From Wikipedia, the free encyclopedia
இயேசு கோவில் (Church of the Gesù) என்பது உரோமை நகரில் அமைந்துள்ள கத்தோலிக்க வழிபாட்டிடங்களுள் முக்கியமான ஒன்றாகவும், இயேசு சபையின் மையக் கோவிலாகவும் விளங்குகிறது[1]. இக்கோவிலுக்கு "அர்ஜெந்தீனா பகுதியில் அமைந்த இயேசுவின் திருப்பெயர்க் கோவில்" (இத்தாலியம்:Chiesa del Santissimo Nome di Gesù all'Argentina) என்னும் நீண்ட பெயரும் உண்டு.
இயேசு கோவில் (Church of the Gesù) Chiesa del Santissimo Nome di Gesù all'Argentina | |
---|---|
இயேசு கோவில் முகப்புத் தோற்றம். பரோக்கு கலைப்பாணி முன்னோடி. கலைஞர்: ஜாக்கமோ தெல்லா போர்த்தா | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | உரோமை, இத்தாலியா |
புவியியல் ஆள்கூறுகள் | 41°53′45″N 12°28′47″E |
சமயம் | உரோமன் கத்தோலிக்கம் |
வழிபாட்டு முறை | இலத்தீன் |
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு | 1584 |
நிலை | கோவில் கட்டடப் பாணி |
தலைமை | தனியேலே லிபனோரி, சே.ச. |
இணையத் தளம் |
இக்கோவிலின் முகப்பு "பரோக்கு" கலைப் பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இப்பாணியில் பல கோவில்கள் உலகெங்கும் கட்டப்பட்டன. குறிப்பாக, இயேசு சபைத் துறவியர் தாம் கிறித்தவ மறையைப் பரப்பச் சென்ற நாடுகளில் இக்கலைப் பாணியில் கோவில்கள் கட்டியெழுப்பினர்.
இயேசு சபையின் நிறுவுநரான புனித லொயோலா இஞ்ஞாசியார் இக்கோவிலைக் கட்டுவதற்கான கருத்தை 1551ஆம் ஆண்டு முன்வைத்தார். புரடஸ்தாந்து சீர்திருத்தத்தின் போதும் அதைத் தொடர்ந்து கத்தோலிக்க திருச்சபையில் நிகழ்ந்த சீர்திருத்தத்தின் போதும் இக்கோவில் செயல்பாட்டு மையமாயிருந்தது. மேலும், இயேசு சபை 1773இல் முடக்கப்பட்ட ஆண்டு வரை இக்கோவில் இயேசு சபைத் தலைமையிடமாகவும் திகழ்ந்தது.
எசுப்பானியக் கர்தினால் பார்த்தொலோமேயோ தெ லா குஏவா என்பவர் உலகப் புகழ் பெற்ற மைக்கலாஞ்சலோ என்னும் கலைஞரை அணுகி, இயேசு கோவிலுக்கான கட்டட வரைவை ஆக்கித் தருமாறு கேட்டார். மைக்கலாஞ்சலோ இறைப்பற்றின் காரணமாக இக்கோவில் பணியை ஊதியமின்றிச் செய்துதருவதாகக் கூறியபோதிலும், கட்டடத்திற்கான நிதியை வழங்கியவர் கர்தினால் அலெஸ்ஸாண்ட்ரோ பர்னேசே என்பவராவார். இவர் இயேசு சபை நிறுவப்படுவதற்கு அதிகாரப்பூர்வமாக இசைவு வழங்கிய திருத்தந்தை மூன்றாம் பவுல் என்பவரின் பேரன் ஆவார்.
இறுதியில் இயேசு கோவிலைக் கட்டியெழுப்பிய முதன்மைக் கட்டடக் கலைஞர்கள் ஜாக்கமோ பரோத்ஸி தா விஞ்ஞோலா, மற்றும் ஜாக்கமோ தெல்லா போர்த்தா என்போர் ஆவர். இவர்களுள் முதலில் குறிப்பிட்டவர் பர்னேசே குடும்பத்திற்கான வேறு கட்டடப் பணிகளையும் செய்தவராவார்.
இயேசு கோவில் கட்டப்பட்ட அதே இடத்தில் வழியோர மரியா கோவில் (Santa Maria della Strada) என்றொரு வழிபாட்டிடம் இருந்தது. அங்கிருந்த மரியா படிமத்திற்கு முன் அமர்ந்து புனித லொயோலா இஞ்ஞாசியார் இறைவேண்டல் செய்திருந்தார். அந்த ஓவியப் படிமம் விலையுயர்ந்த கற்களால் அணிசெய்யப்பட்டு, இன்றைய இயேசு கோவிலில் புனித இஞ்ஞாசியார் பீடத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.
