கிரெகொரியின் நாட்காட்டி
ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட நாட்காட்டி / From Wikipedia, the free encyclopedia
கிரெகொரியின் நாட்காட்டி (Gregorian calendar) என்பது உலக அளவில் மிகவும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, பயன்படுத்தப்படும் நாட்காட்டியாகும்.[1][2][3] இந்த நாட்காட்டி மேற்கத்திய நாட்காட்டி எனவும் கிறித்துவ நாட்காட்டி எனவும் வழங்கப்பெறுகிறது. இந்த நாட்காட்டி பன்னாட்டுத் அஞ்சல் ஒன்றியம், ஐக்கிய நாடுகள் போன்றவற்றினால் அங்கீகரிப்பட்டுள்ளது.[4]
இன்று உலகில் பரவலாகப் பயன்பாட்டில் உள்ள நாட்காட்டியான இது கிமு 45-இல் உரோமைப் பேரரசர் யூலியசு சீசரால் உருவாக்கப்பட்ட யூலியன் நாட்காட்டியின் (Julian calendar) ஒரு திருத்தப்பட்ட வடிவமாகும். இத்தாலியரான அலோயிசியசு இலிலியசு என்ற மருத்துவரால் முன்வைக்கப்பட்டது. இது 1582 பிப்ரவரி 24 இல் அப்போதைய திருத்தந்தை பதின்மூன்றாம் கிரகோரியின் ஆணைப்படி துவக்கி வைக்கப்பட்டது. இதன் காரணமாகப் பின்னாளில் இந்நாட்காட்டிக்கு "கிரகோரியன் நாட்காட்டி" என்னும் பெயர் வழங்கலாயிற்று.
இந்த நாட்காடியின் படி இயேசு பிறந்ததாகக் கணிக்கப்பட்ட ஆண்டிலிருந்து ஆண்டுகள் இலக்கமிடப்பட்டன. மேலும் இக்காலப்பகுதி "ஆண்டவரின் ஆண்டு" எனவும் பெயரிடப்பட்டது. இது கிபி 6-ஆம் நூற்றாண்டில் தயனீசியசு எக்சீகுவசு என்னும் கிறித்தவத் துறவியால் உரோமையில் துவக்கப்பட்ட ஆண்டுக் கணிப்பு முறையாகும்.
கிரிகோரியன் நாட்காட்டி பயன்படுத்தும் முன்னர் இருந்த உரோமானிய நாட்காட்டியில் சனவரி, பிப்ரவரி, மார்ச்சு, ஏப்ரல், மே, சூன், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், திசம்பர் எனப் பத்து மாதங்கள் கொண்டதே ஒரு ஆண்டாகும். பின்னரே சூலை மற்றும் ஆகத்து மாதங்கள் சேர்க்கப்பட்டன.
கிரகோரியின் நாட்காட்டியானது 'சூலியன் நாட்காட்டியின்' சராசரி ஆண்டைவிட நீளமாகக் காணப்பட்டமையால் இளவேனிற் சம இராப்பகல் நாள், நாட்காட்டியில் பின்னோக்கி நகர்வதைத் திருத்துவதற்காக முன்கொணரப்பட்டது.அதாவது கிபி.1752 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதத்தில் சுமார் 10 நாட்கள் கிரிகோரியன் நாட்காட்டியில் இருந்து கழிக்கப் பட்டது.மேலும் உயிர்த்த ஞாயிறு நாளைக் கணக்கிட பயன்பட்ட சந்திர நாட்காட்டியும் பல குறைகளைக் கொண்டிருந்ததும் இன்னொரு முக்கிய காரணமாகும்.
எசுப்பானியா, போர்ச்சுக்கல், போலந்து-லித்துவேனியா பொதுநலவாயம், இத்தாலியின் பெரும்பகுதிகள் போன்றவையே கிரிகோரியன் நாட்காட்டியை முதலில் ஏற்றுக் கொண்டன. 1582 அக்டோபர் முதல் இவை கிரிகோரியன் நாட்காட்டியைப் பயன்படுத்தத் தொடங்கின. இங்கிலாந்தும் அமெரிக்காவும் 1752-ஆம் ஆண்டிற்குப் பிறகே கிரிகோரியன் நாட்காட்டியை அங்கீகரித்தன. ஆங்கிலேய ஆட்சி காலத்தில் இந்தியாவிலும் இந்த நாட்காட்டி புழக்கத்திற்கு வந்தது. கிரிகோரியன் நாட்காட்டியைக் கடைசியாக ஏற்றுக் கொண்ட நாடுகளில் கடைசியாக வருவது கிரேக்கம் ஆகும். 1923 பிப்ரவரி 15 இல் தான் இந்நாடு கிரிகோரியன் நாட்காட்டியை அங்கீகரித்தது.