மலேசியாவின் தலைநகரம் From Wikipedia, the free encyclopedia
கோலாலம்பூர் (ஆங்கிலம்: Federal Territory of Kuala Lumpur; மலாய் மொழி: Wilayah Persekutuan Kuala Lumpur; சீனம்: 吉隆坡聯邦直轄區; ஜாவி: ولايه ڤرسکوتوان کوالا لومڤور) என்பது மலேசியாவின் தலைநகரம் ஆகும். அதே வேளையில் மலேசிய நாட்டின் மிகப் பெரிய நகரமும் ஆகும்.
கோலாலம்பூர் Kuala Lumpur | |
---|---|
மாநகரம் | |
அடைபெயர்(கள்): கே.எல். ஒளிமிக்க பூங்கா நகரம் | |
குறிக்கோளுரை: Maju dan Makmur முன்னேறு, வளம் பெறு | |
ஆள்கூறுகள்: 03°08′52″N 101°41′43″E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | கூட்டாட்சிப் பகுதி |
தோற்றம் | 1857 |
நகர தகுதி பெற்றது | 1 பெப்ரவரி 1972 |
கூட்டாட்சி பகுதி நிலை வழங்கப்பட்டது | 1 பெப்ரவரி 1974 |
பரப்பளவு | |
• மாநகரம் | 243 km2 (94 sq mi) |
மக்கள்தொகை (2022 est.)[1] | |
• மாநகரம் | 21,63,000 |
• அடர்த்தி | 7,802/km2 (20,210/sq mi) |
• பெருநகர் | 75,64,000[2] |
• பெருநகர் அடர்த்தி | 2,708/km2 (7,010/sq mi) |
• மக்கள் | கோலாலம்பூரியர் |
மனித மேம்பாட்டுக் குறியீடு | |
• HDI (2019) | 0.867 (very high) (1-ஆவது) |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 5xxxx |
தொலைபேசி எண் | 03 |
போக்குவரத்துப் பதிவெண் | W (வாடகையுந்துகளைத் தவிர்த்த அனைத்து வண்டிகளுக்கும்) HW (வாடகையுந்துக்களுக்கு மட்டும் taxis) |
இணையதளம் | www |
கூட்டரசு பிரதேச கோலாலம்பூர் என அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படுகிறது. கே.எல். (KL) என பேச்சு வழக்கில் அழைக்கப்படும் இதன் பரப்பளவு 243 km2 (94 sq mi). 2019-ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, மக்கள் தொகை, 2.16 மில்லியன் ஆகும்.
பெரும் கோலாலம்பூர், அல்லது கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில், 2018-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி 7.564 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.
மலேசியாவில் மக்கள் தொகையிலும் பொருளாதாரத்திலும் மிக விரைவாக வளர்ந்து வரும் பெருநகரப் பகுதிகளில் ஒன்றாக விளங்குகிறது.
கோலாலம்பூர் மாநகரத்தை, உலகத் தரவரிசையில் 48-ஆவது நிலையில், பாரின் பாலிசி நிறுவனமும்; 67-ஆவது நிலையில், டு திங் நவ் (ஆங்கிலம்: 2thinknow) நிறுவனமும்[3] மதிப்பிட்டு உள்ளன.
மலேசியாவின் நாடாளுமன்றம், கோலாலம்பூர் மாநகரில் அமைந்து உள்ளது. நாட்டின் நிருவாக மற்றும் நீதித்துறை தலைமையகங்கள் இங்கு இருந்து 1999-ஆம் ஆண்டில் புத்ராஜெயாவிற்கு மாற்றப் பட்டன. இருப்பினும் சில நீதித்துறை அலுவலகங்கள் இன்னும் இங்கு இயங்கி வருகின்றன.
மலேசியப் பேரரசர் யாங் டி பெர்துவான் அகோங் அவர்களின் அரண்மனையான இஸ்தானா நெகாரா (மலேசியா) இங்குதான் உள்ளது.
கூட்டரசுப் பிரதேச கோலாலம்பூர், மலேசியாவின் மூன்று நடுவண் ஆட்சிப் பிரதேசங்களில் ஒன்றாகும்.[4] மலேசியத் தீபகற்பத்தின் மத்திய மேற்குக் கடலோரத்தில் அமைந்துள்ள கோலாலம்பூர் மாநகரம், சிலாங்கூர் மாநிலத்தால் சுற்றிவர சூழப்பட்டு உள்ளது.[5] கோலாலம்பூரில் வாழும் நகரவாசிகள், கே.எல்.லைட்சுகள் என பொதுவழக்கில் அழைக்கப் படுகின்றனர்.
1990-ஆம் ஆண்டுகள் தொடங்கி, இந்த நகரில் பல பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகள்; அரசியல் மாநாடுகள் மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
1998-ஆம் ஆண்டு இங்கு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. பார்முலா 1 எனும் உலகக் கார்ப் பந்தயங்களின் அங்கமாக இங்கு நடைபெறும் தானுந்து பந்தயம் விளங்குகின்றது.
இங்குள்ள பெட்ரோனாஸ் கோபுரங்கள் உலகின் அதி உயரமான இரட்டைக் கோபுரங்கள். மேலும் 20-ஆம் நூற்றாண்டின் அதி உயர்ந்த கட்டிடங்களாகப் பதிவு பெற்றன.
1850-களில், கிள்ளானில் மலாய் மன்னராக இருந்த ராஜா அப்துல்லா (Raja Abdullah bin Raja Jaafar), வெள்ளீயச் சுரங்கங்களை அமைக்கும் பணிக்குச் சீனத் தொழிலாளர்களைக் கொண்டு வந்ததில் இருந்து, கோலாலம்பூரின் வரலாறு தொடங்குகிறது.
இந்தத் தொழிலாளர்கள் அம்பாங், புடு, பத்து எனும் இடங்கில் சுரங்கங்களை அமைக்க, கோம்பாக் ஆறு மற்றும் கிள்ளான் ஆறு ஆகிய இரு ஆறுகளும் கலக்கும் இடத்தில் தங்கினர்.
பின்னர், இந்தச் சுரங்கங்கள் வணிக மையங்களாக மாறின. அவையே பெரிய நகரமாக உருவெடுக்க வழி வகுத்தது.[6]
வெள்ளீயம் (ஈயம்) எடுப்பவர்கள் அம்பாங்கில் தங்கி தங்களுக்குள் அதிகார மையங்களை உருவாக்கிக் கொண்டனர். அவர்களுக்குள் இருபெரும் சீனப் பிரிவுகள் உருவாகின.
பெரும்பான்மை ஹக்காக்கள் கொண்ட ஹை சான் (Hakka-dominated Hai San) இரகசிய சமூகமும், ஹொக்கைன் பிரிவைச் சேர்ந்த கீ ஹின் (Cantonese-dominated Ghee Hin) சமூகமும் வெள்ளீய உற்பத்தியை தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர சண்டையிட்டு வந்தன.
