்தைகள் இப்படிப்பட்ட ஒவ்வாமை ஊக்கிகளுக்கு வெளிப்படுத்தப்படுவது அதிகமாக இருந்ததானால் அவர்களுக்கு அதிகமான கவனம் செலுத்தப்படுகிறது. ஏனெனில் இந்த ஒவ்வாமை ஊக்கிகள் குழந்தைப்பருவத்தில் ஏற்படும் ஈழை நோய்க்கு அடிப்படைக் காரணமாக உள்ளது.[45][46] குழந்தைகள் இருக்கும் வீடுகளில் காற்றின் வழியே பரவும் ஒவ்வாமை ஊக்கிகளைக் கட்டுப்படுத்துவதற்கு ஆரம்பநிலை தடுப்பு ஆய்வுகள் முயற்சி செய்து வருகின்றன. இந்த முயற்சியில் நேர்மறையான முடிவும், எதிர்மறையான முடிவும் சேர்ந்தே வெளியாகின்றன. தூசு உண்ணியின் ஒவ்வாமை ஊக்கிகளைக் குறைப்பதற்குத் தீவிர முயற்சி எடுக்கப்பட்டுவருகிறது. எடுத்துக்காட்டாக தூசு உண்ணிகளினால் ஏற்படும் ஒவ்வாமையின் ஆபத்துக் குறைக்கப்படுகிறது. இதன் மூலம் குழந்தைகளுக்கு 8 வயது ஆகும் வரை ஈழை நோய் உருவாகும் ஆபத்து குறைக்கப்படுகிறது.[47][48][49][50] எனினும், பூனை மற்றும் நாய் ஒவ்வாமை ஊக்கிகளின் வெளியாக்கத்தினால் ஒரு எதிரிடையான தாக்கம் ஏற்படுகிறது என்று ஆராய்ச்சிகள் காண்பித்துள்ளன; ஒரு குழந்தையின் முதல் ஆண்டில் ஒவ்வாமை ஊக்கிகள் வெளியாக்கத்தின் காரணத்தினால் ஒவ்வாமையின் ஆபத்து குறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த குழந்தை வளர்ந்தவுடன் அதற்கு ஈழை நோய் உண்டாவதற்கான வாய்ப்பு உள்ளது.[51][52][53]
ஆய்வுகளிலிருந்து கிடைத்த தரவுகள் முரணாக இருப்பதன் காரணத்தினால் மேற்கத்திய சமுதாயத்தின் மற்ற பகுதிகளில் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டியுள்ளது. ஈழை நோய் அப்பகுதிகளில் எந்த அளவிற்குப் பரவுகிறது என்பதைக் குறித்தும் ஆராயப்படுகிறது. ஒரு ஆய்வில் உடற் பருமனிற்கும் ஈழை நோய் உண்டாவதற்கும் அதிகமான தொடர்பு இருப்பதாகக் காண்பிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவிலும், அமெரிக்காவிலும் உடற் பருமன் இருக்கிறவர்கள் மத்தியில் ஈழை நோயின் நோய்ப்பாதிப்பு பரவலாக காணப்படுவதாக அறியப்படுகிறது.[54][55] தாய்வானில் உடல் நிறை குறியீட்டெண்ணில் ஒவ்வொரு 20 சதவீத அதிகரிப்பின் போதும் ஒவ்வாமைகளின் அறிகுறிகளும் காற்றுவழி அதிகரித்த வினைத்திறனும் அதிகரித்துக்கொண்டே வருவதாக அறியப்படுகிறது.[56]
உலகளவில் ஈழை நோயின் நோய்த்தாக்கம் அதிகரிப்பதற்கான காரணம் "நலவியல் கருதுகோளாக" இருக்கலாம் என்று கருதப்படுகிறது. நலவியல் கருதுகோள் என்பது உலகளவில் மக்கள் தங்களுடைய குழந்தைகளுக்குக் குழந்தைப்பருவ நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் தடுக்க அவர்களைத் தூய்மையாக வைத்துக்கொள்வதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இதன் காரணத்தினால் குழந்தைகளுக்கு நோய்களை எதிர்க்கும் ஆற்றல் இல்லாமல் போய்விடுகிறது. இதனால் ஒவ்வாமைகள் மற்றும் ஈழை நோய் போன்ற நோய்த்தாக்கம் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது. சுத்தம் இல்லாத (கிழக்கு ஜெர்மனி மற்றும் மேற்கு ஜெர்மனி)[57] அதிகமான குழந்தைகள் இருக்கும் குடும்பங்கள்[58][59][60] குழந்தைகள் காப்பக சூழலில் இருக்கும் குழந்தைகள் [61][62]) சுற்றுச்சூழலிலிருந்து வரும் குழந்தைகளுக்கு ஈழை நோயின் நோய்நிகழ்வுகளும் ஒவ்வாமை சார்ந்த நோய்களும் மிகவும் குறைவாக ஏற்படுகிறது என்று தொடர்ந்து செய்யப்படும் ஆய்வுகள் காண்பித்துள்ளன. ஈழை நோய் அதிகரித்தலில் தீநுண்மங்கள் நோயை ஏற்படுத்தும் காரணிகளாக உள்ளன என்பது இதிலிருந்து தெரிகிறது.[63][64][65] கூடுதலாக கீழ் பகுதியில் உள்ள மூச்சுக்குழாயில் உண்டாகும் வைரஸ் சார்ந்த நோய்த்தொற்றுகள் ஈழை நோய் ஏற்படத் தூண்டுதலாக இருக்கலாம் என்று மற்ற ஆய்வுகள் காண்பித்துள்ளன. குழந்தைப்பருவத்திலேயே மூச்சு நுண்குழாய் அழற்சி அல்லது ஒவ்வாமை மூக்கழற்சி ஏற்பட்டவர்களுக்கு, அவர்களுடைய பிற்கால வாழ்க்கையில் ஈழை நோய் உண்டாகும் ஆபத்து உள்ளது என்பதை முன்னுரைக்க முடியும்.[66] மேல் சுவாசக்குழாயில் ஏற்படும் நோய்த்தொற்றுகள் ஈழை நோய் ஏற்படும் ஆபத்திலிருந்து பாதுக்காக்கிறது. அதற்கு மாறாக கீழ் சுவாசக்குழாயில் ஏற்படும் நோய்த்தொற்றுகள் ஈழை நோய் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.[67]
உலகத்தில் உள்ள மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது ஈழை நோயின் நோய்த்தாக்கம் அமெரிக்காவில் தான் அதிகமாக காணப்படுகிறது. ஆனால் வெவ்வேறு இனத்தை சார்ந்த அமெரிக்க மக்கள்தொகைகளுக்கு இடையே நோயின் தாக்கம் மிகவும் அதிகமாக வேறுபடுகின்றது.[19] அமெரிக்காவில் வசிப்பவர்களில் பொயர்ட்டோ ரீக்கர்கள், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள், ஃபிலிப்பீனோக்கள், ஐரிஷ் அமெரிக்கர்கள் மற்றும் ஹவாய்த் தீவை சேர்ந்தவர்கள் ஆகியோர் மத்தியில் ஈழை நோயின் நோய்த்தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர்கள் மற்றும் கொரியா நாட்டினர் ஆகியோர் மத்தியில் ஈழை நோயின் நோய்த்தாக்கம் குறைவாகக் காணப்படுகிறது.[68][69][70] இறப்பு வீதத்திலும் இதே போன்று வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் அல்லது மெக்சிகோ நாட்டை சேர்ந்தவர்களுடன் ஒப்பிடும் போது பொயர்ட்டோ ரீக்கர்களுக்கு (Puerto Rican) சால்புடமால் (ஈழை நோய்க்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்து) குறைந்த பலனையே தருகிறது.[71][72] உலகளவில் ஈழை நோய் பாதிப்பில் இருக்கும் வேற்றுமைகளோடு ஒப்பிடும் போது அமெரிக்காவில் ஈழை நோய்த்தாக்க இறப்புவிகிதம் மற்றும் மருந்தின் பதிலளிப்பு ஆகியவற்றில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. இதற்கு மரபு ரீதியான வேறுபாடுகள் சமூக மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த ஆபத்துக் காரணிகள் ஆகியவை முக்கியக் காரணமாக விவரிக்கப்படுகின்றன.
