விஜயநகரப் பேரரசு
ஒரு தென்னிந்தியப் பேரரசு (1336-1646) From Wikipedia, the free encyclopedia
விசயநகரப் பேரரசு (English: Vijayanagara empire, (/vɪˌdʒəjəˈnəɡərə/; கருநடா இராச்சியம் என்றும் இது அழைக்கப்படுகிறது) என்பது பெரும்பாலான தென்னிந்தியாவை ஆண்ட ஒரு பிந்தைய நடுக்கால இந்துப் பேரரசு ஆகும். சந்திர குலத்தின் யது பிரிவைச் சேர்ந்த முதலாம் அரிஅரர் மற்றும் முதலாம் புக்கா ராயன் ஆகிய சங்கம மரபின் சகோதரர்களால் இப்பேரரசானது 1336ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.[6][7][a]
விசயநகரப் பேரரசு | |
---|---|
1336–1646 | |
![]() அண். பொ. ஊ. 1485இல் விசயநகரப் பேரரசின் வரைபடம். திறை செலுத்திய நாடுகள் இதில் காட்டப்படவில்லை.[2] | |
நிலை | பேரரசு |
தலைநகரம் | விசயநகரம் (அம்பி) (1336–1565)
பெனுகொண்டா (1565–1592) |
பேசப்படும் மொழிகள் | கன்னடம் தெலுங்கு சமசுகிருதம்[4] |
சமயம் | இந்து சமயம் |
அரசாங்கம் | முடியாட்சி |
பேரரசர் | |
• 1336–1356 | முதலாம் அரிஅரர் (முதல்) |
• 1356–1377 | முதலாவது புக்கா ராயன் |
• 1423–1446 | இரண்டாம் தேவ ராயன் |
• 1509–1529 | கிருஷ்ணதேவராயன் |
• 1529–1542 | அச்சுத தேவ ராயன் |
• 1642–1646 | மூன்றாம் ஸ்ரீரங்கா (கடைசி) |
வரலாறு | |
• தொடக்கம் | 1336 |
• தொடக்க காலப் பதிவுகள் | 1343 |
• முடிவு | 1646 |
மக்கள் தொகை | |
• 1500 மதிப்பீடு | 1,80,00,000[5] |
நாணயம் | வராகம் |
தற்போதைய பகுதிகள் | இந்தியா |
13ஆம் நூற்றாண்டின் முசுலிம் படையெடுப்புகளிலிருந்து காத்துக் கொள்வதற்காக தெற்கத்திய சக்திகளால் நடத்தப்பட்ட முயற்சிகளின் ஓர் உச்ச நிலையாக இப்பேரரசு அதன் முதன்மை நிலைக்கு வளர்ச்சியடைந்தது. கிருஷ்ண தேவராயருக்குக் கீழ் 16ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இப்பேரரசு அதன் உச்ச நிலையின் போது தென்னிந்தியாவின் ஆட்சி செய்த அரசமரபுகளில் கிட்டத்தட்ட அனைத்தையும் அடி பணிய வைத்தது. தக்காணச் சுல்தானகங்களை துங்கபத்திரை-கிருஷ்ணா ஆற்றின் தோவாப் பகுதியைத் தாண்டி உந்தித் தள்ளியது. மேலும் கிருஷ்ணா ஆறு வரையிலும் இருந்த கஜபதி பேரரசையும் (ஒடிசா) இது இணைத்துக் கொண்டது. இந்தியாவில் மிக முக்கியமான அரசுகளில் ஒன்றாக உருவானது.[8] கருநாடகம், ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, கேரளம் மற்றும் கோவா ஆகிய மாநிலங்கள், மற்றும் தெலங்காணா மற்றும் மகாராட்டிரத்தின் சில பகுதிகள் ஆகிய பெரும்பாலான நிலங்களை இப்பேரரசின் நிலப்பரப்பானது கொண்டிருந்தது.[9]
1565இல் தக்காணச் சுல்தானகங்களின் ஒன்றிணைந்த இராணுவங்களால் தலிகோட்டா சண்டையில் ஒரு முக்கியமான இராணுவத் தோல்விக்குப் பிறகு இதன் சக்தியானது பெருமளவுக்கு வீழ்ச்சியடைந்த போதிலும் இப்பேரரசானது 1646ஆம் ஆண்டு வரை நீடித்திருந்தது. இப்பேரரசானது இதன் தலைநகரமான விசயநகரத்தின் (நவீன கால அம்பி) பெயரை ப்பெற்றுள்ளது. இந்நகரத்தின் விரிவான சிதிலங்களானவை தற்போது ஒரு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் உலகப் பாரம்பரியக் களமாக கருநாடகத்தில் உள்ளன. இப்பேரரசின் செல்வச் செழிப்பு மற்றும் புகழானது டொமிங்கோ பயஸ், பெர்னாவோ நுனிஸ், மற்றும் நிக்கோலோ டா கொன்ட்டி போன்ற நடுக்கால ஐரோப்பியப் பயணிகள் வருகை புரிவதற்கும், இப்பேரரசு பற்றி எழுதுவதற்கும் அகத் தூண்டுதலாக அமைந்தது. இந்தப் பயணக் குறிப்புகள், உள்ளூர் மொழிகளில் உள்ள சம கால இலக்கியம் மற்றும் கல்வெட்டுகள், விசய நகரத்தில் நவீன தொல்லியல் அகழ்வாய்வுகள் ஆகியவை பேரரசின் வரலாறு மற்றும் சக்தி குறித்து தேவையான தகவல்களை அளிக்கின்றன.
பேரரசின் மரபில் தென் இந்தியா முழுவதும் பரவிக் காணப்படும் நினைவுச் சின்னங்களும் அடங்கும். இதில் மிகவும் நன்றாக அறியப்பட்ட ஒன்று அம்பியில் உள்ள நினைவுச் சின்னங்களின் குழுவாகும். தெற்கு மற்றும் மத்திய இந்தியாவில் வேறுபட்ட கோயில் கட்டமைப்புப் பாரம்பரியங்களானவை விசயநகரக் கட்டடக் கலையாக ஒன்றிணைக்கப்பட்டன. இந்துக் கோயில் கட்டமைப்பில் கட்டடக் கலைப் புதுமைகளுக்கு அகத் தூண்டுதலாக இந்தக் கூட்டுக் கலவையானது திகழ்ந்தது. நீர்ப் பாசனத்திற்காக நீர் மேலாண்மை அமைப்புகள் போன்ற புதிய தொழில்நுட்பங்களை இப்பகுதிக்கு ஆற்றல் மிக்க நிர்வாகம் மற்றும் வலிமையான அயல் நாட்டு வணிகம் ஆகியவை கொண்டு வந்தன. கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் சமசுகிருதத்தில் சிறந்த கலைகள் மற்றும் இலக்கியம் புதிய உயரங்களைத் தொடுவதற்கு இப்பேரரசின் புரவலத் தன்மையானது அனுமதியளித்தது. வானியல், கணிதம், மருத்துவம், புனைகதை, இசையியல், வரலாற்றுவரைவியல் மற்றும் காட்சி அரங்கு போன்ற துறைகள் பிரபலத் தன்மையை அடைந்தன. தென்னிந்தியாவின் பாரம்பரிய இசையான கருநாடக இசை அதன் தற்போதைய வடிவத்திற்குப் பரிணாமம் அடைந்தது. இந்து சமயத்தை ஒன்றிணைக்கும் ஓர் ஆக்கக் கூறாக ஊக்குவித்ததன் மூலம் பிராந்திய வாத எல்லைகளைக் கடந்ததாக தென்னிந்தியாவின் வரலாற்றில் ஒரு காலப் பகுதியை விசயநகரப் பேரரசானது உருவாக்கியது.
