உணவுக்கு பயன்படும் பறவையினம் From Wikipedia, the free encyclopedia
கோழி (chicken) என்பது காடுகளிலும், மனிதர்களால் வீடுகளிலும் அதற்கான கோழிப் பண்ணைகளிலும் வளர்க்கப்படும் ஒரு அனைத்துண்ணிப் பறவையாகும். இதில் பெண்ணினம் பெடை எனவும், ஆணினம் சேவல் எனவும் அழைக்கப்படுகின்றது. 2003-ல், உலகில் இவற்றின் எண்ணிக்கை 24 பில்லியன் என்று கணக்கிடப்பட்டுள்ளது[1]. இது உலகில் உள்ள எந்த ஒரு பறவையைக் காட்டிலும் அதிகமான எண்ணிக்கையாகும். பொதுவாக இறைச்சிக்காகவும், முட்டைக்காகவும் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டம் தொழின்முறை கோழிப் பண்ணைகளுக்குப் பெயர் பெற்றது.
கோழி | |
---|---|
சேவலும் பேடும் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | வண்ணக்கோழி |
பேரினம்: | |
இனம்: | |
துணையினம்: | G. g. domesticus |
முச்சொற் பெயரீடு | |
Gallus gallus domesticus |
உலகிலுள்ள எல்லாக் கோழியினங்களும் இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட சிவப்புக் காட்டுக்கோழியில் (Red Jungle Fowl) இருந்துதான் தோன்றியதாகக் கூறப்படுகிறது[2]. அவை சேவல் சண்டைக்காக ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா ஆகிய இடங்களில் பயன்படுத்தப்பட்டன. பின்னர் அவை முட்டைக்காகவும், இறைச்சிக்காகவும் வளர்க்கப்பட்டன. இந்தியாவிலிருந்து உள்ளூர்க் கோழிகள் மேற்கு சின்ன ஆசியாவிற்கும் கிரேக்கத்திற்கும் கி.மு. 5ம் நூற்றாண்டில் ஏற்றுமதி செய்யப்பட்டன.[3] 18 வது எகிப்திய வம்ச காலத்தில் எகிப்துக்கு கோழிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. "ஒவ்வொரு நாளும் பிறப்புக் கொடுக்கும் பறவை" எனப்பட்ட கோழிகள் மூன்றாம் டுட்மசின் வரலாற்றுப் பதிவேட்டின்படி சிரியாவுக்கும் பபிலோனியாவிற்கும் இடைப்பட்ட இடத்திலிருந்து எகிப்துக்குச் சென்றன.[4][5]
இந்தியா, இலங்கை, பிரித்தானியா, அவுத்திரேலியா போன்ற நாடுகளில் 12 மாதத்திற்கு மேற்பட்ட ஆண் கோழிக் குஞ்சுகள் "சேவல்கள்" என அழைக்கப்படுகின்றன.[6] ஒரு வருடத்திற்கு மேற்பட்ட பெண் கோழிக் குஞ்சுகள் "பேடுகள்" என அழைக்கப்படுகின்றன.[7] சிறிய கோழிகள் "கோழிக் குஞ்சுகள்" என அழைக்கப்படுகின்றன.
தமிழ்நாட்டில் ஆண் கோழியைச் சேவல் என்றும், பெண் கோழியைக் கோழி என்றும் அழைக்கின்றனர். இளம் சேவல் குஞ்சுகள் பட்டா என்றும், இளம் கோழிகள் வெடைகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
கோழி ஓர் அனைத்துண்ணிப் பறவையாகும்.[8] காட்டில் அவை நிலத்தைக் கிளறி விதைகள், பூச்சிகள் மற்றும் சற்றுப் பெரிய விலங்குகளான பல்லி, எலி போன்றவற்றை உண்ணும்.[9]
கோழிகள் ஐந்து முதல் பத்து வருடங்களுக்கு அவற்றின் சாதிக்கேற்ப வளரும்.[10] உலகில் மிக வயதுடைய ஒரு பேடு இருதய நிறுத்தத்தால் 16 வயதில் இறந்து போனது என்று கின்னஸ் உலக சாதனைகள் குறிப்பிடுகின்றது.[11]
சேவல்கள் பொதுவாகவே பேடுகளிடமிருந்து வேறுபாடு கொண்டு காணப்படும். சேவலின் நீண்ட வாலுடன் மினுமினுக்கும் கவர்ச்சியான சிறகுகளின் தொகுதி, கழுத்தில் நீட்டிக் கொண்டிருக்கும் இறகுகள், பின்புற இறகுகளில் காணப்படும் பிரகாச, தடித்த வண்ணம் என்பன ஒரே இன பேடுகளில் இருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன. ஆனாலும் சில இனங்களில் சேவலின் கழுத்தில் நீட்டிக் கொண்டிருக்கும் இறகுகள் தவிர்த்து மற்றய பகுதிகள் பேடு போன்றே காணப்படுவதும் உண்டு. சீப்பினைப் பார்த்தோ அல்லது சேவலின் பூச்சிக்கால் நகர் நீட்சிகள் வளர்ச்சியைக் கொண்டோ அவை அடையாளம் காணப்படும். சில இனங்கள் வேறுபட்ட நிறங்களையும் கொண்டு காணப்படும். வளர்ந்த கோழிகள் சதைப்பற்றுள்ள முகடான "சீப்பினை" தலையில் கொண்டும், சொண்டுகளின் கீழ் "கோழித்தாடை" எனப்படும் தொங்கும் தோல் மடிப்புகளையும் கொண்டிருக்கும். ஆணும் பெண்ணும் சீப்புக்களையும் தாடைகளையும் கொண்டு காணப்படும். ஆயினும் பல இனங்களில் ஆண்களே இவற்றை அதிகம் கொண்டு காணப்படும். மரபணு திடீர்மாற்றம் சில கோழி இனங்களில் கூடுதலான இறகுகள் அவற்றின் முகத்தின் கீழ் காணப்பட்டு தாடி போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும்.