அடிக்கடி நடைபெற்ற இந்தச் சண்டைகளால் உற்பத்தி பாதிப்பு அடைந்தது. அப்போது மலாயாக் கூட்டமைப்பை ஆண்டு வந்த ஆங்கிலேயர்கள் கோலாலம்பூரை ஆட்சி செய்வதற்கு காப்பித்தான் சீனா எனும் ஒரு சீனத் தலைவரை நியமித்தனர்.[7] முதல் காப்பித்தானாக லுக்குட் சுரங்கத்தின் முதலாளியாக இருந்த ஹியு சியு (Hiu Siew) என்பவர் தேர்ந்து எடுக்கப்பட்டார்
தொடக்கக் காலங்களில் கோலாலம்பூர் சிலாங்கூர் உள்நாட்டுப் போர், தொடர் நோய்த் தொற்றுக்கள், தீ மற்றும் வெள்ளக் கேடுகள் என பல சிக்கல்களை சந்தித்தது. 1870-களில் மூன்றாவது சீன காபிடனாக விளங்கிய யாப் ஆ லோய் முறையான, சீரான வளர்ச்சிக்கு வித்திட்டார்.
ஒரு சிற்றூராக விளங்கிய கோலாலம்பூரை வளர்முகச் சுரங்க நகரமாக மாற்றினார். 1880-இல் சிலாங்கூர் மாநிலத் தலைநகர் உத்திகளுக்காக கிள்ளான் நகரில் இருந்து கோலாலம்பூருக்கு மாற்றப்பட்டது.[8]
1881-ஆம் ஆண்டில், அதற்கு முன்னதாக சேதப் படுத்திய தீ விபத்தினை அடுத்து வெள்ளம் சூழ்ந்து நகரைச் சேதப் படுத்தியது. இவற்றால் நகரின் மரத்தினாலும் அத்தாப் என்ற தென்னக் கீற்றுகளாலும் ஆன கட்டமைப்புக்கள் பலவும் முற்றிலும் அழிந்தன. இதனையடுத்து சிலாங்கூரின் பிரித்தானிய ஆட்சியர், பிராங்க் சுவெட்டன்ஹாம், கட்டிடங்களை செங்கற்கள், ஓடுகள் கொண்டு கட்ட விரும்பினார்.[9]
எனவே கோலாலம்பூரின் மீளமைப்பை முடுக்கிவிட காப்பித்தான் யாப் ஆ லோய் செங்கற் சூலைகள் அமைக்க பெரும் நிலப் பகுதியை வாங்கினார். இந்த இடமே இன்று பிரிக்பீல்ட்சு (லிட்டில் இந்தியா) என்று அழைக்கப்படுகிறது. நகரத்தின் வடிவமைப்பை அவர் மீண்டும் சீராக்கினார்.
அப்போது கட்டப்பட்ட பல செங்கல் கட்டிடங்களும் தென் சீனத்தின் கடைக் கட்டிடங்களைப் போன்ற அமைப்பைக் கொண்டிருந்தன.
வீடுகளின் முதல்தள முகப்பு தெருவோர நடைப் பயணிகளுக்கு நிழல் தருமாறு தரைத்தளம் உள்ளடங்கியும் (ஐந்தடி வழி) திறன்மிக்க தச்சு வேலைப்பாடுகளுடனும் அமைந்திருந்தன. இவையே இந்தப் பகுதியின் தனித்துவமிக்க கட்டிட வடிவமைப்பாக திகழ்ந்தது.
தொடர்வண்டி நிலையம் வளரும் நகருக்கான அணுக்கத்தைக் கூட்டியது. 1890-களில் விரைவாகக் கண்ட வளர்ச்சியால் சுகாதார வாரியம் உருவானது. வெள்ளீயச் சுரங்கங்களை நகருடன் இணைத்து யாப் ஆ லோய் $20,000 செலவில் பல சாலைகளைக் கட்டமைத்தார். அம்பாங் சாலை, புடு சாலை, பெட்டாலிங் தெரு என்பன முதன்மைச் சாலைகளாக அமைந்தன.
சீன காப்பித்தான் என்ற பதவியால் யாப் ஆ லோய்க்கு மலாய் தலைவர்களுக்கு இணையான அதிகாரங்கள் இருந்தன. இதனைக் கொண்டு சட்டச் சீர்திருத்தங்களையும் புதிய சட்ட முறைமையையும் கொண்டு வந்தார். ஆறு பேர் கொண்ட மலேசியக் காவல்துறை கொண்டு சட்ட ஒழுங்கை நிலை நாட்டினார். 60 பேர் வரை இருக்கக் கூடிய சிறைச்சாலையைக் கட்டினார்.
கோலாலம்பூரின் முதல் தமிழ்ப்பள்ளியையும், பெட்டாலிங் சாலையில் மரவள்ளிக்கிழங்கு ஆலையையும் நிறுவினார்.
1896-இல் புதியதாக உருவாக்கப்பட்ட மலாய் கூட்டாட்சி மாநிலங்களின் தலைநகரமாகக் கோலாலம்பூர் தேர்ந்து எடுக்கப்பட்டது. காலப்போக்கில் பல்வேறு சமூகங்கள் பல்வேறு பகுதிகளில் குடியேறத் தொடங்கினர். சீனர்கள் பெரும்பாலும் கிள்ளான் ஆற்றின் கிழக்கே இருந்த சைனா டவுனை ஒட்டிய வணிக மையமான சந்தைச் சதுக்கத்தில் (Market Square) குடியேறினர்.
மலாய் மக்கள், தமிழ்ச் செட்டியார்கள், இந்திய இசுலாமியர் ஜாவா தெருவினை (இன்றைய ஜாலான் துன் பேராக்) ஒட்டி குடியேறினர். பாடாங் என்று அழைக்கப்பட்ட இன்றைய மெர்டேக்கா சதுக்கத்தில் பிரித்தானிய நிர்வாக அலுவலகங்கள் அமைந்து இருந்தன.
இரண்டாம் உலகப் போரின் போது, சனவரி 11, 1942 அன்று கோலாலம்பூர் சப்பானியர்களால் கைப்பற்றப்பட்டது. ஆகத்து 15, 1945 வரை நகரம் அவர்களின் வசம் இருந்தது.[10]
இந்தப் போர்க் காலத்தில் இரப்பர், வெள்ளீயம் போன்ற பொருட்களின் சந்தைச் சரிவு; மலேசிய அவசரகால நிலை முதலிய நிகழ்வுகளை எதிர்கொண்டது. மேலும் பொதுவுடமைக் கொள்கைசார் போராட்டங்கள் மிகுந்திருந்தன.[9]
1957-ஆம் ஆண்டில் பிரித்தானியர்களிடம் இருந்து மலாயா கூட்டாட்சி விடுதலை பெற்றது.[11] மலேசியா உருவான செப்டம்பர் 16, 1963 வரை தலைநகரமாகத் தொடர்ந்தது.
மே 13, 1969 அன்று மலேசியாவின் மோசமான இனச் சண்டைகள் கோலாலம்பூரில் நடந்தேறின.[12] சமூக-அரசியல் நிலை குறித்து அதிருப்தி அடைந்திருந்த மலாய்க்காரர்களுக்கும் அரசியல் செல்வாக்கு மிக்க சீனர்களுக்கும் இடையே ஏற்பட்ட இந்தக் கலவரங்களில் 196 நபர்கள் உயிரிழந்தனர்.[12]
இதன் பின்னணியில் சீனர்களின் ஏகபோகத்தைக் குறைக்கும் வகையில் நாட்டின் பொருளியல் கொள்கைகளில் பெரும் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
கோலாலம்பூர் 1972-இல் மாநகரமாக தகுதி பெற்றது; விடுதலை அடைந்த மலேசியாவில் ஒரு குடியேற்றப் பகுதிகு வழங்கப்பட்டது அதுவே முதல்முறையாகும். பின்னர், பெப்ரவரி 1, 1974 அன்று கூட்டாட்சிப் பகுதியாக அறிவிக்கப்பட்டது.[13]
1978-ஆம் ஆண்டில் சிலாங்கூர் மாநிலத்திற்கு சா ஆலாம் நகர்ம், புதிய மாநிலத் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது. மே 14, 1990-இல் நூற்றாண்டு நகராட்சி சாதனையைக் கோலாலம்பூர் கொண்டாடியது. புதிய கொடியும் நகரப் பண்ணும் கோலாலம்பூருக்கு அறிமுகப் படுத்தப்பட்டன.
