முதலாம் இராஜராஜ சோழன்
இந்திய பேரரசர், தஞ்சை பெரிய கோவிலை கட்ட உத்திரவிட்டவர். / From Wikipedia, the free encyclopedia
அருண்மொழிவர்மன் அல்லது அருள்மொழிவர்மன் என்கின்ற பேரரசர் இராசகேசரி வர்மன் முதலாம் இராசராச சோழன் சோழ பேரரசின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவனாவார். 'சோழ மரபினரின் பொற்காலம்' என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் பொ.ஊ. 985 முதல் பொ.ஊ. 1014 வரையாகும். இவர் மகன் முதலாம் இராசேந்திரன் காலத்தில் சோழநாடு கடல் கடந்து பரவிய பெருமைக்கு அடிகோலியதும் இம்மன்னனே. இராசராச சோழனின் முப்பதாண்டு ஆட்சிக்காலமே சோழப் பேரரசின் வரலாற்றில் மிக முக்கியமாக விளங்கியது. ஆட்சி முறை, இராணுவம், நுண்கலை, கட்டிடக்கலை, சமயம், இலக்கியம் ஆகிய பல்வேறு துறைகளில் புதிய எழுச்சியைக் கண்ட சோழப்பேரரசின் கொள்கைகள் இவருடைய ஆட்சியில் உருப்பெற்றவையே.[4]
முதலாம் இராஜராஜ சோழன் | |
---|---|
இராசகேசரி வர்மன்[1][2] மும்முடிச்சோழன்,[3] சிவபாதரசேகரன், சோழ நாராயணன், கேரளாந்தகன், சிங்களாந்தகன், பாண்டிய குலசனி, அழகிய சோழன், தெலுங்கு குல காலன், தைல குல காலன், செயங்கொண்டான், திருமுறை கண்ட சோழன், சத்திரிய சிகாமணி | |
தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் உள்ள இராசராசனின் ஓவியம். | |
சோழப் பேரரசு | |
ஆட்சிக்காலம் | அண். 985 – அண். 1014 |
முன்னையவர் | உத்தம சோழன் |
பின்னையவர் | இராசேந்திர சோழன் |
அனுராதபுர மன்னர் | |
ஆட்சிக்காலம் | அண். 992 – அண். 1014 |
முன்னையவர் | ஐந்தாம் மகிந்தன் |
பின்னையவர் | இராசேந்திர சோழன் |
பிறப்பு | அருண்மொழிவர்மன் அண். 947 தஞ்சாவூர், சோழ நாடு (தற்கால தமிழ்நாடு, இந்தியா) |
இறப்பு | 1014 ( 66–67 வயதில்) தஞ்சாவூர், சோழ நாடு (தற்கால தமிழ்நாடு, இந்தியா) |
துணைவர் | திருபுவன மாதேவியார் லோகமாதேவி சோழமாதேவி திரிலோகியமாதேவி, பஞ்சவன்மாதேவி அபிமானவல்லி லதாமாதேவி பிருத்திவிமாதேவி |
குழந்தைகளின் பெயர்கள் |
|
அரசமரபு | சோழர் |
தந்தை | சுந்தர சோழன் |
தாய் | வானவன்மாதேவியார் |
மதம் | சைவ சமயம் |
கையொப்பம் |
இவர் பொ.ஊ. 957 முதல் பொ.ஊ. 973 வரை சோழ நாட்டை ஆண்ட சுந்தர சோழனுடைய இரண்டாவது மகனாவார். சுந்தர சோழனுக்கும் சேர நாட்டு வானவன் மாதேவிக்கும் ஐப்பசி திங்கள் சதய நன்னாளில் பிறந்த இவரது இயற்பெயர் "அருண்மொழிவர்மன்". இராசகேசரி அருண்மொழிவர்மன் என்ற பெயராலேயே தன் ஆட்சியின் தொடக்க காலத்தில் இம்மன்னர் அழைக்கப்பட்டார். இவர் ஆட்சியின் 3ம் ஆண்டு முதலே இராசராச சோழன் எனப்பட்டார் (988) தந்தை இறந்ததும் இவர் உடனடியாகப் பதவிக்கு வரவில்லை. 15 வருடகால உத்தம சோழனின் ஆட்சிக்குப் பின்னரே இவர் செத்திரிய முறைபடி ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இராசராசசோழன் தன்னை அரசர்களுக்கு எல்லாம் அரசன் (சத்திரிய சிகாமணி) என்று புனைபெயர் கொண்டு வாழ்ந்தார். விசயாலய சோழன் நிறுவிய சோழ அரசு இவர் காலத்திலும் இவர் மகன் இராசேந்திர சோழன் காலத்திலும் மிக உயர்நிலை எய்தியது. இராசராசனின் காலம் பிற்காலச் சோழர் வரலாற்றில் மட்டுமன்றித் தென்னிந்திய வரலாற்றிலேயே ஒரு பொற்காலமாகும்.