பண்டைத் தமிழகத்தின் பொருளியல் நிலை
From Wikipedia, the free encyclopedia
பண்டைத் தமிழகத்தின் பொருளியல் நிலை என்பது கி.மு. 200 முதல் கி.பி. 200 வரையிலான காலத்தில் தமிழக நிலப்பகுதியில் அமைந்திருந்த பொருளியல் நிலையையும் கூறிகளையும் குறிக்கும். வேளாண்மை, நெசவு, முத்துக் குளித்தல், இடுபொருட்களைக் கொண்டு பயன்படு பொருட்களைச் செய்யுதல், கட்டுமானம் ஆகியன முதன்மையான தொழில்களாக இருந்தன. பல பகுதிகளில் நெற்பயிர் வேளாண்மை ஓங்கியிருந்தது. அதுவே மிகுதியாக உட்கொள்ளப்பட்ட உணவுப் பொருளாகவும் உள்நாட்டு வணிகத்தில் பண்டமாற்றுப் பொருளாகவும் இருந்தது. மிளகு, கம்பு, சோளம், பருப்பு வகைகள், கரும்பு ஆகியனவும் அதிக அளவில் பயிரிடப்பட்டன. மதுரையும் உறையூரும் ஆடைத் தொழில் மையங்களாகவும், கொற்கை நகர் முத்து வணிக மையமாகவும் விளங்கின.
உள்நாட்டு வணிகம் பெரும்பாலும் பண்டமாற்று முறையிலேயே நடைபெற்று வந்தது. வணிகர்கள் குழுக்களாக இயங்கி ஆட்சியாளர்களின் தலையீடின்றி பணியாற்றி வந்தனர். பண்டைத் தமிழக மக்கள் உரோமர்களுடனும் கடல்கடந்த வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர். தமிழகத்திலிருந்து எகிப்திற்கு பருவக்காற்றின் துணையோடு செல்வதற்கான நேரடி கடல்வழி கண்டுபிடித்தபின் இவ் வணிகம் மேலும் சிறப்பாக நடக்கத் துவங்கியது. மிளகு, முத்து, யானைக் கோடு, ஆடைகள், தங்க அணிகள் ஆகியவை தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன. கண்ணாடி, பவளம், வைன் மது, மஞ்சற்குருந்தம் (புட்பராகம்) முதலியன இறக்குமதி செய்யப்பட்டன. வெளிநாட்டு வணிகத்தின் பயனாக பெருமளவு உரோம்ப் பணம் கிடைத்தது. அது பன்னாட்டு வணிகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாணயமாக இருந்தது.
ஆட்சியாளர்கள் குடிமக்களிடம் வரி பெற்று சாலைகள், துறைமுகங்கள் முதலியவற்றைக் கட்டினர். செல்வம் பலதரப்பட்ட மக்களிடம் வெவ்வேறு அளவுகளில் இருந்தது. இதனால் மக்களிடையே பல பொருளியல் தட்டுகள் உருவாயின.