கோவில் கட்டடப் பணி விஞ்ஞோலா ஆக்கிய வரைவின்படி 1568 சூன் திங்கள் 26ஆம் நாள் தொடங்கியது. விஞ்ஞோலாவுக்குத் துணைவராகச் செயல்பட்டவர் இயேசு சபையைச் சார்ந்த ஜொவான்னி த்ரிஸ்தானோ என்பவர். இவர் விஞ்ஞோலாவின் பணியை 1571இலிருந்து தொடர்ந்தார். இவர் 1575இல் இறந்தபின் ஜொவான்னி தே ரோசிஸ் என்னும் இயேசு சபை உறுப்பினர் கட்டடப் பணியை முன்னெடுத்துச் சென்றார். ஜாக்கமோ தெல்லா போர்த்தா என்னும் கட்டடக் கலைஞர் இயேசு கோவிலின் குறுக்கு மேல் கூரை, குவிமாடம், மற்றும் பீடக் கூரைப் பகுதி ஆகியவற்றைக் கட்டுவதில் பங்கேற்றார்.
இயேசு கோவிலின் முகப்பு வரைவு முதலில் விஞ்ஞோலாவால் ஆக்கப்பட்டது. அவர் கோவில் முகப்பை ஒன்றன்மேன் ஒன்றாக அடுக்கிய மூன்று தளங்களை இணைப்பதுபோல் வரைந்தார். அவ்வரைவை ஜாக்கமோ தெல்லா போர்த்தா திருத்தியமைத்தார். அதன்படி, செங்குத்துப் பகுதி திடமாகவும் மேல்பகுதி குறுக்குவெட்டாக இழுநிலைப் பொருத்தமாக இணைவதும் தெரிகிறது. கட்டடக் கலை வரலாற்றாசிரியர்கள் இவ்விரு வரைவுகளையும் ஒப்பிட்டு ஆய்ந்துள்ளனர்.
கோவிலின் முகப்பில் பெரிய நடுவாயிலும் இரு பக்க வாயில்களும் உள்ளன. நடுவாயிலுக்கு மேலே இயேசு சபையினர் தேர்ந்துகொண்ட "IHS" என்னும் கிறிஸ்து பெயராக்கம் உள்ளது. அதன் இரு பக்கங்களிலும் இயேசு சபையோடு நெருங்கிய தொடர்புடைய இருவர் சிலைகள் உள்ளன. இடது புறம் இயேசு சபை நிறுவுனர் புனித இஞ்ஞாசியார் சிலையும் வலது புறம் இயேசு சபையின் தொடக்க கால உறுப்பினரும் அதன் புகழ்பெற்ற மறையறிவிப்பாளருமான புனித பிரான்சிசு சவேரியாரின் சிலை உள்ளது.
இயேசு கோவில் கலைப் பாணியை இயேசு சபையினர் உலகின் பல இடங்களில் தாம் கட்டிய கோவில் அமைப்புகளில் இன்றுவரை பயன்படுத்திவந்துள்ளனர். இயேசு சபையின் தாய்க்கோவிலாகிய இந்த இயேசு கோவிலின் கலைப் பாணி கத்தோலிக்க சீர்திருத்தத்துக்கு வழிவகுத்த திரிதெந்தீன் பொதுச்சங்கம் (1545-1563) அளித்த வழிமுறைகளின்படி அமைந்தது.
இக்கோவில் கட்டடப் பாணியின் சிறப்புக் கூறுகள் இவை:
இயேசு கோவில் "இலத்தீன் சிலுவை" வடிவம் கொண்டது. எனவே, அங்கு உள் நடுநீள் பகுதி தவிர பக்கவாட்டு நீள் பகுதிகள் இல்லை. மாறாக, நடுநீள் பகுதியின் இரு பக்கங்களிலும் பக்கத்திற்கு மூன்று என ஆறு சிறுகோவில்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று திருச்சிலுவைப் பீடமாகவும் மற்றொன்று கோவில் உடைக்காப்பகப் பகுதிக்குள் புகுவதாகவும் மாற்றப்பட்டுள்ளன.