விசயநகரப் பேரரசு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
பெயர்
'விசயநகரம்' என்ற பெயரின் பொருள் 'வெற்றி நகரம்' என்பதாகும். விசயநகரப் பேரரசுக்கான மற்றொரு பெயர் கருநாட இராச்சியம் என்பதாகும். விசயநகரக் காலத்தின் சில கல்வெட்டுக்கள் மற்றும் இலக்கிய நூல்களில் இப்பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் பேரரசர் கிருஷ்ண தேவராயரின் சமசுகிருத நூலான சாம்பாவதி கல்யாணம் மற்றும் தெலுங்கு நூலான வாசு சரிதமு ஆகியவையும் அடங்கும்.[10] ஐரோப்பியர்கள் விசயநகரப் பேரரசை "நரசிங்க இராச்சியம்" என்று குறிப்பிட்டனர்.[11][b] "நரசிம்மா" என்ற ஒரு பெயரில் இருந்து போத்துக்கீசரால் தருவிக்கப்பட்ட பெயர் இதுவாகும்.[12] இப்பெயரானது சாளுவ நரசிம்ம தேவ ராயன் அல்லது இரண்டாம் நரசிம்ம ராயன் ஆகியோரில் யாரிடத்திலிருந்து தருவிக்கப்பட்டது என்று தெளிவாகத் தெரியவில்லை.
வரலாறு
பின்புலமும், பூர்வீகம் குறித்த கோட்பாடுகளும்
14ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் விசயநகரப் பேரரசின் வளர்ச்சிக்கு முன்னர் தேவகிரியின் யாதவப் பேரரசு, வாரங்கலின் காக்கத்தியர் மற்றும் மதுரையின் பாண்டியர் ஆகிய தக்காண பீடபூமியின் இந்து சமய அரசுகளானவை வடக்கிலிருந்து முசுலிம்களால் தொடர்ந்து ஊடுருவலுக்கும், தாக்குதலுக்கும் உள்ளாயின. 1336 வாக்கில் மேல் தக்காணப் பகுதியானது (நவீன கால மகாராட்டிரம் மற்றும் தெலங்காணா) தில்லி சுல்தானகத்தின் சுல்தான்களான அலாவுதீன் கில்சி மற்றும் முகம்மது பின் துக்ளக் ஆகியோரின் இராணுவங்களால் தோற்கடிக்கப்பட்டன.[13][14]

1294இல் தேவகிரி யாதவப் பேரரசின் நிலப்பரப்புகளை தில்லி சுல்தானகத்தின் முசுலிம் படைகள் தோற்கடித்து கைப்பற்றியதற்குப் பிறகு மேற்கொண்டு தெற்கே தக்காணப் பகுதியில் போசளத் தளபதியான மூன்றாம் சிங்கேய நாயக்கர் சுதந்திரத்தை அறிவித்தார்.[15][16] தற்கால கருநாடக மாநிலத்தின் வடகிழக்குப் பகுதிகளில் குல்பர்கா மற்றும் துங்கபத்திரை ஆற்றுக்கு அருகில் காம்பிலி இராச்சியத்தை உருவாக்கினார்.[17] தில்லி சுல்தானகத்தின் இராணுவங்களிடம் அடைந்த ஒரு தோல்விக்குப் பிறகு இந்த இராச்சியமானது வீழ்ச்சியடைந்தது. தங்களது தோல்வியைத் தொடர்ந்து அண். 1327–28இல் மக்கள் ஒரு கூட்டுத் தீக்குளிப்பை நடத்தி இறந்தனர்.[18][19] போசளர், காக்கத்தியர் மற்றும், யாதவர் மற்றும் அதன் பிரிந்து சென்ற காம்பிலி இராச்சியம் ஆகிய அப்போது வரை செழித்திருந்த இந்து இராச்சியங்களின் ஒரு வழி வந்ததாக 1336இல் விசயநகர இராச்சியமானது நிறுவப்பட்டது. தென்னிந்தியாவில் முசுலிம் படையெடுப்புக்கான ஓர் எதிர்ப்புக்கு ஒரு புதிய பரிணாமத்தைக் கொடுத்தது.[16][20]
விசயநகரப் பேரரசின் மொழியியல் பூர்வீகம் குறித்து இரு கோட்பாடுகள் முன் வைக்கப்பட்டுள்ளன.[21] ஒன்றில் பேரரசின் நிறுவனரான முதலாம் அரிஅரர் மற்றும் முதலாம் புக்கா ராயன் ஆகியோர் கன்னடர் ஆவர். வட இந்தியாவிலிருந்து வரும் முசுலிம் படையெடுப்புகளிலிருந்து காத்துக் கொள்வதற்காக துங்கபத்திரை ஆற்றுப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த போசளப் பேரரசின் இராணுவத்தின் தளபதிகள் என்பதாகும்.[22][23][24][c] மற்றொரு கோட்பாடானது அரிஅரர் மற்றும் புக்கா ராயர் ஆகியோர் தெலுங்கர் ஆவர். இவர்கள் முதலில் காக்கத்திய இராச்சியத்துடன் தொடர்புபடுத்தப்பட்டனர். போசளப் பேரரசின் வீழ்ச்சியின் போது அதன் வடக்குப் பகுதியின் கட்டுப்பாட்டைப் பெற்றனர். வாரங்கலில் முகம்மது பின் துக்ளக்கின் இராணுவத்தால் இவர்கள் கைது செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.[d] ஒரு தெலுங்குக் கதையின் அடிப்படையில் இந்த மரபில் தென்னிந்தியா மீதான முசுலிம் படையெடுப்பை எதிர்த்துச் சண்டையிடுவதற்காக சிருங்கேரி மடாலயத்தில் இருந்த ஒரு துறவியான வித்யாரண்யர் என்பவரால் இந்த நிறுவனர்கள் ஆதரவளிக்கப்பட்டு,[13][25] அகத்தூண்டுதல் பெற்றனர் என்று கூறப்படுகிறது. ஆனால் விசயநகரப் பேரரசு நிறுவப்பட்டதில் வித்யாரண்யரின் பங்கு குறித்து தெளிவாகத் தெரியவில்லை.[26]
தொடக்க ஆண்டுகள்
