From Wikipedia, the free encyclopedia
உயிர்ச்சத்து சி (அசுகோர்பிக் அமிலம் அல்லது அசுகோர்பேட்) என்பது கிச்சிலி குடும்பப் பழங்களிலும் இதர வகைப் பழங்களிலும் காய்கறிகளிலும் காணப்படும் நீரில் கரையக்கூடிய உயிர்ச்சத்து ஆகும். வைட்டமின் சி என்றும் இது பரவலாக அழைக்கப்படுகின்றது. சில நாடுகளில் ஊட்டச்சத்துக் குறைநிரப்பியாகவும் விற்கப்படுகின்றது. உயிர்ச்சத்து சியின் குறைபாட்டால் இசுகேவி எனப்படும் நோய் ஏற்படுகின்றது.
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர் | |
---|---|
2-oxo-L-threo-hexono-1,4- lactone-2,3-enediol or (R)-3,4-dihydroxy-5-((S)- 1,2-dihydroxyethyl)furan-2(5H)-one | |
மருத்துவத் தரவு | |
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை | A |
சட்டத் தகுதிநிலை | பொது மக்களுக்கு கிடைக்கும் |
வழிகள் | வாய்வழி |
மருந்தியக்கத் தரவு | |
உயிருடலில் கிடைப்பு | விரைவான & முழுமையாக |
புரத இணைப்பு | புறக்கணிக்கத்தக்கது |
அரைவாழ்வுக்காலம் | 30 நிமிடம் |
கழிவகற்றல் | சிறுநீரகம் |
அடையாளக் குறிப்புகள் | |
CAS எண் | 50-81-7 |
ATC குறியீடு | A11G |
பப்கெம் | CID 5785 |
ஒத்தசொல்s | L-ascorbate |
வேதியியல் தரவு | |
வாய்பாடு | C6 |
மூலக்கூற்று நிறை | 176.14 கிராம் ஒரு மூலில் |
இயற்பியல் தரவு | |
உருகு நிலை | 190–192 °C (374–378 °F) சிதைகிறது |
உயிர்ச்சத்து சி பழுதடைந்த இழையங்களைப் புதுப்பிப்பது, கொலாஜன் உருவாக்கம், சில நரம்பியக்கடத்திகளின் நொதி உற்பத்தி ஆகியவற்றில் பங்கு வகிக்கும் ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும். தோல், குருதிக்குழாய்கள், குருத்தெலும்பு ஆகியவற்றிற்கு கொலாஜன் தேவைப்படுகிறது. மிக முக்கியமான ஒட்சியேற்ற எதிர்ப்பியாக உயிர்ச்சத்து சி செயல்புரிகின்றது. நோயெதிர்ப்பு அமைப்பின் செயல்பாட்டிற்கு முக்கியமானதொன்றாகவும் இது அறியப்படுகிறது.[1] இது உயிர்வேதியியல் ஐதரொக்சைல் ஏற்ற வினைகளில் துணைநொதியாக உதவுகின்றது.
உயிர்ச்சத்து சியின் செயற்படு வடிவம் அசுகோர்பிக் அமிலம் ஆகும். வைட்டமின் சி வாய்வழியாக அல்லது தசைநார், தோலடி அல்லது சிரை வழி ஊசி மூலம் எடுக்கப்படலாம்.
உயிர்ச்சத்து சியின் மிதமான குறைபாடு தடிமன், புற்றுநோய் அல்லது கோவிட்-19 போன்ற நோய் இடரை அதிகரிக்கிறது என்ற அடிப்படையில் பல்வேறு சுகாதார கூற்றுக்கள் உள்ளன. இதன் குறைபாடு அற்றவர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட நாளாந்த தேவையை விட அதிகமாக உயிர்ச்சத்து சி கூடுதலாகச் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றிய கூற்றுக்களும் உள்ளன. உயிர்ச்சத்து சி பொதுவாக அசெளகரியங்களை ஏற்படுத்தாவிடினும் கூடுதல் அளவுகள் எடுப்பது இரைப்பை குடல் அசௌகரியம், தலைவலி, தூக்கமின்மை, தோல் சிவத்தல் ஆகியவற்றை ஏற்படுத்தும். மிகையாக உயிர்ச்சத்து சி எடுப்பது சிறுநீரகக் கற்களை உருவாக்கலாம். ஐக்கிய அமெரிக்க மருத்துவ நிறுவனம் அதிக அளவு உட்கொள்வதை எதிர்த்து பரிந்துரைக்கிறது. [2]
பெரும்பாலான விலங்குகளால் தங்கள் சொந்த வைட்டமின் சியை உருவாக்க முடியும். இருப்பினும், மாந்தர்கள் உட்பட மனிதக் குரங்கு, குரங்குகள் (ஆனால் அனைத்து முதனிகள் அல்ல), பெரும்பாலான வெளவால்கள், பெரும்பாலான மீன்கள், சில கொறிணிகள் மற்றும் சில விலங்குகள் அதை உணவு மூலங்களிலிருந்து பெற வேண்டும், ஏனெனில் பரிணாமத்தில் இதை உருவாக்கத் தேவையான நொதி எல்- குளோனோ லக்டோன் ஒக்சிடேசு மரபணுப் பிறழ்வுகளைக்கு உட்பட்டுள்ளது.
முந்தைய ஆவணப்படுத்தப்பட்ட இசுகேவி நோய் நிகழ்வானது ஹிப்போக்ரேட்டஸால் (Hippocrates) கி.மு. 400 ஆம் ஆண்டு விவரிக்கப்பட்டுள்ளது. மூத்த பிளினி என்பவரும் இசுகேவியின் நோய் அறிகுறிகளை விவரித்துள்ளார். [3] [4]
உயிர்ச்சத்து சியின் முக்கியத்துவம் இசுகேவி நோயின் மூலம் வெளிப்பட்டது. ஒரு காலத்தில் கடலில் நீண்ட நேரம் புதிய பழங்கள், காய்கறிகள் இல்லாமல் செலவிட்ட மாலுமிகளிடையே பொதுவான கொடிய பிரச்சனையாகவும் இருந்தது.
பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பெனிக்காக பணியமர்த்தப்பட்ட முதல் அறுவை மருத்துவரான ஜான் உவூடல், 1617 ஆம் ஆண்டில் அவரது "த சர்ஜென்ஸ் மேட்" (The Surgeon's Mate) என்ற புத்தகத்தில் எலுமிச்சைச் சாற்றின் தடுக்கும் திறன் மற்றும் குணப்படுத்தும் திறன் தொடர்பான பயன்களைப் பரிந்துரைத்துள்ளார். [5]1734 ஆம் ஆண்டில் டட்ச் எழுத்தாளர் ஜோஹான் பேச்ஸ்டார்ம், "இசுகேவி என்பது புதிய தாவர உணவுகள், கீரை போன்ற பச்சையான உணவுகள் ஆகியவற்றை உண்ணாமலே இருப்பதாலேயே வருகிறது; இதுவே இந்நோயின் முதன்மையான காரணமாகும்" எனும் திடமான கருத்தை முன்வைத்தார். [6]
18 ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய கடற்படை அறுவைச் சிகிச்சை நிபுணர் ஜேம்ஸ் லிண்ட் ஒரு முக்கிய கண்டுபிடிப்பைச் செய்தார். 1747 ஆம் ஆண்டில், ஒரு கடல் பயணத்தின் போது, லிண்ட் பரிசோதனைகளை மேற்கொண்டார். கடலில் இருக்கும் போது, லிண்ட் சில உடனுதவி உறுப்பினர்களுக்கு வழக்கமான உணவுடன் சேர்த்து ஒரு நாளுக்கு இரண்டு ஆரஞ்சுப் பழங்களும் ஓர் எலுமிச்சம் பழமும் வழங்கினார். மற்றவர்களுக்கு வழக்கமான உணவுடன் கூடுதலாக ஆப்பிள் பானம், வினிகர், கந்தக அமிலம் அல்லது கடல்நீர் ஆகியவற்றை வழங்கினார். அறிவியலின் வரலாற்றில் இதுவே இரு மக்கள் குழுவினரில் ஒரே ஒரு காரணியை ஒரு குழுவுக்கு மட்டும் பயனபடுத்தி மற்ற அனைத்து காரணிகளும் இரு குழுவுக்கும் பொதுவாகவே இருக்கும் படி நிகழ்த்தி முடிவுகளை ஒப்பிட்டுப் பார்க்கும் கட்டுப்படுத்தப்பட்ட பரிசோதனையாக நிகழ்த்தப்பட்ட முதல் நிகழ்வாகக் கருதப்படுகிறது. எலுமிச்சை மற்றும் ஆரஞ்சுகள் இசுகேவியைக் குணப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க வகையில் பயனுள்ளதாக இருப்பதைக் கண்டறிந்தார். இருப்பினும் அதற்குக் காரணமான பொருள் உயிர்ச்சத்து சி என்று அவருக்குத் தெரியாது. லிண்ட் தனது படைப்பை 1753 இல் தனது இசுகேவி பற்றிய ஆய்வு (Treatise on the Scurvy) என்னும் வெளியீட்டில் வெளியிட்டார். [7]
பயணத்தின் போது புதிய பழங்களைக் கொண்டுசெல்வது மிகவும் செலவு கொண்டது, ஆனால் அவற்றைக் கொதிக்கவைத்து அதன் சாறை சேகரித்து வைப்பதால் இது எளிதானது. ஆனால் வைட்டமின் இந்தச் செயலில் அழிக்கப்பட்டது (குறிப்பாக அவை தாமிர கலன்களில் கொதிக்க வைக்கப்பட்டால்).[8]
1795 ஆம் ஆண்டுக்குப் பின்னரே பிரித்தானிய கப்பற்படை கடலில் எலுமிச்சைச் சாற்றை வழங்குவதைத் தொடங்கியது. 1845 ஆம் ஆண்டில், மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள கப்பல்களில் எலுமிச்சைச் சாற்றுக்குப் பதிலாக தேசிப்பழச்சாறு வழங்கப்பட்டது, மேலும் 1860 ஆம் ஆண்டில் ராயல் கடற்படை முழுவதும் தேசிப்பழச்சாறு பயன்படுத்தப்பட்டது, இது பிரித்தானிய மக்களை "லைமி" எனும் புனைப்பெயர் கொண்டு அமெரிக்கா அழைக்க வழிவகுத்தது. கப்டன் ஜேம்ஸ் குக், 1772-75 ஆண்டுகளில் பசிபிக் பெருங்கடல் பயணத்தில் தனது ஆட்கள் எவரையும் இசுகேவி யால் இழக்காமல், "சார்க்ராட்" எனும் லாக்டிக் அமில பாக்டீரியாக்களால் புளிக்கவைக்கப்பட்ட பச்சை கோவாவைக் கப்பலில் கொண்டு செல்வதன் நன்மைகளை நிரூபித்தார். அவரது முறைகள் பற்றிய அவரது அறிக்கைக்காக பிரித்தானிய அரச கழகம் அவருக்கு 1776 இல் கோப்லி பதக்கத்தை வழங்கியது.[9]
இசுகேவி நோயைத் தடுக்கும் குணமுள்ள உணவுப் பொருள்களைக் குறிப்பிட "ஆண்ட்டிஸ்கார்புட்டிக்" (antiscorbutic) என்ற பெயர் பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டது, இருப்பினும் இதற்கான காரணம் பற்றிய புரிதல் அப்போது இருந்திருக்கவில்லை. இந்த உணவுகளில் அடங்கியவை(ஆனால் இவை மட்டுமல்ல): எலுமிச்சைப் பழங்கள், தேசிக்காய், ஆரஞ்சுகள்; சார்க்ராட், முட்டைக்கோசு, மால்ட், உலர் சூப்புகள்.
உயிர்ச்சத்து சி 1912 இல் கண்டுபிடிக்கப்பட்டது, 1928 இல் பிரித்தெடுக்கப்பட்டது, மேலும் 1933 இல் இது செயற்கையாக உருவாக்கப்பட்டது.[10] வேதியியல் முறையில் தயாரிக்கப்பட்ட முதல் உயிர்ச்சத்து இது ஆகும். அதன் கண்டுபிடிப்புக்காக, ஆல்பர்ட் செண்ட்-கியோர்கிக்கு 1937 ஆம் ஆண்டு உடற்செயலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. [11]
1907 ஆம் ஆண்டில், நோர்வே மருத்துவர்களான ஆக்சல் ஹோல்ஸ்ட் மற்றும் தியோடர் ஃப்ரோலிச் ஆகியோரால் பெரிபெரியைப் பற்றிய ஒரு ஆய்வு நிகழ்த்தப்பட்டது. அதன் போது, கினிப் பன்றிகளுக்கு தானியங்கள், மாப்பொருள் அடங்கிய சோதனை உணவை அளித்தனர். அந்தக் கினிப்பன்றிகளுக்கு பெரிபெரி நோய் ஏற்படும் என்று எதிர்பார்த்த அவர்களுக்கு ஆச்சரியத்தை உண்டாக்கும் வகையில் இசுகேவி நோய் ஏற்பட்டது.
1912 ஆம் ஆண்டில் போலிஷ்-அமெரிக்கரான (Polish-American) உயிர்வேதியியலாளர் காசிமிர் ஃபங்க், குறைபாட்டு நோய்களைப் பற்றி ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கையில், உடல்நலத்திற்கு இன்றியமையாதனவான தாது-அல்லாத மைக்ரோ-உணவுகளைப் பற்றிக் கூற வைட்டமின்களின் ஒரு கொள்கையை உருவாக்கினார். உயிர்வேதியியல் ரீதியாக முக்கியப் பங்கு வகிப்பதால் "வைட்டல்" (vital) மற்றும் இந்தப் பொருள்கள் அனைத்தும் வேதியியல் அமின்கள் என ஃபங்க் நினைத்ததால் "அமின்" (amines) ஆகிய இரு சொற்களின் சேர்க்கையே இந்தப் பெயராகும். "வைட்டமின்களில்" ஒன்று இசுகேவி எதிர்ப்புக் காரணியாகக் கருதப்பட்டு வந்தது, பெரும்பாலான பச்சைத் தாவர உணவுப்பொருள்களில் இருந்ததாக நீண்டகாலமாகக் கருதப்பட்டு வந்தது.
