கண்ணாடி
From Wikipedia, the free encyclopedia
கண்ணாடி என்று பொதுவாகக் குறிப்பிடும்போது இது, சாளரங்கள், போத்தல்கள், மூக்குக் கண்ணாடிகள் போன்றவற்றின் உற்பத்தியில் பயன்படுவதும்; கடினத்தன்மை கொண்ட, உடையக்கூடிய, ஒளியை ஊடுசெல்ல விடக்கூடிய, பளிங்குருவற்ற திண்மமுமான பொருளொன்றைக் குறிக்கிறது. தொழில்நுட்ப அடிப்படையில், கண்ணாடி என்பது குளிர்ந்து பளிங்காகாமல் திண்மமாகிய கனிமப் பொருட் கலவை ஆகும். பெரும்பாலான கண்ணாடிகள் சிலிக்காவை முக்கிய கூறாகவும், கண்ணாடி உருவாக்கியாகவும் கொண்டுள்ளன. அறிவியல் அடிப்படையில் கண்ணாடி என்பது நெகிழிகள், பிசின்கள், பிற சிலிக்காவைக் கொண்டிராத பளிங்குருவற்ற திண்மங்கள் போன்ற எல்லாப் பளிங்குருவற்ற திண்மங்களையும் குறிக்கப் பயன்படுவதுண்டு. இது தவிர மரபு வழியான உருக்கும் நுட்பங்கள் தவிர்ந்த வேறு முறைகளையும் கவனத்துக்கு எடுத்துக் கொள்வது உண்டு. எனினும், கண்ணாடி அறிவியல் கனிம பளிங்குருவற்ற திண்மங்களை மட்டுமே உள்ளடக்குகின்றது. கரிம பளிங்குருவற்ற திண்மங்கள் பல்பகுதிய அறிவியல் துறையுள் அடங்கும்.
கண்ணாடி இன்று பல்வேறு அறிவியல் துறைகளிலும், தொழில் துறைகளிலும் முக்கிய பங்காற்றுகின்றது. இதன் ஒளியியல் இயல்புகளும், பிற இயற்பியல் இயல்புகளும் இதனைத் தட்டைக் கண்ணாடி, கொள்கலக் கண்ணாடி, ஒளியியல் மற்றும் ஒளிமின்னணுவியல் சார்ந்த பொருட்கள், சோதனைச்சாலைக் கருவிகள், வெப்பக்காவலிகள், வலிதாக்கல் கண்ணாடி இழைகள், கலைப் பொருட்கள் போன்றவற்றுக்கு உகந்த பொருளாக ஆக்குகின்றது.[1][2][3]
இது இன்று ஒரு முக்கியமான கட்டிடப் பொருளாக விளங்குகிறது. கண்ணாடி கிறித்துவுக்கு முன் 4000 ஆண்டுகளிலேயே அறியப்பட்டிருந்ததாகக் கருதப்படினும், கட்டிடப் பொருள் என்ற அளவில் இதன் பயன்பாடு 18 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரே குறிப்பிடத்தக்க அளவில் இருந்தது. கடந்த நூற்றாண்டிலேயே இது பெருமளவு வளர்ச்சி பெற்று இன்றைய நிலையை அடைந்ததெனலாம். கண்ணாடி, இன்றைய கட்டிடங்களில், நவீனத்துவத்தின் பிரதிபலிப்பாக விளங்குகிறது.