From Wikipedia, the free encyclopedia
கிரந்தம் (வடமொழி ग्रन्थ - புத்தகம்) என்பது வடமொழியினை எழுத தென்னிந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வந்த ஓர் எழுத்து முறையாகும்[2] (இலிபி). இந்திய மொழியான மலையாளத்தின் எழுத்து முறையும் கிரந்தத்தில் இருந்து தோன்றியது ஆகும். மேலும் கிரந்த எழுத்துமுறை பருமிய மொழி, தாய் மொழி, சிங்களம் முதலிய தென்-கிழக்காசிய மொழிகளின் எழுத்து முறை தோற்றத்திலும் முக்கிய பங்கு வகித்துள்ளது.[3]. பல்லவர்கள் பயன்படுத்திய கிரந்த எழுத்துமுறை பல்லவ கிரந்தம் என அழைக்கப்படுகிறது. இதை பல்லவ எழுத்துமுறை எனவும் குறிப்பிடுவர். இந்த பல்லவ கிரந்த எழுத்துமுறையைச் சார்ந்தே தென்கிழக்காசிய மொழிகள் எழுத்துமுறையை பெற்றன.
கிரந்தம் | |
---|---|
கிரந்த உயிர்மெய் கூட்டெழுத்துக்கள்.('க', 'ங', 'ச'... வரிசை) | |
எழுத்து முறை வகை | |
காலக்கட்டம் | கி.பி. 6ஆம் நூற்றாண்டு முதல் 16 ஆம் நுற்றாண்டு வரை[1] |
திசை | Left-to-right |
மொழிகள் | சமசுகிருதம், மணிப்பிரவாளம் |
தொடர்புடைய எழுத்து முறைகள் | |
மூல முறைகள் | பிராமி
|
தோற்றுவித்த முறைகள் | மலையாள எழுத்துமுறை, துளு எழுத்துமுறை |
நெருக்கமான முறைகள் | வட்டெழுத்து |
சீ.அ.நி 15924 | |
சீ.அ.நி 15924 | Gran (343), Grantha |
ஒருங்குறி | |
ஒருங்குறி மாற்றுப்பெயர் | Grantha |
கிரந்த எழுத்துகள் தென்னிந்தியாவில், குறிப்பாகத் தமிழ் நாட்டில் சமசுகிருத மொழியை எழுதப் பயன்பட்ட வரி வடிவங்களாகும். தற்காலத்தில் தேவநாகரி எழுத்துகள் புகழடைந்ததால் கிரந்த எழுத்துக்களின் பயன்பாடு பெருமளவு குறைந்து விட்டது. தமிழ் நாட்டில் சில பத்தாண்டுகளுக்கு முன் தொடங்கிய சமற்கிருதத்துக்கு எதிரான இயக்கங்களால், பொதுவான சமசுகிருதத்தின் பயன்பாடு வெகுவாகக் குறைந்ததும் இதற்கு ஒரு காரணமெனலாம்.
கிரந்த எழுத்துமுறை கி.பி ஐந்தாம் நூற்றாண்டுகளில் பிராமி எழுத்து முறையிலிருந்து தோன்றியிருக்கக்கூடுமென்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். வட இந்தியாவில் பிராமி எழுத்து முறை நாகரி எழுத்து முறையாக திரிந்த வேளையில், தென்னிந்தியாவில் பிராமி எழுத்து முறை கிரந்த எழுத்து முறையாக திரிந்திருக்க வேண்டும் என்று அவர்கள் கருதுகின்றனர். கிரந்தத்தில் இருந்து இக்காலத் தமிழ் எழுத்துக்கள் தோன்றியிருக்கலாம் என்று கருதுகின்றனர். ஆனால் தமிழ் அறிஞர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். தென்னகத்தில் இருந்த வடமொழிப் பண்டிதர்கள், வடமொழியை எழுவதற்காக அப்போது வழக்கிலிருந்த தமிழ் எழுத்துக்களில் சிறு சிறு மாற்றங்களை செய்தனர் என்றும், இதன் விளைவாகவே கிரந்த எழுத்துமுறை தோன்றியிருக்க வேண்டுமென்று கருதுகின்றனர். ஆகவே அக்கால தமிழ் எழுத்து முறையின் நீட்சியே கிரந்தம் என்று கூறுகின்றனர்.