காங்கேசன்துறை தேர்தல் தொகுதி
From Wikipedia, the free encyclopedia
காங்கேசன்துறை தேர்தல் தொகுதி (Kankesanthurai Electorate) என்பது 1931 முதல் பெப்ரவரி 1989 வரை இலங்கையில் நடைமுறையில் இருந்த ஒரு அங்கத்தவர் தேர்தல் தொகுதியாகும். இத்தேர்தல் தொகுதி இலங்கையின் வட மாகாணத்தில், யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் காங்கேசன்துறை பட்டினசபை, பண்டத்தரிப்பு கிராமசபை, தெல்லிப்பழை கிராமசபை, மல்லாகம் கிராமசபை, மயிலிட்டி கிராமசபை என்பனவற்றை உள்ளடக்கியது.
1978 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பின் படி, இலங்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, நடைமுறையில் இருந்த 160 தேர்தல் தொகுதிகள் கலைக்கப்பட்டு பதிலாக 22 பல-அங்கத்தவர்களைக் கொண்ட தேர்தல் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன[1]. 1989 தேர்தலில் காங்கேசன்துறை தேர்தல் தொகுதி யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் உள்ளடக்கப்பட்டது.