ஒரே இனத்தில் பிறந்து ஆனால் வெவ்வேறு இடங்களில் வசிக்கும் மக்களிடையே ஈழை நோய்த்தாக்கம் வேறுபட்டு காணப்படுகிறது.[73] எடுத்துக்காட்டாக, அமெரிக்காவில் பிறவாத மெக்சிகோ நாட்டு மக்கள் அமெரிக்காவில் வாழ்ந்து வரலாம். இவர்களோடு ஒப்பிடும் போது அமெரிக்காவில் பிறந்த மெக்சிகோ நாட்டு மக்களுக்கு ஈழை நோயின் நோய்த்தாக்க வீதம் அதிகமாகக் காணப்படுகிறது.[74]
ஈழை நோய்த்தாக்கமும் ஈழை நோயினால் ஏற்படும் இறப்பும் பாலினத்துக்கு ஏற்ப வேறுபடலாம். குழந்தைப்பருவத்தில் ஆண்கள் அதிகமாக ஈழை நோயினால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் வயதுவந்தோர் பருவத்தில் பெண்கள் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர்.[75] ஆண்களோடு ஒப்பிடும் போது அறுபத்து ஐந்து சதவீதத்திற்கும் மேற்பட்ட வயதுவந்த பெண்கள் ஈழை நோயினால் இறக்கிறார்கள்.[சான்று தேவை] இந்த வேறுபாட்டிற்கான காரணம் இயக்குநீர்கள் சார்ந்த வேறுபாடுகளாக இருக்கலாம். 12 வயதுக்குப் பிறகு பருவமடையும் பெண்களோடு ஒப்பிடும் போது 12 வயதிற்கு முன்னதாகவே பருவமடையும் பெண்களின் பிற்கால வாழ்க்கையில் ஈழை நோய் வருவதற்கான வாய்ப்பு இருமடங்கு அதிகமாக உள்ளது.[சான்று தேவை] பள்ளிக்கூடங்களுக்கு குழந்தைகள் போகாமல் விடுப்பு எடுப்பதற்கான காரணங்களில் முதன்மையான காரணமாக ஈழை நோய் உள்ளது.[சான்று தேவை]
வருவாய் குறைவான மக்கள் மத்தியில் தான் ஈழை நோய் நிகழ்வு மிகவும் அதிகமாகக் காணப்படுகிறது. குறைவான மற்றும் நடுநிலையான வருவாய் உள்ள நாடுகளில் ஈழை நோயினால் ஏற்படும் இறப்புகள் மிகவும் பொதுவாக காணப்படுகிறது . இதே போல மேற்கத்திய உலகத்தில் ஈழை நோயின் பாதிப்பு தொழிற்சாலை சார்ந்த பகுதிகளில் வசிக்கும் சிறுபான்மை இனத்தவர்[76] மத்தியில் அதிகமாகக் காணப்படுகிறது. குடியிருப்புப் பகுதிகளில் கரப்பான் பூச்சிகள் அதிகமாக இருப்பதன் காரணத்தினால் ஈழை நோய் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது.[77]
வெவ்வேறான இனம் சார்ந்த மக்கள் மத்தியில் ஈழை நோய் நிகழ்வும் சிகிச்சையின் தரமும் வேறுபடுகின்றது. இந்த வேறுபாடு வருவாய் (உடல்நல பராமரிப்பிற்கு தேவையான அளவிற்கு செலவிடும் நிலை) மற்றும் புவியியல் ஆகியவற்றுக்கு இடையே உள்ள தொடர்பின் காரணமாகக் கூட இருக்கலாம். எடுத்துக்காட்டாக ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் மத்தியில் நோயின் பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது. இருப்பினும் அவர்கள் புறநோயாளிகளுக்கான சிகிச்சையை எடுப்பதில்லை. அதாவது நோய் லேசான நிலையில் இருக்கும் போது மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ளமாட்டார்கள். ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் ஈழை நோய் முற்றிய நிலையில் தான் மருத்துவமனைக்கு செல்கின்றார்கள். வெள்ளையர்களோடு ஒப்பிடும் போது ஆப்பிரிக்க அமெரிக்கள் ஈழை நோயின் காரணத்தினால் இறப்பது மூன்று மடங்கு அதிகமாக உள்ளது. சிகிச்சை நன்கு கிடைக்கக்கூடியதாக உள்ள பகுதிகளோடு ஒப்பிடும் போது "கடுமையாக நிலைத்து" இருக்கும் ஈழை நோயின் பாதிப்பு குறைவான வருவாய் உள்ள பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகிறது.[78][79]
சாதாரண மக்களோடு ஒப்பிடும் போது தடகள விளையாட்டு வீரர்கள் மத்தியில் ஈழை நோயின் பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது. அமெரிக்காவின் அட்லான்டா, ஜார்ஜியாவில் நடைபெற்ற 1996 ஆம் ஆண்டின் சம்மர் ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களிடம் செய்யப்பட்ட கருத்தாய்வில், 15 சதவீத வீரர்களுக்கு ஈழை நோய் இருப்பது அறுதியிடல் செய்யப்பட்டுள்ளது. 10 சதவீத வீரர்கள் ஏற்கனவே ஈழை நோய்க்கான மருந்துகள் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று ஆய்வில் வெளியானது.[80]
மிதிவண்டி ஓட்டுதல், மலைப் பகுதிகளில் இருச்சக்கர வண்டியை ஓட்டுதல் மற்றும் நெடுந்தொலை ஓட்டம் போன்ற விளையாட்டுக்களில் ஈழை நோயின் நிகழ்வு அதிகமாக காணப்படுகிறது. எடை தூக்குதல், நீர் மூழ்குதல் போன்ற விளையாட்டுக்களில் ஈழை நோயின் நிகழ்வு மிகவும் குறைவாகக் காணப்படுகிறது. இது போன்ற வித்தியாசங்கள் விளையாட்டுப் போட்டிகளில் உள்ள பயிற்சிகளின் விளைவாக இருக்கலாமா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.[80][81]
வேலைத்தளத்தில் இருக்கும் சில காரணிகளால் ஈழை நோய் ஏற்படலாம் அல்லது தீவிரமடையலாம். இது உலகத்திலேயே மிகவும் பொதுவாகப் பதிவு செய்யப்படும் தொழில் சார்ந்த சுவாசத்திற்குரிய நோயாகக் கருதப்படுகிறது. தொழில் சார்ந்த ஈழை நோய் நோயாளிகள் பலருக்கு அவர்களுடைய தொழிலின் காரணத்தினால்தான் ஈழை நோய் ஏற்பட்டிருக்கிறது என்பது தெரியாமலே இருக்கிறார்கள். வேலையின் காரணத்தினால் வயதுவந்தவர்களில் 15 முதல் 23 சதவீதத்தினருக்கு புதிதாக ஈழை நோய்த் தாக்கம் ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்க தொராசிக் சொசைட்டி (Thoracic Society) (2004) அறிவித்துள்ளது.[82] வேலைத்தளத்தில் தொழில் ரீதியாக ஏற்படும் ஈழை நோயின் தாக்கத்தை ஒரு ஆய்வானது மதிப்பிட்டது. அதில் இயக்குபவர்கள், கட்டமைப்பாளர், பணியாட்கள் ஆகியோர் மத்தியில் ஈழை நோய் மிகவும் அதிகமாகக் (32.9%) காணப்பட்டது. அதைத் தொடர்ந்து மேலாண்மை சார்ந்த, மற்றும் தொழில் துறை சார்ந்த நிபுணர்களுக்கு ஈழை நோயின் பாதிப்பு (20.2%) காணப்பட்டது. அதற்கு அடுத்ததாக தொழினுட்பம் சார்ந்த, விற்பனை மற்றும் நிர்வாகம் சார்ந்த ஆதரவு வேலைகள் செய்வோருக்கு ஈழை நோயின் பாதிப்பு (19.2%) காணப்பட்டது. (41.4%) தயாரித்தல் மற்றும் (34.2%) சேவைகள் போன்ற தொழில்கள்களுடன் தொடர்புடையதாக இருந்தது.[82] விலங்குப் புரதங்கள், நொதிகள், மாவு, இயற்கையான இரப்பர் மரப்பால் மற்றும் எதிர்வினைபுரியும் சில வேதிப்பொருட்கள் போன்றவற்றுடன், வேலையின் காரணமாக ஏற்படும் ஈழை நோய் தொடர்புடையதாக இருக்கிறது. இவை கண்டறியப்பட்டால் இது போன்ற ஆபத்துகளை மட்டுப்படுத்தலாம். இதன் மூலம் நோயின் ஆபத்து குறையும்.[83]
ஈழை நோய் என்பது சுவாசவழி (குழாய்) நோயாகும். முதலாவதாக இது உடலியக்கவியல் ரீதியாக வகைப்படுத்தப்படுகிறது. அதில் காற்றோட்டத்திற்கு நிலையற்ற மற்றும் பகுதியாக மீளக்கூடிய தடையை ஏற்படுத்துகிறது. இரண்டாவதாக நோய்க்குறியியல் ரீதியாக வகைப்படுத்தப்படுகிறது. அதில் சளிச் சுரப்பிகளை அதிகமாக வளர்ச்சியடைய வைக்கிறது. வடு மற்றும் வீக்கம், அழற்சி போன்றவற்றால் காற்றுவழி தடிப்படைகிறது. மூன்றாவதாக மூச்சுக்குழல் ஒடுக்கம். இதில் சுற்றியுள்ள வழுவழுப்பான தசைகள் நெருக்கப்படுவதன் காரணத்தினால் நுரையீரல்களில் உள்ள காற்றுவழிகள் குறுகுகின்றன. திரவக்கோர்வையின் காரணத்தினால் மூச்சுக்குழாய் குறுகலடைகிறது. ஒவ்வாமையூக்கிகளுக்குக் கொடுக்கப்படும் நோய் எதிர்ப்பு பதிலளிப்பின் காரணத்தினால் வீக்கம் ஏற்படுகிறது. இவை மூச்சுக்குழாய் சிரை அழற்சியினால் ஏற்படுத்தப்படுகிறது.
