பத்தேவியா, ஒல்லாந்தக் கிழக்கிந்தியத் தீவுகள்
From Wikipedia, the free encyclopedia
ஒல்லாந்தக் கிழக்கிந்தியத் தீவுகளில், பத்தேவியா (Batavia) அதன் தலைநகரமும், தற்கால சக்கார்த்தாவாக உருவாகிய நகரமும் ஆகும். இக்கால சக்கார்த்தாவைப் போலவே அக்காலத்தில் பத்தேவியா என்பது நகரத்தை மட்டுமோ அல்லது அதனோடிணைந்த சுற்றுவட்டாரப் பகுதிகளையும் சேர்த்தோ குறிக்கலாம்.
1619 இல், அக்கால சயகார்த்தா நகரை இடித்து உருவாக்கப்பட்ட பத்தேவியா, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நவீன இந்தோனீசியா உருவாக வழிகோலியது. பத்தேவியா, ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆசிய வணிக வலையமைப்பின் மையமானது.[1]:10 இப்பகுதியில் கம்பனி, சாதிக்காய், கருப்பு மிளகு, கறுவா, கராம்பு ஆகிய பண்டங்களின் வணிகத்தில் தனியுரிமை கொண்டிருந்ததோடு, மரபு சாராத காசுப் பயிர்களான காப்பி, தேயிலை, கொக்கோ, இறப்பர், சர்க்கரை, கஞ்சா ஆகியவற்றின் வணிகத்திலும் ஈடுபட்டிருந்தது. தங்களுடைய வணிக நலன்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனியும், 1799 இல் அதை மாற்றீடு செய்த குடியேற்றநாட்டு நிர்வாகமும், படிப்படியாக நகரைச் சுற்றிய பகுதிகளையும் கைப்பற்றிக்கொண்டன.[1]:10
பத்தேவியா சாவாத் தீவின் வடக்குக் கரையில் பாதுகாப்பான குடாப் பகுதியில், சதுப்பு நிலங்களையும், சிறு குன்றுகளையும் கொண்ட தட்டையான நிலப்பகுதியில் இருந்தது. பத்தேவியா இரண்டு பகுதிகளாக உள்ளது. ஒன்று "பழைய பத்தேவியா" அல்லது "கீழ் நகரம்" நகரின் பழைய பகுதி தாழ்ந்த நிலப்பகுதியில் அமைந்துள்ளது. மற்றது "புதிய பத்தேவியா" அல்லது "மேல் நகரம்", ஒப்பீட்டளவில் பிற்காலத்தைச் சேர்ந்தது, தெற்குப் பகுதியில் மேடான நிலப்பகுதியில் அமைந்துள்ளது.
இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் பத்தேவியா சப்பானியரால் கைப்பற்றப்பட்டது. சப்பானியரின் கீழ் இருந்தபோதும், 1945 ஆகத்து 17 க்குப் பின்னர் தேசியவாதிகள் விடுதலையை அறிவித்த பின்னரும் நகரின் பெயர் சக்கார்த்தா என மாற்றப்பட்டது.[2] போருக்குப் பின்னர், 1949 டிசம்பர் 27 இல் இந்தோனீசியா முழு விடுதலை பெறும்வரை ஒல்லாந்தப் பெயரான "பத்தேவியா" உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பெயராக இருந்துவந்தது. விடுதலைக்குப் பின்னர் சக்கார்த்தா இந்தோனீசியாவின் தேசியத் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது.[2]