From Wikipedia, the free encyclopedia
வங்காளப் புலி (Panthera tigris tigris) புலியினத்தில் ஒரு சிற்றினம் ஆகும்.[2] பூனை குடும்பத்தில் இன்று வாழும் மிகப்பெரிய உயிரினங்களில் இதுவும் ஒன்றாகும்.[3][4][5]
வங்காளப் புலி Bengal TIger | |
---|---|
வங்காளப் புலி | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | |
துணையினம்: | வங்காளப் புலி (tigris) |
முச்சொற் பெயரீடு | |
பாந்தெரா டைக்ரிஸ் டைக்ரிஸ் Panthera tigris tigris (L, 1758) |
இந்தப் புலிகள் இந்திய துணைக்கண்டத்தில் ஏறத்தாழ 12,000 முதல் 16,500 ஆண்டுகள் முன்பிருந்து வாழ்ந்து வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[6][7][8] இன்று வேட்டையாடுதல், வாழ்விட இழப்பு போன்றவற்றால் இந்த இனம் அச்சுறுத்தப்படுகிறது. 2011 ஆம் ஆண்டு 2,500க்கும் குறைவான புலிகளே காட்டு பகுதிகளில் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[9]
வங்காளப் புலி 19 ஆம் நூற்றாண்டு வரை மேற்கே சிந்து நதி பள்ளத்தாக்கிலிருந்து கிட்டத்தட்ட இந்தியா முழுவதும், பாக்கித்தான், தெற்கு நேபாளம், வங்காளதேசம், பூட்டான், மியன்மார் மற்றும் தென்மேற்கு சீனா ஆகிய நாடுகளில் காணப்பட்டது. ஆனால் இன்று, இது இந்தியா, வங்காளதேசம், நேபாளம், பூட்டான் மற்றும் தென்மேற்கு சீனாவில் மட்டுமே வாழ்கிறது.[7] 2018 ஆம் ஆண்டின் கணக்குப்படி இவற்றில் பெரும்பாலான புலிகளின் (ஏறத்தாழ 2,603–3,346) இந்தியாவில் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது. புலிகள் மற்றும் அதன் வசிப்பிடங்களை பாதுகாக்க இந்திய அரசால் புலிகள் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இவை காடுகள், வெப்பமண்டலப் பகுதிகள் எனப் பல்வேறு வகையான சூழ்நிலைகளில் வாழ்கின்றன. இவற்றின் தோல் பழுப்பு நிறத்தில் கருப்புக்கோடுகளுடன் காணப்படுகிறது. எனினும் வெள்ளைப்புலிகளும் உண்டு. வங்காளப் புலி, இந்தியா மற்றும் வங்காளதேசத்தின் தேசிய விலங்காக உள்ளது.
வங்காளப் புலியின் தோல் மஞ்சள் அல்லது வெளிர் இளஞ்சிவப்பு நிறத்தில், அடர் பழுப்பு முதல் கருப்பு நிற கோடுகளை கொண்டிருக்கும். இதன் வயிறு மற்றும் கைகால்களின் உட்புற பாகங்கள் வெண்மையாகவும், வால் இளஞ்சிவப்பு நிறத்தில் கருப்பு வளையங்களுடன் இருக்கும். உடல் முழுவதும் வெள்ளை நிறம் கொண்ட புலிகளும் காணப்படுகின்றன.[10] வங்காளப் புலிகள் பெரும்பாலும் உடலின் மீது 21–29 கோடுகளைக் கொண்டுள்ளன.[11] சில நேரங்களில் தங்க நிற தோலில் சிவப்பு-பழுப்பு நிற கோடுகளுடன் இருக்கும் புலிகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.[12][13]
புலியின் மண்டை ஓடு சராசரியாக ஆண் புலிகளில் 35.1 செ. மீ. மற்றும் பெண் புலிகளில் 29.3 செ. மீ. நீளம் கொண்டதாக இருக்கிறது.[14]இது தடிமனான பற்களைக் கொண்டுள்ளது. இதன் கோரை பற்கள் 7.5 முதல் 10 செ. மீ. நீளம் கொண்டதாக இருக்கிறது.[15]
