From Wikipedia, the free encyclopedia
எழுதப்பட்ட கர்நாடக வரலாறு என்பது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக உள்ளது. பல பேரரசுகள் மற்றும் மரபினர் கர்நாடகத்தில் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். மேலும் கர்நாடகத்தின் வரலாறு, பண்பாடு, வளர்ச்சி ஆகியவற்றுக்கு பெருமளவில் பங்காற்றியுள்ளனர்.
கர்நாடக மரபினரின் ஆட்சிகளின் தாக்கமானது இந்திய துணைக்கண்டத்தின் பல பகுதிகளில் தாக்கத்தை செலுத்தியுள்ளது. குறிப்பாக நடு இந்தியாவின் சிந்தக்க நாகர், கலிங்கத்தின் கங்கர் (ஒடிசா),[1] மான்யகட்டாவின் இராட்டிரக்கூடர்கள்,[2] வேங்கி சாளுக்கியர்கள்,[3] தேவகிரி யாதவர்கள் ஆகிய அனைவரும் கர்நாடகத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள்,[4] என்றாலும் பிற்காலத்தில் இவர்கள் அந்தந்த உள்ளூர் மொழிகளை ஏற்றுக்கொண்டனர்.
வரலாற்றுக்கு முந்தைய கர்நாடகத்தின் வரலாற்று ஆய்வுகளுக்கு முன்னோடி ராபர்ட் புரூசு-ஃபூட் ஆவார். இவருக்குப்பின் பலர் இந்தப்பணியைத் தொடர்ந்தனர்.[5] வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய கர்நாடகவரலாறு (பொதுவாக தென்னிந்திய வரலாறு) என்பது கைக்கோடரிப் பண்பாடு என அழைக்கப்படுகிறது. இது வட இந்திய சோகன் கலாச்சாரத்திற்கு, நேர் எதிரானது. பழைய கற்காலக் கைக் கோடரிகள் போன்ற கருவிகளை கூழாங்கல் போல வழவழப்பாக குவாட்டசு மற்றும் குவார்ட்சைட் ஆகிய கற்கலால் செய்யப்பட்ட கருவிகள் சிக்கமகளூரு மாவட்டம் மற்றும் யாத்கிர் மாவட்டம் உனசாகி போன்ற பகுதிகளும், மற்றும் ஒரு மர ஈட்டி தும்கூர் மாவட்டம் கிப்பான அள்ளியில் கிடைத்த பொருட்கள் பழைய கற்கால கருவிகளுக்கு எடுத்துக்காட்டுகளாக உள்ளன. ராய்ச்சூர் மாவட்டம் லிங்கனூரில் வழவழப்பான கற்கோடாரி கிடைத்தற்கான சான்றுகள் உள்ளன. புதிய கற்காலத்தைச் சேர்ந்த பொருட்கள் கிடைத்தபகுதிகள் ராய்ச்சூர் மாவட்டத்தின் மாசுகி, சித்திரதுர்க்கா மாவட்டம் பிரம்மகிரி போன்றவை ஆகும். இங்கு ஏராளமான ஆதாரங்களாக மனிதனின் வீட்டு விலங்குகளான மாடுகள், நாய்கள், ஆடுகள் போன்றவற்றை வளர்க்கப் பயன்படுத்தப்பட்ட பொருட்களும், செப்பு மற்றும் வெண்கலத்தாலான கருவிகளாக வளையல்கள், மோதிரங்கள், கழுத்தணிகள், காதணிகள் போன்றவை கிடைத்துள்ளன. புதிய கற்காலம் முடிவுக்குவந்து பெருங்கற்காலத்தில் கர்நாடக மக்கள் இரும்பில் செய்யப்பட்ட, நீண்ட வாள், அரிவாள், கோடரிகள், சுத்தியல், கூர்முனைகள், உளிகள் அம்புகள் ஆகியவற்றை பயன்படுத்த தொடங்கியனர்.