பேரரசு நிறுவப்பட்டதற்குப் பிறகு முதல் இரு தசாப்தங்களில் துங்கபத்திரை ஆற்றுக்குத் தெற்கில் இருந்த பெரும்பாலான பகுதி மீது முதலாம் அரிஅரர் கட்டுப்பாட்டைப் பெற்றார். "கிழக்கு மற்றும் மேற்குக் கடல்களின் எசமானர்" (பூர்வபச்சிம சமுத்திராதீசுவரன்) என்ற பட்டத்தைப் பெற்றார். 1374 வாக்கில் முதலாம் அரிஅரனுக்குப் பின் வந்த முதலாம் புக்கா ராயன் ஆற்காடு இராச்சியம், கொண்டவீடு ரெட்டிப் பேரரசு மற்றும் மதுரை சுல்தானகம் ஆகியவற்றைத் தோற்கடித்தார். மேற்கில் கோவா மற்றும் வடக்கில் துங்கபத்திரை-கிருஷ்ணா ஆற்று தோவாப் பகுதி ஆகியவற்றின் மீது கட்டுப்பாட்டைப் பெற்றார்.[27][28][29] இப்பேரரசின் உண்மையான தலைநகரம் தற்கால கருநாடகத்தில் துங்கபத்திரை ஆற்றின் வடக்குக் கரையில் அமைந்துள்ள ஆனேகுந்தி வேள் பகுதியாகும். வடக்கு நிலங்களிலிருந்து தொடர்ந்து தாக்குதல் நடத்திய முசுலிம் இராணுவங்களுக்கு எதிராகத் தற்காத்துக் கொள்வதற்கு எளிதாக இருந்ததால் முதலாம் புக்கா ராயனின் ஆட்சியின் போது இந்தப் பேரரசின் தலைநகரமானது விசயநகரத்துக்கு இடமாற்றப்பட்டது.[30]
விசயநகரப் பேரரசு தற்போது ஏகாதிபத்திய நிலையுடன் இருந்த போது முதலாம் புக்கா ராயனின் இரண்டாவது மகனாகிய இரண்டாம் அரிஅர ராயன் கிருஷ்ணா ஆற்றைத் தாண்டியும் பேரரசை மேற்கொண்டு நிலைப்படுத்தினார். தென்னிந்தியாவானது விசயநகரப் பேரரசால் கட்டுப்படுத்தப்பட்டது.[31] அடுத்த ஆட்சியாளரான முதலாம் தேவ ராயன் ஒடிசாவின் கஜபதிகளுக்கு எதிராக வெற்றி பெற்றார். காப்பரண்கள் மற்றும் நீர்ப்பாசனத் திட்டங்களைச் செயல்படுத்தினார்.[e] பாமினி சுல்தானகத்தின் பிரூசு பாமினி 1407இல் முதலாம் தேவ ராயனுடன் ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்தினார். இந்த ஒப்பந்தத்தின் படி முதலாம் தேவ ராயன் பாமினிக்கு ஆண்டு தோறும் திறையாக "1,00,000 பணம், சுமார் 185 கிலோ முத்துக்கள், மற்றும் 50 யானைகளைச்" செலுத்த வேண்டிய தேவை இருந்தது. திறை செலுத்தத் தவறிய போது 1417ஆம் ஆண்டு சுல்தானகமானது விசயநகரம் மீது படையெடுத்தது. விசயநகரத்தின் திறை செலுத்தலுக்கான இத்தகைய போர்கள் 15ஆம் நூற்றாண்டில் மீண்டும் நடந்தன.[32]
சமகால இலக்கியத்தில் கஜபீதகரன் என்று போற்றப்பட்ட இரண்டாம் தேவ ராயன் 1424ஆம் ஆண்டு அரியணைக்கு வந்தார்.[f] சங்கம அரசமரபின் ஆட்சியாளர்களிலேயே அநேகமாக மிக வெற்றிகரமான மன்னர் இவர் தான்.[33] கிளர்ச்சி செய்த நிலப்பிரபுக்களையும், தெற்கில் கோழிகோட்டின் சமோரின் மற்றும் வேணாடு ஆகியவற்றையும் ஒடுக்கினார். இலங்கை மீது படையெடுத்தார். பெகு மற்றும் தாநின்தாரி ஆகிய இடங்களில் இருந்த மியான்மர் மன்னர்கள் மீது ஆதிக்கம் செலுத்தினார்.[g] 1436 வாக்கில் கிளர்ச்சி செய்த கொண்டவீட்டின் தலைவர்கள் மற்றும் வேலமா ஆட்சியாளர்கள் வெற்றிகரமாகக் கையாளப்பட்டனர். விசயநகரத்தின் முதன்மை நிலையை ஏற்றுக் கொள்ள வைக்கப்பட்டனர்.[34] ஒரு சில ஆண்டுகள் அமைதிக்குப் பிறகு 1443இல் பாமினி சுல்தானகத்துடனான போர்கள் மீண்டும் வெடித்தன. சில வெற்றிகளும், சில தோல்விகளும் கிடைத்தன. பாரசீகப் பயணியான பெரிஷ்தா இரண்டாம் தேவ ராயனின் போர் ஆயத்தங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார். தன்னுடைய இராணுவத்தை முசுலிம் வில்லாளர்கள் மற்றும் குதிரைப் படையினரைக் கொண்டு இவர் அதிகப்படுத்தினார் என்று குறிப்பிட்டுள்ளார். இது இந்தச் சண்டைக்குக் காரணமாக அமைந்தது. சமகால பாரசீகத் தூதரான அப்துர் இரசாக் ஒரு கிளர்ச்சியால் விசயநகரப் பேரரசுக்குள் ஏற்பட்ட குழப்பத்தைத் தனக்கு அனுகூலமாகப் பயன்படுத்திக் கொண்ட பாமினி சுல்தானைப் போருக்குக் காரணமானவர் என்று குறிப்பிடுகிறார். இக்குழப்பத்தில் ராயரை அவரது சகோதரர் அரசியல் கொலை செய்ய முயற்சித்ததும் அடங்கும்.[35]
இரண்டாம் தேவராயனுக்குப் பிறகு அவரது மூத்த மகன் மல்லிகார்ஜுன ராயன் 1446ஆம் ஆண்டு பதவிக்கு வந்தார். இராசமுந்திரி, கொண்டாவீடு, காஞ்சிபுரம் மற்றும் திருச்சிராப்பள்ளியின் ரெட்டி இராச்சியங்களை ஆக்கிரமித்ததன் மூலம் தமிழ்நாட்டின் மீது இருந்த விசயநகரக் கட்டுப்பாட்டை நீக்கினார். இந்தத் தோல்விகள் விசயநகரப் பேரரசின் மதிப்பைக் குறைத்தன. "செம்மறியாடு போன்ற கருநாடக மன்னனுக்கு ஒரு கொட்டாவி விடும் சிங்கமாக" கஜபதி மன்னன் இருந்தான் என ஒரு கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதன் மூலம் இந்நிலை விளக்கப்பட்டுள்ளது.