கத்தோலிக்க திருச்சபை
பாப்பரசரால் வழிநடத்தப்படும் மிகப்பெரிய கிறித்தவத் திருச்சபை / From Wikipedia, the free encyclopedia
கத்தோலிக்கத் திருச்சபை அல்லது உரோமன் கத்தோலிக்கத் திருச்சபை (Roman Catholic Church) மிகப்பெரிய கிறிஸ்தவ மதப்பிரிவாகும். டிசம்பர் 31, 2008 ஆம் ஆண்டு கணக்கின் படி 1,166,000,000 (ஒரு பில்லியன், 166 மில்லியன்) இறைமக்களை கொண்டதாக இப்பிரிவு இருக்கிறது. இவ்வடிப்படையில் கத்தோலிக்கமே உலகில் மிகப்பெரிய சமயப்பிரிவாகும். ஏனைய கிறிஸ்தவ மத பிரிவுகளைப்போலவே கத்தோலிக்கரும் இயேசுவை தங்களது கடவுளாகவும், தமத்திரித்துவத்தின் இரண்டாம் ஆளாகவும் ஏற்றுக்கொள்கின்றார்கள். திருத்தந்தை கத்தோலிக்கரின் உலகத்தலைவராவார்.
கத்தோலிக்கத் திருச்சபையின் சுயவரைவிலக்கணத்தின் படி கத்தோலிக்க திருச்சபை எனப்படுவது, இயேசுவின் தலைமைச்சீடரான பேதுருவின் வழிவருபவரின் தலைமையின் கீழ் ஏனைய ஆயர்களாலும் குருக்களாலும் வழிநடத்தப்படும் சமயமாகும். இங்கு இராயப்பரின் வழிவருபவராக திருத்தந்தை ஏற்றுக் கொள்ளப்படுகிறார். தற்போது பிரான்சிஸ் திருத்தந்தையாக கத்தோலிக்க திருச்சபையை வழிநடத்துகிறார். இவர் 266 ஆவது திருத்தந்தையாவார்.
இத்திருச்சபை ஒரே, புனித, கத்தோலிக்க, திருத்தூதர் வழிவருகின்ற (அப்போஸ்தலிக்க) சபையாக உள்ளது என்பது (திருச்சபையின் நான்கு அடையாளங்கள்) கத்தோலிக்க திருச்சபையின் நிலைப்பாடு ஆகும்.