பதுவா
மேற்கு வங்காளத்தில் காணப்படும் கைவினை சமூகம் / From Wikipedia, the free encyclopedia
பதுவா ( Patua ) என்பது இந்தியாவின் மேற்கு வங்காளம், பீகார், சார்க்கண்டு மற்றும் ஒடிசா மற்றும் வங்காளதேசத்தின் சில பகுதிகளில் காணப்படும் ஒரு கைவினைஞர் சமூகமாகும். சில பதுவாக்கள் இந்துக்களாகவும், மற்றவர்கள் முஸ்லிம்களாகவும் இருக்கின்றனர். இந்து பதுவாக்கள் கொல்கத்தாவின் காளிகாட் மற்றும் குமார்துலி பகுதிகளிலும், மேற்கு வங்கத்தின் வேறு சில பகுதிகளிலும் செயல்பாட்டில் உள்ளனர். அங்கு இவர்கள் எண்ணிக்கையில் குறைவு. பெரும்பாலான பதுவாக்கள் உண்மையில் இந்து சமயத்திலிருந்து இசுலாத்திற்கு மாறியவர்கள் என்று நம்பப்படுகிறது. இன்று, இவர்கள் இயல்பாகவே இந்து மற்றும் இசுலாமிய பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்கின்றனர். இவர்கள் பல்வேறு காலகட்டங்களில் பௌத்தர்களாகவும் இருந்திருக்கலாம். இருப்பினும், இன்று இவர்களில் பெரும்பாலோர் ஏழ்மையான முஸ்லிம்களாக உள்ளனர். இவர்கள் முக்கியமாக இந்துக்களின் ஆதரவை நம்பியிருக்கிறார்கள். ஆனால் இவர்கள் தங்களின் வர்ணம் பூசப்பட்ட சுருள்களை சுற்றுலாப் பயணிகளிடம் அதிகளவு விற்பனை செய்கின்றனர். எழுத்தாளர் பிராங்க் ஜே. கோரோம் தனது வில்லேஜ் ஆஃப் பெயின்டர்ஸ்: நெரேட்டிவ்ஸ் ஸ்க்ரோல்ஸ் ஃபிரம் வெஸ்ட் என்ற புத்தகத்தில் பதுவாக்களைப் பற்றி விவரித்து பகுப்பாய்வு செய்துள்ளார்.
பதுவாக்கள், முதலில் இந்துக்களாக இருந்தவர்கள் எனவும், தங்கள் வர்த்தகத்தைத் தொடர்வதில் நியமன நடவடிக்கைகளை பின்பற்றாததற்காக இந்து சமூகத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாக அறிஞர்கள் வாதிடுகின்றனர். [1] இவர்கள் பட்டிகர் அல்லது சித்ரகார் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.