1998-இல் ரிபார்மசி என்ற அரசியல் இயக்கம் கோலாலம்பூரில் தொடங்கியது.[14] முன்னாள் மலேசிய துணைப் பிரதமர் அன்வர் இப்ராகிமின் வெளியேற்றம் மற்றும் கைது செய்யப் பட்டதைத் தொடர்ந்து, அவரின் ஆதரவாளர்களால் 1999-இல் தொடர்ச்சியாக நடத்தப் பட்டன.
அவரின் விடுதலையைக் கோரியும் அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையைக் காட்டும் சீர்திருத்தங்களைக் கோரியும் அந்தப் போராட்டங்கள் நடைபெற்றன. அதனால் அரசு நிர்வாகச் செயல்பாட்டில் சில சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.[14]
2001 பிப்ரவரி 1-ஆம் தேதி புத்ராஜெயா கூட்டாட்சிப் பகுதியாகவும்; கூட்டாட்சி அரசின் தலைநகரமாகவும் அறிவிக்கப்பட்டது. கோலாலம்பூரில் இருந்து அரசு நிர்வாக அலுவலகங்களும்; நீதித்துறை அலுவலகங்களும் புத்ரா ஜெயாவிற்கு மாற்றப்பட்டன.
இருப்பினும் நாடாளுமன்றத்தை கோலாலம்பூர் தக்க வைத்துக் கொண்டது. அரசியலமைப்பின் தலைவரான ம்லேசிய மாமன்னரின் இருப்பிடமும் இங்கேயே உள்ளது.
கோலாலம்பூர் நகரம் கிள்ளான் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இந்தப் பள்ளத்தாக்கின் கிழக்கில் தித்திவாங்சா மலைகளும்; வடக்கிலும் தெற்கிலும் பல சிறு குன்றுத் தொடர்களும்; மேற்கில் மலாக்கா நீரிணையும் அமைந்துள்ளன.
குவாலா லும்பூர் என்ற மலாய் மொழிச் சொல்லிற்கான "கலங்கிய சங்கமம்" என்ற பொருளுக்கு ஏற்ப இந்த நகரம் கிள்ளான் ஆறும் கோம்பாக் ஆறும் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது.[15]
சிலாங்கூர் மாநிலத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள கோலாலம்பூர்; சிலாங்கூர் மாநில அரசாட்சியின் கீழ் இருந்து வந்தது. 1974-ஆம் ஆண்டில் சிலாங்கூர் மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டு முதல் மலேசிய கூட்டாட்சி அரசின் நேரடி ஆட்சியில் அமைந்த கூட்டாட்சிப் பிரதேசமாக உருவானது.
மலேசியத் தீபகற்பத்தின் சமதளமான மேற்கு கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளதால் மலேசியாவின் மற்ற நகரங்களை விட விரைவாக வளர்ச்சி கண்டுள்ளது.
நகராட்சியின் பரப்பளவு 243 km2 (94 sq mi)[16],
சராசரி உயரம் 21.95 m (72.0 அடி)[17]
கிழக்கில் தித்திவாங்சா மலைகளாலும்; மேற்கில் இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவினாலும் வெப்பமண்டல மழைக்காடுகள் வானிலை நிலவுகிறது. அக்டோபர் முதல் மார்ச்சு வரையான வடகிழக்குப் பருவ காலத்தில் மிகுந்த மழை பெய்கிறது.
வெப்பநிலை எப்போதும் ஒரே சீராக, கூடுதல் ஏற்ற இறக்கமின்றி காணப் படுகின்றது. கூடுதல் வெப்பநிலை 31 மற்றும் 33 °C (88 மற்றும் 91 °F) ஆகவும் குறைந்த வெப்பநிலை 22 மற்றும் 23.5 °C (71.6 மற்றும் 74.3 °F)ஆகவும் விளங்குகிறது.[18][19]
இங்கு ஆண்டுக்கு குறைந்தளவு மழையாக 2,600 mm (100 அங்)ஆவது பெய்கிறது; சூன், சூலை மாதங்களில் மழை குறைவு என்றபோதும் அப்போதும் மாதத்திற்கு 133 மில்லிமீட்டர்கள் (5.2 அங்) கூடுதலாக மழை பெய்கிறது.
பெருமழைக் காலங்களில் நகர மையத்திலும் கீழ்ப்பகுதிகளிலும் வெள்ளம் ஏற்படுவது வழமையாக உள்ளது. அண்மையிலுள்ள சுமத்திராவின் காட்டுத்தீயினால் ஏற்படும் தூசுத் துகள்கள் இங்கு சிலநேரங்களில் மூட்டம் ஏற்பட ஏதுவாகின்றன.
இதனுடன் கட்டுமானப் பணிகள், வாகனப்புகை உமிழ்வுகள் மற்றும் திறந்தவெளி எரித்தல்கள் இணைந்து சுற்றுப்புறத் தூய்மை கேட்டிற்கு வழிவகுக்கின்றன.
தட்பவெப்ப நிலைத் தகவல், சுபங் ஜயா (கோலாலம்பூர் நகர மையத்திலிருந்து ஏறத்தாழ 8 கிமீ தொலைவில்) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 36 (97) |
37 (99) |
37 (99) |
36 (97) |
36 (97) |
36 (97) |
36 (97) |
36 (97) |
35 (95) |
35 (95) |
35 (95) |
35 (95) |
37 (99) |
உயர் சராசரி °C (°F) | 32.1 (89.8) |
32.9 (91.2) |
33.2 (91.8) |
33.1 (91.6) |
32.9 (91.2) |
32.7 (90.9) |
32.3 (90.1) |
32.3 (90.1) |
32.1 (89.8) |
32.1 (89.8) |
31.6 (88.9) |
31.5 (88.7) |
32.4 (90.3) |
தாழ் சராசரி °C (°F) | 22.5 (72.5) |
22.8 (73) |
23.2 (73.8) |
23.7 (74.7) |
23.9 (75) |
23.6 (74.5) |
23.2 (73.8) |
23.1 (73.6) |
23.2 (73.8) |
23.2 (73.8) |
23.2 (73.8) |
22.9 (73.2) |
23.2 (73.8) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | 18 (64) |
20 (68) |
20 (68) |
21 (70) |
21 (70) |
20 (68) |
19 (66) |
20 (68) |
20 (68) |
21 (70) |
21 (70) |
19 (66) |
18 (64) |
மழைப்பொழிவுmm (inches) | 192 (7.56) |
181 (7.13) |
251 (9.88) |
292 (11.5) |
191 (7.52) |
133 (5.24) |
136 (5.35) |
155 (6.1) |
197 (7.76) |
258.5 (10.177) |
297 (11.69) |
246.9 (9.72) |
2,530.4 (99.622) |
சராசரி மழை நாட்கள் (≥ 1.0 mm) | 11 | 12 | 14 | 16 | 13 | 9 | 10 | 11 | 13 | 16 | 18 | 15 | 158 |
சூரியஒளி நேரம் | 186.0 | 194.9 | 207.7 | 198.0 | 207.7 | 195.0 | 201.5 | 189.1 | 165.0 | 170.5 | 153.0 | 161.2 | 2,229.6 |
Source #1: Jabatan Meteorologi Malaysia – Subang 1961–2010 | |||||||||||||
Source #2: World Meteorological Organisation (UN, 1971–2000)[18] |
ஏப்ரல் 1, 1961 முதல் 1972-ஆம் ஆண்டு வரையில் கோலாலம்பூரை மாநகரமாக அறிவிக்கும் வரை கூட்டாட்சி தலைநகர் ஆணையர் என்பவர் நிர்வகித்து வந்தார். நகராட்சி அமைந்த பிறகு இந்த அதிகாரம் மேயர் (டத்தோ பண்டார்) என்பரின் அதிகாரத்தின் கீழ் சென்றது.