[36] மல்லிகார்ஜுன ராயனுக்குப் பின் பதவிக்கு வந்த இரண்டாம் விருபக்ச ராயன் இன்பமயமான ஒரு வாழ்வை வாழ்ந்தான். மது மற்றும் மாதுவுக்கு அடிமையானான். பாமினி சுல்தானகத்திடம் கோவா மற்றும் பெரும்பாலான கருநாடகத்தை இவன் இழப்பதற்கு இது வழி வகுத்தது. இவனது ஆளுநரான சாலுவ நரசிம்மன் கிருஷ்ணா ஆற்றுக்குத் தெற்கில் இருந்த கிட்டத்தட்ட அனைத்து கடற்கரை ஆந்திரப் பிரதேசம், சித்தூர், இரு ஆற்காடுகள் மற்றும் கோலார் ஆகியவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததன் மூலம் நிலப்பரப்பு இழப்பைக் குறைத்தார். சாலுவ நரசிம்மன் கஜபதியைத் தோற்கடித்தார். உதயகிரியைக் கட்டுபாட்டில் வைத்திருந்தார். தஞ்சாவூரிலிருந்து பாண்டியர்களை வெளியேற்றினார். மச்சிலிப்பட்டணம் மற்றும் கொண்டவீடு ஆகியவற்றின் கட்டுப்பாட்டைப் பெற்றார். பிறகு இவர் பாமினிப் படைகளைத் தோற்கடித்தார். பேரரசின் தொடக்க கால இழப்புகளில் பெரும்பாலானவற்றை மீண்டும் பெற்றார்.[37]

1485இல் இரண்டாம் விருபக்ச ராயனின் இறப்பிற்குப் பிறகு சாளுவ நரசிம்மன் ஓர் ஆட்சிக் கவிழ்ப்புக்குத் தலைமை தாங்கினார். இது அரசமரபின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது. இதன் வடக்கில் பாமினி சுல்தானகத்தின் தொடர்ந்த சிதைவடைவிலிருந்து உருவான சுல்தானகங்களால் நடத்தப்பட்ட ஊடுருவல்களில் இருந்து பேரரசைத் தொடர்ந்து தற்காத்தார்.[38] சாளுவ நரசிம்மன் தனது இரு சிறு வயது மகன்களைத் தளபதி துளுவ நரச நாயக்கரின் பாதுகாப்பில் விட்டு விட்டு இறந்தார். தங்களது பாரம்பரிய எதிரிகளான கஜபதி மன்னன் மற்றும் பாமினி சுல்தான் ஆகியோரிடமிருந்து பேரரசைத் துளுவ நரச நாயக்கர் ஆற்றலுடன் தற்காத்தார். சேர, சோழ, மற்றும் பாண்டிய நிலப்பரப்புகளின் கிளர்ச்சி செய்த தலைவர்களையும் கூட இவர் அடிபணிய வைத்தார். உயர்குடியினர் மற்றும் அரச குடும்பத்தின் உறுப்பினர்களால் இவரைப் பதவியிலிருந்து தூக்கி எறிய பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் துளுவ நரச நாயக்கர் அரசப் பிரதிநிதியாக 1503ஆம் ஆண்டு வரை தனது கட்டுப்பாட்டைத் தக்க வைத்துக் கொண்டார்.[39]
1503இல் நரச நாயக்கரின் மகனான வீர நரசிம்மன் சாளுவ அரசமரபின் இளவரசனான இம்மாடி நரசிம்மனை அரசியல் கொலைக்கு ஆளாக வைத்தார். ஓர் ஆட்சிக் கவிழ்ப்பு மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார். துளுவ அரசமரபின் ஆட்சியாளர்களில் முதலாமானவராக இவ்வாறு உருவானார். இது உயர் குடியினர் மத்தியில் நல்வழியாகக் கருதப்படாததால் அவர்கள் கிளர்ச்சி செய்தனர். பேரரசிடமிருந்து துங்கபத்ரா-கிருஷ்ணா ஆற்று தோவாப் பகுதியைக் கைப்பற்ற உம்மத்தூர், ஆதோனி மற்றும் தலக்காடு ஆளுநர்கள் ஒன்றிணைந்து செயல்பட்ட போதும் போதும் கூட பிரச்சினைகள் வளர்ந்து வருவதைக் கண்ட கஜபதி மன்னன் மற்றும் பாமினி சுல்தான் பேரரசின் பகுதிகளில் அத்துமீறி ஆக்கிரமிக்கத் தொடங்கினர்.[40] 1509இல் பேரரசானது கிருஷ்ண தேவராயரின் ஆட்சியின் கீழ் வந்தது. துளுவ நரச நாயக்கரின் மற்றொரு மகன் இவர் ஆவார்.[41] அதிருப்தி அடைந்திருந்த உயர் குடியினர், தெற்கில் உம்மத்தூரின் கிளர்ச்சி செய்த தலைவன், மன்னன் பிரதாபருத்திரனின் கீழ் ஒரு புத்துயிர் பெற்ற கஜபதி இராச்சியம், யூசுப் அதில் கானின் கீழ் புதிதாக உருவாக்கப்பட்டிருந்த பீஜப்பூரின் அதில் சாகி சுல்தானாத்திடம் இருந்து வளர்ந்து வந்த அச்சுறுத்தல் மற்றும் மேற்குக் கடற்கரையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கப் போத்துக்கீசியருக்கு இருந்த ஆர்வம் உள்ளிட்ட பல பிரச்சினைகளை தொடக்கத்தில் கிருஷ்ண தேவராயர் எதிர் கொண்டார்.[42] இத்தகைய அழுத்தங்களால் கலக்கம் அடையாத குணம் கொண்டவராக இருந்த அவர் பேரரசை வலிமைப்படுத்தி நிலை நிறுத்தினார். ஒரு நேரத்திற்கு ஒரு வெற்றி என்று பெறத் தொடங்கினார். புத்திக் கூர்மையுடைய ஆட்சியாளராகத் திகழ்ந்த இவர் தன்னுடைய இராணுவத்திற்குள் இந்துக்கள் மற்றும் முசுலிம்கள் ஆகிய இருவரையுமே பணிக்குச் சேர்த்தார்.[43] தொடர்ந்து வந்த தசாப்தங்களில் பேரரசானது தென்னிந்தியாவைத் தன்னகத்தே கொண்டிருந்தது. இதன் வடக்கிலிருந்து ஐந்து நிறுவப்பட்ட தக்காண சுல்தானகங்களிடமிருந்து வந்த படையெடுப்புகளை வெற்றிகரமாகத் தோற்கடித்தது.[44][45]
பேரரசின் உச்சம்
கருடன் கல் இரதம் மற்றும் வித்தலா கோயில் கோபுரம் ஆகியவை 1856 (இடது) மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில்.