1928 ஆம் ஆண்டில் ஆர்க்டிக் மாந்தவியலாளர் வில்ஹிஜல்மூர் ஸ்டீஃபன்ஸன் (Vilhjalmur Stefansson), எஸ்கிமோக்கள் தங்கள் உணவில் தாவர உணவையே சேர்த்துக்கொள்வதில்லை. எனினும் அவர்களால் எவ்வாறு இசுகேவி யைத் தடுக்க முடிந்தது, ஆனால் ஏன் அதே போன்ற அதிக இறைச்சி உணவுகளை உட்கொள்ளும் ஐரோப்பிய ஆர்க்டிக் பயணிகளை மட்டும் அது பாதிக்கிறது என்பது பற்றிய தனது கொள்கையை நிரூபிக்க முயற்சித்தார். ஸ்டீஃபன்ஸன், மிதமாக (அரையளவு) சமைக்கப்பட்ட புதிய இறைச்சிகளையே அங்கு வாழ்பவர்கள் உட்கொள்கின்றனர், அதன் மூலம் அவர்களுக்கு வைட்டமின் சி கிடைக்கிறது என்ற கொள்கையை வழங்கினார். 1928 ஆம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கி, ஒரு ஆண்டு அவரும் அவரது பணியாளர்களும் மருத்துவ மேற்பார்வையின் கீழ் மிதமாக சமைக்கப்பட்ட உணவை உட்கொண்டு வாழ்ந்த போது அவர்கள் உடல்நலத்துடன் இருந்தனர். (வடக்கு கனடாவின் யூக்வான், இனியூட் மற்றும் மெட்டீஸ் ஆகிய இனத்தவரின் உணவுகளிலிருந்து வைட்டமின் சி-யை தனிமைப்படுத்த முடிந்ததையடுத்து, தாவர அடிப்படையிலான உணவுகள் குறைவாகவே உட்கொள்ளப்பட்ட ஆண்டுகளிலும் அவர்களின் உணவில் தோராயமாக உணவுக்குறிப்பு உட்கொள்ளளவு (DRI) அளவான சராசரியாக 52 மற்றும் 62 மி.கி./நாள் என்ற அளவுகளுக்கிடையே உள்ள அளவில் வைட்டமின் சி இருந்ததை பிற்காலத்திய ஆய்வுகள் காண்பித்தன)[12]
1928 முதல் 1933 ஆம் ஆண்டு வரை ஜோசப் எல் ஸ்விர்பெலி மற்றும் ஆல்பர்ட் செண்ட்-கியோர்கி ஆகியோரின் ஹங்கேரிய ஆராய்ச்சிக் குழுவும் சார்லஸ் க்ளென் கிங்கின் அமெரிக்கக்குழுவும் இசுகேவி எதிர்ப்புக் காரணியைத் தனிமைப்படுத்திக் காட்டினர், மேலும் அவர்கள் அதன் வைட்டமின் செயல்பாடுகளுக்காக அதை "அஸ்கார்பிக் அமிலம்" என அழைத்தனர். அஸ்கார்பிக் அமிலம் பின்னர் ஒரு அமின் அல்ல மேலும் அதில் நைட்ரஜனும் இல்லை என்றானது. அவர்களின் இந்த செயல் சாதனைக்காக, "வைட்டமின் சி பற்றிய சிறப்பான குறிப்புகளுடனும் ஃபியூமரிக் அமிலத்தின் வினைவேகமாற்றத்துடனும் உயிரியல் ரீதியான ஆக்ஸிஜனுடன் எரிதல் தொடர்பான அவரது கண்டுபிடிப்புகளுக்காக" ஆல்பர்ட் செண்ட்-கியோர்கிக்கு 1937 ஆம் ஆண்டின் மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
1933 மற்றும் 1934 ஆம் ஆண்டுகளுக்கு இடையே பிரித்தானிய வேதியியலாளர் சர் வால்டர் நார்மன் ஹேவோர்த் மற்றும் சர் எட்மண்ட் ஹிஸ்ட் மற்றும் தனிச்சார்புடன் போலிஷ் வேதியியலாளர் டேடியஸ் ரெயிஸ்ட்டன் ஆகியோர் வைட்டமின் தொகுப்பு முறைத் தயாரிப்பில் வெற்றி கண்டனர், அதுவே செயற்கை முறையில் முதன் முதலில் தயாரிக்கப்பட்ட நிகழ்வாக இருந்தது. இதனால் அப்போது வைட்டமின் சி என அறியப்பட்டிருந்த பொருளினை குறைந்த செலவில் தொகுப்பாக்கம் செய்வது சாத்தியமானது. இந்தப் பணிக்காக ஹேவோர்த்துக்கு மட்டும் 1937 ஆம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது, ஆனால் "ரெயிஸ்ட்டன் செயலாக்கம்" ரெயிஸ்ட்டனின் பெயரைக் கொண்டதானது.
1933 ஆம் ஆண்டில் ஹாஃப்மேன்–லா ரோச் வைட்டமின் சி-யை மொத்தமாகத் தயாரித்த முதல் மருந்து நிறுவனமானது, அது ரெடாக்ஸான் என்ற வர்த்தகப் பெயரின் கீழ் விற்கப்பட்டது.
