குயில் இசை From Wikipedia, the free encyclopedia
தமிழ்ச் சூழலில் வளர்ச்சி பெற்ற இசை தமிழிசை ஆகும். குறிப்பாகத் தமிழர்களின் செவ்விய இசை முறைமையைக் குறிக்கிறது. தமிழர் வாழ்வின் தாலாட்டில் இருந்து ஒப்பாரி வரை ஒவ்வொரு பருவத்திலும் இசை ஒரு முக்கிய கூறு. இயல், இசை, நாடகம் என்று தமிழை முத்தமிழாகப் பாகுபடுத்தி, இசைக்கு முன்னுரிமை பழங்காலத்திலிருந்து தரப்பட்டது. பண்டைப் பண் இசை, செவ்வியல் தமிழ் இசை, பக்தி இசை, நாட்டார் இசை, திரையிசை, சொல்லிசை எனத் தமிழிசையின் வடிவங்கள் பல. கால ஓட்டத்தில் தமிழிசை சிறப்புற்று இருந்த காலங்களும் உள்ளன; வேற்று மொழி மரபுகளின் ஆதிக்கத்தில் தேக்க நிலையில் இருந்த காலங்களும் உள்ளன. 20-ஆம் நூற்றாண்டில் தமிழிசை மீட்கப்பட்டு, மீளுருவாக்கம் செய்யப்பட்டு, தற்போது மீண்டும் வளர்ந்து வருகிறது.
வாய்மொழி இலக்கியங்கள், எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்கள், கல்வெட்டுகள், தமிழிசை ஆய்வுகள், அயல்நாட்டார் குறிப்புகள் ஆகியவை தமிழிசை பற்றி அறிய எமக்கு உதவுகின்றன. சங்க நூல்களான தொல்காப்பியம், கூத்தநூல், பரிபாடல், புறநானூறு, அகநானூறு, பத்துப்பாட்டு போன்ற நூல்களில் தமிழிசை பற்றிய குறிப்புகள் பல உள்ளன..[1] பெருநாரை, பெருங்குருகு, பேரிசை, சிற்றிசை, இசைநுணுக்கம், பஞ்ச மரபு போன்ற தற்போது கிடைக்கப்பெறாத பல பண்டைத் தமிழிசை நூல்கள் பற்றிய குறிப்புகளையும் பிற நூல்கள் வரையாக அறியமுடிகிறது.
சங்கம் மருவிய காலத்து நூலான சிலப்பதிகாரம் தமிழிசை பற்றிப் பல விரிவான விளக்கங்களைத் தருகிறது. சிலப்பதிகாரத்தின் அரும்பதவுரையும், அடியார்க்கு நல்லாருரையும் மேலும் பல பயனுள்ள குறிப்புகளைத் தருகின்றன. அக்காலத்தில் எழுதப்பெற்ற மணிமேகலை, திருமந்திரம், சீவக சிந்தாமணி ஆகிய நூல்களிலும் தமிழிசை பற்றிய செய்திகள் உள்ளன. அதே காலப் பகுதியிலேயே தோன்றிய காரைக்கால் அம்மையார் அருமையான தமிழிசைப் பாடல்களை ஆக்கி உள்ளார்.
பக்தி காலத்தில் (கிபி 700 - 1200) தமிழிசையை அப்பர், திருஞான சம்பந்தர், சுந்தரர் முதலான நாயன்மார்களினது தேவாரங்களும், பன்னிரு ஆழ்வார்களினது நாலாயிரத்திவ்ய பிரபந்தமும் வளப்படுத்தின. இக்காலத்தில் இயற்றப்பெற்ற திவாகரம், பிங்கலம் போன்ற நிகண்டுகளிலும் தமிழிசைச் சொற்களுக்கு விளக்கங்கள் உள்ளன. பட்டினத்தார், இடைக் காட்டுச்சித்தர் ஆகியோரும் இக் காலத்தவரே.
பக்தி காலத்தைத் தொடர்ந்த இடைக் காலத்தில் தமிழிசை நலிவுற்று இருந்தது. எனினும் கிபி 15-ஆம் நூற்றாண்டில் தோன்றிய அருணகிரிநாதர் திருப்புகழ் இயற்றினார். இதில் உள்ள இசைத்தாளங்கள் தனித்தன்மை பெற்றவை. குமரகுருபரர், முத்துத் தாண்டவர் ஆகியோர் இக்காலத்தைச் சேர்தவர்கள்.
முதன்மைக் கட்டுரை: தமிழிசை வரலாறு
காண்க: பழந்தமிழ் இசை
தமிழிசை வரலாற்றை ஐந்து கால கட்டங்களாகப் பிரிக்கலாம்.
