பதினொன்றாம் பயஸ் (திருத்தந்தை)
From Wikipedia, the free encyclopedia
திருத்தந்தை பதினொன்றாம் பயஸ் (இத்தாலியம்: Pio XI), இயற்பெயர் அம்புரோஜியோ தாம்யானோ அக்கில்லே ராட்டி (Italian: [amˈbrɔ:dʒo daˈmja:no aˈkille ˈratti]; 31 மே 1857 – 10 பெப்ரவரி 1939), என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 6 பெப்ரவரி 1922 முதல் 1939இல் தனது இறப்பு வரை இருந்தவர் ஆவார். பிப்ரவரி 11, 1929 இல் வத்திக்கான் நகர் உருவாக்கப்பட்டப்பின்பு அதன் முதல் அரசராகவும் இருந்தவர்.
திருத்தந்தை பதினொன்றாம் பயஸ் | |
---|---|
உரோமை ஆயர் | |
ஆட்சி துவக்கம் | 6 பெப்ரவரி 1922 |
ஆட்சி முடிவு | 10 பெப்ரவரி 1939 |
முன்னிருந்தவர் | பதினைந்தாம் பெனடிக்ட் |
பின்வந்தவர் | பன்னிரண்டாம் பயஸ் |
திருப்பட்டங்கள் | |
குருத்துவத் திருநிலைப்பாடு | 20 டிசம்பர் 1879 Raffaele Monaco La Valletta-ஆல் |
ஆயர்நிலை திருப்பொழிவு | 28 அக்டோபர் 1919 Aleksander Kakowski-ஆல் |
கர்தினாலாக உயர்த்தப்பட்டது | 13 ஜூன் 1921 பதினைந்தாம் பெனடிக்ட்-ஆல் |
பிற தகவல்கள் | |
இயற்பெயர் | அம்புரோஜியோ தாம்யானோ அக்கில்லே ராட்டி |
பிறப்பு | (1857-05-31)31 மே 1857 தேசியோ, லொம்பார்தி-வெனிசியா, ஆத்திரியப் பேரரசு |
இறப்பு | 10 பெப்ரவரி 1939(1939-02-10) (அகவை 81) திருத்தூதரக அரண்மனை, வத்திக்கான் நகர் |
குறிக்கோளுரை | Raptim Transit (விரைவாய் கடந்து போகும் - யோபு 6:15)[1] Pax Christi in Regno Christi (கிறிஸ்துவின் ஆட்சியில் கிறிஸ்துவின் அமைதி)[2] |
கையொப்பம் | |
பயஸ் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள் |
இவர் பல திருமடகளை எழுதியுள்ளார். பன்னாட்டு நிதியத்தின் முதலாளித்துவ பேராசை, சமூகவுடைமை/பொதுவுடைமையின் தீமைகள், சமூக நீதி சிக்கள்கள் முதலியவற்றைக் குறித்து இவர் எழுதிய குவாத்ரஜெசிமோ ஆனோ என்னும் திருமடல் மிகவும் புகழ் வாய்ந்தது ஆகும். திருப்பணியாளர் எதிர்ப்பு மனநிலைக்கு (anti-clericalism) பதிலளிக்கும் வகையில் கிறிஸ்து அரசர் பெருவிழாவினை இவர் நிறுவினார். தாமஸ் அக்குவைனஸின் புனிதர் பட்டமளிப்பின் 6 ஆம் நூற்றாண்டு நினைவாக 1923 ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் நாள் இவர் இயற்றிய ஸ்டுடியோரம் துசெம் என்னும் திருமடலின் சாரம் கத்தோலிக்க மெய்யியல் மற்றும் இறையியலின் கருவாகப் பார்க்கப்படுகின்றது.[3][4]
இவரின் ஆட்சியில், திருப்பீடம் மற்றும் இத்தாலிய அரசுக்கும் இடையே வெகுநாட்களாக இருந்த முரண்பாடு, 1929ஆம் ஆண்டு இலாத்தரன் உடன்படிக்கை மூலம் முடிவுக்கு வந்தது. மெக்சிக்கோ, எசுப்பானியா மற்றும் சோவியத் ஒன்றியத்தில் திருச்சபை துன்புறுத்தப்படுவதையும் அருட்பணியாளர்கள் கொல்லப்படுவதையும் இவரால் தடுக்க இயலவில்லை. தாமஸ் மோர், பீட்டர் கனிசியு, பெர்னதெத் சுபீரு மற்றும் ஜான் போஸ்கோ முதலிய பலருக்கு இவர் புனிதர் பட்டம் அளித்தார். லிசியே நகரின் தெரேசாவுக்கு அருளாளர் பட்டமும் புனிதர் பட்டமும் இவர் அளித்தார். பெரிய ஆல்பர்ட்டின் எழுத்துக்களின் ஆன்மீக வலிமைக்காக "இணையான புனிதர் பட்டம்" அளித்து (equivalent canonization) அவரை திருச்சபையின் மறைவல்லுநர் என அறிவித்தார். பொது நிலையினரின் பங்களிப்பை வளர்ப்பதில் மிகுதியான அக்கறை காட்டினார். தனது ஆட்சியின் இறுதியில் ஹிட்லர் மற்றும் முசோலினி கத்தோலிக்க வாழ்க்கை மற்றும் கல்வியில் செய்த ஊடுருவல்களை எதிர்த்து பல முறை வெளிப்படையாகப் பேசினார்.
பிப்ரவரி 10, 1939 அன்று திருத்தூதரக அரண்மனையில் இறந்த இவர், புனித பேதுரு பேராலய கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். இவரது கல்லறைக்கான இடத்தை அகழும்போது, இரண்டு அடுக்கு அடிநிலைக் கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றில் கிடைக்கப்பட்ட எலும்புகளிலிருந்து அது புனித பேதுரு கல்லறை எனக் கண்டறியப்பட்டது.[5][6][7]