பேரரசானது அதன் உச்ச நிலையைக் கிருஷ்ணதேவராயனின் ஆட்சியின் (1509-1529) போது அடைந்தது. அந்நேரத்தில் விஜயநகர இராணுவங்களானவை தொடர்ச்சியாக வெற்றிகளைப் பெற்றன.[46] தக்காணச் சுல்தானகங்களிடமிருந்து நிலப்பரப்பைப் பேரரசானது பெற்றது. இதில் 1520இல் ராய்ச்சூர் மற்றும் நடு தக்காணத்தின் குல்பர்கா, மற்றும் கிழக்குத் தக்காணத்தில் கோல்கொண்டாவின் சுல்தான் குலி குதுப் சாகியுடனான போர்களில் இருந்து பெற்றது, மேலும் கலிங்கப் பகுதியானது ஒடிசாவின் கஜபதிகளிடமிருந்து பெறப்பட்டது ஆகியவை அடங்கும். தெற்குத் தக்காணத்தில் ஏற்கனவே நிறுவப்பட்டிருந்த ஆட்சியுடன் சேர்த்துப் பகுதிகள் பெறப்பட்டன.[47][h] பல முக்கியமான நினைவுச் சின்னங்கள் பேரரசர் கிருஷ்ண தேவராயரின் ஆட்சியின் போது முடிக்கப்பட்டன அல்லது தொடங்கப்பட்டன.[48]
கிருஷ்ணதேவராயருக்குப் பிறகு 1529ஆம் ஆண்டு அவரது ஒன்று விட்ட தம்பியான அச்சுத தேவராயன் பதவிக்கு வந்தார். 1542இல் அச்சுத தேவராயன் இறந்த போது அச்சுதராயனின் உடன்பிறப்பின் பதின்ம வயது மகனானல சதாசிவ ராயன் பேரரசராக நியமிக்கப்பட்டார். கிருஷ்ண தேவராயரின் மருமகனான இராம ராயன் காப்பாளராக உருவானார்.[49] அரியணைக்குத் தனது சுதந்திரமான உரிமை கோரலை நிலை நிறுத்தத் தேவையான வயதை சதாசிவ ராயன் அடைந்த போது ராம ராயன் அவரைக் கிட்டத்தட்ட கைதியாக்கினார். நடைமுறை ரீதியிலான ஆட்சியாளரானார்.[50] தக்காணச் சுல்தானகங்களுடனான தனது முந்தைய தூதரகத் தொடர்புகளிலிருந்து தனது இராணுவத்தில் முசுலிம் தளபதிகளை இவர் தேர்ந்தெடுத்தார். தன்னைத் தானே "உலகின் சுல்தான்" என்று அழைத்துக் கொண்டார்.[51] இந்த முசுலிம் தளபதிகளில் தக்காணத்தில் எங்கிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட தக்காணி முசுலிம்கள் அல்லது பாரசீக வளைகுடாவைத் தாண்டி இருந்த மேற்குலகத்தவர்கள் ஆகிய இரு பிரிவினரும் அடங்குவர்.[52] தக்காணத்தில் இருந்த பல்வேறு சுல்தானகங்களின் உள்நாட்டு விவகாரங்களில் இவர் மிகுதியாகத் தலையிட்டார். முசுலிம் சக்திகளை ஒன்றுடன் ஒன்று மோதவிட்டார். அதே நேரத்தில், தன்னைத் தானே மிக சக்தி வாய்ந்த மற்றும் செல்வாக்கு மிக்க பிராந்திய சக்தியின் ஆட்சியாளராக உருவாக்கிக் கொண்டார். இந்த நடவடிக்கைகள் சில காலத்திற்கு வேலை செய்தன. ஆனால், இறுதியாக இவரது மக்கள் மற்றும் முசுலிம் ஆட்சியாளர்கள் மத்தியில் இவரை மிகவும் பிரபலமற்றவராக ஆக்கின.[53] பீஜப்பூருக்குக் குதிரைகளை விநியோகம் செய்வதை நிறுத்துவதற்காக போத்துக்கீசருடன் இவர் ஒரு வணிக ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டார். பிறகு பீஜப்பூர் சுல்தானைத் தோற்கடித்தார். கோல்கொண்டா மற்றும் அகமது நகர் சுல்தான்களுக்கு அவமானகரமான தோல்விகளைக் கொடுத்தார்.[54]
தோல்வியும், வீழ்ச்சியும்

இறுதியாக விசயநகரத்திற்கு வடக்கே இருந்த தக்காணச் சுல்தானகங்கள் ஒன்றிணைந்தன. சனவரி 1565இல் தலிகோட்டா சண்டையில் இராம ராயனின் இராணுவத்தைத் தாக்கின.[55] யுத்தத்தில் விசயநகரத்தின் தோல்வி குறித்து காமத் என்ற வரலாற்றாளர் குறிப்பிடும் போது எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் சுல்தானகத்தின் இராணுவங்களானவை நல்ல உபகரணங்களுடன், பயிற்சியும் பெற்றிருந்தன. அவர்களின் சேணேவிகளானவை துருக்கிய நிபுணர்களால் இயக்கப்பட்டன. அதே நேரத்தில், விசயநகர இராணுவமானது காலம் போன சேணேவியைப் பயன்படுத்தியது. ஐரோப்பியக் கூலிப்படையினரைச் சார்ந்திருந்தது. சுல்தானகக் குதிரைப் படையானது வேகமாக ஓடும் பாரசீகக் குதிரைகளில் பயணித்தன. அவர்களுக்கு அதிக தொலைவை எட்டுவதற்கு அனுமதியளித்த 15 முதல் 16 அடி வரை நீளமுடைய ஈட்டிகளைப் பயன்படுத்தின. அவர்களது வில்லாளர்கள் உலோகக் குறுக்கு விற்களைப் பயன்படுத்தினர். அவர்களது அம்புகள் நீண்ட தொலைவை அடைவதற்கு இது அனுமதியளித்தது. ஒப்பீட்டளவில் விசயநகர இராணுவமானது மெதுவாக நகர்ந்த போர் யானைகளையும், குறைவான தொலைவையே அடைய முடிந்த ஈட்டிகளைக் கொண்டிருந்த பெரும்பாலும் உள்ளூரில் வளர்க்கப்பட்ட பலவீனமான குதிரைகளில் பயணித்தது. அவர்களது வில்லாளர்கள் குறுகிய தொலைவையே எட்ட முடிந்த பாரம்பரிய மூங்கில் விற்களைப் பயன்படுத்தினர். வரலாற்றாளர் ரிச்சர்டு ஈட்டன் ராய்ச்சூர் போருக்குப் பின் வந்த ஆண்டுகளில் இராணுவத் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வதில் கிருஷ்ணதேவராயர் அடைந்த தோல்வியே விசயநகரத்தின் தாழ்ந்த நிலைக்குக் காரணம் என்று வாதிடுகிறார். ஏனெனில், தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்டிருந்த இராணுவத்திற்கு எதிரான இவரது வெற்றியானது தொழில்நுட்பத்தின் மதிப்பை இவர் குறைத்து மதிப்பிடுவதற்கு வழி வகுத்தது.[56]
