இந்தியாவின் 16வது மக்களவைத் தேர்தல் / From Wikipedia, the free encyclopedia
இந்தியப் பொதுத் தேர்தல் 2014 (Indian general election of 2014) இந்தியாவின் 16வது மக்களவையைக்கான 543 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 2014 ஏப்ரல் 7 முதல் மே 12 வரை ஒன்பது கட்டங்களில் நடைபெற்றது. இந்திய வரலாற்றில் 1951க்கு பிறகு, அதிக நாட்கள், பல்வேறு கட்டங்களாக, வாக்குப்பதிவு நடைபெற்ற தேர்தல், இது ஆகும். இதற்கு முன் அதிக நாட்கள் நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தல் 1951 முதல் 1952 வரை 5 மாதங்களுக்கு நடந்தது[3]. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தகவல்களின் படி, இத்தேர்தலில் 814.5 மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றதால் இது உலகின் மிகப் பெரிய தேர்தல் ஆகவும் கணிக்கப்படுகிறது.[4]2009 தேர்தலுக்குப் பின்னர் 100 மில்லியன் வாக்காளர்கள் புதிதாக வாக்களிக்கத் தகுதி பெற்றனர்.[5] 543 தொகுதிகளுக்கு மொத்தமாக 8,251 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.[6]
விரைவான உண்மைகள் மக்களவையின் 543 இடங்களுக்கு அதிகபட்சமாக 272 தொகுதிகள் தேவைப்படுகிறது, பதிவு செய்தோர் ...
பதினைந்தாவது மக்களவையின் பதவிக்காலம் மே 31 இல் முடிவடைவதற்கு 15 நாட்களுக்கு முன்னர், 2014 மே 16 அன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மொத்தம் 989 வாக்குகள் எண்ணும் நிலையங்கள் நாடெங்கும் அமைக்கப்பட்டன.[6] சராசரியாக 66.38 வீதமானோர் இத்தேர்தலில் வாக்களித்தனர். இம்முறையே இந்தியத் தேர்தல் வரலாற்றில் மிக அதிகமாக வாக்களிக்கப்பட்டது.[6]தேசிய சனநாயகக் கூட்டணி 336 தொகுதிகளைக் கைப்பற்றியது. இக்கூட்டணியின் முக்கிய கட்சியான பாரதிய ஜனதா கட்சி 282 இடங்களைக் கைப்பற்றி தனித்து ஆட்சியமைக்கக்கூடிய பெரும்பான்மையைப் பெற்றது. ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 59 தொகுதிகளை மட்டும் கைப்பற்றியது. இவற்றில் இந்திய தேசிய காங்கிரசு 44 இடங்களைக் கைப்பற்றியது.[7]