இதுவரை ஒன்பது மேயர்கள் பதவி ஏற்றுள்ளனர். தற்போதைய மேயராக மகாடி செ நிகா (Mahadi bin Che Ngah) என்பவர் சேவை செய்து வருகிறார்.
மலேசியாவின் கூட்டாட்சிப் பகுதிகளின் அமைச்சகத்தின் கீழியங்கும் கோலாலம்பூர் மாநகர் மன்றம் உள்ளாட்சி நிர்வாகத்தை மேற்கொள்கிறது. இது பொதுச் சுகாதாரம், கழிவு அகற்றல் மற்றும் மேலாண்மை, நகரமைப்புத் திட்டமிடல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கட்டுமானப் பணிகள் கட்டுப்பாடு, சமூக பொருளியல் வளர்ச்சி மற்றும் ஊரக கட்டமைப்பின் பொதுப் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்கிறது.
இதன் செயல் அதிகாரியாக விளங்கும் மேயர் துறை அமைச்சரால் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நியமிக்கப்படுகிறார். 1970இல் உள்ளாட்சித் தேர்தல்கள் இடைநிறுத்தம் செய்தபிறகு இவ்வாறு மேயரை நியமிப்பதே வழமையாக உள்ளது.[20]
மலேசியாவின் நாடாளுமன்றம் கோலாலம்பூரில் இயங்குகிறது. மலேசிய அரசியலமைப்பின்படி செயலாக்கம், நீதி மற்றும் சட்டமாக்கல் என மூன்று பிரிவுகள் ஆளுகையின் அங்கமாக விளங்குகின்றன.நாடாளுமன்றம் இரு அவைகளைக் கொண்டுள்ளது. மேலவை தேவான் நெகரா என்றும் கீழவை தேவான் ரக்யாத் என்றும் அழைக்கப்படுகின்றன.[4]
கோலாலம்பூர் நகரத்திலிருந்து கீழவைக்கு பதினோரு உறுப்பினர்கள் ஐந்தாண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்[21]. 2008ஆம் ஆண்டு பொதுத்தேர்தல்களில் முதன்முறையாக எதிர்கட்சி வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பகாதன் ரக்யாத் கட்சிக்கூட்டணிக்கு ஐந்து இடங்களும் மக்கள் நீதிக்கட்சிக்கு நான்கு இடங்களும் அனைத்து மலேசிய இசுலாமிய கட்சிக்கு ஓரிடமும் கிடைத்துள்ளன. ஆளும் கட்சியான தேசிய முன்னணிக்கு ஓரிடமே கிடைத்துள்ளது.
மலேசியாவில் பொருளியல் மற்றும் தொழில்துறையில் விரைவாக முன்னேறிவரும் பகுதியாக கோலாலம்பூரும் அதன் சுற்றுப் பகுதிகளும் அமைந்துள்ளன.[22] அரசு அலுவலகங்கள் புத்ரஜெயாவிற்கு மாற்றப்பட்டபோதும் பாங்க் நெகரா மலேசியா (மலேசியத் தேசிய வங்கி), மலேசிய கம்பனிகள் ஆணையம், பங்குச்சந்தை ஆணையம் போன்ற சில அரசுத்துறை நிறுவனங்கள், பெரும்பாலான வெளிநாட்டுத் தூதரகங்கள் இங்கிருந்து மாறவில்லை.[23]
நாட்டின் பொருளியல் மற்றும் வணிக மையமாக இந்த நகரம் விளங்குகிறது. மேலும் நிதி, காப்புறுதி, நில முதலீடுகள், ஊடகங்கள் மற்றும் கலைகளுக்கு இது முதன்மை இடமாக அமைந்துள்ளது. உலக நாடுகளை உலகமயமாக்கல் அளவீட்டில் மதிப்பிடும் அமைப்பு (GaWC) மலேசியாவின் ஒரே உலகமயமாக்கல் நகரமாக கோலாலம்பூரை ஆல்ஃபா உலக நகரம் என அறிவித்துள்ளது.[24] இந்தப் பொருளியல் முன்னேற்றத்திற்கு சிபாங்கில் உள்ள கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம், பல்லூடக சூப்பர் காரிடர் உருவாக்கம், கிளாங் துறைமுக விரிவாக்கம் போன்ற சுற்றுபகுதிகளில் மேற்கோண்ட கட்டுமானப் பணிகள் பெரிதும் தூண்டுதலாக அமைந்தன.
மலேசியாவின் பங்குச்சந்தையான புர்சா மலேசியா இங்கு அமைந்துள்ளது; நவம்பர்20, 2007 அன்று சந்தை முதலீடு $ 318.65 பில்லியனாக இருந்தது.[25]
2008இல் கோலாலம்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) RM73,536 மில்லியனாகவும் ஆண்டுக்கு 5.9 விழுக்காடாக வளர்வதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.[26][27] தனிநபர் மொத்த உற்பத்தி RM48,556 ஆக இருந்தது.[26][28] இங்கு பணிக்கு அமர்த்தப்படுவோர் எண்ணிக்கை மதிப்பீடு 838,400 ஆகும்.[29] நிதி, காப்பீடு, நில முதலீடு, வணிக சேவைகள், மொத்த மற்றும் சில்லறை வணிகம், உணவகங்களும் தங்குவிடுதிகளும், போக்குவரத்து, சேமிப்பகங்கள், தொலைதொடர்பு, பொதுப் பயனுடமை சேவைகள், அரசு சேவைகள் என சேவைதுறை பொருளாதாரம் மொத்த பணிகளில் 83 விழுக்காடு இடங்களை அளித்துள்ளது.[29] ஏனைய 17 விழுகாட்டை தயாரிப்பு மற்றும் கட்டமைப்பு துறைகள் பங்களிக்கின்றன.
