கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டி
From Wikipedia, the free encyclopedia
கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டி என்பது உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் வழிபாட்டு முறை எங்கெல்லாம் நடைமுறையில் உள்ளதோ அங்கெல்லாம் கடைப்பிடிப்பதற்காக வகுக்கப்பட்ட தனி நாள்காட்டி ஆகும். இந்நாள்காட்டியில் வழிபாட்டு ஆண்டின் ஒவ்வொரு நாளும் அனுசரிக்கப்பட வேண்டிய புனிதர் விழாக்கள், ஆண்டவர் இயேசுவின் வாழ்வுதொடர்பான மறைநிகழ்வுகள் போன்றவை குறிக்கப்பட்டிருக்கும்[1].
இப்பொது நாள்காட்டி தவிர, தனித்தனி நாடுகளுக்கும் துறவற சபைகளுக்கும் உரிய நாள்காட்டிகளும் உண்டு.
இந்த எல்லா நாள்காட்டிகளிலும் குறிக்கப்படுகின்ற கொண்டாட்டங்கள் கீழ்வருமாறு வரிசைப்படுத்தப்படுகின்றன:
- விருப்ப நினைவு (வி.நி.) - இந்நாளில் தரப்படுகின்ற புனிதரின் நினைவாகத் திருப்பலி கொண்டாடலாம் என்னும் குறிப்பாகும்
- நினைவு (நி.) - இந்நாளில் தரப்படுகின்ற புனிதரின் நினைவாகத் திருப்பலி கொண்டாட வேண்டும் என்னும் குறிப்பாகும்
- விழா (வி.) - இந்நாளில் தரப்படுகின்ற மறையுண்மையை அல்லது புனிதரை விழா சிறப்பித்து திருப்பலி நிறைவேற்ற வேண்டும் என்னும் குறிப்பாகும். விழாத் திருப்பலியில் உன்னதங்களிலே என்று தொடங்கும் வானவர் கீதம் இடம்பெறும்.
- பெருவிழா (பெ.) - இந்நாளில் தரப்படுகின்ற மறையுண்மையை அல்லது புனிதரை பெருவிழா கொண்டாடி ஆடம்பரத் திருப்பலி நிறைவேற்ற வேண்டும் என்னும் குறிப்பாகும். பெருவிழாத் திருப்பலியில் வானவர் கீதத்துடன், கூடுதலாக நம்பிக்கை அறிக்கையும் இடம்பெறும்.