![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1c/Vijaykanth_at_the_Sagaptham_Audio_Launch.jpg/640px-Vijaykanth_at_the_Sagaptham_Audio_Launch.jpg&w=640&q=50)
விசயகாந்து
இந்திய திரைப்பட நடிகர் மற்றும் அரசியல்வாதி (1952-2023) / From Wikipedia, the free encyclopedia
விசயகாந்து (Vijayakanth, விஜயகாந்த்; இயற்பெயர்: விஜயராஜ், 25 ஆகத்து 1952 – 28 திசம்பர் 2023) ஒரு திரைப்பட நடிகரும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் கட்சியின் நிறுவனத் தலைவரும் ஆவார். இவர் 2006 முதல் 2016 வரை தமிழ்நாடு சட்ட மன்ற உறுப்பினராகவும், 2011ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். இவரது நான்கு தசாப்த திரை வாழ்க்கையில் இவர் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். வைதேகி காத்திருந்தாள் (1984), அம்மன் கோவில் கிழக்காலே (1986), பூந்தோட்ட காவல்காரன் (1988), செந்தூரப்பூவே (1988), புலன் விசாரணை (1990), சின்ன கவுண்டர் (1992), ஆனஸ்ட் ராஜ் (1994), தாயகம் (1996) மற்றும் வானத்தைப் போல (2000) ஆகிய திரைப்படங்களில் இவரது நடிப்பிற்காக இவர் அறியப்படுகிறார்.[4]
விஜயகாந்த் | |
---|---|
![]() | |
தமிழகச் சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் | |
பதவியில் 13 மே 2011 – 19 மே 2016 | |
முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா ஓ. பன்னீர்செல்வம் |
சபாநாயகர் | து. ஜெயக்குமார் ப. தனபால் |
முன்னையவர் | ஜெ. ஜெயலலிதா |
பின்னவர் | மு. க. ஸ்டாலின் |
தமிழகச் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 13 மே 2011 – 19 மே 2016 | |
முன்னையவர் | எஸ். சிவராஜ் |
பின்னவர் | கே. வசந்தம் கார்த்திகேயன் |
தொகுதி | ரிஷிவந்தியம் |
பதவியில் 8 மே 2006 – 8 மே 2011 | |
முன்னையவர் | ஆர். கோவிந்தசாமி |
பின்னவர் | வி. முத்துக்குமார் |
தொகுதி | விருத்தாச்சலம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | விசயராஜ் அழகர்சாமி (1952-08-25)25 ஆகத்து 1952 மதுரை, மதராசு மாநிலம் (தற்போது தமிழ்நாடு), இந்தியா |
இறப்பு | 28 திசம்பர் 2023(2023-12-28) (அகவை 71) சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
குடியுரிமை | இந்தியர் |
அரசியல் கட்சி | தேசிய முற்போக்கு திராவிட கழகம் |
துணைவர் | பிரேமலதா விசயகாந்து |
பிள்ளைகள் | விசய பிரபாகரன், சண்முகபாண்டியன் |
வாழிடம்(s) | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
வேலை | |
விருதுகள் |
|
புனைப்பெயர்கள் | |
இவர் இரண்டு பிலிம்பேர் விருதுகளையும், மூன்று தமிழக அரசு திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ளார். தமிழ் நாட்டின் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான கலைமாமணி விருது இவருக்கு 2001ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.[5][6] செந்தூரப் பூவே திரைப்படத்தில் இவரது கதாபாத்திரத்திற்காக 1988ஆம் ஆண்டில் இவர் சிறந்த நடிகருக்கான தமிழக அரசு திரைப்பட விருதை வென்றுள்ளார். தாயகம் திரைப்படத்தில் இவரது கதாபாத்திரத்திற்காக 1996ஆம் ஆண்டில் தமிழக அரசின் திரைப்பட விருதுகள்-சிறப்புப் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. இவர் மேலும் இரு சினிமா எக்சுபிரசு மற்றும் ஒரு தென்னிந்திய பிலிம்பேர் விருதைப் பெற்றுள்ளார். தன் திரை வாழ்க்கை முழுவதும் தமிழ் திரைப்படங்களில் மட்டுமே நடித்த மிகச் சில தமிழ் திரைத் துறை கதாநாயகர்களில் விசயகாந்தும் ஒருவர் ஆவார். இவரது திரைப்படங்கள் தெலுங்கு மற்றும் இந்திக்கு மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இவர் தன் திரை வாழ்க்கை முழுவதும் இரசிகர்கள் மற்றும் சக திரைத் துறையினரிடமிருந்து பல பட்டப் பெயர்களைப் பெற்றுள்ளார். இவரது 100வது திரைப்படமான கேப்டன் பிரபாகரன் (1991) மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் (2000–2006) மாற்றத்தை ஏற்படுத்திய இவரது தலைமைத்துவத்திற்காக இவர் "கேப்டன்" என்ற பட்டப் பெயரைப் பெற்றார். இவரது தலைமைத்துவத்தின் கீழ் நடிகர் சங்கமானது கடன்களிலிருந்து மீண்டது. குறைந்த ஊதியம் பெற்ற உறுப்பினர்களுக்கு இவர் ஓய்வூதியத்தைக் கொண்டு வந்தார்.[7][8] புரட்சிகரமான கதாபாத்திரங்களில் நடித்ததால் இவர் "புரட்சிக் கலைஞர்" என்ற பட்டத்தை எஸ். தாணுவிடமிருந்து பெற்றார்.[9] ஏழைக் குடும்பங்களுக்கான உதவி மற்றும் தமிழ் திரைத் துறையின் நலிவுற்ற நடிகர்களுக்கான உதவிகள் ஆகிய மனிதாபிமான உதவிகளை வழங்கியதன் காரணமாக இவர் "கருப்பு எம். ஜி. ஆர்." என்ற பட்டப் பெயரைப் பெற்றார்.[10] இவர் படப்பிடிப்புத் தளங்களில் அனைவருக்கும் சம தரத்திலான உணவு வழங்கப்பட வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டிற்காக அறியப்படுகிறார். குறைந்த ஊதியம் பெறும் நடிகர்களுக்கும், படக்குழு உறுப்பினர்களுக்கும் தனக்கு வழங்கப்படும் அதே தரத்திலான உணவே வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார். அவ்வாறு வழங்கப்படுவதை உறுதியும் செய்தார்.[11] தயாரிப்பாளர்களுக்கு உதவுவதற்காக சில படங்களுக்கு தன் சம்பளத்தில் ஒரு பங்கையும் விட்டுக் கொடுத்தார்.[12]
இவர் இவரது அரசியல் வாழ்க்கையின் போது தனது "வெளிப்படையான மற்றும் துணிவான நிலைப்பாட்டிற்காக" அறியப்படுகிறார்.[6] தேசிய முற்போக்குத் திராவிடக் கழகத்தை 2005இல் நிறுவியதற்குப் பிறகு, 2006 முதல் 2016 வரை விருத்தாச்சலம் மற்றும் இரிஷிவந்தியம் ஆகிய தொகுதிகளை தலா ஒரு முறை பிரதிநிதித்துவப்படுத்தி மொத்தம் இரு முறை இவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தே. மு. தி. க. இரண்டாவது அதிக தொகுதிகளைப் பெற்றது. இவர் தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரானார். 2016ஆம் ஆண்டு வரை அப்பதவியில் தொடர்ந்தார். இவர் உடல் நலம் குன்றி வந்த காலத்தில் தே. மு. தி. க. தலைவராக தான் 2023இல் இறக்கும் வரையில் தொடர்ந்தார்.