இத்தகைய பாதகங்கள் இருந்த போதிலும் காமத், எர்மன் குல்கே மற்றும் தியேத்மர் ரோதர்மன்ட் ஆகியோர் இரு முசுலிம் தளபதிகள் கட்சி தாவி தக்காணச் சுல்தானகங்களுடன் படைகளை இணைத்த போது போரில் பெரும் எண்ணிக்கையிலான விசயநகர இராணுவத்தின் கையானது ஓங்கியிருந்ததாகத் தோன்றிய நிலையில் முடிவை தீர்க்கமாகச் சுல்தானகங்கள் பக்கம் திருப்பியது என்பதில் உடன்படுகின்றனர். காமத்தின் கூற்றுப் படி இவர்கள் கூலிப்படையினரான கிலானி சகோதரர்கள் என்று அடையாளப்படுத்தப்படுகின்றனர். தளபதிகள் இராம ராயனைப் பிடித்தனர். சிரச்சேதம் செய்தனர்.[57][58][59] இராம ராயர் சிரச்சேதம் செய்யப்பட்டதானது விசயநகர இராணுவத்தில் குழப்பத்தையும், அழிவையும் ஏற்படுத்தியது. பிறகு அவர்கள் முழுவதுமாகத் தோற்கடிக்கப்பட்டனர். தக்காணச் சுல்தானகங்களின் இராணுவமானது அம்பியைச் சூறையாடிது. தற்போது அது இருக்கும் சிதிலமடைந்த நிலைக்கு அதை உள்ளாக்கியது.[60]
இராம ராயனின் இறப்பிற்குப் பிறகு திருமலை தேவ ராயன் அரவிடு அரசமரபைத் தொடங்கினார். அழிக்கப்பட்ட அம்பிக்குப் பதிலாக பெனுகொண்டாவில் ஒரு புதிய தலைநகரத்தை நிறுவினார். விசயநகரப் பேரரசின் எஞ்சிய பகுதிகளை மீண்டும் கட்டமைக்க முயற்சித்தார்.[61] 1572இல் திருமலை தேவ ராயன் பதவி விலகினார். தன்னுடைய பேரரசின் எஞ்சிய பகுதிகளைத் தன் மூன்று மகன்களுக்குப் பிரித்துக் கொடுத்தார். அரவிடு அரசமரபின் வழி வந்தவர்கள் இப்பகுதியை ஆண்டனர். ஆனால், பேரரசானது 1614இல் வீழ்ச்சியடைந்தது. இதன் எஞ்சிய பகுதிகள் 1646இல் முடிவுக்கு வந்தன. இதற்குக் காரணம் பீஜப்பூர் சுல்தானகம் மற்றும் பிறருடனான தொடர்ச்சியான போர்கள் ஆகும்.[62][63][64] இக்காலகட்டத்தின் போது தென்னிந்தியாவில் இருந்த மேலும் பல இராச்சியங்கள் சுதந்திரம் அடைந்தவையாகவும், விசயநகரத்திலிருந்து பிரிந்தவையாகவும் உருவாயின. இதில் சித்திரதுர்க நாயக்கர்கள், கேளடி நாயக்கர்கள், மைசூர் இராச்சியம், செஞ்சியின் நாயக்க இராச்சியம், தஞ்சை நாயக்கர்கள், மற்றும் மதுரை நாயக்கர்கள் ஆகியோர் அடங்குவர்.[65]
நிர்வாகம்


பேரரசருக்கு ஆட்சியில் ஆலோசனைகள் வழங்க காரிய கர்த்தா அல்லது இராயசம் எனப்படும் பிரதம அமைச்சர் தலைமையிலான அமைச்சரவை இருந்தது.[66] அரச அரண்மனைக்கு அருகில் அரசு ஆவணங்கள் அரச முத்திரையுடன் பராமரிக்கும் செயலகம் செயல்பட்டது.[67] அரண்மனை நிர்வாகத்தை மேற்கொள்ள 72 துறைகள் இருந்தன.[68][69][70]
பேரரசு பல மண்டலங்களாகவும், மண்டலம் பல நாடுகளாகவும், நாடுகள் பல தலங்களாகவும் பிரிக்கப்பட்டிருந்தன. தலம் என்பது பல கிராமங்களைக் கொண்டிருந்த பிரிவாகும். இந்நிர்வாக அலகுகளை பரம்பரையாக ஆண்டதுடன், பேரரசிற்கு ஆண்டு தோறும் திறை செலுத்தினர். மண்டலத்தின் ஆளுநர் மண்டலேசுவரர் அல்லது நாயக் என்று அழைக்கப்பட்டார். விசய நகர ஆட்சியாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆட்சியில் முழு அதிகாரங்களை வழங்கியிருந்தனர்.
நிலவரி தவிர, திறைகள், பரிசுகள் ஆகியவற்றை சிற்றரசர்களும் படைத்தவைர்களும் அவ்வப்போது பேரரசுக்கு அனுப்பி வந்தனர். துறைமுகங்களில் வசூலிக்கப்பட்ட சுங்கம் பல்வேறு தொழிலாளர்கள் மீதான வரிகள் ஆகியவையும் அரசாங்கத்தின் வருவாயாக இருந்தன. விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு நிலவரியாக வசூலிக்கப்பட்டது. அரசரின் தனிப்பட்ட செலவுகள், அவர் அளிக்கும் கொடைகள், படைத்துறைக்கான செலவுகள் போன்றவை அரசின் முக்கிய செலவினங்களாகும். நீதித்துறையைப் பொறுத்தவரை உடல் உறுப்புகளை சிதைத்தல், யானைக்காலால் இடறுதல் போன்ற கொடுமையான தண்டனைகள் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டன. கோயில் சொத்துக்களைக் கொள்ளையடிப்போருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.[71]
விசய நகர இராணுவம் திறமையான முறையில் சீரமைக்கப்பட்டிருந்தது. குதிரைப்படை, காலாட்படை, பீரங்கிப்படை, யானைப்படை என நான்கு முக்கிய பிரிவுகளை அது கொண்டிருந்தது. அரபு நாடுகளின் வணிககளிடமிருந்து உயர்ரக குதிரைகள் இராணுவத்திற்காக வாங்கப்பட்டன. இராணுவத்தின் உயர் அதிகாரிகள் நாயக் அல்லது பாளையக்காரர் என்று அழைக்கபட்டனர். அவர்கள் ஆற்றும் பணிக்கு ஈடாக நிலங்கள் வழங்கப்பட்டன. இந்நிலங்கள் அமரம் என்று அழைக்கப்பட்டது. படை வீரர்களுக்கு ஊதியம் பொதுவாக பணமாகவே வழங்கப்பட்டது
மதுரை பிரதேசமும், கேளடி பிரதேசமும் பேரரசின் படைத்தலைவர்களால் நேரடியாக நிர்வகிக்கப்பட்டது.
1.1 மில்லியன் பேரரசின் படைகளில் இசுலாமிய வீரரகளும் சேர்க்கப்பட்டனர். கிருட்டிணதேவராயரின் தனிப்படையில் மட்டும் ஒரு இலட்சம் காலாட்படையினரும், 20,000 குதிரைப்படைவீரர்களும், 900 யானைப்படையினரும் இருந்தது.
பொருளாதாரம்
பேரரசின் பொருளாதாரம் சோளம், நெல், கரும்பு, பருத்தி, பட்டு, நவதானியங்கள், பருப்பு வகைகள், வெற்றிலை, மஞ்சள், ஏலக்காய், கிராம்பு, இலவங்கம், சந்தனம் போன்ற வாசனை திரவியங்களும் மற்றும் தென்னை போன்ற விளைபயிர்களைச் சார்ந்து இருந்தது. நீர்ப்பாசன வசதிகளை செய்து கொடுத்த விசயநகர ஆட்சியாளர்கள், வேளாண்மை வளர்ச்சிக்கு ஊக்கமளிக்க புதிய ஏரிகள் வெட்டினர். துங்கபத்திரா போன்ற ஆறுகளின் குறுக்கே தடுப்பு அணைகள் மற்றும் கால்வாய்கள் அமைக்கப்பட்டது.