கல்விசார் கருதுகோள் அனுமானங்களாக சிந்து சமவெளி - (பொ.ஊ.மு. 3300 பொ.ஊ.மு. 1300) பட்டணங்களான அரப்பா மற்றும் லோத்தல் ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட தங்கம் கர்நாடக சுரங்கங்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவையாக இருக்கலாம் என்ற கருத்து உள்ளது.[6][7][8]
கர்நாடகம் மௌரியப்பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது, முதல் மௌரிய பேரரசர் சந்திரகுப்த மௌரியர் பொ.ஊ.மு. 298 காலகட்டத்தில் தன் இறுதிக்காலத்தில் ஒரு சமணத்துறவியாக இருந்து இறந்த இடம் கர்நாடகத்தின் ஹாசன் மாவட்டத்தின் சரவணபெலகுளா ஆகும்.[9]
பொ.ஊ.மு. 230 காலகட்டத்தில் சாதவாகனப் பேரரசு அதிகாரத்துக்கு வந்தது. இப்பேரரசு ஏறக்குறைய நான்கு நூற்றாண்டுகள் பொ.ஊ. மூன்றாம் நூற்றாண்டு துவக்கம்வரை ஆட்சியில் இருந்தது. இந்த சாதவாகனப் பேரரசு பின்பு சிதைந்து. இதனால் கர்நாடகத்தை பூர்வீகமாகக் கொண்ட அரசமரபான கதம்பர் வம்சம் ஏற்றம்பெற வழிவகுத்து. தற்கால வடகன்னட மாவட்டத்தின் பனவாசியை தலைமை இடமாகக்கொண்டு ஆண்ட கதம்ப மரபை தோற்றுவித்தவர் சிமோகா மாவட்டத்தின் தலகுண்டா பகுதியைச் சேர்ந்த பிராமணர் ஆவார்,[10][11][12][13][14][15] மற்றும் தென்கர்நாடகத்தை ஆண்ட மரபினரான மேலைக் கங்கர் மரபினர்,[16][17] ஆகியோர் தன்னுரிமை பெற்ற அரசுகளாக உருவாயினர். கதம்ப அரசமரபே கன்னடத்தை ஆட்சிமொழியாக பயன்படுத்திய முதல் அரசமரபாகும். இதற்கு ஆதாரமாக கதம்ப மன்னனான ககுஸ்தவர்மனின் பொ.ஊ. 450 ஐ சேர்ந்த ஹல்மிதி கல்வெட்டு விளங்குகிறது.[18][19] மேலும், அண்மையில் கதம்பர்களின் பண்டைய தலைநகரான பனவாசியில் கண்டறியப்பட்ட கதம்பர்களின் 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த செப்பு நாணயம் கன்னட எழுத்துக்களைக் கொண்டுள்ளது, ஆட்சி மட்டத்தில் கன்னடத்தின் பயன்பாட்டை நிரூபிக்கிறது.[20]
இடைக்காலத்தில் பெரிய ஏகாதிபத்திய அரசுகள் தொடர்ந்து உருவாகின அவை சாளுக்கியர், இராஷ்டிரகூடர், மேலைச் சாளுக்கியர் ஆகியோர் ஆவர். இவர்களின் வட்டாரத் தலைநகரங்கள் புதிய கர்நாடகத்தின் எல்லைக்கு, வெளியிலும் இருந்தபோதிலும் இவர்கள் கன்னட இலக்கிய வளர்ச்சிக்கு சிறப்பு செய்தனர்.[21][22][23][24][25][26][27] கர்நாடகத்தின் பகுதிகள் 11 ஆம் நூற்றாண்டில் சோழர்களால் வெற்றிகொள்ளப்பட்டு சோழப்பேரரசுடன் இணைக்கப்பட்டன.[28]
கர்நாடகத்தின் மலைநாட்டை பூர்வீகமாகக்கொண்ட, போசளர்களால் நிறுவப்பட்ட போசளப் பேரரசு முதல் புத்தாயிரம் ஆண்டு துவக்கத்தில். கலை மற்றும் கட்டிடக்கலையிலும் தனித்துவமாகவும், கன்னட இலக்கிய வளர்ச்சியிலும் முத்திரைப் பதித்தது. இந்தக்காலகட்டத்தில் கோயில்கள் மற்றும் கட்டிடக்கலையில் விசரா பாணியை ஒட்டிய சிற்பங்கள், கட்டுமானங்கள் போன்றவை தழைத்தோங்கியது.[25][29][30][31][32] போசளப் பேரரசின் செல்வாக்கு மிகுந்த காலகட்டத்தில் பேரரசின் எல்லைக்குள் தற்போதைய ஆந்திரப்பிரதேசம், தமிழ்நாடு ஆகியவற்றின் பெரும்பகுதிகளைக் கொண்டிருந்தது.[33][34][35][36]