ஆண் புலிகள் 283 முதல் 311 செ. மீ. மற்றும் பெண் புலிகள் 255 முதல் 285 செ. மீ. நீளம் கொண்டதாக இருக்கும்.[16] இவை பொதுவாக 90 முதல் 110 செ. மீ. வரை தோள்பட்டை உயரம் கொண்டதாக இருக்கின்றன.[17] ஆண் புலிகள் 200 முதல் 260 கிலோ எடையும், பெண் புலிகள் 110 முதல் 180 கிலோ எடையும் கொண்டிருக்கின்றன.[18]
ஏறத்தாழ 20,000 ஆண்டுகளுக்கு முன்னர் கடல் மட்டங்கள் தாழ்த்வாக இருந்த காலத்தில் புலிகள் இலங்கைக்கு வந்ததாகத் தெரிகிறது.[19] பின்னர் இவை நிலப்பாலத்தால் இணைக்கப்பட்டிருந்த தென்னிந்தியாவிற்கு வந்திருக்கலாம்.[20] வங்காளப் புலி 19 ஆம் நூற்றாண்டு வரை மேற்கே சிந்து நதி பள்ளத்தாக்கிலிருந்து கிட்டத்தட்ட இந்தியா முழுவதும், பாக்கித்தான், தெற்கு நேபாளம், வங்காளதேசம், பூட்டான், மியன்மார் மற்றும் தென்மேற்கு சீனா ஆகிய நாடுகளில் காணப்பட்டது. ஆனால் இன்று, இது இந்தியா, வங்காளதேசம், நேபாளம், பூட்டான் மற்றும் தென்மேற்கு சீனாவில் மட்டுமே வாழ்கிறது.[7] இந்திய துணைக்கண்டத்தில், புலிகள் வெப்பமண்டல ஈரமான பசுமைமாறாக் காடுகள், வெப்பமண்டல உலர் காடுகள், வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல ஈரமான இலையுதிர் காடுகள், சதுப்பு நிலங்கள், மிதமான மேட்டு நிலக் காடுகள் மற்றும் புல்வெளிகளில் வாழ்கின்றன.[21]
2008 ஆம் ஆண்டு புலிகள் கணக்கெடுப்பின் போது, இந்தியாவில் மொத்த புலிகளின் எண்ணிக்கை 1,411 என மதிப்பிடப்பட்டது. இந்தியா முழுவதும், புலிகள் வசிக்கும் ஆறு இயற்கை வளாகங்கள் கணக்கெடுக்கப்பட்டன. அவை பின்வருமாறு:[22]கங்கை சமவெளி, மத்திய இந்திய மலைப்பகுதிகள், கிழக்குத் தொடர்ச்சி மலைகள், மேற்குத் தொடர்ச்சி மலை, பிரம்மபுத்திரா வெள்ள சமவெளிகள் மற்றும் சுந்தர்பனி சதுப்புநில காடுகள்.[21][23][24] 2018 ஆம் ஆண்டின் கணக்குப்படி இவற்றில் பெரும்பாலான புலிகளின் (ஏறத்தாழ 2,603–3,346) இந்தியாவில் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[25]
2004 ஆம் ஆண்டு நிலவரப்படி, வங்காளதேசத்தில் 200 முதல் 419 புலிகள் வரை இருந்தன, இவைகளில் பெரும்பாலானவை சுந்தர்பனி காடுகளில் உள்ளன.[26] 2017 இல், வங்காளதேசத்தில் புலிகளின் எண்ணிக்கை 84–158 ஆக மதிப்பிடப்பட்டது.[27] 2013 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி நேபாளத்தில் புலிகளின் எண்ணிக்கை 163-235 ஆகா உள்ளது.[28] 2015 ஆம் ஆண்டு நிலவரப்படி, பூட்டானில் உள்ள புலிகளின் எண்ணிக்கை 89 முதல் 124 என மதிப்பிடப்பட்டுள்ளது.[29] மேலும் சீனாவின் சில பகுதிகளில் இந்தப் புலிகள் தென்படுகின்றன.[30]