வளர்க்கும் கோழிகள் நீண்ட தூரம் பறக்க முடியாதவை. எடை குறைந்த பறவைகள் குறுகிய தூரத்திற்கு வேலியின் மேலாக, மரங்களுக்குள் பறக்க வல்லன. கோழிகள் தங்கள் சுற்றுவட்டத்தைப் பார்க்க எப்போதாவது பறப்பவை. ஆனாலும் ஆபத்து என்றால் அவை பொதுவாக பறக்கும்.
கோழிகள் சமூக நடத்தை கொண்ட ஒன்றாக கூட்டமாக வாழும் பறவை. அவை அடைகாத்தலிலும் குஞ்சுகளை வளர்ப்பதிலும் இனத்துக்குரிய அணுகுமுறை கொண்டவை. கூட்டத்திலுள்ள தனிக் குஞ்சுகள் ஏனையவற்றை ஆதிக்கம் செய்யும். அதனால் அவை உணவை அடைதலிலும் இடத்தை தெரிவு செய்வதிலும் முன்னுரிமை பெற்றுவிடும். பேடுகளை அல்லது சேவலை இடத்திலிருந்து நீக்குதல் தற்காலிகமாக கூட்டத்தில் சமூக ஒழுங்கில் குழப்பத்தை ஏற்படுத்திவிடும். புதிய கோழி ஒன்று கொத்தி ஆதிக்கம் செய்யும் வரை இது நீடிக்கும். பேடுகள் அதுவும் இளம் பறவைகளை கூட்டத்தில் சேர்த்தல் வன்முறைக்கும் காயம் ஏற்படுதலுக்கும் ஒரு காரணமாகிவிடலாம்.[12]
பேடுகள் ஏற்கனவே முட்டைகள் உள்ள கூட்டில் முட்டையிட முயற்சித்து, தன்னிடத்தில் மற்றவற்றின் முட்டைகளை நகர்த்தும். சில கோழி வளர்ப்பாளர்கள் போலி முட்டைகளை வைத்து பேடுகளை குறிப்பிட்ட இடத்தில் முட்டையிட உற்சாகப்படுத்துவர். இதனால் அவை குறிப்பிட்ட சில இடத்தில் பாவிக்கும் நடத்தைக்கு இட்டுச் சென்று, ஒவ்வொன்றும் தனக்கென கூட்டினை கொண்டிருக்காது இருக்கச் செய்யும்.
பேடுகள் ஒரே இடத்தில் முட்டையிட பிடிவாதமாயிருக்கும். இது இரண்டு பேடுகளுக்கு ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் பகிர்ந்து கொள்ள முயற்சிப்பது தெரியாது. கூடு சிறியதாக இருந்தால், ஒன்றுக்கு மேல் ஒன்று முட்டையிட வழியேற்படுத்தும்.
சேவல்கள் கூவுதல் மற்றைய சேவல்களுக்கு இடம் பற்றிய சமிக்கையாக இருக்கின்றது. ஆகினும், கூவுதல் அவற்றின் சுற்றுவட்டத்தில் ஏற்படும் திடீர் குழப்பத்தினாலும் இடம்பெறும். பேடு முட்டையிட்டதும் பெரிதாக கொக்கரிக்கும். அத்துடன் தன் குஞ்சுகைள அழைக்கும். பேடுகள் குறைந்த எச்சரிக்கை அழைப்பினை கொன்றுண்ணி அணுகுகின்றது என உணர்ந்ததும் கொடுக்க வல்லன.