14 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில், ஒசபட்டணத்தை ( பின்னர் விஜய நகரம் என அழைக்கப்பட்டது) தலைநகராகக் கொண்டு உருவான விஜயநகரப் பேரரசு தெற்கில் முஸ்லீம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு சவால்விடும்விதமாக வெற்றிகரமாக உயர்ந்தது. இந்தப் பேரரசு, முதலாம் ஹரிஹரர் மற்றும் புக்கா ராயன் ஆகியோரால் நிறுவப்பட்டதாக பல வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். இவர்கள் கடைசி போசள மன்னனான மூன்றாம் வீர வல்லாளனின் தளபதிகள் ஆவர். இவர்களால் நிறுவப்பட்ட இந்த பேரரசு இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக செழித்தோங்கியது.[37][38] இந்த விஜயநகரப் பேரரசுக்கு தக்காணத்தில் முதன்மை போட்டியாளர்களாக இருந்தவர்கள் பீதரின் பாமினி சுல்தா்கள் ஆவர்[39] .[40] 1565 இல் சுல்தான்களுடன் நடந்த தலைக்கோட்டைப் போரில் விஜயநகரப் பேரரசு தோல்வியுற்று, உருக்குலைந்த பின்னர், தக்காணத்தில் பிஜாப்பூர் சுல்தானியம் முதன்மையான சக்தியாக உயர்ந்தது, இது 17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் முகலாயர்களிடம் தோல்வியுறும்வரை நீடித்தது.[41][42] பாமினி மற்றும் பிஜாபூர் சுல்தான்கள் உருது மற்றும் பாரசீக இலக்கியத்திதையும், இந்தோ சாராசானிக் கட்டிடக்கலை போன்றவற்றை ஆதரித்தனர்.[43] கர்நாடகத்தின் குறிப்பிட்ட பகுதிகளை மராத்தியர்கள், சத்ரபதி சிவாஜி தலைமையில் வெற்றிகொண்டு 27 ஆண்டுகள் தங்கள் ஆதிக்கத்தில் வைத்திருந்தனர்.
மைசூர் உடையார்கள் என்பவர்கள் விஜயநகர பேரரசின் பணியாளர்களாக இருந்தவர்களாவர். முகலாய மன்னரான அவுரங்கசீப்பிடம் இருந்து 15 ஆம் நூற்றாண்டில் மைசூர் பகுதியை குத்தகைக்கு எடுத்தனர். உடையார் குல மன்னரான இரண்டாம் கிருட்டிணராச உடையார் இறந்ததைத் தொடர்ந்து மைசூர்ப் பேரரசின் கட்டுப்பாட்டை உடையாரின் படைத் தளபதியாக இருந்த ஐதர் அலி தன்கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தான். ஐதரின் மரணத்திற்கு பிறகு அவன் மகன் திப்பு சுல்தானின் கட்டுப்பாட்டுக்குள் பேரரசு வந்தது. தென் இந்தியாவை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயன்ற ஐரோப்பியர்களை எதிர்த்துப் போராடிய மைசூர் புலி என அழைக்கப்பட்ட திப்பு சுல்தான் ஆங்கில மைசூர் போரில், கொல்லப்பட்டதை அடுத்து, மைசூர் பிரித்தானிய இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
இந்திய விடுதலைக்குப்பின், மைசூரை உடையார் மன்னரிடம் இருந்து இந்தியா எடுத்துக்கொண்டது.[எவ்வாறு?] இதன்பின் மைசூர் இந்தியாவின் ஒரு மாநிலமானது. முன்னாள் அரசர் இராஜ்பிரமுக் அல்லது ஆளுநராக 1975வரை இருந்தார். இருபதாம் நூற்றாண்டின் நடுவில் மொழிவாரி மாநிலங்கள் வேண்டி போராட்டம் உச்சம் பெற்றது, இதனால் மாநில மறுசீரமைப்பு சட்டம் 1956 இன்படி, குடகு, மதராஸ் மாகாணத்தின் ஒரு பகுதி, ஐதராபாத்தின் கன்னடப்பகுதி, மும்பை மாகாணப்பகுதி ஆகியவற்றை இணைத்து மைசூர் மாநிலம் அமைக்கப்பட்டது. 1973 இல் மைசூர் மாநிலம் என்ற பெயர் கர்நாடகம் என மாற்றப்பட்டது. இவ்வாறு மைசூர் மாநிலம் 1956 நவம்பர் 1 அன்று உருவானது. ஒவ்வோராண்டும் நவம்பர் முதலாம் தேதியை கன்னட ராஜ்யோத்சவா என்ற பெயரில் கன்னட மாநிலம் அமைந்த நாளை கர்நாடகத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.
Seamless Wikipedia browsing. On steroids.