ஈழைநோய் நிகழ்வின் போது வீக்கமடையும் சுவாச வழிகள் சுற்றுப்புறத் தூண்டுதல்களான புகை, தூசு, மகரந்தம் ஆகியவற்றுக்கு எதிர்விளைவைத் தரும். சுவாசவழிகள் குறுகலாகி அதிக சளியை உருவாக்கி சுவாசிப்பதற்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. சுருக்கமாக மூச்சுக்குழாய் சுவாசவழிகளின் நோய் எதிர்ப்பு பதிலளிப்பின் விளைவே ஈழை நோயாகும்.[84]
உந்துபவை (கீழே பார்க்கவும்) என்றும் அழைக்கப்படும் சில தூண்டுதல்களுக்கு ஈழை நோய் நோயாளிகளின் சுவாசவழிகள் “மிக அதிக உணர்வுடையதாக” இருக்கின்றன. (இவை பொதுவாக வகை 1 எனும் மிக அதிக உணர்வாக வகைப்படுத்தப்படுகின்றன.)[85][86] இந்த தூண்டுதல்களுக்கு ஆட்படுவதன் பதிலளிப்பாக மூச்சுக்குழாய் (பெரிய சுவாசவழிகள்) சுருங்கிவிடுகிறது. இது "ஈழை நோய் பாதிப்பு"). இதைத் தொடர்ந்து வீக்கம், அழற்சி உடனடியாக ஏற்படுகிறது. இதன் விளைவாக சுவாசவழிகள் மேலும் குறுகலாகி அதிகப்படியான சளி உருவாகி இருமலுடன், ஏனைய மூச்சுவிடல் பிரச்சனைகளை ஏற்படுகின்றன. இதனால் ஏற்படும் பாதிப்பு பொதுவாக ஒன்று முதல் இரண்டு மணி நேரத்தில் தானாகவே சரியாகிவிடும். ஆனால் பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவீதத்தினரில் இந்த முதல் பாதிப்பு நீடித்து, 3 முதல் 12 மணி நேரத்திற்கு பிறகு மேலும் மூச்சுக்குழல் ஒடுக்கம் மற்றும் வீக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பிருக்கிறது. இது ‘தாமதமான’ பதிலளிப்பை ஏற்படுத்துகிறது.[87]
ஒவ்வாமை ஆஸ்துமாவின் பின் இருக்கும் முறைகள் – அதாவது சுவாசிக்கப்பட்ட ஒவ்வாமை ஊக்கிகளின் நோய் எதிர்ப்பு பதிலளிப்பின் விளைவாக ஆஸ்துமா உருவாகிறது என்பது நன்கு புரிந்துகொள்ளப்பட்ட காரணிகள் ஆகும். ஆஸ்துமா இருக்கும் மற்றும் இல்லாத மக்களில் சுவாசிக்கப்பட்ட ஒவ்வாமை ஊக்கிகள் உட்புற சுவாசக்குழாயில் செல்கிறது. இது ஆண்டிஜன்–செல்கள் அல்லது ஏ.பி.சி (APC) எனும் ஒரு வகை செல்களினால் உண்ணப்படுகிறது. பின்னர் ஏ.பி.சிகள் இந்த ஒவ்வாமை ஊக்கிகளின் சில துகள்களை மற்ற நோய் எதிர்ப்பு மண்டல செல்களுக்கு அளிக்கிறது. பெரும்பாலான மக்களுக்கு இது போன்ற மற்ற நோயெதிர்ப்பு செல்கள் (TH0 செல்கள்), ஒவ்வாமை ஊக்கிகளை "சோதனை" செய்து வழக்கமாக அவற்றை ஒதுக்கிவிடும். ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த செல்கள் வேறு வகையான செல்களாக (TH2) உருமாறிவிடுகின்றன. இதற்கான காரணங்களை இன்னும் நன்றாக புரிந்துகொள்ள முடியவில்லை.
நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஒரு முக்கியமான அங்கத்தை இந்த TH2 செல்கள் செயல்படுத்துகின்றன. இது ஹ்யூமோரல் நோய் எதிர்ப்பு மண்டலம் என்றழைக்கப்படுகிறது. ஹ்யூமோரல் நோயெதிர்ப்பு மண்டலம், உள்ளிழுக்கப்படும் ஒவ்வாமை ஊக்கிகளுக்கு எதிரான எதிர்பொருட்களை உருவாக்குகிறது. பின்னர் அதே ஒவ்வாமை ஊக்கிகளை நோயாளிகள் சுவாசிக்கும் போது இந்த எதிர்பொருட்கள் அவற்றை “அடையாளம்” கண்டுகொண்டு ஹ்யூமோரல் பதிலளிப்பை செயல்படுத்துகிறது. வீக்கத்தினால் (அழற்சி) ஏற்படும் விளைவுகள்: சுவாசவழியின் சுவர்களைத் தடிமானமாக்கும் அமிலங்கள் சுரக்கும் மேலும் ‘சுவாசவழிகள் வடிவமாற்றத்தை’ உருவாக்கும் வடுவை உருவாக்கும் செல்கள் அதிகமாகும். சளி உருவாக்கும் செல்கள் பெரியதாக வளர்ந்து அதிமான கட்டியான சளியை உருவாகும் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் செல்-நடுநிலை அங்கத்தை செயல்படுத்தும். வீக்கமடைந்த சுவாசவழிகள் மேலும் அதிகமான எதிர்விளைவுடையதாக இருக்கும். இது முச்சுக்குழாய் பிடிப்பையும் ஏற்படுத்தலாம்.
“நலவியல் கருதுகோள்களின்” படி சிறுவயதில், TH செல் வகைகளை சீர்செய்வதில் ஏற்பட்ட சமனற்ற நிலையின் காரணமாக ஒவ்வாமை பதிலளிப்பில் தொடர்புடைய செல்களுக்கு தொற்றோடு போராடும் செல்களின் மீதான ஆதிக்கம் அதிக நாட்களுக்கு இருக்கும்படி ஆகிவிடுகிறது. குழந்தை சிறிய வயதிலேயே நுண்ணியிரிகளின் வெளியாக்கம் ஏற்படுதல் ஒரு பெரிய குடும்பத்தில் வாழ்தல் TH1 பதிலளிப்பை தூண்டும் நாட்டில் வளர்தல் குறைவான நோய்க்கிருமிக் கட்டுப்படுத்திகளை எடுத்துக்கொள்ளுதல் ஆகியவை ஆஸ்துமா நோயின் தாக்கத்தைக் குறைப்பதற்காக கொடுக்கப்படும் பரிந்துரைகளாகும்.[31]
ஆஸ்துமாவின் அடிப்படை பிரச்சனை தடுப்பாற்றியல் தொடர்பானதாகும்: ஆஸ்துமாவின் முதல் நிலைகளில் இருக்கும் இளம் குழந்தைகளுக்கு சுவாசவழிகள் அதிகப்படியாக வீக்கம் அடையும் அறிகுறிகள் காணப்பட்டது. நோயியல் கண்டுபிடிப்புகள் நோய் தோன்றும் முறைக்கான ஆதாரங்களைக் கொடுக்கிறது: உலகம் முழுவதும் ஆஸ்துமா நோய் பாதிப்பு அதிகரித்து வருகின்றது. வளமான நாடுகளில் ஆஸ்துமா தற்போது மிகவும் பரவலாகக் காணப்படுகிறது.
1968 ஆம் ஆண்டு ஆண்டர் செண்டிவான்யி (Andor Szentivanyi) என்பவர் முதன் முதலாக ஆஸ்துமாவின் பீட்டா அட்ரீனல்வினையிய கோட்பாட்டை விவரித்தார். நுரையீரலிற்குரிய வழுவழுப்பான தசை செல்களில் இருக்கும் பீட்டா-2 ஏற்பிகளின் அடைப்பின் காரணத்தினால் ஆஸ்துமா ஏற்படுகிறது என்று அதில் விவரித்தார்.[99] செண்டிவான்யியின் பீட்டா அட்ரீனல்வினையிய கோட்பாடு, ஒர் தகுதிவாய்ந்த முதன்மை கோட்பாடாக உள்ளது.[100] இதில் அறிவியல் தகுதியுரை உள்ளடக்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜர்னல் ஆஃப் அலெர்ஜி அண்ட் க்ளினிக்கல் இம்யூனாலஜியின் வரலாற்றில் உள்ள மற்ற கட்டுரைகளுடன் ஒப்பிடும் போது இந்த கோட்பாடு பல முறை குறிப்பிடப்பட்டுள்ளது.
1995 ஆம் ஆண்டில், பீட்டா-2 ஏற்பியை IgE தான் தடைச்செய்கிறது என்று செண்டிவான்யி (Szentivanyi) மற்றும் அவருடன் பணிபுரிபவர்கள் நிரூபித்தார்கள்.[101] IgEன் அளவு அதிகமான உற்பத்தி, எல்லா தூசு புரத ஒவ்வாமைகளுக்கும் காரணமாக இருப்பதானால், இந்த கோட்பாடு ஒவ்வாமை நோய்க்கு ஒரு திருப்புமுனையாக அமைந்திருந்தது.[102]
சில நோயாளிகளுக்கு தூங்கும் போது சுவாசம் தடைப்படும் நோயும் ஆஸ்துமாவும் சேர்ந்தே இருக்கும். இப்படிப்பட்ட நோயாளிகளுக்கு தூங்கும் போதும் சுவாசத்தை தடைசெய்யும் நோய் அறுதியிடல் செய்யப்பட்டு சிகிச்சையளிக்கப்படுவதன் மூலம் மிகவும் விரைவாகக் குணமடைகிறார்கள் என்பது தெரிகிறது.[103] இரவு சார்ந்த ஆஸ்துமா மட்டும் இருக்கும் நோயாளிகளுக்கு CPAP பயனுள்ளதாக இருக்காது.[104]
இரையக உண்குழலிய எதிர்வினை நோய் (GERD) உள்ளவர்களுக்கு அமில உறிஞ்சல் நிகழ்வுகள் திரும்ப திரும்ப ஏற்படலாம். கட்டுப்படுத்துவதற்கு சிரமமான ஆஸ்துமா GERD நோயாளிகளுக்கு மிகவும் பரவலாகக் காணப்படுகிறது. ஆனால் இது குறித்து செய்யப்பட்ட ஒரு ஆய்வின் படி இந்த நோய்க்கு சிகிச்சை அளிப்பதனால் ஆஸ்துமாவில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படுவதாக தெரியவில்லை என்ற முடிவு வெளியானது.[105] ஆஸ்துமாவிற்கான காரணம் GERD ஆக இருக்கலாம் என்ற மருத்துவ சந்தேகம் எழும்பும் போது ஆஸ்துமா மற்றும் GERDக்கு இடையே உள்ள தொடர்பை நிறுவவும் அறுதியிடலை உறுதிப்படுத்துவதற்கும் ஈசாஃபாஜியல் pH கண்காணிப்பு அவசியப்படுகிறது.
