பேரரசர் அலெக்சாந்தர்
மாசிடோனின் இராணுவத் தளபதி மற்றும் மன்னன் / From Wikipedia, the free encyclopedia
மாசிடோனின் மூன்றாம் அலெக்சாந்தர் (Alexander III of Macedon; பண்டைக் கிரேக்கம்: Ἀλέξανδρος அலெக்சாந்துரோசு; 20/21 சூலை 356 பொ. ஊ. மு. – 10/11 சூன் 323 பொ. ஊ. மு.) என்பவர் பண்டைக் கிரேக்க இராச்சியமான மாசிடோனின் மன்னன் ஆவார்.[a] இவர் பொதுவாக மகா அலெக்சாந்தர்[lower-alpha 1] என்று அறியப்படுகிறார். இவர் தனது தந்தை இரண்டாம் பிலிப்புக்குப் பிறகு, கி. மு. 336ஆம் ஆண்டில், தன் 20ஆம் வயதில் அரியணைக்கு வந்தார். தன்னுடைய பெரும்பாலான ஆட்சிக் காலத்தை மேற்கு ஆசியா மற்றும் எகிப்து முழுவதும் நடத்திய ஒரு நீண்ட இராணுவப் படையெடுப்பில் செலவழித்தார். தன் 30ஆம் வயதில் வரலாற்றின் மிகப் பெரிய பேரரசுகளில் ஒன்றை உருவாக்கினார். இப்பேரரசு கிரேக்கம் முதல் வடமேற்கு இந்தியா வரை பரவியிருந்தது.[2] இவர் யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்டதே கிடையாது. வரலாற்றின் மிகச் சிறந்த மற்றும் மிக வெற்றிகரமான இராணுவத் தளபதிகளில் ஒருவராக, பரவலாகப் பெரும்பாலானவர்களால் இவர் கருதப்படுகிறார்.[3][4]
மூன்றாம் அலெக்சாந்தர் | |||||
---|---|---|---|---|---|
ஓர் உரோமானிய பளபளப்புக் கல்லில் அலெக்சாந்தர் உருவம் | |||||
மாசிடோனியாவின் மன்னன் | |||||
ஆட்சிக்காலம் | கி. மு. 336 – கி. மு. 323 | ||||
முன்னையவர் | இரண்டாம் பிலிப் | ||||
பின்னையவர் |
| ||||
எலனியக் காலத்தின் ஆதிக்கவாதி | |||||
ஆட்சிக்காலம் | கிமு. 336 - கிமு. 323 | ||||
முன்னையவர் | இரண்டாம் பிலிப் | ||||
பின்னையவர் | திமேத்ரியசு போலியோர்சிதேசு | ||||
எகிப்தின் பார்வோன் | |||||
ஆட்சிக்காலம் | கி. மு. 332 – கி. மு. 323 | ||||
முன்னையவர் | மூன்றாம் தாரா | ||||
பின்னையவர் |
| ||||
பாரசீகப் பேரரசர் | |||||
ஆட்சிக்காலம் | கிமு. 330 – கி. மு. 323 | ||||
முன்னையவர் | மூன்றாம் தாரா | ||||
பின்னையவர் |
| ||||
பிறப்பு | 20 அல்லது 21 சூலை, கி. மு. 356 பெல்லா, மாசிடோனியா | ||||
இறப்பு | 10 அல்லது 11 சூன், கி. மு. 323 (அகவை 32) பாபிலோன், மெசொப்பொத்தேமியா | ||||
துணைவர் |
| ||||
குழந்தைகளின் பெயர்கள் |
| ||||
| |||||
கிரேக்கம் | Ἀλέξανδρος[d] | ||||
அரசமரபு | அர்கியாத் | ||||
தந்தை | மக்கெடோனின் இரண்டாம் பிலிப் | ||||
தாய் | எபிருசின் ஒலிம்பியாசு | ||||
மதம் | பண்டைய கிரேக்க சமயம் |
தன் 16ஆம் வயது வரை அலெக்சாந்தர் அரிசுட்டாட்டிலால் பயிற்றுவிக்கப்பட்டார். கி. மு. 335இல் மாசிடோனின் மன்னர் என்ற அதிகாரத்தைப் பெற்ற பிறகு, பால்கன் பகுதியில் இவர் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டார். திரேசு மற்றும் இல்லீரியா மீது கட்டுப்பாட்டை மீண்டும் உறுதி செய்தார். தீப்ஸை நோக்கி அணிவகுத்தார். இறுதியாக இந்த யுத்தத்தில் தீப்ஸானது அழிக்கப்பட்டது. பிறகு, கோரிந்து குழுமத்துக்கு அலெக்சாந்தர் தலைமை தாங்கினார். இவரது தந்தை கனவு கண்ட, எலனிய உலகு அனைத்தையும் ஒன்றிணைக்கும் திட்டத்திற்காகத் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தத் தொடங்கினார். பாரசீகத்தின் மீது படையெடுத்த போது, அனைத்துக் கிரேக்கர்களுக்குமான தலைமைப் பொறுப்பை ஏற்றார்.[5][6]