2008 ஆம் ஆண்டில், மனிதர்கள் மற்றும் பிற முதன்மி விலங்குகளில் சிவப்பு இரத்த அணுக்கள் ஆக்ஸிஜனேற்றப்பட்ட எல்-டிஹைட்ரோஅஸ்கார்பிக் அமிலத்தை (DHA) மீண்டும் அஸ்கார்பிக் அமிலமாக மறுசுழற்சி செய்வதன் மூலம் உடலில் இருக்கும் வைட்டமின் சியை மிகவும் திறமையாகப் பயன்படுத்துவதற்கான ஒரு பொறிமுறையை உருவாக்கியுள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.[13]
உயிர்ச்சத்து சி எனும் பெயர் எப்போதும் அசுகோர்பிக் அமிலத்தின் இடது ஒளியிச் சமபகுதியம் (எல்-என்ஆன்டியோமர்) மற்றும் அதன் ஒட்சியேற்ற வடிவமான நீரகற்றப்பட்ட அசுகோர்பேட் ஆகியவற்றைக் குறிக்கிறது. எனவே, வேறுவிதமாக எழுதப்படாவிட்டால், "அசுகோர்பேட்" மற்றும் "அசுகோர்பிக் அமிலம்" ஆகியவை ஊட்டச்சத்து சம்பந்தமான நூல்களில் முறையே எல்-அசுகோர்பேட் மற்றும் எல்-அசுகோர்பிக் அமிலத்தைக் குறிக்கின்றன. அசுகோர்பிக் அமிலம், கட்டமைப்பில் குளுக்கோசுடன் தொடர்புடைய வலுக் குறைந்த சர்க்கரை அமிலமாகும். உயிரியல் அமைப்புகளில், அசுகோர்பிக் அமிலம் குறைந்த pH அளவுகளில் மட்டுமே காணப்படுகிறது; எனினும், pH 5 க்கு மேல் உள்ள கரைசல்களில் அயனியாக்கப்பட்ட வடிவமான அசுகோர்பேட் என்ற வடிவில் காணப்படுகிறது. [14]
பெரும்பாலான விலங்குகளும், தாவரங்களும் நொதிகளால் நிகழும் வேதிவினைப் படிகளின் வரிசையின் மூலம் அவற்றுக்குத் தேவையான வைட்டமின் சி ஐத் தாமே உருவாக்கிக்கொள்கின்றன. இந்தப் படிகளின் போது ஒற்றைச்சர்க்கரையான குளுக்கோசு, உயிர்ச்சத்து சி ஆக மாற்றப்படுகிறது. மதுவங்களால் எல்-அசுகோர்பிக் அமிலத்தை உருவாக்க முடியாது, மாறாக அவை அதன் திண்மச் சமபகுதிய எரித்தோர்பிக் அமிலத்தை உருவாக்குகின்றன. [15]
தாவரங்களில், மானோசு அல்லது காலக்டோசு அசுகோர்பிக் அமிலமாக மாற்றப்படுவதன் மூலம் தொகுப்பு செய்யப்படுகிறது. விலங்குகளில் அசுகோர்பிக் அமிலத்தை உருவாக்குவதற்கான முதல் படி குளுக்கோசு ஆகும். குளுக்கோசு சில இனங்களில் (பாலூட்டிகள் மற்றும் பறவைகள் உட்பட) கிளைக்கோசன் சிதைவு மூலம் உருவாகிறது. மனிதர்களிலும், உயிர்ச்சத்து சியைத் தொகுக்க முடியாத விலங்குகளிலும், உயிரியக்கத் தொகுப்பின் கடைசிப் படியை ஊக்குவிக்கும் நொதியம் எல்-குளோனோ லக்டோன் ஒக்சிடேசு (GULO), மிகவும் பிறழ்ந்து, செயல்படாத நிலையில் காணப்படுகின்றது. [16][17]
உயிர்ச்சத்து சியை தொகுக்கக் கூடிய விலங்கினங்களில் குருதியில் உயிர்ச்சத்து சியின் அளவு பேணப்பட்டு உள்ளது. நாய்களின் பல இனங்களை மையமாக வைத்து செய்யப்பட்ட ஒரு ஆய்வில் சராசரியாக உயிர்ச்சத்து சியின் அளவு 35.9 μmol/L என அறியப்பட்டது.[18] ஆடுகள், செம்மறி ஆடுகள் மற்றும் கால்நடைகள் பற்றிய ஒரு அறிக்கையில் முறையே 100-110, 265-270, 160-350 μmol/L அளவில் உள்ளது கண்டறியப்பட்டது. [19]
முதுகெலும்புகளில் உள்ள அசுகோர்பிக் அமிலத்தின் உயிரியல் தொகுப்பு யுரிடின் இருபொசுபேட்டு (யுடிபி) குளுக்குரோனிக் அமிலத்தின் உருவாக்கத்துடன் தொடங்குகிறது. யுடிபி-குளுக்கோசு, யுடிபி-குளுக்கோசு 6-ஐதரசனகற்றி என்ற நொதியால் இரண்டு ஒட்சிசன் ஏற்றங்களுக்கு உட்படும்போது யுடிபி-குளுக்குரோனிக் அமிலம் உருவாகிறது. யுடிபி-குளுக்கோசு 6-ஐதரசனகற்றி இலத்திரன் ஏற்பியாக இணை காரணி NAD+ஐப் பயன்படுத்துகிறது. யுடிபி-குளுக்குரோனேட் பைரோபொசுபோரிலேசு எனும் மாற்றலூக்கி ஒரு பொசுபேட்டை அகற்றி டி-குளுகுரோனிக் அமிலம் உருவாக்கத்திற்கு வழிவாகுக்கின்றது. டி-குளுகுரோனிக் அமிலம் குளுக்குரோனேட் ஒடுக்கி நொதியால் எல்-குளோனிக் அமிலமாக மாற்றப்படுகின்றது. இதைத் தொடர்ந்து நீரகற்றும் குளுக்கோனோலாக்டோனேசைப் பயன்படுத்தி எல்-குளோனோலாக்டோன் உருவாகிறது. இது எல்-குளோனோ லக்டோன் ஒக்சிடேசு எனும் நொதியால் 2-கீட்டோ எல்-குளோனோ லக்டோனாக மாறுகின்றது. இந்த வேதிவினை முன்பு குறிப்பிட்டது போல மனிதர்களில் மற்றும் சில குரங்கினங்களில் நிகழ்வது கிடையாது. இறுதியில் 2-கீட்டோ எல்-குளோனோ லக்டோன் அசுகோர்பிக் அமிலமாக உருவாகின்றது. ஊர்வனவும் உயிரியல் வகைப்பாட்டில் பழைய பறவை வரிசைகளும் அவற்றின் சிறுநீரகங்களில் அசுகோர்பிக் அமிலத்தை உருவாக்குகின்றன. பெரும்பாலான பாலூட்டிகளுடன் பறவைகளின் சமீபத்திய வரிசைகள் அவற்றின் கல்லீரலில் அசுகோர்பிக் அமிலத்தை உருவாக்குகின்றன.[17][20][21]
