கோரின் முகம்மது
கோரி சுல்தானகத்தின் சுல்தான் (அண். 1173 - 1206) / From Wikipedia, the free encyclopedia
முயீசதீன் முகம்மது இப்னு சாம் (பாரசீக மொழி: معز الدین محمد بن سام), (1144 – மார்ச் 15, 1206), என்பவர் கோரி அரசமரபைச் சேர்ந்த ஓர் ஆட்சியாளர் ஆவார். இவர் பொதுவாக கோரின் முகம்மது அல்லது எளிமையாக முகம்மது கோரி என்று அழைக்கப்படுகிறார். இவர் தற்போதைய ஆப்கானித்தானின் நடுப் பகுதியில் உள்ள கோர் மாகாணத்தை மையமாகக் கொண்டு 1173 முதல் 1206 வரை ஆட்சி புரிந்தார். இவர் கோரி நிலப்பரப்புகளை கிழக்கு நோக்கி விரிவாக்கினார். இந்தியத் துணைக் கண்டத்தில் முஸ்லிம் ஆட்சிக்கு அடித்தளம் அமைத்தார். அது இவருக்குப் பின்னும் கிட்டத்தட்ட 500 ஆண்டுகளுக்கு வளர்ச்சியடைந்து கொண்டிருந்த முஸ்லிம் அரசமரபுகளின் கீழ் நீடித்திருந்தது. முகம்மது தன் அண்ணன் கியாதல்தீன் கோரியுடன் நடத்திய இரட்டை ஆட்சியின் போது கோரி அரசமரபானது அதன் நிலப்பரப்பு விரிவாக்கத்தில் உச்சத்தை அடைந்தது.
கோரின் முகம்மது | |
---|---|
சுல்தான்-இ-காஷி அல்-சுல்தான் அல்-ஆசம் சிக்கந்தர் அல்-தானி (இரண்டாம் அலெக்சாந்தர்) | |
கோரின் முகம்மதுவின் காசுனியைச் சேர்ந்த தங்க நாணயம், நடு ஆசியப் புழக்கத்திற்காக தற்போதைய ஆப்கானித்தானில் அச்சடிக்கப்பட்டது | |
கோரிப் பேரரசின் சுல்தான் | |
முன்னையவர் | கியாதல்தீன் முகம்மது |
பின்னையவர் | கோர்: கியாதல்தீன் மகுமூது காசுனி: தாசதீன் இல்திசு இலாகூர்: குத்புத்தீன் ஐபக் வங்காளம்: பக்தியார் கில்ஜி முல்தான்: நசீருதீன் கபாச்சா |
ஆட்சிக்காலம் | 1173–1203 (தன் அண்ணன் கியாதல்தீன் முகம்மதுவுடன் இணைந்து ஆட்சி) |
ஆட்சிக்காலம் | 1203–1206 (தனி ஆட்சியாளராக ஆட்சி) |
பிறப்பு | 1144 கோர் (தற்கால ஆப்கானித்தான்) |
இறப்பு | 15 மார்ச்சு 1206(1206-03-15) (அகவை 61–62) தாமியக், ஜீலம் மாவட்டம் (தற்கால பாக்கித்தான்) |
புதைத்த இடம் | காசுனி (தற்கால ஆப்கானித்தான்) |
மரபு | கோரி அரசமரபு |
தந்தை | முதலாம் பகாவல்தீன் சாம் |
மதம் | சன்னி இசுலாம் |
ஓர் இளவரசனாகவும், கோரி அரசமரபின் தெற்குப் பகுதியின் ஆளுநராகவும் தன் ஆரம்ப இராணுவ வாழ்க்கையின் போது முகம்மது பல்வேறு திடீர்த் தாக்குதல்களுக்குப் பிறகு ஒகுஸ் பழங்குடியினத்தை அடிபணிய வைத்தார். காசுனியைக் கைப்பற்றினார். அங்கு இவருக்கு கியாசுதீன் கோரி முடி சூட்டி வைத்தார். கியாசுதீன் கோரி 1163 முதல் தன் தலைநகரான பிரோசுகோக்கில் இருந்து ஆட்சி செய்து வந்தார். 1175இல் கோரி முகம்மது சிந்து ஆற்றைக் கடந்தார். கோமல் கணவாய் வழியாகப் பயணித்து கர்மதிய ஆட்சியாளர்களிடமிருந்து ஒரு ஆண்டுக்குள்ளாகவே முல்தான் மற்றும் ஊச் நகரங்களைக் கைப்பற்றினார். அதற்குப் பிறகு முகம்மது முல்தான் மற்றும் ஊச் வழியாக அணிவகுத்து 1178இல் தற்போதைய குசராத்தை அடைந்தார். அங்கு இவரது படைகள் தெற்கு ஆரவல்லி மலைத்தொடரின் அபு மலையின் அடிவாரத்தில் பதானின் முலராஜா சோலாங்கியால் தலைமை தாங்கப்பட்ட இராசபுத்திரத் தலைவர்களின் ஒரு கூட்டமைப்பால் தோற்கடிக்கப்பட்டன. இதன் காரணமாக எதிர்காலத்தில் இந்தியாவுக்கு தான் வரும் வழியை மாற்றும் நிலைக்கு இவர் தள்ளப்பட்டார். எனவே கோரி முகம்மது கசனவியர்களுக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தார். 1186ஆம் ஆண்டு கசனவிய அரசமரபை அழித்தார். பெரும்பாலான பஞ்சாப் பகுதியுடன் மேல் சிந்து சமவெளியையும் கைப்பற்றினார். வடமேற்கில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிய பிறகு, கோரி முகம்மது வட இந்தியாவுக்கான பாரம்பரிய வழியான கைபர் கணவாய் வழியாக நுழைந்தார்.