சங்க காலத்தில் தமிழிசை சிறப்புற்று இருந்தது. இதைச் சங்க இலக்கியங்கள் ஊடாக அறிய முடிகிறது. அதைத் தொடர்ந்து சமணர் தமிழ்நாட்டில் செல்வாக்குச் செலுத்தினர். சமணர் இசையை எதிர்த்தனர். அதனால் இசை நலிவுற்றது. இது தமிழிசையின் முதல் இருண்டகாலமாகக் கூறப்படுகிறது. [2] ஏறக்குறைய கிபி 7-ஆம் நூற்றாண்டில் தமிழ்ப் பக்தி இயக்கம் வீச்சுக் கொண்டது. சைவமும் வைணவமும் செல்வாக்குப் பெற்றன. நாயன்மார்களின் தேவாரங்கள் ஊடாகவும், ஆழ்வார்களின் பிரபந்தங்கள் ஊடாகவும் தமிழிசை வளர்ச்சி பெற்றது.
கிபி 14-ஆம் நூற்றாண்டில் டெல்லி சுல்தான்கள் தமிழகத்தை ஆக்கிரமிக்கித்தார்கள். அப்போது கோயில்கள் அழிக்கப்பட்டன, தமிழகத்தின் கலைகள் நலிவுற்றன. இது தமிழிசைக்கு இரண்டாம் இருண்டகாலம்.[3] இதைத் தொடர்ந்து லுங்கு விசய நகர அரசர்கள் தமிழ்நாட்டை ஆட்சி செய்தார்கள். இவர்கள் கோயில்களுக்கு ஆதரவு தந்தார்கள், ஆனால் தமிழிசைக்கு ஆதரவு தரவில்லை. மாற்றாக தெலுங்கு மொழிக்கும், இசைக்கும் ஆதரவு தந்தார்கள். 16 ம் நூற்றாண்டில் தமிழிசையின் மரபுகள் நுணுக்கங்கள் பல உள்வாங்கப்பட்டு கருநாடக இசையாக உருவகப்படுத்தப்பட்டது. இதனால் இருபதாம் நூற்றாண்டு வரை, தமிழிசை இயக்கம் தொடங்கும் வரை தமிழிசை நலிவுற்று, தேக்க நிலையில் இருந்தது.
19-ஆம், 20-ஆம் நூற்றாண்டுகளில் தமிழ் மொழியும் இலக்கியமும் போன்றே தமிழிசையும் மறுமலர்ச்சி பெற்றது. தமிழிசையை ஆழமாக விரிவாக ஆராய்ந்து ஆபிரகாம் பண்டிதர் கருணாமிர்த சாகரம் என்ற 1346 பக்கங்கள் கொண்ட நூலை 1917-இல் வெளியிட்டார். இன்றுவரை தமிழிசை ஆய்வுகளுக்கு இது ஒரு முல நூலாக உள்ளது.[4]
தமிழிசையில் அடிப்படை ஒலி நிலைகளைச் சுரம் என்று வழங்கப்பட்டது.
தமிழிசையின் அடிப்படை வடிவங்களை பண் என்று வழங்கப்பட்டது. 'பாலை யாழ்', 'குறிஞ்சி யாழ்', 'மருத யாழ்', 'நெய்தல் யாழ்' என்பன முதன்மையான பண்கள் ஆகும். மொத்தம் 103 பண்கள் தொகுக்கப்பட்டு, அவற்றுக்கான குறிப்புகளும் இயற்றப்பட்டுள்ளன. பண்ணை விரிவாக்கி பாடுதலுக்கு 'ஆளத்தி' என வழங்கப்பட்டது.
தமிழ் இசையின் சிறப்பான பாலைகளான ஏழ்பெரும் பாலைகள் முறையே, செம்பாலை, படுமலைப்பாலை, செவ்வழிப்பாலை, அரும்பாலை, கோடிப்பாலை, விளரிப்பாலை, மேற்செம்பாலை எனச் சிலம்பு அரங்கேற்றுக்காதையில் இளங்கோவடிகள் குறிப்பிட்ட வரிசை முறையை அடிப்படையாகக் கொண்டு தமிழ்ப் பண்கள் இசைக்கப்பட்டன[5].
