சிந்துவெளி நாகரிகம்
தெற்காசியாவின் வெண்கலக் கால நாகரிகம் / From Wikipedia, the free encyclopedia
சிந்துவெளி நாகரிகம்[1] (Indus Valley Civilisation) என்பது தெற்காசியாவின் வடமேற்கு பகுதிகளில் இருந்த ஒரு வெண்கலக் கால நாகரிகம் ஆகும். இது பொ. ஊ. மு. 3300 முதல் பொ. ஊ. மு. 1300 வரை நீடித்திருந்தது. இது அதன் முதிர்ச்சியடைந்த கட்டத்தை பொ. ஊ. மு. 2600 முதல் பொ. ஊ. மு. 1900 வரை கொண்டிருந்தது.[2][lower-alpha 1] பண்டைய எகிப்து மற்றும் மெசொப்பொத்தேமியாவுடன் அண்மைக் கிழக்கு மற்றும் தெற்காசியாவின் மூன்று தொடக்க கால நாகரிகங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த மூன்றில் இதுவே பரந்த நிலப்பரப்பை கொண்டிருந்தது. இந்நாகரிகத்தின் களங்கள் பெரும்பாலான பாக்கித்தான் முதல் வடகிழக்கு ஆப்கானித்தான் மற்றும் வடமேற்கு இந்தியா வரை பரவியிருந்தன.[3][lower-alpha 2] இந்நாகரிகம் சிந்து ஆற்றின் வண்டல் சமவெளி மற்றும் காகர்-கக்ராவுக்கு அருகில் ஓடிக் கொண்டிருந்த, நிலையான பருவப் பெயர்ச்சி காற்றின் மூலம் நீர் பெற்ற ஆறுகளின் ஓர் அமைப்புக்கு பக்கவாட்டில் அமைந்திருந்தது. சிந்து ஆறானது பாக்கித்தானின் நீளம் வழியாக ஓடுகிறது. காகர்-கக்ரா என்பது வடமேற்கு இந்தியா மற்றும் கிழக்கு பாக்கித்தானில் உள்ள ஒரு பருவ கால ஆறு ஆகும்.[2][4]
சிந்துவெளி நாகரிகம் | |
---|---|
புவியியல் பகுதி | பாக்கித்தானின் சிந்து ஆற்று வடிநிலப் பகுதி மற்றும், கிழக்கு பாக்கித்தான் மற்றும் வடமேற்கு இந்தியாவின் பருவ கால காகர்-கக்ரா ஆற்றுப் பகுதி |
காலப்பகுதி | வெண்கலக் காலம் |
காலம் | அண். பொ. ஊ. மு. 3300 – அண். பொ. ஊ. மு. 1300 |
வகை களம் | அரப்பா |
முக்கிய களங்கள் | அரப்பா, மொகெஞ்சதாரோ, தோலாவிரா, மற்றும் இராக்கிகர்கி |
முந்தியது | மெஹெர்கர் |
பிந்தியது | கல்லறை எச் கலாச்சாரம் கருப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டப் பண்பாடு காவி நிற மட்பாண்டப் பண்பாடு சாம்பல் வண்ண ஓவியம் தீட்டப்பட்ட மட்பாண்டப் பண்பாடு |
அரப்பா நாகரிகம் பண்டைய சிந்து சிந்து நாகரிகம் |
அரப்பா நாகரிகம் என்ற சொல்லானது சில நேரங்களில் சிந்து நாகரிகத்தை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. 20ஆம் நூற்றாண்டில் தொடக்கத்திலேயே முதன் முதலில் அகழ்வாய்வு செய்யப்பட்ட மாதிரி களமான அரப்பாவிலிருந்து இது இப்பெயரை பெறுகிறது. இப்பகுதி அந்நேரத்தில் பிரித்தானிய இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் இருந்தது. இது தற்போது பாக்கித்தானின் பஞ்சாபில் உள்ளது.[5][lower-alpha 3] அரப்பாவை கண்டறிந்தது மற்றும் சீக்கிரமே அதைத் தொடர்ந்து மொகெஞ்சதாரோவைக் கண்டறிந்தது ஆகியவை 1861ஆம் ஆண்டு பிரித்தானியாவின் இந்தியப் பேரரசில் இந்தியத் தொல்லியல் ஆய்வகமானது நிறுவப்பட்டதற்கு பிறகு தொடங்கப்பட்ட வேலைப்பாடுகளின் முடிவாகும்.[6] தொடக்க கால அரப்பா மற்றும் பிந்தைய அரப்பா என்ற பெயருடைய தொடக்க கால மற்றும் பிந்தைய பண்பாடுகள் இதே பகுதியில் இருந்தன. தொடக்க கால அரப்பா பண்பாடுகள் புதிய கற்கால பண்பாடுகளிலிருந்து மக்கள் தொகையை பெற்றன. இதில் தொடக்க காலத்தைச் சேர்ந்தது மற்றும் நன்றாக அறியப்பட்டதுமாக பாக்கித்தானின் பலுச்சிசுத்தானத்தில் உள்ள மெகர்கர் உள்ளது.[7][8] தொடக்க கால பண்பாடுகளில் இருந்து பிரித்து அறிவதற்காக அரப்பா நாகரிகமானது சில நேரங்களில் முதிர்ந்த அரப்பா நாகரிகம் என்று அழைக்கப்படுகிறது.