கோலாலம்பூரின் சராசரி வீட்டு மாத வருமானம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பிருந்த RM3,371 (USD 1,087)இலிருந்து 1999ஆம் ஆண்டில் RM4,105 (USD 1,324) ஆக உயர்ந்துள்ளது. இது தேசிய சராசரியை விட 66% கூடுதலாகும்.[30]
பல பன்னாட்டு வங்கிகளும் காப்பீடு நிறுவனங்களும் கோலாலம்பூரிலிருந்து இயங்குகின்றன. உலகளாவிய இசுலாமிய நிதி அமைப்பு மையமாகவும் முன்னேறி வருகிறது.[31] உலகின் மிகப்பெரும் இசுலாமிய வங்கியான அல்-ராஜி வங்கி [32] மற்றும் குவைத் நிதி இல்லம் போன்ற வளைகுடா வங்கிகளும் பிற இசுலாமிய நிறுவனங்களும் கோலாலம்பூரில் பெருமளவில் இசுலாமிய விதியொட்டிய வங்கித்துறையை வளர்த்து வருகின்றன. மேலும் புர்சா மலேசியாவுடன் இணைந்து டௌ ஜோன்சு நிறுவனம் இசுலாமிய பங்குச்சந்தைப் பரிமாற்ற நிதியத்தை உருவாக்க முனைந்துள்ளது.[33] பல பன்னாட்டு நிறுவனங்களின் கிளை மற்றும் மண்டல அலுவலகங்கள் இங்கு இயங்குகின்றன.திசம்பர் 2007 நிலவரப்படி, பெட்ரோனாஸ் தவிர, 14 ஃபோர்ப்ஸ் 2000 நிறுவனங்கள் கோலாலம்பூரைத் தலைமையகமாகக் கொண்டுள்ளன.[34]
கல்வியும் மருத்துவத்துறையும் இந்த நகரின் மற்ற முக்கியமான பொருளியல் செயல்பாடுகளாகும். பல கல்வி நிறுவனங்கள் கோலாலம்பூரின் பரந்த பரப்பில் பன்முக கல்வித்திட்டங்களை வழங்கி வருகின்றன. பல தனியார் மற்றும் அரசு மருத்துவ மனைகள் பொது உடல்நலம் மற்றும் பலதரப்பட்ட சிறப்பு மருத்துவ சிகிட்சைகளை வழங்கி வருகின்றன. மருத்துவச் சுற்றுலாவும் வளர்ந்து வரும் ஓர் பொருளியல் செயல்பாடாகும்.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள் மூலம் பொருளாதாரத்தை வளர்க்க பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாகவே இங்கு மலேசிய இரப்பர் ஆராய்ச்சி நிலையமும் மலேசிய வன ஆராய்ச்சி நிறுவனமும் மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும்[35] இயங்கி வருகின்றன. வரும் ஆண்டுகளில் மேலும் பல சிறப்பு ஆய்வகங்களை திறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நகரின் சேவைசார் பொருளியலில் சுற்றுலாத்துறை முக்கிய இடம் வகிக்கிறது. உலகின் பல பெரிய தங்குவிடுதி பிணைப்புகள் இங்கு தங்கள் தங்குவிடுதிகளை கொண்டுள்ளன. 2008ஆம் ஆண்டில் 8.94 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்த கோலாலம்பூர் உலகின் ஆறாவது மிகவும் வருகை புரிந்த நகரமாக விளங்குகிறது.[36] நகரத்தின் பன்முக பண்பாடு, ஒப்பீட்டளவில் குறைந்த செலவினங்கள், பலதரப்பட்ட உணவகங்கள் மற்றும் அங்காடிகள் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன. சந்திப்புகள், ஊக்கிகள்,மாநாட்டு வசதிகள் மற்றும் கண்காட்சிகள் (MICE) சார்ந்த சுற்றுலா அண்மைக்காலங்களில் இத்தொழிலின் வலிமை மிக்க கூறாக விளங்குகிறது. இங்குள்ள கூடிவரும் குறைந்த வாடகை தங்குவிடுதிகள் இத்துறையின் மற்றுமொரு போக்காக உள்ளது.
கோலாலம்பூரின் முதன்மை சுற்றுலாத் தலங்களாக மெர்டெக்கா சதுக்கம், மலேசிய நாடாளுமன்றக் கட்டிடம், பெடலிங் தெரு, இஸ்தானா நெகரா (தேசிய அரண்மனை), கோலாலம்பூர் கோபுரம், தேசிய அருங்காட்சியகம், மத்திய சந்தை, தேசிய நினைவுச் சின்னம் என்பனவாகும். சமயச் சுற்றுலாவிற்கு ஜாமிஃ பள்ளிவாசல், பத்துமலை போன்ற தலங்கள் உள்ளன.[37] கோலாலம்பூரில் மகாமாரியம்மன் கோவிலின் தைப்பூசம் ஊர்வலம் போன்ற பன்முக பண்பாட்டு திருவிழாக்கள் நடைபெறுகின்றன.
நகரத்தின் மனமகிழ்வு மையங்கள் ஜாலன் பி. ராம்லீ, ஜாலன் சுல்தான் இசுமாயில், அம்பங் சாலையால் அமைந்த தங்க முக்கோணத்திற்குள் அமைந்துள்ளன. பீச் கிளப், எஸபனடா, ஹக்கா ரிபப்ளிக் வைன் பார் மற்றும் உணவகம், ஹார்ட் ராக் கஃபே, லூனா பார், நுவோவோ, ரம் ஜங்கிள், தாய் கிளப், சூக் போன்ற இரவுமன்றங்கள், குடியகங்கள், உணவகங்கள் இங்கு அமைந்துள்ளன.
மலேசியாவின் நுகர்வோர் வணிக மற்றும் புதுப்பாங்கு மையமாக விளங்கும் கோலாலம்பூரில் 66 அங்காடி வளாகங்கள் அமைந்துள்ளன.[38] 2006ஆம் ஆண்டு நிலவரப்படி மலேசியாவின் நுகர்வோர் வணிகம் RM7.7 பில்லியன் (USD 2.26 பில்லியன்) மதிப்புடையதாக இருந்தது. இது மொத்த சுற்றுலா கொள்முதலில் 20.8 விழுக்காடு ஆகும்.[39]
பெட்ரோனாஸ் கோபுரங்களின் அடியில் அமைந்துள்ள சூரியா கேஎல்சிசி மலேசியாவின் முதன்மையான அங்காடி வளாகமாகத் திகழ்கிறது. இதைத் தவிர, தங்க முக்கோணத்தில் அமைந்துள்ள புக்கிட் பிந்தாங் மாவட்டத்தில் கோலாலம்பூரின் பெரும்பாலான அங்காடி வளாகங்கள் அமைந்துள்ளன. இங்கு பல உணவகங்கள், தெருவோர அல்பிரெஸ்கோக்கள், நுகர்வோர் வளாகங்கள் அமைந்துள்ளன. பங்சார் மாவட்டத்திலும் சில அங்காடி வளாகங்கள் அமைந்துள்ளன. சிலாங்கூரின் டாமன்சாராவில் நாட்டின் ஒரே 'ஐக்கியா' பன்னாட்டு அறைகலன் அங்காடி அமைந்துள்ளது.
அங்காடி வளாகங்களைத் தவிர கோலாலம்பூரில் துணிமணிகள், கைவினைப் பொருட்கள் போன்ற உள்ளூர்த் தயாரிப்புகளை விற்க பல பகுதிகள் பரவலாக அறியப்பட்டுள்ளன. பெட்டாலிங் தெரு எனப்படும் சீனநகர் இவ்வாறு புகழ்பெற்றது. இங்கு விடுதலைக்கு முந்தைய சீன மற்றும் குடிமைப்பட்ட கால கட்டிடங்களைக் காணலாம்.[40][41] பசார் செனி எனப்படும் கோலாலம்பூரின் மத்திய சந்தையில் கலை மற்றும் கைவினைப் பொருட்கள் விற்கப்படுகின்றன.
