பஞ்சாப் பகுதி
தெற்காசியாவிலுள்ள புவியியற் பகுதி / From Wikipedia, the free encyclopedia
பஞ்சாப் (பஞ்சாபி: ਪੰਜਾਬ, panj-āb, "ஐந்து ஆறுகள்") பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் மற்றும் இந்தியாவின் பஞ்சாப், இமாச்சல் பிரதேசம், சண்டிகர், தில்லி ஆகிய பகுதிகளையும் உள்ளடக்கிய ஒரு புவியியல் பகுதி. சிந்து ஆற்றின் கிளை ஆறுகளான ஜீலம், செனாப், ராவி, சத்லஜ், மற்றும் பியாஸ் ஆகிய “ஐந்து நதிகள்” பாய்வதால் இப்பகுதி பஞ்சாப் என்று அழைக்கப்படுகிறது. ஜீலம் தான் இவற்றில் மிகப் பெரியது. பஞ்சாப் ஒரு நெடிய வரலாற்றையும் செறிந்த பண்பாட்டு மரபையும் கொண்டுள்ளது. பஞ்சாப் மக்கள் பஞ்சாபிகளென அழைக்கப்படுகின்றனர், அவர்களது மொழி பஞ்சாபி. பஞ்சாப் பிராந்தியத்தில் முக்கிய மதங்களாக இஸ்லாம், சீக்கியம் மற்றும் இந்து மதம் உள்ளன.
பஞ்சாப்
پنجاب ਪੰਜਾਬ | |
---|---|
பிரதேசம் | |
புவியியல் | |
நாடுகள் | பாக்கித்தான், இந்தியா |
மக்கட்தொகையியல் | |
• இனக் குழு | பஞ்சாபி மக்கள் |
பெரிய நகரங்கள் | லாகூர், இராவல்பிண்டி, இஸ்லாமாபாத், பைசலாபாத் |
மகா பஞ்சாப் என்று இப்போது அறியப்படும் பகுதி ஒரு காலத்தில் மேற்கு பாகிஸ்தான் மற்றும் வடமேற்கு இந்தியாவின் பரந்த பிராந்தியங்களை அடக்கியதாய் இருந்தது. பஞ்சாபின் பகுதியின் 58% பாகிஸ்தானிலும் மீதமுள்ள 42% இந்திய குடியரசிலும் உள்ளது. இந்தோ-ஆரிய மொழி பேசும் மக்களால் நிரம்பியிருக்கும் இந்தப் பகுதியில் பல்வேறு மத மற்றும் இன மக்கள் வசிக்கின்றனர், இவர்களில் சீக்கியர்கள், சமணர்கள், புத்த மதத்தினர், கிரேக்கர்கள், பெர்சியர்கள், அரபு நாட்டினர், துருக்கியர்கள், முகலாயர்கள், ஆப்கானியர்கள், பலோசிகள், இந்துக்கள் மற்றும் பிரிட்டிஷார் அடக்கம். 1947 ஆம் ஆண்டில், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசுவிலிருந்து விடுதலை பெற்ற இந்தியா-பாகிஸ்தான் நாடுகளிடையே பஞ்சாப் பிரிவினை செய்யப்பட்டது. பஞ்சாபின் ஐந்து ஆறுகளுள் நான்கு பாகிஸ்தானுக்கும் எஞ்சிய ஒரு நதி இந்தியாவிற்கும் ஒதுக்கப்பட்டன.
பஞ்சாபின் பாகிஸ்தான் பகுதியான மேற்கு பஞ்சாப் 205,344 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது. வட-மேற்கு எல்லை மாகாணத்தின் ஹசரா பிராந்தியம், இஸ்லாமாபாத், மற்றும் ஆசாத் காஷ்மீர் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. இந்தியக் குடியரசின் பஞ்சாப் பகுதி பஞ்சாப், அரியானா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்திய பஞ்சாப் மாநிலம் 50,362 சதுர கிலோமீட்டர்கள் அளவுடையது. பாகிஸ்தானிய பஞ்சாப் பகுதியில் 86,084,000 பேரும், இந்திய பஞ்சாப் பகுதியில் 24,289,296 பேரும் வாழ்கின்றனர். பிரிக்கப்படாத பஞ்சாப் பகுதியின் தலைநகராக லாகூர் இருந்தது, இப்போது இந்நகரம் மேற்கு பஞ்சாபின் தலைநகராக எல்லைக் கோட்டிற்கு மிக அருகில் அமைந்துள்ளது. இந்திய பஞ்சாபின் தலைநகராகச் சண்டிகார் உள்ளது. பாகிஸ்தான் பஞ்சாப் பகுதியில் தோராயமாக 65 % மக்கள் பஞ்சாபி மொழி பேசுகின்றனர். இன்னொரு 25% பேர் பஞ்சாபியிலிருந்து பிரிந்த வகைகளைப் பேசுகின்றனர். இந்திய பஞ்சாப் பகுதியில் சுமார் 92.2% மக்களால் பஞ்சாபி பேசப்படுகிறது.[1] பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதி ஷாமுகி எழுத்து வடிவத்தைப் பயன்படுத்துகிறது. இந்திய பஞ்சாப் குர்முகி எழுத்து வடிவத்தைப் பயன்படுத்துகிறது.