வடக்கு ஆப்பிரிக்கப் போர்முனை
From Wikipedia, the free encyclopedia
இரண்டாம் உலகப் போரில் வடக்கு ஆப்பிரிக்கப் போர்முனை (North African Front) என்பது வடக்கு ஆப்பிரிக்காவில் துனிசியா, அல்ஜீரியா, மொரோக்கோ, லிபியா மற்றும் எகிப்து ஆகிய பகுதிகளை உள்ளடக்கியிருந்தது. இது நடுநிலக்கடல், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க களத்தின் ஒரு பகுதியாகும். ஜூன் 10, 1940 - மே 16, 1943 காலகட்டத்தில் இங்கு அச்சுப் படைகளுக்கும் நேச நாட்டுப் படைகளுக்கும் இடையே நிகழ்ந்த மோதல்கள் வடக்கு ஆப்பிரிக்கப் போர்த்தொடர் (North African Campaign) என்றழைக்கப்படுகின்றன.
வடக்கு ஆப்பிரிக்கப் போர்த்தொடர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
நடுநிலக்கடல், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க களத்தின் பகுதி | |||||||
குரூசேடர் நடவடிக்கையில் அழிக்கப்பட்ட ஒரு ஜெர்மானிய டாங்கு (நவம்பர் 27, 1941) |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
நேச நாடுகள்: ஐக்கிய இராச்சியம் இந்தியா ஆத்திரேலியா தென்னாப்பிரிக்கா நியூசிலாந்து ஐக்கிய அமெரிக்கா சுதந்திர பிரான்ஸ் போலந்து செக்கஸ்லோவாக்கியா கிரேக்க நாடு | அச்சு படைகள்: இத்தாலி ஜெர்மனி |
||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
ஹரால்ட் அலெக்சாந்தர் கிளாட் ஆச்சின்லெக் டுவைட் டி. ஐசனாவர் ஆர்ச்சிபால்டு வேவல் | பியேத்ரோ படொக்லியோ யூர்கென் வோன் ஆர்ணிம் யூகோ காவெல்லெரோ ஆல்பெர்ட் கெஸ்செல்ரிங் ஜியோவானி மெஸ்சே எர்வின் ரோம்மல் ஃபிரான்சுவா டார்லான் |
||||||
இழப்புகள் | |||||||
~2,38,558 பேர்[nb 1] | 6,20,000[1]–9,50,000 பேர்[4][nb 2] 8,000 வானூர்திகள்[4] 6,200 பீரங்கிகள், 2,500 டாங்குகள் மற்றும் 70,000 போக்குவரத்து ஊர்திகள்[4] |
அச்சு நாடுகள் தரப்பில் முதலில் இத்தாலியும் பின் அதனுடன் நாசி ஜெர்மனியும் பங்கேற்றன. நேச நாடுகள் தரப்பில் பிரிட்டனும் அதன் பேரரசில் இடம் பெற்றிருந்த நாடுகளும் பங்கேற்றன. 1941 முதல் ஐக்கிய அமெரிக்காவும் நேச நாட்டுக் கூட்டணியில் நேரடியாக இடம்பெற்றது. இப்போர்முனையில் மோதல்கள் மேற்குப் பாலைவனப் போர்த்தொடர் மற்றும் துனிசியப் போர்த்தொடர் என இரு பெரும் கட்டங்களாக நடைபெற்றன. இவ்விரு போர்த்தொடர்களைத் தவிர வடக்கு ஆப்பிரிக்காவில் அமெரிக்க படையிறக்க நிகழ்வான டார்ச் நடவடிக்கை மற்றும் நடுநிலக்கடலில் நிகழ்ந்த பல வான்படை மற்றும் கடற்படை சண்டைகளும் வடக்கு ஆப்பிரிக்கப் போர்முனையின் பகுதியாகக் கருதப்படுகின்றன.
மூன்று ஆண்டுகள் போருக்குப்பின் வடக்கு ஆப்பிரிக்காவில் அச்சு படைகள் தோற்கடிக்கப்பட்டு சரணடைந்தன. இத்தோல்வியினால் வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்திருந்த இத்தாலிய காலனிகள் நேச நாட்டுக் கட்டுப்பாட்டில் வந்தன. வடக்கு ஆப்பிரிக்கப் போர்முனையில் அச்சு நாடுகளுக்கு ஏற்பட்ட படை மற்றும் தளவாட இழப்புகள் பிற களங்களில் அவற்றின் வெற்றி வாய்ப்பினைப் பாதித்தன. வடக்கு ஆப்பிரிக்காவில் அச்சுப் படைகள் சரணடைந்தபின்னர் அப்பகுதி இத்தாலி மீதான நேச நாட்டுப் படையெடுப்புக்குக்குத் தளமாகப் பயன்படுத்தப்பட்டது.