2000 ஆண்டு முதல் மலேசிய சுற்றுலாத்துறை அமைச்சகம் பெரும் விற்பனை விழாவினை அறிமுகப்படுத்தி உள்ளது. ஆண்டுக்கு மூன்றுமுறை - மார்ச்சு, மே, திசம்பர் - நடத்தபடும் இந்த விழாவில் அனைத்து வணிக வளாகங்களும் பங்கேற்று கோலாலம்பூரை முதன்மை பொருள் வாங்கச் செல்லுமிடமாக மேம்படுத்த திட்டமிட்டுள்ளது.
கோலாலம்பூரின் மக்கள் தொகையியல் | ||||
---|---|---|---|---|
மக்கள் இனம் | விழுக்காடு | |||
மலாய்கள் | 47.2% | |||
சீனர்கள் | 40.2% | |||
இந்தியர்கள் | 10.3% | |||
மற்ற பூமிபுத்திரா மற்றும் பிறர் | 1.8% |
கோலாலம்பூர் நகர்ப்பகுதியில் மட்டும் 2010இல் 1.6 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். மக்கள்தொகை அடர்த்தி சதுர கிமீக்கு 6,696 (2585 மைல்2)ஆக மலேசியாவின் மிகவும் அடர்ந்த நிர்வாக மாவட்டமாக விளங்குகிறது.[16] கோலாலம்பூர் பெருநகரில் மக்கள்தொகை 6.9 மில்லியனாக உள்ளது.[42]
கோலாலம்பூரில் பன்முக இன மக்கள் வாழ்ந்துவருகின்றனர்;முதன்மையான மூன்று இனங்களாக மலாய்கள், சீனர்கள் மற்றும் இந்தியர்கள் உள்ளனர். இவர்களைத் தவிர ஆங்கிலோ இந்தியர்கள், மலேசியத் தீபகற்பம் மற்றும் கிழக்கு மலேசியாவின் பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.[29][43]
பிறப்பு விகிதங்கள் இறங்குமுகமானதை அடுத்து 15 அகவைக்கு குறைந்தோர் எண்ணிக்கை 1980இல் இருந்த 33%இலிருந்து 2000இல் 27%ஆக குறைந்துவிட்டது.[29] அதேநேரம் வேலைக்குச் செல்லும் 15–59 வயதுடையோர் எண்ணிக்கை அதே காலகட்டத்தில் 63%இலிருந்து 67% ஆக உயர்ந்துள்ளது.[29] வயதானவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் விழுக்காடு 4%இலிருந்து 6% ஆக உயர்ந்துள்ளது.[29]
கோலாலம்பூரின் விரைவான வளர்ச்சியால் இந்தோனேசியா, நேபாளம், பர்மா, தாய்லாந்து, வங்காள தேசம், இந்தியா, இலங்கை, பிலிப்பைன்ஸ், மற்றும் வியட்நாம் நாடுகளிலிருந்து திறமைவேண்டா/குறைதிறன் தொழிலாளர்கள் மலேசியாவிற்கு வந்தனர். இவர்களில் பலருக்கு முறையான ஆவணங்கள் இருப்பதில்லை.[44][45]
கோலாலம்பூரில் பல சமயத்தவர்களும் இணைந்து வாழ்கின்றனர்.பல்வேறு சமயத்தினர்களுக்கும் வழிபட வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. மலாய்களும் இந்திய முசுலிம்களும் இசுலாமிய சமயத்தை கடைபிடிக்கின்றனர். சீனர்கள் பௌத்தம், கன்ஃபூசியசம், டௌவிசம் சமயங்களைப் பின்பற்றுகின்றனர். பெரும்பான்மையான இந்தியர்கள் இந்து சமயத்தைப் பின்பற்றுகின்றனர். சில சீனர்களும் இந்தியர்களும் கிறித்தவத்தைப் பின்பற்றுகின்றனர்.
பகாசா மலேசியா கோலாலம்பூரின் முதன்மை மொழியாக உள்ளது. பெரும்பாலோர் ஆங்கில அறிவு உடையவர்களாக உள்ளனர். வணிக மொழியாக விளங்கும் ஆங்கிலம் பள்ளிகளில் கட்டாயமாக கற்பிக்கப்படுகிறது.[43] கண்டோனீசு மற்றும் மண்டாரின் மொழிகள் மலேசியச் சீனர்களால் பேசப்படுகிறது.[46] மற்றுமொரு முதன்மை மொழியாக ஹக்கா மொழி உள்ளது. உள்ளூர் மலேசிய இந்தியர்களின் முதன்மை மொழியாக தமிழ் உள்ளது. பிற இந்திய மொழிகளான மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் பஞ்சாபியும் இந்தியர்களால் பேசப்படுகிறது.
மலேசிய நாடாளுமன்ற கட்டிடத்தை அடுத்து 92 எக்டேர் பரப்பளவில் நேர்த்தியாகப் பராமரிக்கப்படும் ஏரிப் பூங்கா முன்னர் பிரித்தானிய குடியேற்ற அலுவலரின் இல்லமாக இருந்தது. இந்தப் பூங்காவில் பட்டாம்பூச்சி பூங்கா, மான் பூங்கா, மந்தாரைத் தோட்டம் (Orchid Garden), செம்பருத்தித் தோட்டம் ஆகியனவுடன் தெற்காசியாவிலேயே பெரிய பறவைகள் பூங்காவான கோலாலம்பூர் பறவைப் பூங்காவும் அமைந்துள்ளது.[47] இதைத் தவிர, ஆசியான் சிற்பப்பூங்கா, கேஎல்சிசி பூங்கா, டிடிவாங்சா ஏரிப் பூங்கா, கெபோங்கிலுள்ள மெட்ரோபொலிடன் ஏரிப் பூங்கா, வன ஆராய்ச்சி கழகம், தமன் டாசிக் பெர்மைசூரி (அரசி ஏரிப் பூங்கா), புகிட் கியாரா தாவரப் பூங்கா, குதிரைச்சவாரிப் பூங்கா, மேற்கு பள்ளத்தாக்குப் பூங்கா மற்றும் புகிட் ஜலீல் பன்னாட்டுப் பூங்கா என பல பூங்காக்கள் அமைந்துள்ளன.
நகரத்தினுள்ளேயே மூன்று வனக் காப்பகங்கள் உள்ளன: நகரமையத்தில் உள்ள நாட்டின் பழைமையான 10.52 ha (26.0 ஏக்கர்கள்) பரப்பளவில் அமைந்துள்ள புகிட் நானாஸ் வனக் காப்பகம், 7.41 ha (18.3 ஏக்கர்கள்) பரப்பளவில் அமைந்துள்ள புகிட் சுங்கை புடி வனக் காப்பகம், 42.11 ha (104.1 ஏக்கர்கள்) பரப்பளவில் அமைந்துள்ள புகிட் சுங்கை பேசி வனக் காப்பகம். ஒரு நகரத்தின் உள்ளே அமைந்துள்ள உலகின் பழைமையான மாசுபடா வனப் பகுதியாக புகிட் நானாஸ் விளங்குகிறது.[48] இந்த வனப்பகுதிகள் பல விலங்குகள், குறிப்பாக குரங்குகள், மரச் சுண்டெலிகள்,அணில்கள் மற்றும் பறவைகள் தங்குமிடமாக உள்ளன.