சேவல் உணவைக் கண்டதும், அது குஞ்சுகளைக் கூப்பிட்டு உண்ணவிடலாம். இதனை உயர் தொனியில் கொக்கரித்து, உணவை மேலே எடுத்து கீழே போடுவதனூடாக செய்யும். இது தாய்க் கோழியிடமும் காணப்படும் ஓர் பழக்கமாகும்.
இணைதலை முன்னெடுக்க சில சேவல்கள் பேடைச் சுற்றி நடனம் ஆடும். அத்துடன் அடிக்கடி தன் இறக்கையை பேடுக்கு அருகில் தாழ்வாகக் கொண்டுவரும்.[13] இந்த நடனம் பேட்டின் முளையில் மறுமொழிக்கு தூண்டும்.[13] சேவலின் அழைப்பிற்கு பதிலளித்ததும், சேவல் பேடை மிதித்து கருக்கட்டல் நிகழச் செய்யலாம்.
இவ்வகை கோழிகள், சக்திவாய்ந்த, உறுதியான, திடமான வெளித்தோற்றம், கம்பீரமான நடை, உறுதியான சண்டை போடும் திறன் கொண்டவை. இதன் சண்டை போடும் திறனைக் கொண்டே ஏசெல் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் தாயகம் ஆந்திரப்பிரதேசம் எனக்கூறுவர். இவ்வகை மிகவும் அரிதாக இருந்தாலும் சேவல் சண்டைக் காட்சி நடத்துபவர்களிடம் காணப்படுகிறது. ஏசெல் இனம், திடகாத்திரமான, மதிப்பான பார்வை கொண்ட இனமாகும்.
சிறுவிடை கோழிகள் தமிழகத்தின் கோழிகள் என்று அடையாளம் காணப்படுகின்றன. இவை காட்டுக் கோழிகளை வளர்க்கத் தொடங்கிய பிறகு அவை பரிணாமம் அடைந்து வந்தவை என்று நம்பப்படுகிறது. இவ்வகை சேவல்கள் அதிகபட்சம் இரண்டு கிலோ எடை கொண்டதாகவும், கோழிகள் அதிகபட்சம் ஒன்றரைக் கிலோ எடை கொண்டதாகவும் உள்ளன.
பொதுவாக “கலாமாசி” என்று அழைக்கிறார்கள். கருப்பு சதையுடைய பறவை என்பது இதன் பொருளாகும். மத்திய பிரதேச மாநில தாபுவா மற்றும் தார் மாவட்டமும் அருகில் உள்ள ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய 800 சதுர மைல் பரப்பளவில் இக்கோழி இனத்தின் பரவல் காணப்படுகிறது.
பழங்குடியினர், ஏழை கிராம மக்கள் ஆகியோர் இவ்வகைக் கோழிகளை வளர்க்கின்றனர். இதில் சேவல் பலிக்காக பயன்படுகிறது. அதாவது தீபாளிக்குப் பின் கடவுளுக்கு பலி கொடுக்கப்படுகிறது. கோழிக் குஞ்சுகள் நீலம் மற்றும் கருப்பு நிறத்துடன், பிற்பகுதியில் கருப்பு கோடுகளுடன் காணப்படுகிறது. இறைச்சி கருப்பாக, பார்வைக்கு ஏற்றதாக இல்லாமல் இருந்தாலும், சுவையாகவும், மருத்துவ குணங்கள் நிறைந்தும் காணப்படுகிறது. பழங்குடியினர், கோழி இரத்தத்தையும், கறியையும், கடும் நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்துகின்றனர். கறி மற்றும் முட்டையில் நல்ல புரதச் சத்தும் (25.47% கறியில்) இரும்புச் சத்தும் உள்ளன.
நீளமான உருண்டை வடிவ கழுத்துடைய இனமாகும். பெயரில் உள்ளது போல், பறவைகளின் கழுத்து வெறுமையாக அல்லது, கழுத்தின் முற்பகுதியில் கொத்தாக சிறகுகள் உள்ளன. பருவ நிலையை அடையும் பொழுது, சேவலின் தோல் சிவப்பு நிறத்திற்கு மாறிவிடுகிறது. கேரளாவில், திருவனந்தபுரம் பகுதி இவ்வகை இனத்தின் தாயகமாகும்.
துப்புரவு குணமுடைய, உள்நாட்டு தோற்றமுடைய, நமது சுழலுக்கு ஏற்ற, நோய் எதிர்ப்பு திறன் கொண்ட, நல்ல வளர்ச்சியும், உற்பத்தித் திறனும் கொண்ட இனமாகும். வீட்டிலேயே வளர்ப்பதற்கு ஏற்ற இனமாகும். வெவ்வேறு வேளாண் காலநிலைக்கு ஏற்ற 4 இரகங்கள் உள்ளன. இவ்வினம் சுறுசுறுப்பானது; செடிகளை உண்ணும் குணமுடையது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.