![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/43/Blue_circle_for_diabetes.svg/langta-640px-Blue_circle_for_diabetes.svg.png&w=640&q=50)
நீரிழிவு நோய்
From Wikipedia, the free encyclopedia
நீரழிவு (நீீர்+அழிவு)(diabetes mellitus) என்பது இரத்தச் சர்க்கரை அதிகரிப்பைக் கொடுக்கக்கூடிய வளர்சிதைமாற்ற சீர்குலைவுகளின் தொகுப்பாகும்[2]. இலங்கையில் இது சீனி வியாதி அல்லது சர்க்கரை நோய் என்றும் அழைக்கப்படுகிறது. தேவையான இன்சுலினை உடல் உற்பத்தி செய்யாத அல்லது உற்பத்தி செய்த இன்சுலினைப் பலனளிக்கும் விதத்தில் பயன்படுத்த இயலாத நிலைமையில், இந்நோய் உள்ளவர்களின் இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருக்கும்.[3]
நீரிழிவு | |
---|---|
![]() | |
நீரழிவு உலகளாவிய நீல வளைய இலச்சினை[1] | |
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | diabetology |
ஐ.சி.டி.-10 | E10.–E14. |
ஐ.சி.டி.-9 | 250 |
மெரிசின்பிளசு | 001214 |
ஈமெடிசின் | med/546 emerg/134 |
பேசியண்ட் ஐ.இ | நீரிழிவு நோய் |
ம.பா.த | C18.452.394.750 |
இன்சுலின் சமச்சீர் நிலையை இழப்பதால் இந்நிலை தோன்றுவதனால், இதனை உடல் சீர்குலைவுகளில் (physical disorder) ஒன்றாகக் கொள்ளலாம். மனித உடம்பில் சர்க்கரையை உடலுக்குத் தேவையான சக்தியாக மாற்ற இன்சுலின் அத்தியாவசியமாக உள்ளது. குறிப்பாக, இரத்த சர்க்கரை அளவு சரியாகக் கட்டுப்படுத்தப்படவில்லை எனில் இறப்பை ஏற்படுத்தக்கூடிய மிகச் சிக்கலான நிலமைகளும் உருவாகலாம்[4]. கடுமையான நீண்ட காலச் சிக்கல்களாக இதயக் குழலிய நோய், பக்கவாதம், நெடுநாள் சிறுநீரகக் கோளாறு, நீரிழிவு நோயினால் ஏற்படும் கால் புண், நீரிழிவு நோயினால் ஏற்படும் கண் நோய் என்பன ஏற்படலாம்[5]. உயர் இரத்த அழுத்தம், நாடிகளின் சுவர்களில் கொழுப்பு படிந்து நாளடைவில் அடைபடுதல், இருதயத் தசைகளுக்கு குருதி வழங்கும் நாடிகளில் ஏற்படும் நோய் மற்றும் பாரிசவாதம் ஆகியவை ஏற்படக் கூடிய ஆபத்தை அதிகரிக்கிறது. இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருப்பது அடிக்கடி சிறுநீர் கழித்தல் (polyuria), அதிகமாக தாகமெடுத்தல் (polydipsia), அளப்பரிய பசி (polyphagia) ஆகிய மரபார்ந்த அறிகுறிகளை உருவாக்குகின்றது.
நீரழிவு நோயின் அனைத்து வகைகளும் 1921-ஆம் ஆண்டு "இன்சுலின்" (INSULIN)உபயோகத்திற்கு வந்ததிலிருந்து சிகிச்சை அளிக்கக் கூடியவையாகவே உள்ளன. இரண்டாம் வகை நீரழிவு நோயினை மருந்துகளின் மூலம் கட்டுப்படுத்த முடியும். இருந்தபோதிலும் முதலாம், இரண்டாம் வகை நீரழிவு நோய்கள் இரண்டுமே நாள்பட்ட நோய்களாதலால், இவற்றை எளிதாக முற்றிலும் குணமாக்க முடியாது. கணைய மாற்று சிகிச்சை முதலாம் வகையில் முயற்சிக்கப்பட்டது. ஆனால், பெரும் வெற்றியைச் சாதிக்க முடியவில்லை. பல நோயுறுவான பருமனைக் கொண்டவர்களிலும், இரண்டாம் வகை நீரிழிவுக்காரர்களிலும் இரையக மாற்று வழி இணைப்பறுவை செய்வது வெற்றியைக் கொடுத்துள்ளது. கர்ப்பகால நீரிழிவானது பெரும்பாலும் குழந்தை பிறந்த பின் சரியாகிவிடுகிறது.