ஆஸ்துமா உருவாவதை தடுத்தல் மற்றும் ஆஸ்துமா நோய்நிகழ்வுகளை தடுத்தல் ஆகிய இரண்டும் வெவ்வேறானவை. தடுப்பாற்றலுக்கு மருத்துவத்தின் முலம் லேசான ஒவ்வாமைக்கு தீவிரமான சிகிச்சை கொடுப்பதனால் ஆஸ்துமா உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் குறைக்கப்படுகிறது. அறிகுறிகளைக் கட்டுப்படுத்துதலில் உள்ள மிகவும் முக்கியமான முதல் படி நோயாளிக்கு சிகிச்சையளிப்பதாகும். ஆஸ்துமாவின் நோய்நிகழ்வுகளை தடுப்பதற்கு, ஒரு குறிப்பிட்ட திட்ட செயல்பாடு அமைப்பது மருத்துவரின் கடமையாகும். ஆஸ்துமாவின் நோய்நிகழ்வை தடுக்க பின்வருவனவற்றில் கவனம்கொள்வது மிகவும் அவசியமாக உள்ளது. அவையாவன: தூண்டல்கள் மற்றும் ஒவ்வாமை ஊக்கிகளை தவிர்த்தல் நுரையீரல் செயல்பாட்டை தொடர்ச்சியாக பரிசோதித்து வருதல் மற்றும் தடுப்பு மருந்துகளை பயன்படுத்துதல் (குறிப்பாக, "சுற்றுச்சூழல் சார்ந்த காரணிகளை" காண்க @ http://www.nhlbi.nih.gov/guidelines/asthma/asthgdln.htm.)
தற்போதைய சிகிச்சை நெறிமுறைகளால் உள்ளிழுக்கப்படும் கார்ட்டிக்கோஸ்டீராய்டு போன்ற நோயைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. இந்த மருந்துகள் அழற்சியை ஒடுக்கி சுவாசவழிகளின் அகவுரையில் உள்ள வீக்கத்தை குறைக்க உதவுகிறது. நிவாரணிகளின் தேவை மிகவும் அவசியமாக இருக்கும். ஒரு வாரத்தில் இரண்டு முறைகளுக்கு அதிகமாக நோய்நிகழ்வு ஏற்படுதல் இருக்கும் நோயாளிக்கும் அல்லது கடுமையான அறிகுறிகள் உள்ள நோயாளிக்கும் இந்த மருந்து உதவியாக இருக்கும். அறிகுறிகள் குறையாமல் அப்படியே இருந்ததானால் கட்டுப்படுத்தும் மருந்துகள் கூடுதலாக மற்ற மருந்துகளோடு சேர்த்துக்கொடுக்கப்படும். இந்த மருந்துகள், ஆஸ்துமாவின் அறிகுறிகள் முழுவதுமாக தடுக்கப்படும் வரை கொடுக்கப்படும். அறிகுறிகள் மோசமாகும் நேரத்தில் சில ஆஸ்துமா நோயாளிகள் மருந்துகளை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்கின்றனர். இதன் மூலம் பல சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆஸ்துமா நோயாளிகள் இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்க நோயை கட்டுப்படுத்தும் மருந்துகளை முறையாக பயன்படுத்துதல் அவசியம்.
ஆஸ்துமா நோயாளிகள் சிலநேரங்களில் அறிகுறிகள் குறைந்து நன்றாக உணர்ந்தால் மற்றும் சுவாசித்தலில் பிரச்சனை இல்லாமல் இருந்தாலும் கட்டுப்படுத்தும் மருந்துகள் எடுத்துக்கொள்வதை நிறுத்திவிடுகின்றனர். இது போன்ற செயலினால் ஆஸ்துமாவின் தாக்கம் சில நாட்களுக்கு பிறகு மறுபடியும் ஏற்படும். நீண்ட கால நிவாரணமும் கிடைக்காது.
ஒவ்வாமை ஊக்கி தடுப்பாற்றலுக்கு மருத்துவம் மட்டும் தான் நோயை தடுக்கும் சிகிச்சையாக உள்ளது. நோயைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் பின்வருவனவற்றை உள்ளடக்குகிறது:
புகைத்தல், நோயாளிகளுக்கு பல வழிகளில் தீங்கிழைக்கக்கூடிய ஒன்றாக உள்ளது. இது சுவாசத்திற்குரிய நோய்களில் மிகவும் பரவலாக காணப்படக்கூடிய ஒன்றாகும். புகைத்தலினால் ஏற்படும் விளைவுகளாவன: அறிகுறிகள் மிகவும் அதிகமாக தீவிரமடைதல் (அதிகரித்த அழற்சியினால் (வீக்கம்) இருக்கலாம்[106]), நுரையீரலின் செயல்பாடு மிகவும் விரைவாகக் குறைந்து வருதல் மற்றும் தடுப்பு மருந்துகளுக்கு நோய் பதிலளிப்பு குறைதல்.[107] வாகனங்களிலிருந்து வெளியாகும் புகை, ஆஸ்துமா ஏற்படுவதற்கு மிகமுக்கியமான காரணமாகவும் தீங்கு விளைவிக்கும் காரணியாகவும் கருதப்படுகிறது.[சான்று தேவை] புகைப்பிடிக்கும் ஆஸ்துமா நோயாளிகள் அல்லது வாகன நெரிசல்கள்[சான்று தேவை] இருக்கும் இடத்திற்கு அருகில் வாழும் ஆஸ்துமா நோயாளிகளுக்கு அவர்களுடைய நோயை கட்டுப்படுத்துவதற்கு உதவும் வகையில் கூடுதலான மருந்துகள் தேவைப்படுகிறது. மேலும் மரக்கட்டை புகை, எரிவாயு அடுப்பின் புகைகள் மற்றும் மற்றவர்கள் புகைத்தலினால் வெளியாகும் புகை ஆகியவற்றிற்குட்படுதல் ஆஸ்துமா நோயாளிகளில் புகைப்பிடிக்காதவருக்கும் புகைப்பிடிப்பவருக்கும் மிகவும் அதிகமாக தீங்கு விளைவிக்கக்கூடியதாக உள்ளது. இதன் காரணத்தினால் ஆஸ்துமா மேலும் தீவிரமடைதல் அதிகமாக அவசர பிரிவுக்கு வருகைத் தருதல் மற்றும் ஆஸ்துமா நோயின் காரணமாக அதிகமாக மருத்துவமனையில் சேர்க்கப்படுதல் ஆகியவை நேரிடலாம்.[108] புகைத்தலை விட்டுவிடுதல் மற்றும் மற்றவர்கள் புகைப்பிடித்துக்கொண்டிருக்கும் இடங்களை தவிர்த்தல் ஆகியவை ஆஸ்துமா நோயாளிகளுக்கு கடுமையாக அறிவுறுத்தப்படுகிறது.[109] காற்று வடிகட்டிகள் மற்றும் அறையில் உள்ள காற்றை சுத்தம் செய்பவைகள் ஆகியவற்றை பயன்படுத்தப்படுவதன் மூலம் ஆஸ்துமாவின் சில அறிகுறிகளை தடுக்க உதவுகிறது.[110] ஆஸ்துமாவை அதிகரிக்கும் ஒரு மிகப்பெரிய காரணியாக ஓசோன் கருதப்படுகிறது.[111] ஆஸ்துமா நிர்வாக திட்டத்தின் யோசனை என்னவென்றால் ஒரு நபருக்கு ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய ஒவ்வாமை ஊக்கிகள் எத்தனை இருக்கிறதோ அவை அனைத்தையும் தவிர்த்தலின் மூலம் ஆஸ்துமாவைக் குறைக்கலாம் என்பதாகும். இந்த கருத்தை தேசிய இதயம், நுரையீரல் மற்றும் இரத்த நிறுவனம் ஆதரிப்பதாக அறிக்கை வெளியிட்டது. ஒவ்வாமை ஊக்கிகளை குறைப்பதற்கு ஒரே ஒரு அணுகுமுறை மட்டும் போதுமானதாக இருக்காது; இதற்கு பலகாரணிகள் அடங்கிய அணுகுமுறை தான் அவசியப்படும். இந்த கருத்தை அந்த அறிக்கையும் மற்றவர்களும் [112][113] ஒப்புக்கொண்டனர். அமெரிக்காவில் உள்ள அமெரிக்க ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமை நிறுவனத்தின் மூலம் ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமை தோழமை என்ற சான்றளிப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதே திட்டம் கனடாவில் கனடா ஆஸ்துமா அமைப்பு பரணிடப்பட்டது 2009-02-13 at the வந்தவழி இயந்திரம் என்ற நிறுவனத்தினால் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் கட்டுப்பாட்டை தூண்டுவதற்கு பலகாரணிகள் அடங்கிய அணுகுமுறையை பயன்படுத்தியது.