பேரரசின் தலைநகரமான விசயநகரம் எனும் அம்பி, பல நாட்டவர் கூடும் பெரும் வணிக மையமாக விளங்கியது. இந்நகர வணிக வளாகங்களில் தங்கம், வெள்ளி முத்து, மாணிக்கம், வைடூரியம், இரத்தினம், பவளம் போன்ற நவரத்தினங்கள் விற்கப்பட்டது.[72] நாட்டின் செலாவனிக்கு முக்கியமாக தங்க நாணயம் வராகன் பயன்பட்டது.
பேரரசில் உள்ள கோயில்கள் சீரமைப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்ததால், திறன் மிகு கட்டிடக் கலைஞர்களுக்கும், சிற்பிகளுக்கும் மற்றும் உலோகத் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நல்ல வருவாய் கிடைத்தது.
அரபுக் கடலை ஒட்டிய மலபாரில் உள்ள கண்ணணூர் துறைமுகம் வழியாக அரேபியா, பாரசீகம், தென் ஆப்ரிக்கா, போர்ச்சுகல் போன்ற மேலை நாடுகளுடனும் வாணிகத்தொடர்பு நிலவியது. பருத்தி மற்றும் பட்டுத் துணிகள், நறுமணப் பொருட்கள், அரிசி, வெடியுப்பு, சர்க்கரை போன்றவை முக்கிய ஏற்றுமதிப் பொருட்கள் ஆகும். அரேபியக் குதிரைகள், முத்துக்கள், செம்பு, பவழம், குங்குமப்பூ, பாதரசம், சீனத்துப்பட்டு துணிகள் போன்றவை இறக்குமதி செய்யப்பட்டன. கப்பல் கட்டும் தொழிலும் வளர்ச்சியடைந்தது.


ஆட்சியாளர்களின் பட்டியல்
எண். | ஆட்சியாளர் பெயர் | ஆட்சிக்காலம் |
---|---|---|
சங்க மரபு ஆட்சியாளர்கள்( 1336 to 1485 CE) | ||
1 | முதலாம் ஹரிஹரர் | 1336–1356 |
2 | முதலாவது புக்கா ராயன் | 1356–1377 |
3 | இரண்டாம் ஹரிஹர ராயன் | 1377–1404 |
4 | விருபாட்ச ராயன் | 1404–1405 |
5 | இரண்டாம் புக்க ராயன் | 1405–1406 |
6 | முதலாம் தேவ ராயன் | 1406–1422 |
7 | ராமச்சந்திர ராயன் | 1422 |
8 | வீரவிஜய புக்கா ராயன் | 1422–1424 |
9 | இரண்டாம் தேவ ராயன் | 1424–1446 |
10 | மல்லிகார்ஜுன ராயன் | 1446–1465 |
11 | இரண்டாம் விருபக்ஷ ராயன் | 1465–1485 |
12 | பிரௌத ராயன் | 1485 |
சாளுவ மரபு ஆட்சியாளர்கள் (1485 to 1505 CE) | ||
13 | சாளுவ நரசிம்ம தேவ ராயன் | 1485–1491 |
14 | திம்ம பூபாலன் | 1491 |
15 | இரண்டாம் நரசிம்ம ராயன் | 1491–1505 |
துளுவ மரபு ஆட்சியாளர்கள்(1491 to 1570 CE) | ||
16 | துளுவ நரச நாயக்கர் | 1491–1503 |
17 | வீரநரசிம்ம ராயன் | 1503–1509 |
18 | கிருஷ்ணதேவராயன் | 1509–1529 |
19 | அச்சுத தேவ ராயன் | 1529–1542 |
20 | சதாசிவ ராயன் | 1542–1570 |
அரவிடு மரபு ஆட்சியாளர்கள் (1542 to 1652 CE) | ||
21 | அலிய ராம ராயன் | 1542–1565 |
22 | திருமலை தேவ ராயன் | 1565–1572 |
23 | ஸ்ரீரங்க தேவ ராயன் | 1572–1586 |
24 | வெங்கடபதி ராயன் | 1586–1614 |
25 | இரண்டாம் ஸ்ரீரங்கா | 1614–1617 |
26 | ராம தேவ ராயன் | 1617–1632 |
27 | பேடா வெங்கட ராயன் | 1632–1642 |
28 | மூன்றாம் ஸ்ரீரங்கா | 1642–1646/1652 |
பண்பாடு
சமூக வாழ்க்கை

விசயநகரப் பேரரசில் இந்து சாதிய முறை கடுமையாகப் பின்பற்றப்பட்டது. அரச கட்டளைகளை நிறைவேற்ற, கிராமப்புறங்களில் ஒவ்வொரு சாதிக் குழுவினரும் தங்கள் தலைவரை தேர்ந்தெடுத்தனர். சமயச் சடங்குகளிலும், இலக்கியங்களிலும், அமைச்சரவைகளிலும் அந்தண சமூகம் உயரிடம் வகித்தது.[74] இருப்பினும் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் தோன்றிய சர்வக்ஞர், வேமனாமொல்லா, மொல்லா போன்ற சமய இலக்கியாவாதிகளும், கவிஞர்களும் சமூகத்தில் உயரிடத்தில் வைத்துப் போற்றப்பட்டனர். படைத்துறைகளில் இசுலாமியர் உள்ளிட்ட திறமை உள்ள அனைத்து சமூக இளைஞர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

விசயநகரப் பேரரசில் உடன்கட்டை ஏறல்வழக்கம் இருந்தமைக்கு சான்றாக 50 நடு கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.[75]
12ம் நூற்றாண்டில் பசவர் தோற்றுவித்த வீர சைவம் எனும் லிங்காயத மரபு தற்கால வட கருநாடகப் பகுதிகளில் பெரும்பாலான மக்கள் பின்பற்றினர்.
சமூக - சமய நெறிகளில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் பங்காற்றினர். திருமாலம்பா தேவி எனும் கன்னட மொழிக் கவிஞர் வரதம்பிகா பரிணயம் எனும் நூலையும், குமார கம்பணன் மனைவிகங்கதேவி எனும் அரசி மதுரா விசயம் எனும் சமசுகிருத வரலாற்று நூலையும் எழுதியுள்ளனர்.[76][77][78] அனைத்து ஊர்களிலும் தேவதாசி முறை நடைமுறையில் இருந்தது.[79] உடலை வளுப்படுத்தும் மல்யுத்தப் பயிற்சி கூடங்கள் சிறப்பாக நடைபெற்றது.