சில பாலூட்டிகள் உயிர்ச்சத்து சியைத் தொகுக்கும் திறனை இழந்துவிட்டன, இதில் சிமியன்கள் மற்றும் டார்சியர்களும் அடங்கும், இவை இரண்டு முக்கிய முதனி துணைப்பிரிவுகளில் ஒன்றான ஹேப்லோரினீயில் அடங்குகின்றன. இந்தக் குழுவில் மனிதர்களும் அடங்குவர். மற்ற மிகவும் பழமையான விலங்குகள் (ஸ்டெப்சிரினீ) வைட்டமின் சி உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளன. கினிப் பன்றிகள் மற்றும் கேபிபாரா போன்ற கொறிக்கும் குடும்பமான கேவிடேயில் உள்ள சில இனங்களில் தொகுப்பு ஏற்படாது, ஆனால் எலிகள், சுண்டெலிகள் உட்பட மற்ற கொறித்துண்ணிகளில் இது நிகழ்கிறது.[22]
பெரும்பாலான வௌவால் இனங்களில் தொகுப்பு ஏற்படாது,[23] ஆனால் குறைந்த பட்சம் இரண்டு இனங்களாவது தொகுக்க வல்லன அவையாவன ரூசெட்டஸ் லெஸ்செனால்ட்டி, பூச்சி உண்ணும் வௌவால் ஹிப்போசிடெரோஸ் ஆர்மிகர் ஆகும். அவை உயிர்ச்சத்து சி உற்பத்தியின் திறனைத் தக்கவைத்துக் கொள்கின்றன. [24][25] தற்போதுள்ள மீன்களில்(டெலியோஸ்ட்கள்) சுமார் 96% வைட்டமின் சியை உருவாக்கும் திறனை இழந்துள்ளன.[26]
தாவரங்களில் அசுகோர்பிக் அமிலத்திற்கு பல்வேறு உயிரியல் தொகுப்புப் பாதைகள் உள்ளன. பெரும்பாலானவை குளுக்கோசுச் சிதைவு விளைபொருட்கள் மூலமாகவும் மற்றயவை பிற வளர்சிதை மாற்ற வழிகளின் மூலமாகவும் நிகழ்கின்றன. முக்கிய தாவர அசுகோர்பிக் அமில உயிரியல் தொகுப்புப் பாதை எல்-கலக்டோசு வழியாக இருக்கின்றது. எல்-கலக்டோசு ஐதரசனகற்றி என்ற நொதியானது எல்-கலக்டோசை எல்-கலக்டோனோ-1,4-லாக்டோனாக உருவாக்குகிறது.[20] எல்-கேலக்டோனோ-1,4-லாக்டோன் பின்னர் இழைமணி ஃபிளாவோநொதி எல்-கேலக்டோனோலாக்டோன் ஐதரசனகற்றி[27] உடன் வினைபுரிந்து அசுகோர்பிக் அமிலத்தை உருவாக்குகிறது
அனைத்து தாவரங்களும் அசுகோர்பிக் அமிலத்தைத் தொகுக்கின்றன. அசுகோர்பிக் அமிலம் ஒளிச்சேர்க்கை, தாவர இயக்கநீர்த் தொகுப்பு போன்றவற்றிற்கு ஒரு ஒட்சியேற்ற எதிர்ப்பியாகவும் இணை காரணியாகவும் செயல்படுகிறது.[28] வைட்டமின் சியைத் தொகுக்க தாவரங்கள் பல வழிகளைப் பயன்படுத்துகின்றன. முக்கிய பாதை குளுக்கோஸ், பிரக்டோஸ் அல்லது மேனோஸ் (அனைத்து எளிய சர்க்கரைகள்) போன்றவற்றுடன் தொடங்கி எல்-கலக்டோசு, எல்-கேலக்டோனோலாக்டோன் ஆகிய இடை நிலைப் பொருளாகி ஈற்றில் அசுகோர்பிக் அமிலத்துடன் முடிவடைகின்றது.[28][29] இந்த உயிர்ச்சேர்க்கை ஒரு நாளாந்த இசைவைப் பின்பற்றி ஒழுங்குபடுத்தப்படுகிறது.[29][30]
உயிர்ச்சத்து சி இரண்டு முக்கிய முறைகளில் குளுக்கோசிலிருந்து தயாரிக்கப்படுகிறது. 1930 களில் உருவாக்கப்பட்ட ஆனால் தற்காலத்தில் பயன்பாட்டில் இல்லாத ரீச்ஸ்டீன் செயல்முறை; இதில் முற்றிலும் ஒரு படி வேதிய முறை மூலம் நொதித்தலைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது. தற்காலத்து இரண்டு-படி நொதித்தல் செயல்முறை, முதலில் 1960 களில் சீனாவில் உருவாக்கப்பட்டது, விளைவு இரசாயன நிலைகளின் ஒரு பகுதியை மாற்றுவதற்கு கூடுதல் நொதித்தல் முறை பயன்படுத்தப்படுகின்றது. ரீச்ஸ்டீன் செயல்முறை மற்றும் புதிய இரண்டு-படி நொதித்தல் செயல்முறைகள் இரண்டும் குளுக்கோஸை தொடக்கப் பொருளாகப் பயன்படுத்துகின்றன, அதை சர்பிடால் ஆக மாற்றுகின்றன, பின்னர் நொதித்தலைப் பயன்படுத்தி சோர்போஸாக மாற்றுகின்றன.[99] இரண்டு-படி நொதித்தல் செயல்முறையானது சோர்போஸை 2-கீட்டோ -எல்-குலோனிக் அமிலமாக மற்றொரு நொதித்தல் படி மூலம் மாற்றுகிறது; இது கூடுதல் இடைநிலையைத் தவிர்க்கிறது. இரண்டு செயல்முறைகளும் குளுக்கோஸின் தொடக்கப் புள்ளியிலிருந்து தோராயமாக 60% உயிர்ச்சத்து சியை விளைவிக்கின்றன.[100]
உலகளாவிய சந்தையில் உயிர்ச்சத்து சியை சீனா 70% உற்பத்தி செய்கிறது. மீதமுள்ளவை ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா மற்றும் வட அமெரிக்கா என பிரிக்கப்பட்டுள்ளது. உலக சந்தை 2024ல் 141 ஆயிரம் மெட்ரிக் டன்களை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.[103] அமெரிக்க டாலர்களில் ஒரு மெட்ரிக் டன் (1000 கிலோ) விலை ஷாங்காயில் $2,220, ஹாம்பர்க்கில் $2,850, US இல் $3,490.[104]
அசுகோர்பிக் அமிலம் ஒரு நீரில் கரையக்கூடிய உயிர்ச்சத்து ஆகும். அசுகோர்பிக் அமிலமானது வலு நகர்வு, வலுவற்ற நகர்வு ஆகிய இரு முறைகளிலும் உடலில் உறிஞ்சப்படுகிறது.
ஏறத்தாழ 70%-90% உயிர்ச்சத்து சி, நாளொன்றிற்கு 30-180 மி.கி உயிர்ச்சத்து சி உணவு மூலங்கள், மல்டி-வைட்டமின் தயாரிப்பு போன்ற மிதமான அளவிலான உணவுப் பொருள்களின் கலவையிலிருந்து உட்கொள்ளும் போது வலு நகர்வுச் செயற்பாடு மூலம் உறிஞ்சப்படுகிறது. இருப்பினும், வைட்டமின் சி மட்டுமே அடங்கிய மாத்திரைகளை அதிக அளவு உட்கொள்ளும் போது வலு நகர்வு நிறுத்தப்படுகிறது. மேலும் உறிஞ்சப்படும் மொத்த அளவு தொடர்ந்து அதிகரிக்கும் போது, உறிஞ்சுதல் திறன் 50% க்கும் கீழாகக் குறைகிறது.