இந்த ஏழ்பெரும் பாலைகளில் ஐந்து மட்டும் திணைப்பண்களாக தொல்காப்பியத்தில் குறிக்கப்பட்டன. தொல்காப்பிய காலத்தில் பெரும்பண்கள் யாழ் என்ற பெயரில் வழங்கப்பட்டன[6]. அந்த ஐந்து பெரும்பண்களில் இருந்து உருவான ஐந்து சிறுபண்களை யாழின் பகுதி என தொல்காப்பியம் குறிப்பிடுகிறது[7]. இந்த ஏழ்பெரும்பாலைகள் மற்றும் ஐந்து சிறுபண்கள் இவற்றிற்கு நிகரான தற்கால இராகங்களை கீழுள்ள பட்டியலில் காணலாம்.
ஏழ்பாலைகள் | திணை
யாழ் 5. |
கர்நாடக
இராகம் |
Greek
Mode |
யாழின்பகுதி,
சிறுபண்கள் 5. |
கர்நாடக
இராகம் |
Western
Pentatonics |
---|---|---|---|---|---|---|
செம்பாலை | முல்லையாழ் | அரிகாம்போதி | MixoLydian | முல்லைத்தீம்பாணி | மோகனம் | Pentatonic Major |
படுமலைப்பாலை | குறிஞ்சியாழ் | நடபைரவி | Aeolian | செந்துருத்தி | மத்தியமாவதி | Egyptian Suspended |
செவ்வழிப்பாலை | --- | இருமத்திமதோடி | Locrian | --- | --- | --- |
அரும்பாலை | பாலையாழ் | சங்கராபரணம் | Ionian | கொன்றை | சுத்த சாவேரி | Blues Major |
கோடிப்பாலை | மருதயாழ் | கரகரப்ரியா | Dorian | ஆம்பல் | சுத்ததன்யாசி | Pentatonic Minor |
விளரிப்பாலை | நெய்தல்யாழ் | தோடி | Phrygian | இந்தளம் | இந்தோளம் | Blues Minor |
மேற்செம்பாலை | --- | கல்யாணி | Lydian | --- | --- | --- |
தமிழிசையின் பண் அடிப்படைகள், பெயர்க் குழப்பங்கள், அதற்கான தீர்வுகள் பற்றி அறிந்துகொள்ள இக்கட்டுரையினை காணவும்[8].
பாடல்கள் மூன்று மண்டிலங்களான (சிதாயி) மெலிவு, சமண் மற்றும் வலிவு ஆகியவற்றில் இசைக்கப்பட்டது.
"தமிழர்கள் வாழ்க்கையில் தாயின் வயிற்றில் கருக்கொண்டதுமே நலுங்குப் பாடல், மண்ணில் உதித்ததுமே குழந்தைக்குத் தாலாட்டுப் பாடல், சிறுவர்களுக்கு நிலாப்பாடல், (பாரதியின் பாப்பா பாடல்), இளைய வயதில் வீரப்பாடல் மற்றும் காதல் பாடல், திருமணத்தில் திருமணப் பாட்டு, உயிர் துறந்தபின் ஒப்பாரிப் பாட்டு என மனித வாழ்க்கையின் அனைத்துப் பருவங்களிலும் தமிழ்ப் பாடல்கள் உள்ளன."[9]
முதன்மைக் கட்டுரை: தமிழிசை வாணர்கள்
முதன்மைக் கட்டுரை: தமிழர் இசைக்கருவித் தொழில்நுட்பம்
தமிழர், இசையிலும், இயலிலும், நாடகவியலிலும் மேம்பட்டு விளங்கி வந்தனர். சிற்றிசை, பேரிசை, இசைநூல், இசைநுணுக்கம், பஞ்சமரபு, தாளசமுத்திரம், ஆளத்தி அமைப்பு போன்ற எத்தனையோ இசைநூல்களும், கூத்துவரி, உளநூல், சயந்தம், செயிற்றியம் விளக்கத்தார் கூத்து, நாட்டியவிளக்கம் ஆகிய நாடக நூல்களும் அழிந்து போயின. சைவ சமயத்தைப் பரப்பிய தமிழிசை நூல்கள் சமணர்களால் அனல் வாதத்திலும், புனல் வாதத்திலும் எதிர்கொள்ளப்பட்டன.
தமிழிசையின் மூல நூல்கள் மற்றும் முக்கியமான ஆய்வு நூல்கள் பட்டியலை தினமணி நாளிதழ் வலைப்பக்கம் வெளியிட்டுள்ளது, அதை இங்கே காணலாம்[10].
தமிழிசையின் மேல் கடந்த 100 ஆண்டுகளில் நடந்த ஆய்வுகளின் நிலை பற்றி விபரமாக அறிய, “தமிழிசை ஆய்வும் மீட்பும்” எனும் இக்கட்டுரையைக் காணவும்[12].
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.