From Wikipedia, the free encyclopedia
பிரசவத்துக்குப் பிந்தைய குருதிப்பெருக்கு (Postpartum bleeding) என்பது, குழந்தை பிறந்து 24 மணித்தியாலங்களுக்குள் 500 மி.லீ அல்லது 1000 மி.லீ க்கும் அதிகமான அளவில் ஏற்படும் குருதி இழப்பைக் குறிக்கும்.[2] உலகளவில், பெண்களில் நிகழும், எதிர்பார்க்கப்படும் இறப்புக் காலத்திற்கு முன்னரான இறப்பிற்கு, இந்த பிரசவத்திற்குப் பிந்தைய குருதிப்பெருக்கே முக்கிய காரணமாக அமைகின்றது.[6] இந்தக் குருதிப்பெருக்கு குழந்தை பிறந்து 6 கிழமைகளுக்கும் கூடத் தொடரலாம். ட்ராநெக்ஸாமிக் அமிலம் மூலமாக தாய்மார்களின் இறப்பிற்கான ஆபத்தினை குறைக்கலாம் என்று 2017-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.[3]
பிரசவத்துக்குப் பிந்தைய குருதிப்பெருக்கு | |
---|---|
காற்றழுத்தமில்லாத அதிர்ச்சி-தாங்கி ஆடை | |
சிறப்பு | மகப்பேறியல் |
அறிகுறிகள் | மகப்பேறுக்கு பிறகு அதிகமான இரத்தம் வீணாகுதல், அதிகமான இதயத் துடிப்பு, நின்றவுடன் தலைசுற்றல், அதிகமான மூச்சு[1][2] |
காரணங்கள் | மோசமான கருப்பை சுருக்கம், முழு நச்சுக்கொடியும் நீக்கப்படவில்லை, கருப்பையில் கீறல், மோசமான இரத்த உறைவு[2] |
சூழிடர் காரணிகள் | இரத்த சோகை, ஆசிய மக்கள், ஒன்றுக்கும் மேல் குழந்தை, உடற் பருமன், 40 வயதிற்கு மேல்[2] |
தடுப்பு | ஆக்சிட்டோசின், மிஸோப்ரோஸ்டால்[2] |
சிகிச்சை | சிரைவழி திரவம், காற்றழுத்தமில்லாத அதிர்ச்சி-தாங்கி ஆடை, குருதி மாற்றம், எர்கோடமைன், ட்ராநெக்ஸாமிக் அமிலம்[2][3] |
முன்கணிப்பு | வளரும் நாடுகளில் மூன்று சதவிகிதத்தினருக்கு ஆபத்து[2] |
நிகழும் வீதம் | 87 இலட்சம் (உலகெங்கும்)[4] / 1.2% of births (developing world)[2] |
இறப்புகள் | 83,100 (2015)[5] |
முதன்மையான பிரசவத்துக்குப் பிந்தைய குருதிப்பெருக்கு என்பது, குருதிப்பெருக்கு ஏற்படும் மூலத்தைப் பொறுத்து, குழந்தை பிறப்பையடுத்து வரும் 24 மணித்தியாலங்களுக்குள், சாதாரண குழந்தை பிறப்பில் யோனியின் ஊடாகவெனில் 500 மி.லீ. க்கு அதிகமாகவும், அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பிறப்பு நிகழ்ந்திருப்பின் அறுவைக் காயத்திலிருந்து 1000 மி.லீ. க்கு அதிகமாகவும் குருதிப்பெருக்கு ஏற்படுதலை குறிக்கும்.[2]
பொதுவாக யோனியூடாக 500 மி.லீ. க்கும் அதிகமாக நிகழும் குருதிப்பெருக்கு, இத்தகைய பிரசவத்துக்குப் பிந்தைய குருதிப்பெருக்கு என வரையறுக்கப்படினும்[6], இது நாட்டுக்கு நாடு வேறுபடும். 500 மி.லீ ஐ விடக் குறைவான குருதிப்போக்கு இருப்பின் அது சாதாரணம் எனக் கொள்வது எல்லா நாடுகளுக்கும் பொருந்துவதில்லை. எடுத்துக்காட்டாக, குருதிச்சோகை அதிகளவில் காணப்படும் நாடுகளில் 250 மி.லீ அளவில் மட்டுமே குருதிப்போக்கு ஏற்படின் அது அசாதாரணமான, மருத்துவப் பிரச்சனையாகக் கொள்ளப்படும்.[7]
இரண்டாம்பட்ச பிரசவத்துக்குப் பிந்தைய குருதிப்பெருக்கு என்பது, குழந்தை பிறந்து முதல்நாள் கழிந்த பின்னர் தொடர்ந்து வரும் ஆறு கிழமைகளில் நிகழும் அசாதாரண குருதி இழப்பைக் குறிக்கும்.[2][8]