சோடியம்-அசுகார்பேட் துணை நகர்த்திகள்(SVCTகள்), குளுக்கோசு நகர்த்திகள்(GLUTகள்) ஆகிய இரண்டும் வலு நகர்வுச் செயன்முறையில் உறிஞ்சுதலுக்குத் தேவையான இரண்டு நகர்த்திகள் ஆகும். குளுக்கோசு நகர்த்திப் புரதங்கள் GLUT1, GLUT3, GLUT4 ஆகியவை ஒட்சியேற்றப்பட்ட டீஹைட்ரோஸ்கார்பிக் அமிலம் (DHA) வைட்டமின் சி வடிவத்தை மட்டுமே நகர்த்துகின்றன. [31]
சாதாரண உடலியல் செறிவுகளில், வைட்டமின் சி ஒரு நொதி வினைவேதிமமாக அல்லது இணைக்காரணியாக மற்றும் இலத்திரன் வழங்கும் ஒட்சியேற்ற எதிர்ப்பியாகச் செயல்படுகிறது. அசுகோர்பிக் அமிலம் பல அமினோ அமிலங்களின் வளர்சிதை மாற்றத்தில் ஈடுபட்டுள்ளது. இது கார்னைடைன், கொலாஜன், நரம்பியக் கடத்திகள் ஆக்கத்திற்கு வழிவகுக்கிறது.
வைட்டமின் சி பின்வரும் நொதிகளுக்கு ஒரு இணைக்காரணியாகச் செயல்படுகிறது:
சிறுநீர் வழியாக அசுகோர்பிக் அமிலமும் அதன் சிதைப்பொருட்களும் வெளியேற்றப்படுகின்றன. வளர்சிதை மாற்றமடையாத அசுகோர்பிக் அமிலம் வெளியேற்றப்படும் அளவு உட்கொள்ளல் அதிகரிக்கும் போது அதிகரிக்கிறது. மேலும், அசுகோர்பிக் அமிலம் இருஐதரோ அசுகோர்பிக் அமிலமாகவும், அந்த சேர்மத்திலிருந்து 2,3-டைகெடோகுலோனேட்டாகவும் பின்னர் ஆக்சலேட்டாகவும் மாறுகின்றது. இந்த மூன்று வளர்சிதை மாற்றங்களும் சிறுநீர் வழியாக வெளியேற்றப்படுகின்றன. உயிர்ச்சத்து சி குறைந்தளவு உட்கொள்ளும் காலங்களில், அவை வெளியேற்றப்படுவது தவிர்க்கப்பட்டு சிறுநீரகங்களால் மீண்டும் உறிஞ்சப்படுகிறது. இந்த காப்புச் செயல்முறை குறைபாடு ஏற்படுவதைத் தாமதப்படுத்துகிறது.[14][21]
வைட்டமின் சியின் பரிந்துரைக்கப்பட்ட நாளாந்த அளவுகள் தொடர்ந்து வாதத்திற்குள்ளாகவே இருக்கின்றன. வெவ்வேறு நாடுகளின் சுகாதார அமைப்பு வெவ்வேறு அளவுகளைப் பரிந்துரைக்கின்றன நாளொன்றிற்கு 45 முதல் 110 மி.கி வரை இந்த அளவு வேறுபடுகிறது.
அமெரிக்க வைட்டமின் சி பரிந்துரைகள்[2] | |
---|---|
பரிந்துரைக்கப்படும் உணவுக்கட்டுப்பாட்டு ஒதுக்கீட்டளவுகள் (வயதுவந்த ஆண்) | நாளொன்றுக்கு 90 mg |
பரிந்துரைக்கப்படும் உணவுக்கட்டுப்பாட்டு ஒதுக்கீட்டளவுகள் (வயதுவந்த பெண்) | நாளொன்றுக்கு 75 mg |
ஏற்றுக்கொள்ளக்கூடிய உயர் உட்கொள்ளல் அளவு (வயதுவந்த ஆண்) | நாளொன்றுக்கு 2,000 mg |
ஏற்றுக்கொள்ளக்கூடிய உயர் உட்கொள்ளல் அளவு (வயதுவந்த பெண்) | நாளொன்றுக்கு 2,000 mg |
வட அமெரிக்க உணவுக்கட்டுப்பாட்டு அமைப்பு நாளொன்றுக்கு 90 மில்லிகிராம்கள் என்ற அளவிலும் மேலும் நாளொன்றுக்கு 2 கிராம்களுக்கு (நாளொன்றுக்கு 2000 மில்லிகிராம்கள்) மிகாமலும் இருக்க வேண்டும் எனப் பரிந்துரைக்கிறது.[73] கூடுதல் சேர்க்கைகள் ஏதுமின்றி உள்ள சரியான கலப்பளவிலான உணவானது சராசரி உடல்நலமுள்ள மனிதர்களில் இசுகேவியைத் தடுப்பதற்குத் தேவையான வைட்டமின் சி-யைக் கொண்டுள்ளது என பொதுவாக ஒப்புக்கொள்ளப்படுகிறது, ஆனால் கர்ப்பமாக உள்ளவர்கள், புகையிலைப் புகைப்பழக்கம் உள்ளவர்கள், மன அழுத்தம் உள்ளவர்கள் போன்றோருக்கு சிறிதளவு அதிகமாகத் தேவைப்படுகிறது.[73]
உயிர்ச்சத்து சியின் வளமிகுந்த இயற்கை மூலமாக பழங்கள் மற்றும் காய்கறிகள் விளங்குகின்றன.
பின்வரும் அட்டவணை வெவ்வேறு பச்சை தாவரங்களில் ஒப்பிட்டுப் பார்க்கும்போது காணப்படும் ஏராளமான வைட்டமின் சி அளவுகளைக் காண்பிக்கிறது. இந்த அட்டவணை தோராயமான மதிப்பீடுகளையே அளிக்கிறது. இதில் பழம் அல்லது காய்கறியின் ஒவ்வொரு 100 கிராமிலும் அடங்கியுள்ள வைட்டமின் சியின் அளவு மில்லிகிராம்களில் அளிக்கப்பட்டுள்ளது.