1191இல் இவரது படைகள் தரைன் என்ற இடத்திற்கு அருகே பிருத்திவிராச் சௌகானால் தலைமை தாங்கப்பட்ட ஒரு இராசபுத்திரக் கூட்டமைப்பால் தோற்கடிக்கப்பட்டன. எனினும், 1192இல் துருக்கிக் குதிரை வில்லாளர்களின் ஒரு பெரிய இராணுவத்துடன் கோரி முகம்மது திரும்பி வந்தார். அதே யுத்த களத்தில் ஒரு தீர்க்கமான வெற்றியைப் பெற்றார். இதன் பிறகு சீக்கிரமே பிருத்திவிராச் சௌகானை மரண தண்டனைக்கு உட்படுத்தினார். இந்தியாவின் நடுக்கால வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக தரைன் யுத்தத்தில் இவர் அடைந்த வெற்றி கருதப்படுகிறது. இதற்குப் பிறகு இந்தியாவில் தனது இருப்பை இவர் குறைத்துக் கொண்டார். இப்பகுதியில் மேற்கொண்ட படையெடுப்புகளைத் தனது அடிமைத் தளபதிகளின் கீழ் கொடுத்தார். அவர்கள் வேகமாக உள்ளூர் இராச்சியங்கள் மீது திடீர்த் தாக்குதல்கள் நடத்தினர். கிழக்கே வங்காளம் வரை கோரி அரசமரபின் செல்வாக்கை விரிவாக்கினர்.
1203இல் இவரது அண்ணனின் இறப்பிற்குப் பிறகு கோரி முகம்மது பிரோசுகோக்கின் அரியணையிலும் ஏறினார். ஓர் ஆண்டுக்கு உள்ளாகவோ அல்லது ஓர் ஆண்டிலோ குவாரசமியப் பேரரசுடனான சண்டையில் குவாரசமியப் பேரரசுக்கு உதவி செய்ய வந்த தயங்குவால் தலைமை தாங்கப்பட்ட காரா கிதையின் படைகளுக்கு எதிராக அந்த்குத் யுத்தத்தில் கடுமையான தோல்வியைச் சந்தித்தார். நடு ஆசியாவில் இவரது விரிவாக்கத்தை இது நிறுத்தியது. இதன் விளைவாக மெர்வ் மற்றும் பெரும்பாலான குராசான் பகுதிகளை இழந்தார். இந்தத் தோல்விக்குப் பிறகு எழுச்சியடைந்து கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களைக் கோரி முகம்மது ஒடுக்கினார். தனது தோல்விக்குப் பழி வாங்குவதற்காகத் திரான்சாக்சியானா மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்குவதற்காக ஆமூ தாரியா ஆற்றில் படகுகளைக் கொண்டு ஒரு பாலத்தை உருவாக்கினார். எனினும், கோகர்களின் ஒரு புரட்சியானது பஞ்சாப் பகுதிக்கு வரும் நிலைக்கு இவரைத் தள்ளியது. தனது கடைசிப் படையெடுப்பின் போது கோகர் புரட்சியை இவர் மிருகத்தனமாக ஒடுக்கினார்.
திரும்பி வரும் வழியில் தம்யக் என்ற இடத்தில் சிந்து ஆற்றின் கரையில் கோரி முகம்மது 15 மார்ச் 1206ஆம் ஆண்டு அரசியல் கொலை செய்யப்பட்டார். மாலை வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போது, எதிரி இஸ்மாயிலி பிரிவைச் சேர்ந்த அரசியல் கொலை செய்பவர்களின் ஒரு குழு இவரைக் கொன்றது. இவரது இறப்பிற்குப் பிறகு இரண்டாம் அலாவுதீன் முகம்மதுவுக்குக் கீழ் குவாரசமியப் பேரரசின் வளர்ச்சி காரணமாக இவரது பேரரசு சிதைய ஆரம்பித்தது. 1215இல் இரண்டாம் அலாவுதீன் முகம்மது கோரிகளைப் பதவியில் இருந்து தூக்கி எறிந்தார். எனினும், இந்தியத் துணைக்கண்டத்தில் இவரது படையெடுப்புகள் இவரது அடிமைத் தளபதி குத்புத்தீன் ஐபக்கால் நிறுவப்பட்ட அடிமை அரசமரபின் கீழ் தொடர்ந்து மேம்பாட்டுடன் நடைபெற்றது.