ஓசுமான் அலி கான்
2ஆவது மக்களவை உறுப்பினர் / From Wikipedia, the free encyclopedia
மிர் ஓசுமான் அலி கான், ஏழாம் அசாப் சா (Osman Ali Khan, Asaf Jah VII, 5[3] அல்லது 6 ஏப்ரல் 1886 – 24 பெப்ரவரி 1967),[5] என்பவர் பிரித்தானிய இந்தியாவின் மிகப் பெரிய மன்னர் அரசான ஐதராபாது இராச்சியத்தின் கடைசி நிசாம் (ஆட்சியாளர்) ஆவார்.[6] இவர் தனது 25-ஆவது அகவையில் 1911 ஆகத்து 19 அன்று முடிசூடி,[7] ஐதராபாதை 1948 இல் இந்தியா இணைக்கும் வரை அதன் ஆட்சியாளராக இருந்தார்.[8][9] இவர் உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராகக் கருதப்பட்டார்.[10] இவரது செல்வம் அமெரிக்க மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2% ஆக இருந்ததாக சில மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.[10] இவரது உருவப்படம் 1937 இல் வெளிவந்த டைம் இதழின் முன்பக்கத்தில் வெளியிடப்பட்டது.[11] ஒரு பகுதி-தன்னாட்சி மன்னராக, இவர் தமது சொந்த ஐதராபாதி ரூபாய் நாணயத்தை அச்சிட்டு வந்தார். அத்துடன், இவரது தனியார் கருவூலத்தில் தங்க, வெள்ளிப் பாளங்கள் £100 மில்லியனும், நகைகள் £400 மில்லியன் (2008 மதிப்பீடு) இருந்ததாகக் கூறப்படுகிறது.[10][12] இவரது செல்வத்தின் முக்கிய மூலம் கோல்கொண்டா சுரங்கம் ஆகும், இதுவே அக்காலகட்டத்தில் வைரங்கள் விநியோகிக்கும் சுரங்கம் ஆகும்.[12][13][14] இவற்றில் ஜேக்கப் வைரம், £50 மில்லியன் (2008) மதிப்புள்ளதாகும்,[15][16][17] நிசாம் இதனை ஒரு காகித எடையாகப் பயன்படுத்தினார்.[18]
மிர் ஒசுமான் அலி கான் | |
---|---|
1926 இல் ஒசுமான் அலி கான் | |
7-ஆவது ஐதராபாத் நிசாம் | |
ஆட்சிக்காலம் | 29 ஆகத்து 1911 – 17 செப்டெம்பர் 1948 பட்டம் மட்டும்: 17 செப்டெம்பர் 1948 – 24 பெப்பிரவரி 1967[1] |
முடிசூட்டுதல் | 18 September 1911[2] |
முன்னையவர் | மகுபூப் அலி கான், ஆறாம் அசாப் சா |
பின்னையவர் | பர்காத் அலி கான், எட்டாம் அசாப் சா (பட்டம் மட்டும்) |
பிரதமர் | பட்டியலைப் பார்க்க
|
பிறப்பு | (1886-04-05)5 ஏப்ரல் 1886
[3] அல்லது (1886-04-06)6 ஏப்ரல் 1886 புராணி அவேலி, ஐதராபாது, ஐதராபாத் இராச்சியம், பிரித்தானிய இந்தியா (இன்றைய தெலங்காணா, இந்தியா) |
இறப்பு | பெப்ரவரி 24, 1967(1967-02-24) (அகவை 80) இராஜாவின் அரண்மனை, ஐதராபாத்து, ஆந்திரப் பிரதேசம், இந்தியா (இன்றைய தெலங்காணா, இந்தியா) |
புதைத்த இடம் | சுடி மசூதி, (இராஜாவின் அரண்மனை எதிர்), ஐதராபாது, ஆந்திரப் பிரதேசம், இந்தியா (இன்றைய தெலங்காணா, இந்தியா) |
துணைவர் | துல்கான் பாசா பேகம் மற்றும் 7 பேர் |
குழந்தைகளின் பெயர்கள் | 18 மகன்கள் மற்றும் 16 மகள்கள் |
உருது | نواب میر عثمان علی خان |
மரபு | அசாப் சாகி வம்சம் |
தந்தை | மகுபூப் அலி கான், ஆறாம் அசாப் சா |
தாய் | அசுமத்-உசு-சாகுரின்னிசா பேகம் |
மதம் | சுன்னி இசுலாம்[4] |
இவரது 37-ஆண்டுகால ஆட்சியில், மின்சாரம் அறிமுகப்படுத்தப்பட்டது, தொடருந்து, சாலைகள், விமான நிலையங்கள் உருவாக்கப்பட்டன. இவர் "நவீன ஐதராபாத் கட்டிடக் கலைஞர்" என்று அறியப்பட்டார், ஐதராபாத் நகரில் பல பொது நிறுவனங்களை நிறுவிய பெருமைக்குரியவர், இவற்றில் உசுமானியா பல்கலைக்கழகம், ஒசுமானியா பொது மருத்துவமனை, ஐதராபாத் ஸ்டேட் வங்கி,[19] பேகம்பேட்டை விமான நிலையம், தெலங்காணா உயர் நீதிமன்றம் ஆகியவை சிலவாகும். 1908 பெரு வெள்ளம் போன்ற ஒன்றைத் தவிர்க்க ஓசுமான் சாகர் ஏரி, ஹிமாயத் சாகர் ஆகிய நீர்த்தேக்கங்கள் நகரில் கட்டப்பட்டன.[20]
நிசாம் தொடக்கத்தில் இந்தியாவுடன் இணைவதற்கு விரும்பியிருந்தார், ஆனாலும், 1947 விடுதலையுடன், அவர் தனது மாநிலத்தை புதிதாக உருவாக்கப்பட்ட தேசத்துடன் இணைக்க விரும்பவில்லை. அதற்குள், தெலுங்கானா கலகம், இரசாக்கர்கள் என்று அழைக்கப்படும் ஒரு தீவிர போராளிகளின் எழுச்சி போன்றவை காரணமாக அவரது ஆற்றல் பலவீனமடைந்தது, அவர்களை அவரால் அடக்க முடியவில்லை. 1948-இல், இந்திய இராணுவம் ஐதராபாது மாநிலத்தை ஆக்கிரமித்து இணைத்தது, நிசாம் சரணடைய வேண்டியிருந்தது. விடுதலைக்குப் பிறகு, அவர் 1950 - 1956 இற்கிடையில், ஐதராபாத் மாநிலத்தின் ராஜ்பிரமுக் ஆனார், அதன் பிறகு மாநிலம் பிரிக்கப்பட்டு ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, மகாராட்டிராவின் ஒரு பகுதியாக மாறியது.[21][22]
1951 இல், அவர் நிசாம் எலும்பியல் மருத்துவமனையை (இப்போது நிசாம் மருத்துவ அறிவியல் கழகம் (NIMS) என்று அழைக்கப்படுகிறது) கட்டத் தொடங்கினார், அதை 99 ஆண்டு குத்தகைக்கு வெறும் ரூ.1 மாத வாடகைக்கு அரசாங்கத்திடம் கொடுத்தார்.[23] நிலமற்ற விவசாயிகளுக்கு மறு விநியோகம் செய்வதற்காக அவர் 14,000 ஏக்கர் (5,700 எக்டேர்) நிலத்தை வினோபா பாவேயின் பூதான் இயக்கத்திற்குத் தனது தனிப்பட்ட நிதியத்தில் இருந்து நன்கொடையாக வழங்கினார்.[7][24]