இச்சிலுவைக் கோவிலின் குறுக்குப் பகுதியின் இடது புறம் புனித இஞ்ஞாசியார் பீடம் உள்ளது. வலப் புறம் முன்னோக்கி புனித பிரான்சிசு சவேரியாருக்கு அர்ப்பணிக்கப்பட்ட பீடம் உள்ளது. கோவிலின் குறுக்குப் பகுதிக்கு அப்பால், இரு வட்ட வடிவச் சிறுகோவில்கள் உள்ளன. அவற்றைக் கலைஞர் விஞ்ஞோலாவின் "இரட்டைப் பிள்ளைகள்" என்று வேடிக்கையாகக் குறிப்பிடுவதுண்டு. அவற்றுள் இடது புறச் சிறுகோவிலில் புகழ்மிக்க "வழியோர அன்னை மரியா படிமம்" வணக்கத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. வலது புறச் சிறுகோவிலில் இயேசுவின் திரு இதயப் படிமம் உள்ளது.
அலஸ்ஸாண்ட்ரோ தொர்லோனியா என்னும் இளவரசர் அளித்த நன்கொடையைக் கொண்டு 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இக்கோவிலின் உட்சுவர்களில் விலையுயர்ந்த பளிங்குக் கற்கள் பதிக்கப்பட்டன.
கோவிலின் உட்கூரையை ஆக்கியவர் ஜொவான்னி கவுள்ளி என்னும் கலைஞர் ஆவார். அவருக்கு பச்சீச்சியா என்னும் பெயரும் உண்டு. தங்கமுலாம் பூசப்பட்ட சாந்துக் கரை கொண்ட கூரைப்பகுதியில் இயேசுவின் திருப்பெயரின் புகழ் எழில்மிகு சித்திரங்களாக வரையப்பட்டுள்ளது. அச்சித்திரங்கள் புனித பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்தில் கூறும் சொற்களுக்கு விளக்கவுரை போல் அமைந்துள்ளன:
“ | ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்; தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக 'இயேசு கிறிஸ்து ஆண்டவர' என எல்லா நாவுமே அறிக்கையிடும் (பிலிப்பியர் 2:10-11). | ” |
பழைய ஏற்பாட்டுப் பெருமக்களின் வாழ்வு நிகழ்ச்சிகளைச் சித்தரிக்கும் ஓவியங்கள் மேற்கூரைக் குவிமாட ஓரங்களிலும், புனித இஞ்ஞாசியார் மற்றும் புனித பிரான்சிசு சவேரியார் ஆகியோரின் வாழ்க்கை நிகழ்ச்சிளைச் சித்தரிக்கும் ஓவியங்கள் குறுக்குப் பகுதியிலும் அணிசெய்கின்றன.
கோவிலின் உயர்ந்த குவிமாடத்தின் உட்பகுதியில் விண்ணகத்தின் மாட்சிமை ஒளிர்கின்றது. புனிதர்களும் வானதூதர்களும் வணங்கிநிற்கின்றனர். இக்குவிமாடத்தை உருவாக்கியவர் ஜொவான்னி கவுள்ளி என்னும் பச்சீச்சியா ஆவார்.
கோவிலின் நடுநீள்பகுதியின் இறுதியில் இயேசுவை மாட்சிமை மிக்க ஆட்டுக்குட்டியாக உருவகிக்கும் சித்திரம் உள்ளது. இந்த உருவகம் விவிலியத்தின் இறுதி நூலாகிய திருவெளிப்பாட்டிலிருந்து எடுக்கப்பட்டது. தாம் கண்ட காட்சியை யோவான் இவ்வாறு விவரிக்கிறார்:
“ | தொடர்ந்து நான் பார்த்துக் கொண்டிருக்கும்போது, அரியணையையும் உயிர்களையும் மூப்பர்களையும் சுற்றி நின்ற கோடிக்கணக்கான வானதூதர்களின் குரலைக் கேட்டேன்; "கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டி வல்லமையும் செல்வமும் ஞானமும் ஆற்றலும் மாண்பும் பெருமையும் புகழ்ச்சியும் பெறத் தகுதி பெற்றது" என்று அவர்கள் உரத்த குரலில் பாடிக் கொண்டிருந்தார்கள். பின்பு, விண்ணுலகு, மண்ணுலகு, கீழுலகு, கடல் எங்கும் இருந்த படைப்புகள் அனைத்தும், அவற்றில் இருந்த ஒவ்வொன்றும், "அரியணையில் வீற்றிருப்பவருக்கும் ஆட்டுக்குட்டிக்கும் புகழ்ச்சியும் மாண்பும் பெருமையும் ஆற்றலும் என்றென்றும் உரியன" என்று பாடக் கேட்டேன். அதற்கு அந்த நான்கு உயிர்களும், "ஆமென்" என்றன. மூப்பர்கள் விழுந்து வணங்கினார்கள் (திருவெளிப்பாடு 5:12-14). | ” |
இயேசு கோவிலில் அமைந்துள்ள "வழியோர அன்னை மரியா படிமம்" (Madonna Della Strada) சிறப்பு வாய்ந்தது. 15ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இந்த ஓவியம் சிறப்பு வணக்கம் பெற்றுவந்துள்ளது.