ஆரம்ப அறிகுறிகள் மற்றும் உணர்குறிகளாக அதிகரிக்கும் இதயத் துடிப்பு, நிற்கும்போது மயக்கம் வருவது போன்ற உணர்வு ஏற்படல், அதிகரித்த மூச்சுவிடல் வீதம் என்பன காணப்படும். மேலதிகமாக குருதிப்பெருக்கு ஏற்படும்போது, அந்தப் பெண் குளிர்வதாக உணர்வதுடன், அவரின் குருதி அழுத்தம் குறையும். அத்துடன் அவர் அமைதியற்ற நிலையை அடைந்து, பின்னர் உணர்விழந்த நிலைக்குச் செல்வார்.[1]
காரணி | நிகழ்வு |
---|---|
கருப்பை சுருங்காமை | 70% |
அதிர்ச்சி | 20% |
தடைப்பட்ட இழைய வெளியேற்றம் | 10% |
குருதி உறையா நிலைகள் | 1% |
பிரசவத்துக்குப் பிந்தைய குருதிப்பெருக்கத்திற்குக் காரணமாக கருப்பை சுருங்காமை, அதிர்ச்சி, சூல்வித்தகம் (நஞ்சுக்கொடி) அகலாமை அல்லது சூல்வித்தகத்தில் ஏற்படும் அசாதாரணங்கள், மற்றும் குருதி உறைய முடியாத நிலை ஆகிய நான்கு முக்கிய நிலைகள் கூறப்படுகின்றன.[9]
உடற் பருமன், கருத்தரிப்புக் காலத்தில் காய்ச்சல் காணப்படல், குழந்தை பிறப்புக்கு முன்னரே குருதிப்போக்கு ஏற்படல், இதய நோய்கள் போன்றனவும் இந்த பிரசவத்துக்குப் பிந்தைய குருதிப்பெருக்கிற்குக் காரணமாகலாம்.[8]
குழந்தை பிறந்தவுடன் ஒக்சிடோசின் (Oxytocin) பயன்படுத்துவதன் மூலம் பிரசவத்துக்குப் பிந்தைய குருதிப்பெருக்கு தவிர்க்கப்படுகிறது. ஒக்சிடோசின் கிடைக்காத இடங்களில், மிசோப்ரொஸ்ரோல் (Misoprostol) பயன்படுத்தப்படுகிறது. முன்னதாக தொப்புள்கொடியை இறுக்கிவிடல் பொதுவாக ஆபத்தைக் குறைப்பதில்லை என்பதுடன், குழந்தைக்கு இரத்தச் சோகையை ஏற்படுத்தும் என்பதனால், இந்த முறை பரிந்துரைக்கப்படுவதில்லை.[2]
குழந்தை பிறப்பின் மூன்றாம் நிலையைச் சரியான முறையில் சுறுசுறுப்பாகக் கையாள்வதன் மூலம், குனழந்தை பிறப்பிற்கும், சூல்வித்தக வெளியேற்றத்துக்கும் இடையிலான நேரத்தைக் குறுக்கலாம்.[11] இந்த நிலையிலேயே பிரசவத்துக்குப் பிந்தைய குருதிப்பெருக்கு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகமாக இருக்கும். சரியான மேலாண்மை என்னும்போது, கருப்பை சுருங்குவதற்கான மருந்து கொடுத்தல், கீழ் வயிற்றின் அடிப்பகுதியில், மேல்நோக்கி மெல்லிய அழுத்தம் கொடுத்தபடி, தொப்புள்கொடியை மென்மையாக, தொடர்ந்து இழுத்தல் என்பன அடங்கும்..[11]
தாய்ப்பாலூட்டல் மூலம் முலைக்காம்பு தூண்டப்பட்டு, இயற்கையாகவே ஒக்சிடோசின் உடம்பில் சுரக்கப்படும். எனவே குழந்தையை கூடிய விரைவாகத் தாயின் முலைக் காம்பை உறிஞ்சிப் பாலூட்டச் செய்வதன் மூலம், தாய்க்கு ஏற்படும் இரத்தப்பெருக்கு ஆபத்தைத் தடுக்கலாம். ஆனாலும், இது தொடர்பான போதிய ஆராய்ச்சித் தரவுகள் இல்லை.[12]
கௌப்பை, கருப்பை வாய் போன்றவற்றில் கிழிவு, காயங்கள் ஏற்பட்ட நிலையில், மேலாண்மை மூலம் இரத்தப்போக்கைச் சரிப்படுத்த முடியாமல் போனால், அறுவைச் சிகிச்சை மூலம் கட்டுப்படுத்தலாம். இதில் கருப்பைக்குச் செல்லும் தமனியை ஒட்டல், சூலகத்திற்குச் செல்லும் தமனியை ஒட்டல், இடுப்புப் பகுதியில் உள்ளாகச் செல்லும் தமனியை ஒட்டல், கருப்பை நீக்க அறுவை சிகிச்சை போன்றன அடங்கும். குருதிப்பெருக்கானது அதிர்ச்சியால் ஏற்பட்டிருப்பின், அறுவைச் சிகிச்சை மூலம் சீர்செய்யப்பட வேண்டியதாக இருக்கும். கருப்பையில் கிழிவு ஏற்பட்டிருப்பின், பொதுவாக கருப்பை நீக்க அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படும்.[13][14][15][16]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.