பண்டைய சிந்து நகரங்கள் அவற்றின் நகரத் திட்டமிடல், செங்கல் வீடுகள், நுட்பமான கழிவு நீர் வெளியேற்றும் அமைப்புகள், நீர் வழங்கும் அமைப்புகள், குடியிருப்பு சாராத கட்டடங்களின் பெரிய திரள்கள் மற்றும், கைவினை பொருட்கள் மற்றும் உலோகவியல் நுட்பங்கள் ஆகியவற்றுக்காக அறியப்படுகின்றன.[lower-alpha 4] மொகெஞ்சதாரோ மற்றும் அரப்பா ஆகியவை 30,000 முதல் 60,000 பேரை கொண்டிருக்க கூடிய அளவுக்கு வளர்ந்திருந்தன என்று கருதப்படுகிறது.[10] இதன் உச்ச நிலையின் போது 10 இலட்சம் முதல் 50 இலட்சம் வரையிலான மக்களை இந்நாகரிகம் கொண்டிருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.[11] பொ. ஊ. மு. 3ஆம் ஆயிரம் ஆண்டுக் காலத்தின் போது இப்பகுதியானது படிப்படியாக வறண்டு போனதானது இதன் நகரமயமாக்கலுக்கான தொடக்க கால தூண்டுதலாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. நாகரிகத்தின் வீழ்ச்சிக்கு காரணமாகவும், இந்நாகரிகத்தின் மக்கள் தொகையை கிழக்கிற்கு சிதற வைக்கவும் காரணமாகும் அளவுக்கு குடிநீர் வழங்குதலையும் இந்த வறண்ட நிலையானது இறுதியாக குறைத்தது.[lower-alpha 5]
1,000க்கும் மேற்பட்ட முதிர்ந்த அரப்பா களங்கள் குறிப்பிடப்பட்டும், கிட்டத் தட்ட 100 களங்கள் அகழ்வாய்வு செய்யப்பட்டும் உள்ளன.[12][lower-alpha 6][14][15] ஐந்து முதன்மையான நகர மையங்கள் இந்நாகரிகத்தைச் சேர்ந்தவையாக உள்ளன:[16][lower-alpha 7] சிந்துவெளியின் கீழ் பகுதியில் உள்ள மொகெஞ்சதாரோ ("மொகெஞ்சதாரோவின் தொல்லியல் சிதிலங்கள்" என 1980ஆம் ஆண்டில் உலகப் பாரம்பரியக் களமாக இது அறிவிக்கப்பட்டது), மேற்கு பஞ்சாபின் அரப்பா, சோலிஸ்தான் பாலைவனத்தில் உள்ள கனேரிவாலா, மேற்கு குசராத்தில் உள்ள தோலாவிரா ("தோலாவிரா: ஓர் அரப்பா நகரம்" என 2021ஆம் ஆண்டு யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களமாக இது அறிவிக்கப்பட்டுள்ளது) மற்றும் அரியானாவில் உள்ள இராக்கிகர்கி.[17][lower-alpha 8] சிந்துவெளி மொழி என்பது நேரடியாக உறுதிப்படுத்தப்படாமல் உள்ளது. சிந்துவெளி வரிவடிவம் தொடர்ந்து அறியப்படாமலேயே உள்ளதால்,[18] இம்மொழியுடன் தொடர்பானவை உறுதிப்படுத்தப்படாமல் உள்ளன. அறிஞர்களின் ஒரு பிரிவினரால் திராவிட அல்லது ஈல-திராவிட மொழி குடும்பத்துடனான அரப்பா மொழியின் தொடர்பானது முன் வைக்கப்படுகிறது.[19][20]