உடற்பயிற்சியினால் ஆஸ்துமாவின் தாக்கம் தூண்டப்படும் நோயாளிகளுக்கு (உடற்பயிற்சி தூண்டப்பட்ட ஆஸ்துமா) அதிகமான அளவு காற்றோட்டம், குளிர்மை மற்றும் வறண்ட காற்று ஆகியவை நோயின் தாக்கத்தை அதிகரிக்கிறது. இது போன்ற காரணங்களுக்காக பனிச்சருக்குதல் மற்றும் ஓடுதல் போன்ற செயலினால் நோயாளி, அதிகமான அளவு குளிர்ந்த காற்றை சுவாசிக்கிறார். இதனால் ஆஸ்துமா நோய் மேலும் அதிகரிக்கிறது. ஆனால் உட்புறத்தில் நீந்துதல், இள வெப்பமுள்ள நீச்சல் குளம் பயன்படுத்துதல், ஈரமான காற்றை சுவாசித்தல் போன்றவை நோய் தூண்டப்படுவதை குறைக்கிறது.
குறைந்த அளவு வைட்டமின் சி நுரையீரல் செயலிழப்போடு தொடர்புபடுத்தப்பட்டுள்ளது மற்றும் வைட்டமின் சி உட்கொள்வதை அதிகரிப்பதனால் ஆஸ்துமா நோயுடைய மக்களின் நுரையீரல் செயல்பாடு அதிகரிக்கிறது. இது உடற்பயிற்சி மூலம் ஏற்படும் ஆஸ்துமாவை தடுக்க உதவுகின்றது என்று பல ஆய்வுகள் கூறுகின்றது. டெக்லென்பர்க் நடத்திய ஆராய்ச்சியில் ஒரு நாளைக்கு 1500மில்லி கிராம் அஸ்கோர்பிக் அமிலம் எனும் அடிப்படையில் 2 வாரங்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை பொதுவான (−14.3±1.6%) மற்றும் பிளாசிபோ உணவு கட்டுப்பாடோடு (−12.9±2.4%) ஒப்பிடும் போது உடற்பயிற்சிக்கு பின்னான FEV1(−6.4±2.4%) அதிகப்படியாகக் குறைக்க உதவுகின்றது என ஆராய்ச்சியின் முடிவு காண்பிக்கின்றது. பிளாசிபோ மற்றும் பொதுவான உணவு கட்டுப்பாடு ஒப்பிடும் போது அஸ்கோர்பிக் அமில உணவு கட்டுப்பாடு, ஆஸ்துமா அறிகுறிகளை குறிப்பிடத்தக்க வகையில் சீர் செய்கிறது உடற்பயிற்சிக்கு பின்னான FENO, LTC4–E4 மற்றும் 9α, 11β-PGF2 அளவுகள் பிளாசிபோ மற்றும் பொதுவான உணவு கட்டுப்பாடுகளோடு ஒப்பிடும் போது அஸ்கோர்பிக் அமில உணவு கட்டுப்பாட்டில் குறிப்பிடத்தக்க அளவு குறைவாக (p<0.05) இருந்தது.[114] முடிவுகள் சாதகமாக இருந்த போதும் ஆஸ்துமா தாக்கத்தின் வீரியத்தை வைட்டமின் சி மட்டும் குறைக்கும் என்று கூறிவிட முடியாது. ஆஸ்துமா உள்ள மக்களுக்கு வைட்டமின் சி பரிந்துரைக்கப்படுவதற்கு முன் பெரிய மற்றும் வலுவான ஆய்வுகள் தேவைப்படுகின்றது.[115]
ஆஸ்துமா சிகிச்சையில் மெக்னீசியம் மற்றும் செலினியம் சேர்க்கைகளின் பங்கு பற்றி அறிய மேலும் ஆராய்ச்சி தேவைப்படுகிறது. மிகத் தீவிரமான ஆஸ்துமா நோயாளிகளில் மரபு சார்ந்த சிகிச்சையோடு கூட கூடுதலாக மெக்னீசியம் சல்ஃபேட் நரம்பு வழி சிகிச்சை அளிக்கப்படும் போது மூச்சுக் குழாய் தளர்ச்சி அடையும் தாக்கம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.[116][117]
அறிகுறிகளை சமாளிக்கவும் வருமுன் கண்காணிக்கவும் அதற்கேற்ற குறிப்பிட்ட திட்டங்களை வகுக்கும் வகையில் மருத்துவர் மற்றும் நோயாளி (குழந்தை அல்லது வயதுவந்தவராக இருந்தாலும்) ஆகியோரிடையே உறவுமுறையை உருவாக்குவது ஆஸ்துமாவை கட்டுப்படுத்துவதில் உள்ள மிக முக்கியமான படியாகும். எதை அடைய வேண்டும் என்பதை ஆஸ்துமா உள்ள ஒரு நபர் புரிந்து கொண்டுள்ளார் (மற்றும் முடிவெடுப்பதில் சரியான பங்கு எடுக்கிறார்) என்பதை உறுதி செய்து கொள்வது அவசியமாகும். அடைய வேண்டியவற்றில் ஒவ்வாமை உருவாக்கும் பொருட்களுக்கு வெளிப்படுவதை குறைத்தல் அறிகுறிகளின் தீவிரத்தை அறிந்து கொள்ள மருத்துவ சோதனைகளைச் செய்து கொள்வது மற்றும் மருந்துகள் எடுத்துக் கொள்வதும் கூட உள்ளடங்கும். சிகிச்சை திட்டம் எழுதப்பட்டும் ஒவ்வொரு வருகையின் போதும் ஆலோசனை செய்யப்பட்டு மற்றும் அறிகுறிகளைப் பொறுத்து மாற்றப்பட வேண்டும்.[118]
செல்ல பிராணிகள் அல்லது ஆஸ்பிரின் போன்ற தூண்டும் பொருட்களைக் கண்டறிந்து அவற்றுக்கு வெளிப்படுதலை குறைத்தல் அல்லது தவிர்த்தல் ஆகியவை ஆஸ்துமாவிற்கு அளிக்கக்கூடிய மிகவும் சக்தி வாய்ந்த சிகிச்சையாகும். தூண்டுதலை தவிர்த்தல் போதுமான அளவிற்கு இல்லாமல் இருந்ததானால், மருத்துவ சிகிச்சையை நாடலாம். உணர்ச்சி நீக்கம் குணமாக்கக்கூடியதாக இருக்கலாம் என பரிந்துரைக்கப்படுகிறது.[119] கூடுதலாக சில நோயாளிகள் புடேகோ முறையின் மூலம் தங்கள் சுவாச பழக்கங்களை மாற்றி அமைத்து தங்களது அறிகுறிகளைப் போக்கியுள்ளனர்.[120]
நிவாரண மருந்து, அதிக நேரம் செயல்படக்கூடிய β2-இயக்கிகள் மற்றும் அவசர சிகிச்சை உள்ளிட்டவை மற்ற சிகிச்சை முறைகளாகும்.
ஆஸ்துமா நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படும் குறிப்பிட்ட மருத்துவ சிகிச்சை அவர்களுடைய நோயின் தீவிரம் மற்றும் அறிகுறிகளின் நிகழ்வெண் ஆகியவற்றின் அடிப்படையில் இருக்கும். ஆஸ்துமாவிற்கான குறிப்பிட்ட சிகிச்சைகள், நிவாரணிகள், நோய் தடுப்புகள் மற்றும் அவசர சிகிச்சை என்று விரிவாக வகைப்பிரிக்கப்பட்டுள்ளன. வல்லுநர் குழு அறிக்கை 2: ஆஸ்துமாவின் அறுதியிடல் மற்றும் சமாளித்தலுக்கான வழிகாட்டல்கள் (EPR-2)[109] அமெரிக்க தேசிய ஆஸ்துமா கல்வி மற்றும் தடுப்பு திட்டம் மற்றும் ஆஸ்துமாவை சமாளிப்பதற்கான பிரித்தானிய வழிமுறைகள் [121] ஆகியவை அதிகப்படியாக உபயோகிக்கப்படுகிறது மற்றும் பல மருத்துவர்களால் ஆதரவும் அளிக்கப்படுகிறது.