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வடமொழி கிரந்த எழுத்திலேயே எழுதப்பட்டு வந்தது. தென்னிந்தியா முழுவதும் கிரந்த எழுத்து முறை பரவியிருந்தது. தமிழகத்தில் மணிப்பவளம் (மணிப்பிரவாளம் என்பது தமிழும் வடமொழியும் கலந்து எழுத்தப்பட்ட மொழி நடையாகும்) எழுதவும் கிரந்தம் பயன்படுத்தப்பட்டது. தமிழ்ச்சொற்களை வட்டெழுத்திலும் வடமொழிச்சொற்களைக் கிரந்தத்திலும் எழுதினர். பல்லவர்கள் தமிழையும், வடமொழியையும் ஒருங்கே போற்றினர். பல்லவர்கள் காலத்தில் தான் கிரந்தம் எழுச்சியுடன் திகழ்ந்தது. தமிழக மன்னர்கள், தென்-கிழக்காசிய நாடுகள் மீது படையெடுத்ததின் விளைவாக, அங்கும் கிரந்தம் பரவியது. பருமிய மொழி, தாய் மொழி, குமெர் மொழி, முதலிய மொழிகளின் எழுத்து முறை கிரந்ததிலிருந்தே தோன்றியவையாகும். சிங்கள எழுத்து முறையும் கிரந்த எழுத்துமுறையிலிருந்து தோன்றியதே ஆகும். தமிழகத்தில் வடமொழியாதிக்கத்தின் வீழ்ச்சியையடுத்து கிரந்த எழுத்து முறையும் வீழ்ச்சி அடைந்தது. இருப்பினும் கி.பி 19ஆம் நூற்றாண்டு வரையிலும் கூட தமிழகத்தில் வடமொழியினைக் கிரந்த எழுத்துக்களிலேயே எழுதினர். பின்னர் கிரந்த எழுத்து முறை முற்றிலும் மறைந்து தமிழகத்தில் வடமொழி தேவநாகரியில் எழுதத் தொடங்கப்பட்டது.
தமிழில் உள்ள புள்ளியை போன்று கிரந்தத்தில் அலந்து பயன்படுத்தப்படுகிறது
கிரந்த 'க' வரிசை உயிர்மெய் எழுத்துகள்
கிரந்த உயிர்மெய் கூட்டெழுத்துக்கள்
கிரந்த ஈற்றுமெய்யெழுத்துக்கள்
கிரந்தத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மெய்யெழுத்துக்கள் இணைந்து கூட்டெழுத்துக்களை உருவாக்குகின்றன. இக்கூட்டெழுத்துக்கள் வேகமாக எழுதுவதற்காக பயன்படுத்தப்பட்டன
சிறப்பு வடிவங்கள்:
‹ய› வும் ‹ர› வும் பின் கூட்டெழுத்தாக இணையும் போது கீழ்க்கண்ட சிறப்பு வடிவங்களை பெறுகிறது and
‹ர›கர மெய் முன்னெழுத்தாக வரும் போது ரகர மெய் இரெஃபு ஆக மாறுகிறது.
மாதிரி 1: காளிதாசரின் குமாரசம்வபத்தில் இருந்து
अस्त्युत्तरस्यां दिशि देवतात्मा हिमालयो नाम नगाधिराजः।
पूर्वापरौ तोयनिधी वगाह्य स्थितः पृथिव्या इव मानदण्डः॥
இன்றைய நவீன காலகட்டத்தில் கிரந்த எழுத்து முறை கிட்டத்தட்ட மறைந்துவிட்டது. இருப்பினும் சில வேத பாடசாலைகளில் கிரந்தம் கற்பிக்கப்படுகின்றது. தமிழைப் பொருத்த வரையில் மணிப்பவள எழுத்து நடை மறைந்தாலும், 'ஸ', 'ஜ', 'க்ஷ', 'ஷ' ,'ஸ்ரீ', 'ஹ', ஶ போன்ற கிரந்த எழுத்துகள் வடமொழிச் சொற்களையும் பிறமொழிச் சொற்களையும் குறிக்க இன்றும் பயன்படுத்தப்படுகின்றன. ஒருங்குறியில் (இயூனிகோடு) கிரந்த எழுத்துமுறையினை சேர்க்க முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. அத்தகைய கோரிக்கையும் ஒருங்குறி குழுமத்தின் பரிசீலனையில் உள்ளது.
மணிப்பவளத்தின் செல்வாக்கு குறைந்தாலும், 'ஜ', 'ஶ', 'ஷ', 'ஸ', 'ஹ' ,'க்ஷ', 'ஸ்ரீ' போன்ற கிரந்த எழுத்துகள் வடமொழி மூலம் தோன்றிய சொற்களிலும் பிறமொழிச் சொற்களிலும், தமிழில் இல்லா இவ்வோசைகளைக் குறிக்கப் பிழையாகப் பயன்படுத்தப்படுகின்றன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.