நாணயம்
அம்பி (கர்நாடகம்), பெனுகொண்டா மற்றும் திருப்பதிலிருந்து தேவநாகரி, கன்னடம், தெலுங்கு மொழிகளில் வெளியிட்ட பேரரசின் நாணயங்களில் விசயநகரப் பேரரசர்களின் பெயர்கள் கொண்டிருந்தது.[80][81] தங்கம், வெள்ளி மற்றும் செப்பு நாணயங்கள் வராகன் மற்றும் காசு என அழைக்கப்பட்டது.[82] நாணயங்களில் பாலகிருட்டிணன், திருப்பதி வெங்கடாச்சலபதி, பூமாதேவி, சிறீதேவி, காளைகள், யானைகள், பறவைகள், அனுமன் மற்றும் கருடன் உருவங்கள் பொறிக்கப்பட்டிருந்தது.[83][84]
சமயம்
இந்து சமயத்தினரான விசயநகரப் பேரரசு அனைத்து சமயங்களையும், சமயப் பிரிவுகளையும், அயல் நாட்டவர்களையும் வேறுபாடு காட்டாது சமமாக நடத்தியது.[85] ஆனால் அரசவை நடைமுறை மற்றும் ஆடைகளில் சுல்தான்களைக் பின்பற்றினர்.[86]
அரிகரர்-புக்கர் சகோதரர்களுக்கு பேரரசை நிறுவ வழிகாட்டிய வித்யாரண்யரையும், அவர் அலங்கரித்த அரிகர- சிருங்கேரி மடத்தை ஆதரித்து வளர்த்ததுடன், சைவத்தைப் பின்பற்றினர். பின் வந்த சாளுவ மரபு மற்றும் துளுவ மரபு பேரரசர்கள் வைணவத்தைப் பின்பற்றினர். பேரரசின் முத்திரையாக விட்டுணுவின் அவதாரமான வராகத்தைக் கொண்டனர்.
தற்கால கருநாடகப் பகுதிகளில் புரந்தரதாசர், கனகதாசர், அரிதாசர் போன்றவர்களால் பக்தி இயக்கம் வளர்ந்தது. பசவர் நிறுவிய லிங்காயதம் செழித்தோங்கியது. சமசுகிருத மொழியில் புதிய இலக்கியங்கள் தோன்றியது.
கருநாடக இசைக் அறிஞர் அன்னமாச்சாரியார் தெலுங்கு மொழியில் பல பக்தி கீர்த்தனைகள் இயற்றினார்.[87]
- இலட்சுமி நரசிம்மர், அம்பி
- சிற்பங்களால் அலங்கரிப்பட்ட தூண்கள், அம்பி விருபாட்சர் கோயில்
- இராமர் கோயில் சுவர் சிற்பங்கள், அம்பி
- கவி மஞ்சராசா கன்னட மொழியில் எழுதிய கவிதைக் கல்வெட்டு, ஆண்டு 1398
- பெங்களூர் சோமேசுவரர் கோயிலில் தமிழ் கல்வெட்டுகள்
மொழி
விசயநகரப் பேரரசின் அவையில் கன்னடம் மற்றும் தெலுங்கு ஆட்சி மொழியாக இருந்தது. பேரரசின் பகுதிகளில் கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகள் பயிலப்பட்டது. கன்னட மொழியில் 7000 கல்வெட்டுகளும், 300 தாமிரப் பட்டயங்களும், மீதமுள்ள கல்வெட்டுகள் தெலுங்கு, தமிழ் மற்றும் சமசுகிருத மொழியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.[88][89][90]
இலக்கியம்
விசயநகரப் பேரரசில் தெலுங்கு, கன்னடம், சமசுகிருத மொழி இலக்கியங்கள் செழித்து வளர்ந்தது. கன்னடம் மற்றும் தெலுங்கு மொழியில் வாழ்க்கை வரலாறு, புனைவு, இசை, இலக்கணம், கவிதை, மருத்துவம் மற்றும் கணிதம் தொடர்பான நூல்கள் இயற்றப்பட்டது. அரசவை மொழியாக கன்னடமும், தெலுங்கும் இருந்தது. [91][92][93] கிருட்டிணதேவராயர் ஆட்சியில் அனத்து துறைகளிலும் தெலுங்கு மொழி உச்சத்தை தொட்டது.[92]
சமசுகிருத மொழியில் சாயனர் நான்கு வேதங்களுக்கும் விளக்க உரை எழுதினார்.[94][95] வித்யாரண்யர், அத்வைத சிந்தாந்தத்திற்கு விளக்க உரையாக பஞ்சதசி மற்றும் சர்வதர்சன சங்கிரகம் எனும் நூல்களை எழுதினார்.
பேரரசின் குடும்பத்தவர்களில் கிருட்டிணதேவராயர் ஆண்டாள் குறித்து ஆமுக்தமால்யதா மற்றும் சாம்பவதி கல்யாணம்[96] என இரண்டு தெலுங்கு நூல்களை இயற்றினார். மதுரை சுல்தானகத்தை வென்ற குமார கம்பணனைப் போற்றும் விதமாக, கங்கதேவி எனும் இளவரசி மதுரா விசயம் எனும் வீரகம்பராய சரித்திரம் நூலையும் இயற்றியுள்ளனர்.[97]
கிருட்டிணதேவராயரின் அரசவைக் கவிஞர்களான தெனாலி ராமன், அல்லாசானி பெத்தன்னா, நந்தி திம்மன்னா, அய்யல்லு இராமபத்ருடு, மடையாகரி மல்லன்னா, இராமராசாபூசணம் ஆகியோர் தெலுங்கு மொழியில் கவிதைகள் இயற்றினர். தமிழ் மொழியில் சொரூபானந்தர் மற்றும் தத்துவராயர் அத்வைத வேதாந்ததிற்கு விளக்க உரை நூல்கள் எழுதினார். மலையாள மொழியில் நீலகண்ட சோமயாச்சி வானவியல் குறித்தான நூல் எழுதியுள்ளார்.[98]
கட்டிடக்கலை

போசளர் மற்றும் திராவிடக் கட்டிடக்கலை கலந்து வடிக்கப்பட்ட விசயநகரக் கோயில்கள் பெரும்பாலும் உறுதியான சுற்று மதில்களால் சூழப்பட்டவை. இவை, மரம், செங்கல், சுண்ணாம்புச் சாந்து ஆகியவற்றைக் கொண்டு சோழர் பாணியில் அமைக்கப்பட்டன. கோபுரங்களில் தெய்வகள், முனிவர்கள், தேவதைகள் ஆகியோரின் சிற்பங்கள் அமைக்கப்பட்டு அழகூட்டப்பட்டது. பேலூரில் உள்ள சென்னகேசவர் கோயில், திருவரங்கம், சிரீசைலம் ஆகிய இடங்களில் உள்ள இராய கோபுரங்களுக்கு எடுத்துக் காட்டுகள் ஆகும்.
மதில்களுக்குள் கருவறையைச் சுற்றிய கூரையிடப்பட்ட திருச்சுற்று, மகாமண்டபம் எனப்படும் தூண்களோடு கூடிய பெரிய மண்டபம், கல்யாண மண்டபம், வசந்த மண்டபம் மற்றும் திருக்குளம் என்பனவும் கோயில்களின் கூறுகள் ஆயின. தூண்களின் ஒரு புறத்தில், அவற்றோடு ஒட்டியபடி நிமிர்ந்த நிலையில் யாளிகள், முதுகில் வீரர்கள் இருக்க, இரண்டு கால்களில் பாய்ந்தபடி நிமிர்ந்து நிற்கும் குதிரைகள் ஆகியவற்றின் சிற்பங்கள் காணப்படுகின்றன. தூணின் மறு பக்கங்களில் இந்துப் பழங்கதைகளை விளக்கும் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கும்.

இதனையும் காண்க
அடிக்குறிப்புகள்
மேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.