வல்லுநர் குழு அறிக்கை 3: ஆஸ்துமாவை கையாளுதல் மற்றும் நோயறிதலுக்கான வழிகாட்டல்களின் அமெரிக்க தேசிய ஆஸ்துமா கல்வி மற்றும் தடுப்பு திட்டம் 2007 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இது தனிப்பட்ட சிகிச்சைகளை வழிநடத்த உதவும் செயல்திட்டமாக இருக்கும் 4 கோட்பாடுகளின் அடிப்படையில் ஆஸ்துமா கையாளுதலுக்காக ஒருமுகப்படுத்தப்பட்ட 6-படிகள் கொண்ட வழிமுறையை வெளியிட்டது:
வலுக்குறைவிலிருந்து அபாயத்தை வேறுபடுத்திக் காட்டும் வகையில் குறிக்கோள்களை மாற்றி தனிப்பட்ட சிகிச்சை மற்றும் ஆஸ்துமா கட்டுப்பாட்டில் அதிகப்படியான கவனம் இருக்கும் வகையில் அமைக்கப்பட்டதால் 2007 ஆம் ஆண்டு திருத்தி அமைக்கப்பட்ட NAEPP வழிமுறைகள் முந்தைய வழிமுறைகளை விட வித்தியாசப்படுகிறது. இதில் சிகிச்சையின் தீவிரத்தை “குறைக்கும்” அல்லது “அதிகப்படுத்தும்” முடிவை எடுக்கத் தூண்டும் வகையிலான செயல்கள் குறிப்பிடத்தக்க வகையில் வரையறுக்கப்பட்டுள்ளது. மேலும் நோயாளியின் சுய மேலாண்மையை ஊக்கப்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த முடிவெடுத்தல் மற்றும் கல்வியை வலியுறுத்துகிறது.[122]
அனைத்து நோயாளிகளுக்கும் குறுகிய கால நிவாரணத்துக்காக பிராங்கவிரிப்பி பரிந்துரைக்கப்படுகிறது. எப்போதாவது தாக்கத்தை அனுபவிப்பவர்களுக்கு வேறு எந்த மருந்துகளும் தேவை இல்லை. லேசான ஆனால் தொடர்ந்து நோய் ஏற்படுபவர்களுக்கு (வாரத்தில் 2க்கும் மேலான தாக்கங்கள்) சிறிய விழுங்களவுடைய உறிஞ்சக்கூடிய குளூகோகார்டிகோய்ட்ஸ் அல்லது மாறாக ஒரு வாய்வழி ல்யூகோடிரையீன் மாற்று ஒரு மாஸ்ட்-செல் நிலைபடுத்தி அல்லது தியோஃபிலீன் கொடுக்கப்படலாம். தினமும் தாக்கத்தை அனுபவிப்பவர்களுக்கு அதிக விழுங்களவுடைய குளூகோகார்டிகோய்ட் மற்றும் அதிக நேரம் செயல்படக்கூடிய உறிஞ்சுகின்ற β-2 அகோனிஸ்ட் ஆகியவை இணைந்து பரிந்துரைக்கப்படலாம்; மாறாக β-2 அகோனிஸ்டுக்கு பதிலாக ல்யூகோடிரையீன் மாற்று அல்லது தியோஃபிலீன் கொடுக்கப்படலாம். தீவிரமான ஆஸ்துமாவில் இந்த சிகிச்சைகளோடு தீவிர தாக்கங்களின் போது வாய்வழி குளூகோகார்டிகோய்ட்ஸ் சேர்க்கப்படலாம்.
வேகமாக செயல்படக்கூடிய பிராங்கவிரிப்பிகளின் மூலம் சுவாசக்குறை மற்றும் மூச்சுத்திணறல் போன்ற நிகழ்வுகளைக் கட்டுப்படுத்த முடியும். இவை சட்டைப்பை அளவில் மீட்டர்டு-மருந்தளவு உள்ளிழுப்புகளாக (MDIS) வழங்கப்படுகிறது. உள்ளிழுப்புகளை உபயோகிக்கும் போது தேவைப்படும் ஒருங்கிணைப்பில் பிரச்சனை உள்ள இளம் வயது பாதிப்புள்ளோர்கள் அல்லது உறிஞ்சியை உபயோகித்த பின்னர் மூச்சை 10 விநாடிகளுக்கு பிடிக்க முடியாதவர்கள் (பொதுவாக வயதானவர்கள்) ஆகியோருக்கு ஆஸ்துமா ஸ்பேசர் உபயோகிக்கப்படலாம் (மேலே உள்ள படத்தை பார்க்கவும்). இந்த இடைவெளிக்கருவி (ஸ்பேசர்) பிளாஸ்டிக் சிலிண்டரால் ஆனது. இது ஒரு சிறிய குழாயில் மருந்தை காற்றோடு கலக்கின்ற படியால் நோயாளிகளுக்கு மருந்தின் மொத்த விழுங்களவையும் (மருந்தளவு) பெற சுலபமாக உள்ளது. மேலும் செயல்படுகின்ற இயற்றிகளை சிறிய துகள்களாக அதிகப்படியாக மொத்தமாக உள்ளிழுக்கக்கூடியவைகளாக மாற்ற உதவுகின்றது.
அதிகமாக தொடர்ந்து விழுங்களவு வழங்கக்கூடிய நெபுலைசர் (தெளிக்கருவி) கூட உபயோகிக்கலாம். நெபுலைசர்ஸ் மருந்தின் ஒரு விழுங்களவை சலைன் கரைசலில் ஒரு நிலையான மூடுபனி ஆவி போன்று ஆவியாக்குகிறது. இதை நோயாளி முழு விழுங்களவு பெறும் வரை தொடர்ந்து உள்ளிழுப்பார். இடைவெளிக் கருவிகளோடு உபயோகப்படுத்தப்படும் உள்ளிழுப்புகளை விட இவை ஆற்றல் மிகுந்தவை எனக் கூறுவதற்கு எந்த ஒரு தெளிவான ஆதாரமும் இல்லை. தீவிர தாக்கத்தை அனுபவிக்கும் சில நோயாளிகளுக்கு நெபுலைசர்கள் உபயோகமாக இருக்கலாம். இது போன்ற நோயாளிகளால் ஆழமாக உள்ளிழுக்க முடியாமல் இருக்கலாம். ஆகையால் வழக்கமான உள்ளிழுப்புகள் பல முறை முயன்றாலும் மருந்தை நுரையீரலில் ஆழமாக செலுத்தாமல் போகலாம். நெபுலைசர் தொடர்ந்து மருந்தை செலுத்துவதால் முதல் சில உள்ளிழுப்புகள் சுவாச வழிகளை ஆசுவாசப்படுத்தி தொடரும் உள்ளிழுப்புகளின் போது அதிகப்படியான மருந்தை இழுக்கும் படி செய்யும் எனக் கருதப்படுகிறது.
நிவாரணிகளில் அடங்குபவை:
அதிக நேரம் செயல்படுகின்ற β2-இயக்கிகள்
அதிக நேரம் செயல்படுகின்ற பிராங்கவிரிப்பிகள் (LABD) குறைந்த நேரம் செயல்படுகின்ற தேர்ந்தெடுக்கப்பட்ட பீட்டா2 ஆட்ரிநோசெப்டர் அகோனிஸ்ட்ஸை (adrenoceptor agonists) ஒத்த வடிவத்தைக் கொண்டிருக்கும். ஆனால் இவற்றில் அதிகமான நீளமுடைய பக்க சங்கிலிகள் இருப்பதால் 12 மணி நேர தாக்கம் இருக்கும் மற்றும் இது மிருதுவான அறிகுறிகளுக்கு ஏற்ற நிவாரணத்தை அளிக்கும் (காலை மற்றும் இரவில் உபயோகித்தல்). நோயாளிகள் அதிகமான அறிகுறிகள் கட்டுப்படுவதாகக் கூறினாலும் இவை தொடர்ந்து உபயோகப்படுத்தப்படும் தடுப்பு கருவிகளின் தேவையை மாற்றாது மற்றும் இவற்றின் மெதுவான செயல்திறனின் காரணமாக சிறிது நேரம் செயல்படுகின்ற விரிப்பிகள் தேவைப்படலாம். 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்க FDA ஒரு ஆரோக்கிய அறிக்கையை வெளியிட்டது. இதில் அதிக நேரம் செயல்படுகின்ற β2 இயக்கிகள் உபயோகிப்பது அறிகுறிகளை மேலும் மோசமாக்கும் மற்றும் சில நோயாளிகளில் மரணம் கூட நேரலாம் என பொது மக்களுக்கு எச்சரிக்கை வழங்கியது.[127] 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், FDAவின் மருந்து பாதுகாப்பு அலுவலகம் இந்த மருந்துகள் குழந்தைகளில் உபயோகிக்கப்படுவதற்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதி திரும்பப்பெறப்பட வேண்டும் என பரிந்துரை செய்தது. பெரியவர்களில் (வயதுவந்தவர்களில்) இதன் உபயோகம் பற்றிய ஆலோசனை தொடர்ந்து கொண்டிருக்கிறது.[128]
சால்மெடரோல் (salmeterol), ஃபோர்மெடெரோல் (formoterol), பேம்புடரோல் (bambuterol) மற்றும் தொடர்-வெளியிடும் வாய்வழி ஆல்ப்யுடரோல் (albuterol) போன்றவை தற்போது கிடைக்கப்பெறும் வகையில் இருக்கும் அதிக நேரம் செயல்படுகின்ற பீட்டா 2 அட்ரிநோசெப்டர் இயக்கிகள். உள்ளிழுக்கப்படும் ஸ்டீராய்டுகள் மற்றும் அதிக நேரம் செயல்படுகின்ற பிராங்க விரிப்பிகள் ஆகியவற்றின் கூட்டு அதிக அளவில் பரவி வருகின்றது; ஃபுளுடிகேசோன்/சால்மெடெரோல் (அமெரிக்காவில் அட்வேர் , யுனைடட் கிங்டமில் செரிடைட்) தற்போது அதிகப்படியாக பொதுவாக உபயோகப்படுத்தப்படும் சேர்க்கையாகும். மற்ற ஒரு கூட்டு மருந்து வணிகரீதியாக சிம்பிகோர்ட் (Symbicort) என்று அழைக்கப்படும் புடெசோனைட்/ஃபோர்மெடரோல் ஆகும்.