இயேசு கோவிலில் அமைந்துள்ள சிறுகோவில்களுள் சிறப்புமிக்க ஒன்று புனித பிரான்சிசு சவேரியாருக்கு (ஏப்ரல் 7, 1506 - திசம்பர் 3, 1552) அர்ப்பணிக்கப்பட்டதாகும். அதை வடிவமைத்தவர் பியேத்ரோ தி கொர்த்தோனா (1596-1669). இதன் புரவலராக இருந்தவர் ஜொவன்னி பிரான்செஸ்கோ நெக்ரோனி என்பவர். இவர் பின்னர் கர்தினால் நிலைக்கு உயர்த்தப்பட்டார்.
பல வண்ணங்களில் அமைந்த பளிங்குத் தூண்கள் கொண்ட சவேரியார் சிறுகோவிலில் பிரான்சிஸ் சவேரியார் விண்ணகத்திற்குச் செல்லும் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது. அவருடைய உடல் ஒளிமயமாக ஒளிர்கின்றது.
பீடத்தின் உயரத்தில் அமைந்த ஓவியம் சவேரியாரின் இறப்பைச் சித்தரிக்கிறது. சீனாவுக்குச் சென்று கிறித்தவ மறைபரப்ப விழைந்த சவேரியார் சாஞ்சியான் என்னும் தீவில் நோய்வாய்ப்பட்டு திசம்பர் 3, 1552இல் உயிர்துறந்தார். இக்காட்சியை கார்லோ மராட்டி (1625-1713) என்னும் புகழ்மிக்க கலைஞர் வரைந்தார்.
இச்சிறு கோவிலில் உள்ள வேறு சிறப்புகள் இவை:
மேற்குறிப்பிட்ட ஓவியங்களை ஜொவான்னி அந்திரேயா கார்லோனே (1639-1697) என்பவர் வரைந்தார்.
இயேசு கோவிலில் அமைந்த சவேரியார் சிறுகோவிலின் சிறப்புகளுள் ஒன்று அங்கு சவேரியாரின் கை திருப்பண்டமாக (relic) அழியா நிலையில் காக்கப்படுவது ஆகும். வெள்ளியால் ஆன அலங்கரிக்கப்பட்ட திருப்பண்டப் பேழையில் (reliquary) சவேரியார் கை வந்தது பற்றி ஒரு வரலாறு உண்டு. சவேரியாரின் மரணத்திற்குப் பின் அவரது அழியா உடல் அவர் பல்லாண்டுகள் பணிசெய்த கோவா நகருக்குக் கொண்டுவரப்பட்டு இயேசு சபையினரின் கோவிலாகிய புனித பவுல் கோவிலில் மக்களின் வணக்கத்திற்காக வைக்கப்பட்டது.
1614இல் இயேசு சபைத் தலைவராகப் பொறுப்பேற்ற க்ளவுடியோ ஆக்குவாவீவா என்பவர் சவேரியாரின் உடலிலிருந்து அவரது வலது கையைத் துண்டித்து அதை உரோமைக்கு அனுப்பித் தருமாறு பணித்தார். அக்கையால்தான் சவேரியார் இந்தியாவிலும் பிற நாடுகளிலும் பல்லாயிரக் கணக்கான மக்களுக்குத் திருமுழுக்கு வழங்கியிருந்தார். இன்று சவேரியாரின் கை மக்களின் பார்வைக்கும் வணக்கத்திற்கும் இயேசு கோவிலில் உள்ளது.
புனிதர்களின் எலும்பு போன்றவற்றைப் பாதுகாத்து அவற்றிற்கு வணக்கம் செலுத்தும் வழக்கம் தொடக்க காலக் கிறித்தவத்திலிருந்தே நீடித்து வந்துள்ளது. கத்தோலிக்க திருச்சபை இப்பொருள் குறித்து தெளிவான வழிமுறைகளைத் தந்துள்ளது[2].
இயேசு கோவில் திருத்தந்தை பதின்மூன்றாம் கிரகோரி ஆட்சிக்காலத்தில் அவர்தம் பதிலாள் கர்தினால் ஜூலியோ அந்தோனியோ சாந்தோரி என்பவரால் 1584, நவம்பர் திங்கள் 25ஆம் நாள் ஆடம்பரமாக நேர்ந்தளிக்கப்பட்டது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.