![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/aa/Santhome_Basilica.jpg/640px-Santhome_Basilica.jpg&w=640&q=50)
சென்னை சாந்தோம் பேராலயம்
இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள தேவாலயம் / From Wikipedia, the free encyclopedia
சாந்தோம் பசிலிக்கா (Santhome Basilica) இந்தியாவின் சென்னையில் சாந்தோம் பகுதியில் அமைந்துள்ள ஓர் இளம் பேராலய (Minor Basilica) வகையைச் சேர்ந்த ரோமன் கத்தோலிக்க தேவாலயமாகும். இவ்வாலயம், சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தின் தலைமை ஆலயம் ஆகும். இது 16ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசிய குடியேற்றத்தவரால் கட்டப்பட்டு பின்னர் 1893ஆம் ஆண்டு பிரித்தானியர் குடியேற்றக் காலத்தில் விரிவாக்கப்பட்டு மீளவும் கட்டப்பட்டது. கோத்திக் கட்டட வடிவமைப்பில் எழுப்பபட்ட அந்தக் கட்டடமே தற்போது உள்ளது. இது 19ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய கட்டடப் பொறியிலாளர்கள் பயன்படுத்திய புது கோத்திக் வகையாக அமைக்கப்பட்டுள்ளது.
சாந்தோம் பேராலயம் (பசிலிக்கா) Santhome Basilica | |
---|---|
![]() சாந்தோம் தேவாலயம் | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | சென்னை, தமிழ்நாடு |
புவியியல் ஆள்கூறுகள் | 13°2′1″N 80°16′40″E |
சமயம் | கத்தோலிக்க திருச்சபை |
நிலை | இளம் பேராலயம் (Minor Basilica)[1] |
செயற்பாட்டு நிலை | நடப்பில் உள்ளது |
பாரம்பரியகளமாக அறிவிக்கப்பட்டது | தேசிய வழிபாட்டுத்தலம் [2] |
இணையத் தளம் | www.santhomebasilica.com |
சாந்தோம் தேவாலயம்/கோவில்/பசிலிக்கா புனிதா தோமா என்னும் திருத்தூதருக்கு அர்ப்பணிக்கப்பட்ட வழிபாட்டுத் தலம் ஆகும். சாந்தோம் என்னும் சொல் San + Thome என்னும் இரு சொற்கள் இணைந்து பிறக்கின்ற போர்த்துகீசிய வடிவமாகும். அது புனித தோமா என்று பொருள்படும். போர்த்துகீசியர் இக்கோவிலுக்கு இயேசுவின் அன்னை மரியாவின் பெயரை முதலில் அளித்திருந்தனர். "கடவுளின் அன்னை" எனப்பொருள்படும் Madre de Deus பெயர் இக்கோவிலுக்கு மட்டுமன்றி அது அமைந்த நகருக்கும் ("மதராஸ்", "மதராஸ்பட்டணம்") பெயராயிற்று என்பர். "மதராஸ்" என்னும் பெயருக்கு வேறு விளக்கங்களும் உள்ளன.[3]