அதிக நேரம் செயல்படுகின்ற பீட்டா-இயக்கிகளின் பங்கு பற்றிய சமீபத்திய மெட்டா-பகுப்பாய்வு, ஆஸ்துமா நோயாளிகளுக்கு இருக்கும் அபாயத்தை சுட்டிக் காட்டலாம். 2006 ஆம் ஆண்டில் ஆணல்ஸ் ஆஃப் இண்டர்நல் மெடிசினில் (Annals of Internal Medicine) வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, பிளாசிபோவோடு ஒப்பிடப்படும் போது அதிக நேரம் செயல்படுகின்ற பீட்டா இயக்கிகள் ஆஸ்துமாவிற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல் மற்றும் ஆஸ்துமா இறப்புகள் ஆகியவற்றை 2 முதல் 4 மடங்கு அதிகரிக்கிறது என சுட்டிக் காட்டுகின்றது.[129] இந்த ஆய்வு வெளியிட்டப்பட்ட பிறகு ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஷெல்லி சால்பெடெர் கூறியதாவது, “ இந்த இயற்றிகள் அறிகுறிகளை பிராங்கவிரிப்பி முறையின் மூலம் சீர்செய்கின்றது. மேலும் வீக்கம் மற்றும் மூச்சுக்குழாயில் அதிகப்படியான பதிலளிப்பையும் அதிகரிக்கிறது, இதன் விளைவாக அறிகுறிகள் அதிகமாவதற்கான எந்த எச்சரிக்கையும் இல்லாமல் ஆஸ்துமா கட்டுப்பாட்டை மோசமாக்கி விடும்”. மேலும் அந்த வெளியீட்டில் கூறப்பட்டதாவது “ சால்மெடரோல் அல்லது ஃபோர்மோடெரால் அடங்கிய மூன்று பொதுவான ஆஸ்துமா உள்ளிழுப்புகள் அமெரிக்காவில் ஏற்படும் ஆஸ்துமா தொடர்பான இறப்புகளில் 5ல் 4ஐ ஏற்படுத்துகிறது. மேலும் இது சந்தையில் இருந்து எடுக்கப்பட வேண்டும்”.[130] இந்த கணிப்பு சரியானதல்ல என்று பல ஆஸ்துமா வல்லுநர்களால் கருதப்படுகின்றது. மருத்துவர் ஹால் நெல்சன், ஆணல்ஸ் ஆஃப் இண்டர்நல் மெடிசினுக்கு சமீபத்தில் எழுதிய கடிதத்தில் பின்வருபவற்றைச் சுட்டிக்காட்டுகிறார்:
டாக்டர். நெல்சனின் கருத்துகளுக்கு பதிலளிக்கும் வகையில் Dr. ஷெல்லி சால்பெடர் ஆணல்ஸ் ஆந்ப் மெடிசினுக்கு எழுதிய கடிதம் பின்வருவனவாகும்:
ஆஸ்துமா நோயாளி வழக்கமாக எடுத்துக்கொள்ளும் மருந்துகளுக்கு அவருடைய நோய்த்தாக்கம் பதிலளிக்காத நேரத்தின் போது அந்த அவசர நிலையை சமாளிப்பதற்கு அவருக்கு மற்ற சிகிச்சை விருப்பத் தேர்வுகள் கிடைக்ககூடியதாக இருக்கிறது. அவையாவன:[131]
மற்ற நாட்பட்ட கோளாறுகளால் அவதியுறும் நோயாளிகளைப் போலவே பல ஆஸ்துமா நோயாளிகளும் மாற்று சிகிச்சைகளை உபயோகிக்கின்றனர். சுமார் 50 சதவீத ஆஸ்துமா நோயாளிகள் ஒப்புக்கொள்ளப்படாத சிகிச்சை முறைகளை நாடுகின்றனர் எனக் கருத்தாய்வுகள் காண்பிக்கின்றன.[133][134] இது போன்ற பல சிகிச்சைகளின் செயல்திறனை உறுதி செய்ய மிகச்சில தரவுகளே உள்ளன. ஆயினும், ஹைபர்வெண்டிலேஷன் ஹைபோகேப்னியாவை (hyperventilation hypocapnia) கட்டுப்படுத்தும் புடேகோ முறை, மூச்சுக்குழாய் அதீதசெயல்பாடு அல்லது நுரையீரல் செயல்பாட்டில் எந்த வித தாக்கமும் இன்றி மருந்துகளின் தேவையை குறிப்பிட்ட அளவு குறைப்பதாக, ஐந்து தோராயமயமாக்கப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகளின் முடிவுகள் காண்பிக்கின்றன.[135][136][137][138][139] 2008 ஆம் ஆண்டு மே மாதம் மாற்றப்பட்ட ஆஸ்துமா கையாளுதல் பிரித்தானிய வழிமுறை, புடேகோ முறைக்கு அங்கீகாரம் வழங்கியது.[140] ஆஸ்துமாவிற்கான அக்குபஞ்சர் முறை பற்றிய காக்ரேன் முறையான திறனாய்வு அதற்கான செயல்திறனுக்குரிய எந்தவித ஆதாரத்தையும் அளிக்கவில்லை.[141] இதே போன்ற காற்று அயோனைசர்கள் திறனாய்வும் இது ஆஸ்துமா அறிகுறிகளை சீர் செய்வதாக அல்லது நுரையீரல் செயல்பாட்டை அதிகரிக்கிறது என்பதற்கான ஆதாரங்களை அளிக்கவில்லை; இது சமமாக நேர்மறை மற்றும் எதிர்மறை ஜெனரேட்டர்களுக்கு பொருந்தினது என்று கண்டுபிடித்தது.[142] காற்று வடிக்கட்டுதல், பூச்சிகளை அழிக்கும் வேதிமருந்துகள், சுத்தம் செய்தல், மெத்தை விரிப்பான்கள் ஆகியவற்றை உள்ளடக்கும் மூட்டைப்பூச்சி கட்டுப்பாடு நடவடிக்கைகளை மற்றொரு முறை சார்ந்த ஆய்வு திறனாய்வு செய்தது. மொத்தத்தில் இவை எதுவும் ஆஸ்துமா அறிகுறிகளில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.[143] ஆஸ்டியோபேதிக், கீரோப்ரேக்டிக், ஃபிசியோதெரப்யூடிக் மற்றும் சுவாச சிகிச்சை செயல்பாடுகள் உள்ளிட்ட ஆஸ்துமாவிற்கான “மனித சிகிச்சைகளில்” செய்யப்பட்ட ஆய்வு இவை ஆஸ்துமாவிற்கு சிகிச்சை அளிக்கிறது என்பதை ஒப்புக்கொள்ள அல்லது மறுக்க போதுமான ஆதாரத்தை கண்டுபிடிக்க முடியவில்லை;[144] இந்த திறன்வாய்ந்த செயல்பாடுகளில் பலவகையான எலும்புநோய் மற்றும் உடலியக்க மருத்துவ உத்திகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை "விலா எலும்புக்கூடு மற்றும் முதுகுதண்டின் அசைவுகளை அதிகரிக்கிறது. இவற்றின் மூலமாக நுரையீரலின் செயல்பாடு மற்றும் சுழற்சி மேம்படுத்தப்படுகிறது"; மார்பை தட்டுதல், உலுக்குதல், அதிர்வு ஏற்படுத்துதல் மற்றும் "சளி வெளியே வரவைப்பதற்கு உதவி செய்வதற்கு நோயாளியை நிற்க அல்லது உட்கார செய்தல்." அறிகுறிகளின் தீவிரத்தை குறைப்பதில் ஹோமியோபதி சிகிச்சை சாத்தியமுள்ள குறைவான பலனை தருகிறது என்று மெட்டா-பகுப்பாய்வு கண்டுபிடித்தது.[145] எனினும் இந்த ஆய்வில் பங்கேற்ற நோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. இந்த ஆய்வினை தொடர்ந்து செய்யப்பட்ட மற்ற ஆய்வுகள் இதனுடைய கண்டுபிடிப்பிற்கு, ஆதரவு அளிக்கவில்லை.[146] பலவகையான யோகா பழக்கத்தின் மூலம் சில பலன்கள் கிடைக்கின்றன என்பதை பல சிறிய சோதனைகள் அறிவுறுத்தியுள்ளது. யோகாசனங்கள், பிராணயாமா, தியானம் மற்றும் க்ரியாஸ் போன்ற ஒருங்கிணைந்த யோகா திட்டங்களிலிருந்து[147] சஹாஜா யோகா[148] என்ற ஒரு புதிய சமயம் சார்ந்த தியானம் வரைக்கும் எல்லா யோகாக்களையும் பரிந்துரைக்கிறது.[149]
2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் த நியூயார்க் டைம்ஸ் 500க்கும் மேற்பட்ட ஆய்வுகளை மறுஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டதாவது: உள்ளிழுக்கப்படும் கார்ட்டுக்கோஸ்டீராய்டுகள் (corticosteroids) ஆய்வு செய்யப்பட்டதில், மருந்து நிறுவனங்களினால் செய்யப்பட்ட ஆய்வுகளில் கூறப்பட்ட தீங்கிழைக்கூடிய விளைவுகளை விட தன்னிச்சையாக செய்யப்பட்ட ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட தீங்கிழைக்கூடிய விளைவுகள் நான்கு மடங்கு அதிகமாக இருந்தது என்பதாகும்.[150][151]
ஆஸ்துமா நோய் தாக்கம் ஏற்படுவதற்கு முன்னரே அதைப் பற்றி முன்னுரைப்பது நல்லது. குறிப்பாக குழந்தைகளுக்கு லேசான நோய் தாக்கம் இருக்கும் போதே முன் கணிக்கப்படுவது நல்லது.[31] குழந்தைப்பருவத்திலேயே ஆஸ்துமாவின் நோய் அறுதியிடல் செய்யப்பட்டவர்களில் 54 சதவீதத்தினர், பத்தாண்டுகளுக்கு பிறகு அறுதியிடல் செய்த போது ஆஸ்துமா நோய் அவர்களுக்கு காணப்படவில்லை. ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டவருக்கு நிரந்தர நுரையீரல் சேதம் எதுவரைக்கும் பரவும் என்பது இன்னும் தெளிவாக அறியப்படவில்லை. சுவாசவழி மீள்வடிப்பு கவனிக்கப்பட்டது. ஆனால் இது தீங்குவிளைவிக்கும் அல்லது பலன் தரும் மாற்றங்களை ஏற்படுத்துமா என்பது இன்னும் தெளிவாக அறியப்படவில்லை.[84] ஆய்வுகளிலிருந்தான முடிவுகள் இருவேறான கருத்துக்களை அளித்தாலும் பல துணையலகுகள் கொண்டு அளவிட்டப்படி பெரும்பாலான ஆய்வுகள் குளுக்கோக்கார்டிகாய்டுகளுடனான ஆரம்பகட்ட சிகிச்சை நுரையீரல் செயல்பாடு சேதமடைவதை தடுப்பது அல்லது சீராக்குவது காணப்பட்டுள்ளது.[152] லேசான அறிகுறிகளால் தொடர்ந்து அவதியுறும் நோயாளிகள் கார்ட்டிக்கோஸ்டீராய்டுகளை பயன்படுத்துவதால் மிக சில குறைப்பாடுகளுடன் பல நாட்கள் வாழ உதவும். ஆஸ்துமாவினால் ஏற்படும் இறப்பு வீதம் மிகவும் குறைவாகும். அமெரிக்காவில் ஏறக்குறைய 10 மில்லியன் நோயாளிகள் உள்ளனர். அவற்றில் ஒரு வருடத்திற்கு சுமார் 6000 இறப்புகள் நேரிடுகின்றது. நோய்நிலையை ஒழுங்கான முறையில் கட்டுப்படுத்துவதன் மூலம் இது போன்ற இறப்புகளை தடுக்கலாம்.