தாவர மூலங்கள் | அளவு (மிகி / 100கி) |
---|---|
கக்கடு பிளம் | 3100 |
கமு கமு | 2800 |
ரோஸ் ஹிப் | 2000 |
அகெரோலா | 1600 |
சீபக்தான் | 695 |
ஜுஜுபி | 500 |
நெல்லிக்காய் | 445 |
போபாப் | 400 |
பிளாக்கரண்ட் | 200 |
மிளகாய் | 190 |
வோக்கோசு | 130 |
கொய்யா | 100 |
கிவிப்பழம் | 90 |
ப்ரக்கோலி | 90 |
லோகன்பெர்ரி | 80 |
ரெட்கரண்ட் | 80 |
கிளைக் கோசுகள் | 80 |
உல்ஃப்பெர்ரி (கோஜி) | 73 † |
லிச்சி | 70 |
கிளவுட்பெர்ரி | 60 |
எல்டர்பெர்ரி | 60 |
சீமைப் பனிச்சை | 60 |
† 3 மூலங்களின் சராசரி; உலர்த்தப்பட்டவை
தாவர மூலங்கள் | அளவு (மிகி / 100கி) |
---|---|
பப்பாளி | 60 |
ஸ்டிராபெர்ரி | 60 |
ஆரஞ்சு | 50 |
எலுமிச்சம் பழம் | 40 |
முலாம்பழம், பரங்கி | 40 |
காலிபிளவர் | 40 |
பூண்டு | 31 |
திராட்சைப்பழம் | 30 |
ராஸ்பெர்ரி | 30 |
சிறிய ஆரஞ்சுப் பழம் | 30 |
அம்லா ஆரஞ்சு | 30 |
தாட்பூட்பழம் | 30 |
பசளிக் கீரை. | 30 |
முட்டைக்கோசு பச்சை | 30 |
எலுமிச்சை | 30 |
மாம்பழம் | 28 |
மேற்கத்திய நாவல் பழம் | 21 |
உருளைக்கிழங்கு | 20 |
முலாம்பழம், தேன்பனி | 20 |
குருதிநெல்லி | 13 |
தக்காளி | 10 |
அவுரிநெல்லி | 10 |
அன்னாசிப்பழம் | 10 |
பாவ்பாவ் | 10 |
தாவர மூலங்கள் | அளவு (மிகி / 100கி) |
---|---|
திராட்சை | 10 |
சர்க்கரை பாதாமி | 10 |
பிளம் | 10 |
தர்ப்பூசணிப்பழம் | 10 |
வாழை பழம் | 9 |
கேரட் | 9 |
வெண்ணைப் பழம் | 8 |
கிராப்ஆப்பிள் | 8 |
சீமைப் பனிச்சை - புத்தம் புதியவை | 7 |
சேலாப்பழம் | 7 |
பீச் | 7 |
ஆப்பிள் | 6 |
அஸ்பாரகஸ் | 6 |
பீட்ரூட் | 5 |
சோக்செர்ரி | 5 |
பேரி | 4 |
கீரை | 4 |
வெள்ளரி | 3 |
எக்பிளாண்ட் | 2 |
உலர்ந்த திராட்சை | 2 |
அத்திப்பழம் | 2 |
அவுரிநெல்லி | 1 |
கொம்பு முலாம்பழம் | 0.5 |
மெட்லர் | 0.3 |
தாவர மூலங்களுடன் ஒப்பிடும்போது, விலங்கு மூல உணவுகள் அதிக அளவு வைட்டமின் சியை வழங்குவதில்லை, மேலும் சமைக்கப்படும் போது பயன்படுத்தப்படும் வெப்பத்தால் பெருமளவில் உயிர்ச்சத்து சி அழிக்கப்படுகிறது. உதாரணமாக, சமைக்காத கோழியின் கல்லீரலில் 17.9 mg/100 கிராம் உள்ளது, ஆனால் வறுத்த தோழியில், அதன் அளவு 2.7 mg/100 g ஆக குறைக்கப்படுகிறது. வைட்டமின் சி தாய்ப்பாலில் காணப்படுகிறது. பசுவின் பச்சையான பாலில் குறைந்த அளவுகளில் காணப்படுகிறது. பாச்சர்முறையில் பதப்படுத்தப்பட்ட பாலில் மிகச் சிறிதளவே காணப்படுகிறது.
உயிர்ச்சத்து சி தான் இருப்பதிலேயே மிகவும் பரவலாக மாத்திரை மூலம் எடுத்துக் கொள்ளப்படும் உணவு நிரப்பியாகும்.
கேப்லட்கள் (கரையக்கூடிய மேற்பூச்சுடன் இருக்கும் வழுவழுப்பான பொதிமருந்துகள்), மாத்திரைகள், பொதிமருந்துகள், குடிபானத்தில் கரையும் பொட்டல வடிவம், கூட்டு-வைட்டமின் சூத்திரங்கள், கூட்டு ஆண்டி-ஆக்ஸிடண்ட் சூத்திரங்கள் மற்றும் படிகத்தூள்கள் உட்பட பல்வேறு வடிவங்களில் இது கிடைக்கப்பெறுகிறது. குறிக்கப்பட்ட நேரங்களுக்கு வெளியாகும் வடிவங்களும் உள்ளன. இதைப் போன்று க்வெர்செடின், ஹெஸ்பெரிடின் மற்றும் ரூடின் போன்ற பையோஃபிளவநாய்டுகளுள்ள (bioflavonoids) கலவைகளாகவும் கிடைக்கப்பெறுகிறது. மாத்திரை மற்றும் பொதிமருந்து வடிவங்கள் 25மிகி முதல் 1500மிகி வரை காணப்படுகின்றன. 300கி முதல் 1 கிலோ தூள் (ஒரு தேக்கரண்டி வைட்டமின் சி படிகங்கள் 5000 மில்லிகிராமுக்கு சமம்) வரையுள்ள புட்டிகளில் வைட்டமின் சி படிகங்கள் (அஸ்கார்பிக் அமிலமாக) கிடைக்கப்பெறுகின்றன.
வைட்டமின் சி சில நிலைகளில் வேதியியல் முறையில் உருச்சிதைகிறது. இவற்றில் ஒன்று உணவு சமைக்கும் முறையாகும். உணவுப் பொருட்கள் சேமிக்கப்படுகின்ற வெப்பநிலைக்கேற்ப [146], அவைகளில் வைட்டமின் சியின் செறிவு முறையே குறைகிறது.இத்துடன் சமைக்கும் போது உணவுப்பொருட்களில் சுமார் 60% வைட்டமின் சி குறைந்துவிடுகிறது. இது வெப்பநிலை மிகைப்படும் போது நொதிசார்ந்த நேரலாம். எனவே நீண்ட நேரம் சமைப்பதாலும் இது அதிகரிக்கலாம். உருச்சிதைலுக்கு துணையூக்கியாக இருக்கும் செம்பு உணவு பாத்திரங்களினாலும் இது அதிகரிக்கலாம்.[45]
உணவில் வைட்டமின் சி இழக்கப்படுவதற்கு நீர்க்கசிதலும் ஒரு காரணமாக இருக்கிறது. தண்ணீரில்-கரையக்கூடிய இந்த வைட்டமின் சமையல் தண்ணீரில் கரைந்துவிடுகிறது. இது தண்ணீர் பிற்பாடு உண்ணப்படாமல் வெளியே ஊற்றப்பட்டுவிடுவதால் வைட்டமின் சியும் அந்த தண்ணீருடனேயே வெளியேறிவிடுகிறது. எனினும் வைட்டமின் சி அனைத்து காய்கறிகளிலும் ஒரே விகிதத்தில் கசிவது கிடையாது; பிராக்கலி (broccoli) என்றழைக்கப்படும் ஒரு வகைப் பச்சைப் பூக்கோசு வைட்டமின் சியை அதிகப்பட்சமாக தக்கவைத்துக்கொள்வதாக ஆராய்ச்சிக் காண்பிக்கிறது.[148] குளிர்சாதனப்பெட்டியில் சில நாட்கள் வைப்பதால் புதிதாக-வெட்டப்பட்ட பழங்கள் குறிப்பிடத்தக்க ஊட்டச்சத்துப் பொருட்களை இழப்பதில்லையென்றும் ஆராய்ச்சிக் காண்பித்திருக்கிறது.[149]
குருதிப்பாயத்தில் 23 μmol/L க்கும் குறைவாக உயிர்ச்சத்து சி உள்ள நிலை தாழுயிர்ச்சத்துவ நிலையாகும். 11.4 μmol/L க்கும் குறைவான நிலையே இதன் பற்றாக்குறை நிலை என அறியப்பட்டுள்ளது. உயிர்ச்சத்து சி போதுமான அளவாக இருக்கவேண்டுமானால் அது குருதிப்பாயத்தில் ஏறத்தாழ 50 μmol/L அளவில் இருக்கவேண்டும்.
