ந்
247 தமிழ் எழுத்துக்களில், 18 மெய்யெழுத்துக்களுள், மெல்லின மெய்யெழுத்துக்கள் ஆறில் ஒன்று. From Wikipedia, the free encyclopedia
ந் (ⓘ) தமிழ் மொழியின் எழுத்துகளில் ஒன்று. இது தமிழ் நெடுங்கணக்கில் இருபத்தோராவது எழுத்து. இது மொழியின் ஓர் ஒலியையும், அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கும். இவ்வெழுத்தை "நகர மெய்" அல்லது "நகர ஒற்று" என்பர். எனினும் பொதுப் பேச்சு வழக்கிலும், பிள்ளைகளுக்கு எழுத்து கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை "இந்தன்னா" என வழங்குவர். தனி மெய்களாக நிற்கும்போது ந், ன் என்பவற்றிடையே ஒலிப்பு வேறுபாடு தெளிவாக உள்ளது. எனினும் இவ்விரண்டு எழுத்துகளுடனும் உயிர்கள் சேர்ந்து உருவாகும் இவ்வெழுத்துகளின் ஒத்த உயிர்மெய்களிடையே ஒலிப்பு வேறுபாடு இல்லை. இதனால் இவ்விரு எழுத்துகளையும் முறையே நகரம், என்றும் னகரம் என்றும் எழுத்தில் வேறுபாடு காட்ட முடிந்தாலும், சொல்லும்போது ஒலிப்பு வேறுபாடு இருக்காது. இதனால் இவற்றை வேறுபடுத்திக் குறிப்பிட வேண்டியபோது அவற்றுக்கு முன்வரும் எழுத்துகளைக் குறித்து ன் ஐ றன்னகரம்(ற+னகரம்-றகரத்தை அடுத்து வரும் னகரம் என்றும் ந் ஐத் தந்நகரம்(த+நகரம்-தகரத்தை அடுத்து வரும் நகரம்) என்றும் குறிப்பிடப்படுவது வழக்கம்.
"ந்" இன் வகைப்பாடு
தமிழ் எழுத்துக்களின் உள்ள உயிரெழுத்து, மெய்யெழுத்து என்னும் இரண்டு வகைகளில் ந் மெய்யெழுத்து வகையைச் சேர்ந்தது. மெய்யெழுத்துக்கள் அரை மாத்திரை அளவே ஒலிக்கும் தன்மை வாய்ந்தன. இதனால் இவ்வெழுத்தும் அரை மாத்திரை அளவுடனேயே ஒலிக்கும்[1]
தமிழ் எழுத்துக்களில் மெய்யெழுத்துக்கள் வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்று இனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ந் மெல்லின மெய் வகையைச் சேர்ந்தது. இவ்வெழுத்து, மென்மையான ஓசை உடையது ஆதலால் மெல்லின வகையுள் சேர்க்கப்பட்டுள்ளது.
இனவெழுத்துக்கள்
எழுத்து ஒலியின் பிறப்பிடம் (இடம்), முயற்சி என்பவற்றின் அடிப்படையில் எழுத்துக்களை இனங்களாகப் பிரிப்பதுண்டு. அது போலவே பொருள், வடிவு என்பவற்றாலும் இனங்கள் பிரிக்கப்படுகின்றன. ஒலியின் பிறப்பிடம், முயற்சி என்பவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது த், ந் என்னும் இரண்டும் நாக்கின் நுனி மேல்வாய்ப் பல்லின் அடியைப் பொருந்த உருவாவதால் த், ந் இரண்டும் ஒன்றுக்கு ஒன்று இன எழுத்தாக அமைகின்றன.[2].
குறிப்புகள்
உசாத்துணைகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.