சமூகவுடைமை
From Wikipedia, the free encyclopedia
சமவுடைமை அல்லது சமூகவுடைமை (Socialism, சோசலிசம், சோஷியலிசம் அல்லது சோசியலிசம்) என்பது ஒரு அரசியல்-பொருளியல் கோட்பாடு. பொருளாதார நிர்வாகத்தில் கூடிய அரச பங்களிப்பை வலியுறுத்துகின்றது. உற்பத்திக் காரணிகள் (Means of Production) மற்றும் இயற்கை வளங்கள் அரசு அல்லது சமூக கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்ற கொள்கையை முன்னிறுத்துகிறது. முக்கிய துறைகள் அரசுடைமையாக இருப்பதையும், சமத்துவத்தை அல்லது சம வாய்ப்புக்களை நிலை நிறுத்தும் கொள்கைகளையும், பொது பொருளாதார நீரோட்டத்தின் விளிம்பில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தர உயர்வுக்கு உதவும் வழிமுறைகளையும் வலியுறுத்துகின்றது. மேலும், சோசலிச சிந்தனைகள் பொது நலம், கூட்டு செயற்பாடு ஆகிவற்றை முன்நிறுத்தி, இலாப நோக்கத்தை கொண்டு இயங்கும் முதலாளித்துவ கொள்கைகள், தனி நபர்களிடம் செல்வம் குவிதலை எதிர்த்து அமைகின்றன. தொழிற்புரட்சி மற்றும் முதலாளித்துவம் உருவாக்கிய ஏற்றத்தாழ்வுகளுக்கு தீர்வாக சமவுடமை கோட்பாடு முன்வைக்கப்பட்டது.