கோலாலம்பூருக்கு அண்மையில் டெம்ப்ளர் பூங்கா உள்ளது;இதனை 1954ஆம் ஆண்டில் நெருக்கடி காலத்தில் சேர் ஜெரால்டு டெம்ப்ளர் உருவாக்கினார்.[49]
கோலாலம்பூர் மலேசியாவின் பண்பாட்டு நிகழ்வுகளுக்கும் செயல்பாடுகளுக்கும் மையமாக விளங்குகிறது. மகாமேரு நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தேசிய அருங்காட்சியகத்தில் நாடு முழுமையிலிருந்தும் சேகரிக்கப்பட்ட ஓவியங்களும் கலைப்பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.[50] ஏழாயிரம் இசுலாமிய கலைப்பொருட்களும் அரிய சில காட்சிப்பொருட்களும் கொண்ட இசுலாமிய கலை அருங்காட்சியகத்தில் இசுலாமிய கலை குறித்த நூலகமும் உள்ளது.[51]
நிகழ்த்துகலைகளுக்கான முதன்மையான அரங்கமாக பெட்ரோனாஸ் பிலார்மானிக் மண்டபம் விளங்குகிறது. இங்கு மலேசிய பிலார்மானிக் ஆர்ச்செஸ்ட்ரா தன் நிகழ்ச்சிகளை நடத்துகிறது.[52] செந்துல் மேற்கில் அமைந்துள்ள கோலாம்பூர் நிகழ்த்துகலைகள் மையத்தில் (KLPac) பல நாடகங்கள், இசைக்கச்சேரிகள், திரைப்படக் காட்சிகள் அரங்கேறியுள்ளன.[53]
மலேசிய பன்னாட்டு உயர்தர உணவு விழா ஒவ்வொரு ஆண்டும் கோலாலம்பூரில் நடத்தப்படுகிறது.[54] இதேபோல ஒவ்வொரு ஆண்டும் பன்னாட்டு ஆடை வடிவமைப்பாளர்களுடன் உள்நாட்டு வல்லுனர்கள் போட்டியிடும் கோலாலம்பூர் புதுப்பாங்கு வாரம் நடத்தப்படுகிறது.[55]
கோலாலம்பூர் பார்முலா 1 [56] திறந்த சக்கர தானுந்து போட்டிகள் ஏ1 கிராண்ட்பிரீ[57] மற்றும் விசையுந்து கிராண்ட் பிரீ[58] உலகப் போட்டிகள் நடக்கும் நகரங்களில் ஒன்றாகும். இவை சிலாங்கூர் மாநிலத்தில் கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தை அடுத்த செபாங் பன்னாட்டு சுற்றுகையில் நடைபெறுகின்றன.
கேஎல் கிராண்ட் பிரீ சிஎஸ்ஐ 5*,[59] என்ற பன்னாட்டு குதிரைச் சவாரி நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் இங்கு நடைபெறுகிறது.
கேஎல் கோபுரம் ஓட்டம்[60] மற்றும் கோலாலம்பூர் பன்னாட்டு மராத்தான் ஓட்டம் ஆகியனவும் டூர் டெ லங்காவி என்ற மிதிவண்டி போட்டியும் [61] மற்றபிற விளையாட்டுக்களாகும்.
பாட்மின்டனுக்கான வருடாந்திர மலேசியா ஓப்பன் முக்கியமான மற்றொரு விளையாட்டு நிகழ்வாகும்.
1998ஆம் ஆண்டில் பொதுநலவாய விளையாட்டுக்களை நடத்திபிறகு பன்னாட்டுத் தரமுள்ள பல விளையாட்டு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
கோலாலம்பூரில் பல குழிப்பந்தாட்ட மைதானங்கள் உள்ளன. 2015ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள 127வது பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் அமர்வு கோலாலம்பூரில் நடக்கவுள்ளது. இந்த அமர்வில் 2022ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடைபெறும் இடம் தேர்ந்தெடுக்கப்படும்.[62]
கோலாலம்பூரில் நாளிதழ்கள்,வணிக இதழ்கள், எண்ணிம இதழ்கள் என பல செய்தித்தாள்கள் வெளியாகின்றன. நாளிதழ்களில் த ஸ்டார், நியூ ஸ்ட்ரைட்ஸ் டைம்ஸ், த சன், மலாய் மெயில், கோஸ்மோ!, உடுசான் மலேசியா, பெரிடா அரியான், அரியான் மெட்ரோ ஆகியன குறிப்பிடத்தக்கவையாகும். குவாங் மிங் நாளிதழ், சின் சூ நாளிதழ், சைனா பிரெஸ், நன்யங் சியாங் பௌ போன்ற மண்டாரின் மொழி நாளிதழ்களும் தமிழ் நேசன், மலேசிய நண்பன், மக்கள் ஓசை போன்ற தமிழ் நாளிதழ்களும் வெளியாகின்றன. எதிர்கட்சிகளின் கருத்துக்களை தாங்கி ஹராகா, சுயாரா கேடிலன், சியாசா, வாசிலா நாளிதழ்கள் வெளியாகின்றன. மலேசியாவின் தேசிய வானொலியான ரேடியோ டெலிவிசன் மலேசியாவின் (RTM) தலைமையகம் இங்குள்ளது. வணிகமய தொலைக்காட்சி அலைவரிசைகளான டிவி 3, 8டிவி, டிவி 9 போன்றவை கோலாலம்பூரைத் தலைநகராகக் கொண்ட மீடியா பிரைமா என்ற நிறுவனத்தால் இயக்கப்படுகின்றன. நிகழ்ச்சிகள் மலாய் மொழி, ஆங்கிலம், தமிழ் மற்றும் சீன மொழிகளில் அலைபரப்பப்படுகின்றன.
அஸ்ட்ரோ தொலைக்காட்சி நிறுவனம் செயற்கைக் கோள் வழியாக உள்ளூர் மற்றும் பன்னாட்டு தொலைக்காட்சி அலைவரிசைகளை பரப்பி வருகிறது.[63] தோகாவைச் சேர்ந்த அராபிய செய்தி தொலைக்காட்சி நிறுவனம் அல்-ஜசீரா கோலாலம்பூஇல் தனது ஆங்கிலச் செய்தி அலைவரிசையை நிறுவியுள்ளது.[64]
திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், இசை மற்றும் நூல்களில் கோலாலம்பூரை மையப்படுத்தி புனையப்பட்டுள்ளன. சியான் கானரி நடித்த என்ட்ராப்மென்ட், பெட்ரோனாஸ் கோபுரங்கள் தீயால் சூழப்பட்டதாக காட்டப்பட்ட சில்ட்ரன் ஆப் மென் ஆகியத் திரைப்படங்கள் கோலாலம்பூரை மையமாகக் கொண்டவை.[65] த சிம்ப்ஸ்சன்ஸ் என்ற தொலைக்காட்சித் தொடரில் குறிப்பிடப்பட்டுள்ளது.[66] கோலாலம்பூரை மையப்படுத்திய நூல்களாக கேஎல் 24/7,[67] மை லைப் அஸ் அ ஃபேக், மற்றும் டெமோக்ரசி [68] ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
அரசு புள்ளிவிவரங்களின்படி கோலாலம்பூரின் படிப்பறிவு பெற்றோர் வீதம் 2000 ஆம் ஆண்டில் 97.5% ஆக இருந்தது; இது மலேசியாவின் வேறெந்த மாநிலம் அல்லது ஆட்சிப்பகுதியை விடக் கூடுதலானதாகும்.[69] இங்கு மலாய் மொழி பயிற்றுமொழியாக உள்ளது. ஆங்கிலம் கட்டாயப் பாடமாகவும் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களுக்கு பயிற்றுமொழியாகவும் உள்ளது. சில பாடங்களுக்கு தமிழ் அல்லது மண்டாரினில் பயிற்றுவிக்கும் பள்ளிகளும் உள்ளன.