புலியின் அடிப்படை சமூக அலகு ஒரு பெண் மற்றும் அதன் சந்ததியினரால் ஆனது. சில சிறப்பு சந்தர்ப்பங்களில் மட்டுமே பல வயதுவந்த புலிகள் தற்காலிகமாக கூடுகின்றன. இல்லையெனில் இவை பொதுவாக தனித்தனியாக வாழ்கின்றன. தனித்தனியாக காடு மற்றும் புல்வெளி விலங்குகளை வேட்டையாடுகின்றன. எந்தவொரு பாலினத்திலும் வசிக்கும் புலிகள் தனது வரம்புக எல்லைளைப் பாதுகாக்கிறார்கள். பெண் புலிகள் அவற்றின் குட்டிகளுக்கு தேவையான இரை, தண்ணீர் மற்றும் தங்குமிடம் ஆகியவற்றை அளிக்கின்றன. தேவைப்படும் நேரத்தில் மட்டுமே மற்ற புலிகளுடன், குறிப்பாக எதிர் பாலினத்தவர்களுடனும் தொடர்பைப் பேணுகின்றன. பொதுவாக ஒரு நிலப்பகுதியை பகிர்ந்துகொள்ளும் புலிகள் மற்ற புலிகளின் அசைவுகளையும் செயல்பாடுகளையும் நன்கு அறிந்துவைத்திருக்கின்றன.[10] புலிகள் 19 மாத வயதில் தங்கள் பிறந்த பகுதிகளிலிருந்து வெளியேறி தனியாக வாழ்க்கையை தொடங்குகின்றன. ஆய்வு செய்யப்பட்ட புலிகளில், பெண் புலிகள் பொதுவாக ஆண்களை விட தங்கள் தாயின் வீட்டு வரம்பிற்கு நெருக்கமாக இருந்தன.[31]
ஒரு வயது வந்த ஆண் புலி ஓவர் நாளில் குளிர்காலத்தில் ஏறத்தாழ 10.5 கி.மீ. தூரமும், கோடை காலத்தில் மேலும் ஏறத்தாழ 13.9 கி.மீ. தூரமும் பயணிக்கின்றது. இதன் வசிப்பிடத்தின் வரம்பு ஏறத்தாழ 200 சதுர கி.மீ. வரை பரப்பளவு கொண்டதாக இருக்கிறது. பெண் புலிகள் ஏறத்தாழ 31 சதுர கி.மீ. வரை பரப்பளவு கொண்ட நிலப்பரப்பை பராமரிக்க வல்லது.[32] பொதுவாக ஆண் புலிகள் பெரிய வசிப்பிட நிலப்பரப்பை பிரத்தியேகமாக வைத்திருக்கின்றன. இவற்றில் மற்ற ஆண் புலிகளுக்கு அனுமதியில்லை. அதே சமயத்தில், இந்த வரம்பிற்குட்பட்ட பகுதிகளில் பல பெண் புலிகள் வசிக்கலாம். ஒரு ஆண் புலியின் எல்லைக்குட்பட்ட நிலப்பரப்பில் வசிக்கும் பெண் புலிகளுடன், அந்த குறிப்பிட்ட ஆண் புலியால் இனச்சேர்க்கை உரிமைகளைப் கோர முடியும். ஒரு வயதான புலி இறந்த பிறகு அல்லது இளம் புலிகளால் விரட்டப்பட்ட பிறகு, அதன் இடத்தை வேறொரு ஆண் புலி ஆக்கிரமிக்கிறது.[10][33] இப்புலிகள் நன்றாக நீந்த வல்லவை.
வங்கப் புலிகள் ஊனுண்ணிகள் ஆதலால் இவை நடுத்தர மற்றும் பெரிய விலங்குகளான காட்டெருமை, மான், ஆடு, காட்டுப்பன்றி போன்றவற்றை வேட்டையாடுகின்றன. இவை மரம் ஏறி முதனிகளையும் வேட்டையாடுகின்றன. இவை மரம் ஏறி குரங்குகள் மற்றும் முதனிகளையும் வேட்டையாடுகின்றன. சில சமயங்களில் முயல், மயில் மற்றும் முள்ளம்பன்றி போன்ற சிறிய விலங்குகளை வேட்டையாடுகின்றன. புலிகளின் வாழ்விடங்களில் மனிதர்கள் நுழைவதால், இவை வீட்டு கால்நடைகளையும் சில சமயங்களில் வேட்டையாடுகிறது. [34][35][36][37][38] வங்காளப் புலிகள் எப்போதாவது சிறுத்தை, முதலை, கரடி மற்றும் செந்நாய் போன்ற விலங்குகளை வேட்டையாடுகின்றன. அவை பொதுவாக வயது முதிர்ந்த இந்திய யானை மற்றும் காண்டாமிருகம் போன்ற விலங்குகளை தாக்குவதில்லை, ஆனால் இது போன்ற அசாதாரணமான அரிதான நிகழ்வுகள் சில சமயங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.[3][39][40] நீர் நிலைகளின் அருகில் வசிக்கும் புலிகள் சில நேரங்களில் மீன், நண்டு மற்றும் ஆமை போன்றவவற்றை உண்கின்றன.[41][42]