no data
<100
100–150
150–200
200–250
250–300
300–350 |
350–400
400–450
450–500
500–550
550–600
>600 |
பல ஆண்டுகளாக ஆஸ்துமாவின் சொற்பொருள்விளக்கம் மாறிக்கொண்டே வருவதால் ஆஸ்துமாவின் புறப்பரவியலை கண்டறிவது சிக்கலாகவே உள்ளது. பெரும்பாலான புறப்பரவியல் சார்ந்த ஆய்வுகள் கேள்விப்பட்டியல் ஆஸ்துமா அறிகுறிகளின் சுய-அறிக்கைகள் மற்றும் மருத்துவர் அறுதியிடல் செய்த ஆஸ்துமா அறிக்கை ஆகியவற்றை பயன்படுத்துகின்றன.[87] இந்த தகவல் நடுநிலையான நுரையீரலுக்குரிய செயல்பாடு தரவுகளுடன் சேர்ந்துமிருக்கலாம் அல்லது சேராமலும் இருக்கலாம்.[154] இந்த எல்லா காரணிகளையும் கருத்தில் கொண்டு "ஆஸ்துமாவுக்கு" ஒரே ஒரு குறிப்பிட்ட சொற்பொருள்விளக்கத்தை மட்டும் வைத்துக்கொண்டு செய்யப்பட்ட ஆய்வுகளிலும் 1960களிலிருந்து ஆஸ்துமாவின் நோய்த்தாக்கம் உலகளவில் அதிகரித்து தான் வருகிறது என்று கண்டுபிடிப்பில் வெளியானது.[155]
குழந்தைப்பருவத்தில் உள்ள ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமைகளைப் பற்றின சர்வதேச ஆய்வு (ISAAC) ஒரு மிக முக்கியமான ஆய்வாகும். இந்த ஆய்வு, 56 நாடுகளில் உள்ள 155 மையங்களையும் கொண்டு ஆய்வு நடத்தியது. உலகளவில் ஆஸ்துமாவின் நோய் பரவி வருவதை ஒரு நம்பகமான முறையில் ஒப்பிட்ட முதன்மை ஆய்வுகளில் இதுவும் ஒன்றாகும்.[156] இந்த ஆய்வு 13 முதல் 14 வயது வரையுள்ள அரை மில்லியன் குழந்தைகளிடம் நடத்தப்பட்டது. அந்த கருத்தாய்வில் ஆஸ்துமாவின் நோய்பரவுதலில் உலகளவில் மிகவும் அதிகமான வேற்றுமைகள் (20 முதல் 60 மடங்கு வித்தியாசம் அதிகமாக இருந்தது) இருப்பதை கண்டறிந்தது. மிகவும் வளர்ந்த மற்றும் மேற்கத்தியமாக்கப்பட்ட நாடுகளில் ஆஸ்துமா நோய் மிகவும் அதிகமாக பரவி காணப்பட்டது என்று அந்த ஆய்வில் வெளியானது. நாடுகளுக்கு இடையே ஆஸ்துமாவின் நோய் பரவியிருத்தலில் உள்ள முழு வித்தியாசத்தையும் மேற்கத்திய மாறுதல்களினால் தான் ஏற்படுகிறது என்று சொல்லிவிடமுடியாது. மரபியல் சார்ந்த சமூக மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த ஆபத்துக் காரணிகளில் உள்ள வித்தியாசமும் இந்த வேற்றுமைக்கு காரணமாக இருக்கலாம்.[19] உலகளவில் ஆஸ்துமா நோயாளிகளின் இறப்பு வீதத்தில் காணப்படும் வேற்றுமைகள் குறைந்த மற்றும் நடுநிலை வருவாயுடைய நாடுகளில் மிகவும் பொதுவாக காணப்படுகிறது.[157] ஐக்கிய இராச்சியம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளில் ஆஸ்துமாவின் அறிகுறிகள் மிகவும் அதிகமாக பரவி (20 சதவீதத்திற்கு அதிகமாக) காணப்பட்டது; கிழக்கத்திய ஐரோப்பா, இந்தோனேசியா, க்ரீஸ், உஸ்பிகிஸ்தான், இந்தியா மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளில் ஆஸ்துமா நோய் மிகவும் குறைவாக பரவி (2 முதல் 3 சதவீதம்) காணப்பட்டது.[156]
குழந்தைப்பருவத்தில் ஆஸ்துமா அதிகமாக பரவி வருகிறது என்று சமீபத்தில் செய்யப்பட்ட ஆய்வுகளில் அறிவுறுத்தப்படுகின்றன. இந்த அதிகரித்த நோய் பரவுதல் வயதுவந்தவர்களுடைய ஆஸ்துமா நோயை விட அதிகமாக காணப்படுகிறது.[158] நோய் கட்டுப்பாடு மற்றும் தடுத்தலுக்கான மையத்தின் தேசிய சுகாதார நேர்காணல் கருத்தாய்வு படி, 2001 ஆம் ஆண்டில் 18 வயதிற்கு கீழே உள்ள அமெரிக்க குழந்தைகளில் 9 சதவீதத்தினருக்கு ஆஸ்துமா இருந்தது. ஆனால் 1980 ஆம் ஆண்டில் 3.6 சதவீதத்தினரே ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர் (வரைப்படத்தை காண்க). சுவிஸ் நாட்டில் உள்ள மக்களில் 25லிருந்து 30 ஆண்டுகளுக்கு முன்னதாக 2 சதவீதத்தினரே ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் இன்று 8 சதவீதத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.[2]
வசதிபடைத்த நாடுகளில் ஆஸ்துமா நோய் மிகவும் பொதுவாக காணப்பட்டாலும் கூட அது வசதிப்படைத்தவர்களுக்கு மட்டும் தான் ஏற்படும் என்றில்லை; இந்தியாவில் 15 முதல் 20 மில்லியன் மக்கள் ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று WHO மதிப்பிட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள மொத்த மக்கள்தொகையோடு ஒப்பிடும் போது, அமெரிக்காவில் வாழும் நகர்புறவாசிகள், இஸ்பானிகள் மற்றும் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் மத்தியில் ஆஸ்துமா நோய் அதிகமாக காணப்படுகிறது. கிராமப்புறங்களிலிருந்து நகர்புறங்களுக்கு இடம்பெயர்ந்து செல்லும் மக்களிடையே [159] அல்லது முன்னேற வேண்டிய நாடுகளிலிருந்து மேற்கத்திய நாடுகளுக்கு இடம்பெயர்ந்து செல்லும் மக்கள் மத்தியில் ஆஸ்துமாவின் நோய் அதிகமாக பரவி காணப்படுகிறது. இது எல்லோருக்கும் நன்கு தெரிந்த ஒன்றாகும்.[160]
ஆஸ்துமா பல நாட்களாக உளவழி உடல் நோயாக தான் கருதப்பட்டு வந்தது. சுமார் கி.மு 450 இல், கிரேக்க மருத்துவர்கள் இந்த நோய்க்கு "ஆஸ்துமா" என்று முதன் முதலாக பெயரிட்டனர். இது ஒரு மருத்துவ நிலை என்றும் அடையாளம் கண்டுபிடித்தனர். 1930 முதல் 1950 வரை உள்ள ஆண்டுகளின் போது, 'ஹோலி செவன்' (ஏழு நோய்கள்) உளவழி உடல் நோய்களில் ஒன்றாக ஆஸ்துமா கருதப்பட்டது; உளப்பகுத்தாய்வு சார்ந்த கருத்துகள், ஆஸ்துமா நோயின் காரணி உளவியல் சார்ந்தவை என்று விவரிக்கப்பட்டது. இதற்கு உளப்பகுப்பாய்வு மற்றும் மற்ற 'பேச்சின் மூலம் நோய்க்கு அளிக்கப்படும் தீர்வுகள்' ஆகியவற்றின் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. குழந்தையின் ஆஸ்துமா மூச்சிரைத்தல், தாய்க்காக விம்முவதாக கருதப்பட்டதால், உளப்பகுப்பாய்வாளர்கள் ஆஸ்துமா உள்ளவர்களுக்கு உளச்சோர்விற்கான சிகிச்சை மிகவும் முக்கியமானதென்று கருதினர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.