லிசியே நகரின் தெரேசா
From Wikipedia, the free encyclopedia
லிசியே நகரின் தெரேசா (Thérèse of Lisieux)(2 ஜனவரி 1873 – 30 செப்டம்பர் 1897) என்பவர் ஒரு பிரஞ்சு கார்மேல் சபைத் துறவியும், கத்தோலிக்க புனிதரும் ஆவார்[1]. மரி ஃப்ரான்சுவா தெரேஸ் மார்த்தின் (Marie-Françoise-Thérèse Martin) என்னும் இயற்பெயர் கொண்ட இவர் துறவற சபையில் குழந்தை இயேசு மற்றும் இயேசுவின் திருமுகத்தின் தெரேசா என்னும் பெயரைத் தேர்ந்துகொண்டார். குழந்தை இயேசுவின் தெரேசா என்னும் பெயரும், இயேசுவின் சிறு மலர் என்னும் பெயரும் இவருக்குச் சிறப்புப் பெயர்களாக அமைந்துள்ளன.
லிசியே நகரின் புனித தெரேசா | |
---|---|
கார்மேல் சபை உடையில் லிசியே நகரின் புனித தெரேசா (1895) | |
கன்னியர் மற்றும் மறைவல்லுநர் | |
பிறப்பு | (1873-01-02)2 சனவரி 1873 அலேசான், பிரான்சு |
இறப்பு | 30 செப்டம்பர் 1897(1897-09-30) (அகவை 24) லிசியே, பிரான்சு |
ஏற்கும் சபை/சமயங்கள் | உரோமன் கத்தோலிக்க திருச்சபை |
அருளாளர் பட்டம் | 29 ஏப்ரல் 1923 by பதினொன்றாம் பயஸ் |
புனிதர் பட்டம் | 17 மே 1925 by பதினொன்றாம் பயஸ் |
முக்கிய திருத்தலங்கள் | புனித தெரேசா பேராலயம், லிசியே நகர், பிரான்சு |
திருவிழா | 1 அக்டோபர் 3 அக்டோபர் - பொது நாள்காட்டி (1927-1969) |
சித்தரிக்கப்படும் வகை | ரோஜாக்கள் |
பாதுகாவல் | மறைப்பணியாளர்கள்; பிரான்சு; உருசியா; எய்ட்சு நோயாளிகள்; தோட்டக்கலைஞர்; அனாதைகள்; காச நோயாளிகள் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | ஓர் ஆன்மாவின் வரலாறு (தன்வரலாற்று நூல்) |
15 வயதே நிரம்பிய தெரேசா தம் இளம் பருவத்திலேயே இறை அழைத்தலுக்குச் செவிமடுத்து, 1888 இல், பல்வேறு தடைகளையும் தாண்டி, கார்மேல் சபையில் சேர்ந்தார். அவர் புகுந்த அடைப்புநிலை (cloistered) கார்மேல் சபை மடம் பிரான்சு நாட்டில் நோர்மாண்டி மாநிலத்தில் லிசியே (Lisieux) நகரில் அமைந்திருந்தது. அத்துறவற இல்லத்தில் தெரேசா ஒன்பது ஆண்டுகள் தங்கியிருந்தார். அங்கு திருப்பணிக் காப்பகப் பொறுப்பாளர்(sacristan), பயிற்சிநிலைத் துறவியரின் துணைப் பயிற்சியாளர் போன்ற பல பணிகளை ஆற்றினார். அவர்தம் வாழ்க்கையின் இறுதி பதினெட்டு மாதங்களில் அவர் "இறைநம்பிக்கையின் இருண்ட கால" வேதனையை அனுபவித்தார். அவர் காச நோயால் பீடிக்கப்பட்டு, தம் 24ஆம் அகவையில் இறையடி எய்தினார்.
இவரின் ஓர் ஆன்மாவின் வரலாறு என்னும் தன்வரலாற்று நூலை இவரின் இறப்புக்கு பின் சிறிதளவே அச்சிட்டு வெளியிட்டனர். ஆனாலும் அது பலராலும் படிக்கப்பட்டு, இவரை 20-ஆம் நூற்றாண்டின் மிகப்பெரும் புனிதருள் ஒருவராகப் பிறர் கண்டுணர வழிவகுத்தது. இவருக்கு முத்திப்பேறுபெற்ற பட்டம் 1923இலும், புனிதர் பட்டம் 1925இலும் வழங்கப்பட்டது. பதினொன்றாம் பயஸ் இவருக்கு புனிதர் பட்டம் வழங்கி, இவரைத் தம் ஆட்சியின் விண்மீன் ஆக்கினார் என்பர்.[2]
குழந்தை இயேசுவின் புனித தெரேசாவுக்கு இன்று உலகம் முழுவதிலும் வணக்கம் செலுத்தப்படுகிறது[3].
தெரேசா ஒரு மறைந்த வாழ்க்கை வாழ்ந்து, அறியப்படாமல் இருக்க வேண்டும், என்றே விரும்பினார். ஆனால் இவரின் இறப்புக்கு பின் இவரின் தன்வரலாற்று நூல் இவரை வெளி உலகிற்கு காட்டியது. இவரின் கடிதங்கள், கவிதைகள், சமய நாடகங்களில், இறை வேண்டல்கள், மற்றும் இவரது கடைசி உரையாடல்கள், இவரது சகோதரிகள் பதிவு செய்த இவரின் ஓவியங்கள் மற்றும் புகைப்படங்கள் - (பெரும்பாலும் சகோதரி செலின்னால் செய்யப்பட்டவை) இவரைப் பலரும் கண்டுணர வழிவகுத்தது.
இவரது ஆன்மீக வாழ்வின் ஆழம், பலருக்கு ஊக்கமளிப்பதாக இருந்தது. இவர் அதனைப்பற்றி கூறும் போது, "என் வழி முழுவதும் நம்பிக்கை கொள்வதும் அன்பு செய்வதும் தான்" என்றார். தனது தாழ்ச்சியிலும் எளிமையிலும், இவர் கடவுளையே தனது புனிதமாக நம்பினார்.
புதியதொரு "சிறு வழியில்" ("little way") சென்று தெரேசா விண்ணகம் அடைய விரும்பினார். "இயேசுவைச் சென்று சேர்ந்திட ஒரு மின்தூக்கி (elevator) கண்டுபிடிக்க விரும்பினேன். சிறியவளான என்னைத் தூக்கி உயர்த்துகின்ற இயேசுவின் கைகளே அந்த மின்தூக்கி என அறிந்துகொண்டேன்" என்று தெரேசா குறிப்பிடுகின்றார்.
லிசியே நகரில் உள்ள, புனித தெரேசா பேராலயம், பிரான்சு நாட்டிலேயே, லூர்து நகருக்கு அடுத்து மிக அதிக திருப்பயணியர் வரும் இடமாக உள்ளது.[4][5]