கோலாலம்பூரில் 13 மூன்றாம்நிலை கல்வி நிறுவனங்களும் 79 உயர்நிலைப் பள்ளிகளும் 155 துவக்கப்பள்ளிகளும் 136 கிண்டர்கார்டன் பள்ளிகளும் உள்ளன.[70] நூறாண்டுகளுக்கும் மேலாக புகிட் பின்தாங் பெண்கள் பள்ளி (1893–2000, பின்னர் தமன் சாமெலின் பெர்காசாவிற்கு மாற்றப்பட்டது),விக்டோரியா கல்விநிலையம் (1893), மெதாடிஸ்ட் பெண்கள் பள்ளி (1896), மெதாடிஸ்ட் ஆண்கள் பள்ளி (1897), புகிட் நானாஸ் கன்னிமாடம் (1899), புனி ஜான் கல்விநிலையம் (1904) போன்ற கல்வி நிலையங்கள் இருந்துள்ளன.
1949ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட மலாயாப் பல்கலைக்கழகம் மலேசியாவின் மிகப்பழமையானப் பல்கலைக்கழகமாகும்.[71][72] இங்குள்ள பிற பல்கலைக்கழகங்கள்: மலேசிய பன்னாட்டு இசுலாமிய பல்கலைக்கழகம், துங்கு அப்துல் ரகுமான் பல்கலைக்கழகம், யூசிஎஸ்ஐ பல்கலைக்கழகம், பன்னாட்டு மருத்துவ பல்கலைக்கழகம், மலேசியா திறந்தநிலைப் பல்கலைக்கழகம், கோலாலம்பூர் பல்கலைக்கழகம், வாவாசன் திறந்தநிலைப் பல்கலைக்கழகம்.
மற்ற ஆசிய நகரங்களைப் போலன்றி கோலாலம்பூரில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல வண்டி ஓட்ட வேண்டியுள்ளது[73]. எனவே இந்த நகரத்தில் சாலைகள் மிகவும் நேர்த்தியாகப் பின்னப்பட்டுள்ளன. மலேசியத் தீபகற்பத்தின் பிற இடங்களுடன் நெடுஞ்சாலைகளால் பிணைக்கப்பட்டுள்ளது.
கோலாலம்பூரில் இரண்டு வானூர்தி நிலையங்கள் உள்ளன. முதன்மையான கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் (KLIA) சிலாங்கூர் மாநிலத்தின் செபாங் என்ற இடத்தில் அமைந்துள்ளது. மலேசியாவின் வான்வெளிப்பயணங்களுக்கு மையவிடமாக உள்ள[74] இந்த வானூர்தி நிலையம் நகரத்திலிருந்து தெற்கே 50 கிலோமீட்டர்கள் (31 mi) தொலைவில் உள்ளது. சுல்தான் அப்துல் அசீசு ஷா வானூர்தி நிலையம் அல்லது சுபாங் ஸ்கைபார்க் என அறியப்படும் இரண்டாவது வானூர்தி நிலையம் 1998இல் கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் திறக்கப்படுவதற்கு முன்னர் வெளிநாட்டு பயணங்களுக்கான வாயிலாக இருந்தது. தற்போது இது தனியார் மற்றும் டர்போபிராப் வானூர்திகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.[75] கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் மலேசிய ஏயர்லைன்ஸ், குறைந்த கட்டண சேவை வழங்கும் ஏர் ஏசியா ஆகியவற்றின் முதன்மை இருப்பிடமாக விளங்குகிறது. கேஎல் சென்ட்ரலிலிருந்து இந்த பன்னாட்டு வானூர்தி நிலையத்தை அடைய மிகவிரைவு தொடர்வண்டி அமைக்கப்பட்டுள்ளது. இது 28 நிமிடங்களில் சென்றடைகிறது.[76] ஏர் ஆசியா இயங்கும் குறைந்த கட்டண முனையத்திற்கு கேஎல் சென்ட்ரலிலிருந்து பேருந்துகள் செல்கின்றன.
பொதுப்போக்குவரத்திற்கு பேருந்துகள், தொடர்வண்டிகள் மற்றும் வாடகைவண்டிகள் இருந்தபோதும் இவற்றைப் பயன்படுத்துவோர் வீதம் 16 விழுக்காட்டிற்கும் கீழாக இருப்பதாக 2006ஆம் ஆண்டு கணக்கெடுப்பு ஒன்று மதிப்பிடுகிறது.[73] தொடர்வண்டிப் போக்குவரத்தில் லைட் ரெயில், ராபிட் டிரான்சிட், மோனோரெயில், கம்யூட்டர் ரெயில் என்று பலவகை தொடர்வண்டி அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. அனைத்துவகை தொடர்வண்டிகளுக்கும் சந்திப்பு நிலையமாக கேஎல் சென்ட்ரல் உள்ளது. இங்கிருந்து தெற்கில் சிங்கப்பூர் வரையும் வடக்கில் தாய்லாந்தின் ஹாத் யை வரையும் தொடர்வண்டி இணைப்புகள் உள்ளன.[77]
கோலாலம்பூரில் உள்ள வாடகைவண்டிகள் வேறுபடுத்தும் வண்ணம் வெள்ளை மற்றும் சிவப்பு தோற்றத்தைக் கொண்டுள்ளன. இங்குள்ள வண்டிகள் பெரும்பாலும் இயற்கை எரிவளியில் இயங்குகின்றன. வெளிநாட்டுப் பயணிகளிடம் கூடுதலாக கட்டணம் கோருவதாக முறையீடுகள் உள்ளன.
நகரத்திலிருந்து தென்மேற்கே ஏறத்தாழ 64 km (40 mi) தொலைவில் கிளாங் துறைமுகம் அமைந்துள்ளது. நாட்டின் மிகப்பெரியதும் போக்குவரத்து மிகுந்ததுமான இந்த துறைமுகம் 2006ஆம் ஆண்டில் 6.3 மில்லியன் இருபது அடி நிகர் அலகு (TEU) சரக்குகளை கையாண்டுள்ளது.[78]
கோலாலம்பூர் பல வெளிநாட்டு நகரங்களுடன் இரட்டை நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு | நகரம் | கூட்டின் நிலை | ஆதாரங்கள் |
---|---|---|---|
இந்தியா | சென்னை | சகோதரி நகரம் | [79] |
இந்தியா | தில்லி | சகோதரி நகரம் | [80] |
ஈரான் | இஸ்ஃபாஹன் | சகோதரி நகரம் | [81][82] |
ஈரான் | மாஷ்ஹத் | சகோதரி நகரம் | [83] |
சப்பான் | ஒசாகா | வணிக கூட்டாளி நகரம் | [82][84] |
மலேசியா | மலாக்கா நகரம் | சகோதரி நகரம் | [82] |
மொரோக்கோ | கசபிளாங்கா | சகோதரி நகரம் | [82] |
துருக்கி | அங்காரா | சகோதரி நகரம் | [82][85] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.