வைட்டமின் சி குறைபாட்டினால் இசுகேவி ஏற்படுகின்றது. வைட்டமின் சி இல்லாவிட்டால் தொகுப்பாக்கம் செய்யப்படும் கொலாஜென் அதன் செயல்பாட்டைச் செய்ய முடியாத அளவுக்கு மிகவும் நிலைப்புத்தன்மையற்றதாக இருக்கும். இசுகேவி யினால் லிவெர் ஸ்பாட்ஸ் நோய் ((liver spots on the skin) இளகிய ஈறுகள் (spongy gums) மற்றும் எல்லா மியூக்கஸ் மென்படலங்களிலிருந்தும் இரத்தம் வெளிவருதல் போன்ற நோய்கள் தோன்றுகின்றன. இந்தப் புள்ளிகள் தொடைகளிலும் கால்களிலும் அதிகமாகக் காணப்படும். மேலும் இந்தக் குறைபாடுள்ள நபர் வெளிரிய நிறத்திலும் மன அழுத்தமுடையவராகவும் ஓரளவு மனம் உறைந்த நிலையிலும் காணப்படுவர். தீவிர இசுகேவி யில் திறந்த சீழ்வடியும் புண்கள் மற்றும் பற்கள் விழுதல் மற்றும் இறப்பு ஆகியவை ஏற்படலாம். மனித உடலானது குறிப்பிட்ட அளவு வைட்டமின் சி-யை மட்டுமே சேமிக்க முடியும் [38] இதனால் புதிய வைட்டமின் எடுத்துக்கொள்ளப்படாமல் இருக்கும்பட்சத்தில் உடலானது அதை பயன்படுத்தி தீர்த்துவிடும்.
குறைவான வைட்டமின் சி உள்ள உணவு உட்கொள்ளுபவர்களில் புகைப்பழக்கம் உள்ளவர்கள் உணவில் அதிக வைட்டமின் சி எடுத்துக்கொள்பவர்களை விட நுரையீரல் தொடர்பான நோய்களைப் பெறும் ஆபத்து அதிகம் கொண்டுள்ளனர் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.[39]
நோபல் பரிசு வென்ற லினஸ் பாலிங் மற்றும் டாக்டர். ஜி. சி. வில்ஸ் (Linus Pauling and Dr. G. C. Willis) ஆகியோர் நாட்பட்ட வைட்டமின் சி குறைவான இரத்தத்தைக் கொண்டிருக்கும் நிலை (நாள்பட்ட இசுகேவி ) பெருந்தமனித் தடிப்பு நோய்க்குக் காரணமாகும் என உறுதியாகக் கூறுகின்றனர்.
இசுகேவி நோயைத் தடுப்பதற்காக பொதுவாக மேற்கத்திய சமூகத்தினர் போதியளவு வைட்டமின் சி-யை எடுத்துக்கொள்கின்றனர். 2004 ஆம் ஆண்டில் ஒரு கனடிய சமூக உடல்நலக் கணக்கெடுப்பு[தொடர்பிழந்த இணைப்பு] 19 மற்றும் அதற்கு அதிக வயதுடைய கனடியர்கள் உணவிலிருந்து வைட்டமின் சி-யை பெறுகின்றனர் என அறிவித்தது. அதில் ஆண்களுக்கு 133 மி.கி./d பெண்களுக்கு 120 மி.கி./d [40] எனவும் இருந்தது இது RDA பரிந்துரைக்கும் அளவை விட அதிகமாகும். மனித உணவுக் கல்வியில், இசுகேவி யின் வெளிப்படையான அனைத்து அறிகுறிகளும் முன்னதாக வைட்டமின் சி குறைவாக எடுத்துக்கொள்வதனால் தூண்டப்பட்டது, இவற்றை ஒரு நாளுக்கு 10 மி.கி. அளவு வைட்டமின் சி சரியாக எடுத்துக்கொள்வதன் மூலம் போக்கலாம். இருப்பினும் கிருமித்தொற்று அல்லது (தீக்காயங்கள் போன்ற) அதிக அளவிலான திசு சரிசெய்தலுக்குத் தேவையான வைட்டமின் சி உட்கொள்ளல் அளவானது இசுகேவி யைச் சரிசெய்யத் தேவையானதை விட அதிகமாகும்.
இசுகேவி நோயைத் தடுப்பதைவிட உயிர்ச்சத்து சி வேறு சந்தர்ப்பங்களிலும் உதவி புரிகின்றது. எனினும் சில பயன்பாடுகள் இன்னமும் முற்றுமுழுதாக ஆய்வுமூலம் நிரூபிக்கப்படவில்லை.
குருதியில் நுண்ணுயிர் நச்சேற்றம், தடிமன், கோவிட்-19, புற்றுநோய், இதயக்குழலிய நோய், குருதி அழுத்தம், வகை இரண்டு நீரிழிவு, இரும்புச்சத்துக் குறைபாடு, அல்சைமர் வியாதி, கண்ணின் ஆரோக்கியம், பல் முரசு நோய்கள் போன்றனவற்றிற்கு உயிர்ச்சத்து சியின் பயன்பாடு பற்றி அறியப்பட்டுள்ளது. தொற்றுக்களின் போது மிகவும் கூடியளவு உயிர்ச்சத்து எடுத்துக்கொள்வது பலனை அளிக்கின்றது என்பது பற்றிய சான்றுகள் உள்ளன.
வைட்டமின் சி நீரில் கரையக்கூடியது என்பதால் உடலில் சேமித்து வைக்கப்படுவதில்லை. அதிக அளவுகளில் கூட, வைட்டமின் சி நச்சுத்தன்மை வாய்ந்ததாகவோ அல்லது கடுமையான பாதகமான விளைவுகளை ஏற்படுத்துவதாகவோ அறியப்படவில்லை. மிகவும் பொதுவான பக்க விளைவுகள் வயிற்றுப்போக்கு, குமட்டல், வயிற்றுப் பிடிப்புகள் ஆகும்.
எனினும், உயிர்ச்சத்து சி ஈற்றில் ஒக்சலேட்டாக மாற்றப்படுவதால் மிகவும் அதிகளவு ( நாளொன்றுக்கு இரண்டு கிராமுக்கும் கூடுதலாக) உயிர்ச்சத்து சி மாத்திரைகள் எடுப்பவர்களில் சிறுநீரகக் கற்கள் உருவாகும் இடர்ப்பாடு உள்ளது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.