கி. மு. 334ஆம் ஆண்டு இவர் அகாமனிசியப் பாரசீகப் பேரரசு மீது படையெடுத்தார். 10 ஆண்டுகளுக்கு நீடித்த ஒரு தொடர்ச்சியான இராணுவப் படையெடுப்பைத் தொடங்கினார். ஆசியா மைனரை வெற்றி கொண்ட பிறகு, இசுசு மற்றும் கௌகமேலா உள்ளிட்ட ஒரு தொடர்ச்சியான தீர்க்கமான யுத்தங்களில் அகமானிசியப் பாரசீகத்தின் சக்தியை உடைத்தார். இறுதியாக, மூன்றாம் தாராவைப் பதவியில் இருந்து தூக்கி எறிந்தார். அகமானிசியப் பேரரசு முழுவதையும் கைப்பற்றினார்.[b][7] பாரசீகத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, மாசிடோனியப் பேரரசானது ஏட்ரியாட்டிக் கடல் முதல் சிந்து ஆறு வரை இருந்த ஒரு பரந்த நிலப்பரப்பைத் தன்னகத்தே கொண்டிருந்தது. "உலகின் எல்லைகள் மற்றும் பெரிய வெளிக் கடலை" அடைய அலெக்சாந்தர் அரு முயற்சி செய்தார். கி. மு. 323இல் இந்தியா மீது படையெடுத்தார். தற்போதைய பஞ்சாப் பகுதியின், ஒரு பண்டைய இந்திய மன்னனான போரசுக்கு எதிராகச் செலம் போரில் இவர் வென்றார். வீட்டு நினைவு காரணமாக மனச் சோர்வடைந்த இவரது துருப்புக்களின் கோரிக்கையால் பியாஸ் ஆற்றின் அருகில் இறுதியாகத் தன் நாட்டிற்குத் திரும்பிப் பயணிக்க ஆரம்பித்தார். பிறகு, பாபிலோனில் கி. மு. 323இல் இறந்தார். மெசொப்பொத்தேமியாவின் நகரான பாபிலோனைத் தனது பேரரசின் தலைநகரமாக நிறுவ இவர் திட்டமிட்டிருந்தார். மேற்கொண்டு, ஒரு தொடர்ச்சியான திட்டமிடப்பட்ட இராணுவ மற்றும் வணிக நடவடிக்கைகள் அலெக்சாந்தரின் இறப்பால் தொடங்காமல் அப்படியே விடப்பட்டன. அதன் முதல் திட்டமானது அரேபியா மீதான ஒரு கிரேக்கப் படையெடுப்பில் இருந்து தொடங்குவதாக இருந்தது. இவரது இறப்பிற்கு பின் வந்த ஆண்டுகளில் மாசிடோனியப் பேரரசு முழுவதும் ஒரு தொடர்ச்சியான உள்நாட்டுப் போர்கள் ஏற்பட ஆரம்பித்தன. இறுதியாக தியாடோச்சியின் கைகளில் பேரரசானது சிதறுண்டது.
இவரது இறப்பானது எலனியக் காலத்தின் தொடக்கத்தைக் குறித்தது. கிரேக்கப் பௌத்தம் மற்றும் எலனிய யூதம் போன்ற கலாச்சாரப் பரவல் மற்றும் கலப்பை இவரது படையெடுப்புகள் தொடங்கி வைத்தன. இவர் தன் பெயரைக் கொண்ட 20க்கும் மேற்பட்ட நகரங்களை நிறுவினார். இதில் மிக முக்கியமானது எகிப்தில் உள்ள அலெக்சாந்திரியா ஆகும். கிரேக்கக் காலனியவாதிகளை அலெக்சாந்தர் குடியமர்த்தியது மற்றும் அதன் விளைவாகக் கிரேக்கக் கலாச்சாரம் பரவியது ஆகியவை காரணமாக எலனிய நாகரிகத்தின் பெரிய அளவிலான ஆதிக்கமும், தாக்கமும் கிழக்கே இந்தியத் துணைக்கண்டம் வரை பரவியிருந்தது. எலனியக் காலமானது உரோமைப் பேரரசு மூலமாக நவீன மேற்கத்திய நாகரிகமாக வளர்ச்சி அடைந்தது. இவரது பேரரசின் இணைப்பு மொழியாகக் கிரேக்க மொழி விளங்கியது. கி. பி. 15ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பைசாந்தியப் பேரரசு சிதைவடையும் வரை அதன் முக்கியமான மொழியாகக் கிரேக்க மொழி விளங்கியது. 1910கள் மற்றும் 1920களின் ஆரம்பங்களில் நடைபெற்ற கிரேக்க இனப்படுகொலை வரையிலும், 1920களின் நடுவில் நடந்த கிரேக்க-துருக்கிய மக்கட்தொகைப் பரிமாற்றம் வரையிலும், நடு அனத்தோலியா மற்றும் தூரக் கிழக்கு அனத்தோலியாவில் கிரேக்க மொழி பேசும் சமூகங்கள் எஞ்சியிருந்தன. அக்கீலியஸைப் போன்ற ஒரு பாரம்பரிய வீரனாக, கிரேக்க மற்றும் கிரேக்கம் அல்லாத கலாச்சாரங்களின் வரலாற்று மற்றும் புராணப் பாரம்பரியங்களில் இவர் முக்கியத்துவம் பெற்றார். இவருடைய இராணுவச் சாதனைகளும், யுத்தத்தில் அதற்கு முன் பெற்றிராத வெற்றிகளும், பிற்கால இராணுவத் தலைவர்களை ஒப்பிட்டுப் பார்க்கும் ஓர் அளவீடாக இவரை ஆக்கியது.[c] இவரது உத்திகள் உலகெங்கும் உள்ள இராணுவ அமைப்புகளில் ஒரு முக்கியமான ஆய்வுப் பாடமாகத் தொடர்கின்றன.[8]