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், புலிகள் விலங்குகளை பக்கவாட்டிலிருந்தோ அல்லது பின்னாலிருந்தோ தாக்குகின்றன. முடிந்தவரை நெருங்கிய தூரத்திற்கு அணுகி, இரையின் தொண்டையைப் பிடித்துக் அவற்றை கொல்கின்றன. இவை பொதுவாக இரவிலேயே வேட்டையாடுகின்றன. பொதுவாக இப்புலிகள் வேட்டையாடியதும் இரையை பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் சென்று உண்கின்றன. புலியின் வேட்டையாடும் முறை மற்றும் இரை உண்ணும் தன்மை ஆகியவை பருவங்களை பொறுத்து மாறுபடுகின்றன. புலிகள் பெரும்பாலும் ஒரே நேரத்தில் 40 கிலோ இறைச்சியை உட்கொள்ளும்.[3] ஒரு ஆய்வில், புலிகள் ஆண்டுக்கு ஏறத்தாழ 40-50 விலங்குகளைக் கொன்றன.[43] காயம் அடைந்தாலோ, வயதானாலோ அல்லது இதன் வழக்கமான இரை இனங்கள் அரிதாகிவிட்டாலோ, புலிகள் பெரும்பாலும் மனிதர்களைத் தாக்கும் மனித உண்ணிகளாக மாறுகின்றன.[44]
இந்தியாவில் உள்ள புலிகளுக்கு குறிக்கப்பட்ட இனச்சேர்க்கை பருவங்கள் இல்லை. பெரும்பாலான குட்டிகள் திசம்பர் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பிறக்கின்றனர்.[45] மார்ச், மே, அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களிலும் குட்டிகள் பிறக்கின்றன.[46][47]
ஆண் புலிகள் 4-5 வயதிலும், பெண் புலிகள் 3-4 வயதிலும் முதிர்ச்சி அடைகின்றன. ஒரு வங்காளப் புலி சுமார் 3-9 வார இடைவெளியில் அண்டவிடுப்பிற்கு வருகிறது. இணைசேர்க்கைக்குப் பின் 104-106 நாட்களுக்குப் பிறகு, 1-4 குட்டிகள் உயரமான புல், அடர்ந்த புதர் அல்லது குகைகளில் அமைந்துள்ள தங்குமிடங்களில் பிறக்கின்றன. புதிதாகப் பிறந்த குட்டிகள் 1.6 கிலோ வரை எடையுடன் உள்ளன. இந்தக் குட்டிகள் 3.5-5 மாதங்கள் வரை தடிமனான கம்பளி போன்ற தோல்களைக் கொண்டுள்ளன. பிறக்கும் போது இவற்றின் கண்களும் காதுகளும் மூடப்பட்டுள்ளன, பற்கள் பிறந்து 2-3 வாரங்களில் மெதுவாக வளர ஆரம்பிக்கின்றன. குட்டிகள் 3-6 மாதங்களுக்கு தாய்ப்பால் குடிக்கின்றன, மேலும் 2 மாத வயதில் சிறிய அளவிலான திட உணவை உண்ணத் தொடங்குகின்றன. 5-6 மாத வயதில் பொதுவாக இவை வேட்டையாடும் போது தங்கள் தாயைப் பின்தொடர்ந்து செல்லத் தொடங்குகிறார்கள். 2-3 வயதில் குட்டிகள் மெதுவாக குடும்பக் குழுவிலிருந்து பிரிந்து தற்காலிகமாக வேறு இடத்திற்கு குடிபெயரத் தொடங்குகின்றன.[3]
புலிகளின் இயற்கையான வாழிடங்களை அழிப்பதும் வேட்டையாடுதலும் இப்புலிகளின் முக்கிய அச்சுறுத்தல்களாகும்.[9] அவற்றின் உடலில் இருந்து பல கிழக்கு ஆசிய நாடுகளில் மருந்துகள் செய்யப்படுகின்றன. [48] எனவே, புலிகளின் தோல் தவிர அவற்றின் உடல்பாகங்களுக்காகவும் அவை வேட்டையாடப் படுகின்றன.[49][50][51] புலிகள் மக்கள் வாழும் ஊர்களுக்குள் நுழைந்து அவர்களின் வளர்ப்பு விலங்குகளைக் கொல்வதால் அவை ஊர் மக்களாலும் சிலநேரம் கொல்லப்படுகின்றன.[52]
இது அருகிய இனம் என பட்டியலிடப்பட்டுள்ளது.[53][54] புலிகள் மற்றும் அதன் வசிப்பிடங்களை பாதுகாக்க இந்திய அரசால் புலிகள் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.[55][56]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.