மலேசியாவின் வடபகுதியில் உள்ள கெடா மாநிலத்தைப் பற்றிய வரலாறு From Wikipedia, the free encyclopedia
கெடா வரலாறு (மலாய் மொழி: Sejarah Kedah; ஆங்கிலம்: History of Kedah); என்பது தீபகற்ப மலேசியாவின் வடபகுதியில் உள்ள கெடா மாநிலத்தைப் பற்றிய வரலாறு ஆகும். மலேசிய வரலாற்றில் கெடா வரலாறு மிக மிகப் பழமையானது; மிகவும் தொன்மையானது.
மலேசிய வரலாற்றில் பொதுவாகவே மலாக்கா சுல்தானகம் தான் முன்னிலைபடுத்தப் படுகிறது. இருப்பினும் கெடா சுல்தானகம் தான் மிகப் பழைமையானது. ஜொகூர் சுல்தானகம்; பேராக் சுல்தானகம்; பகாங் சுல்தானகம் ஆகிய சுல்தானகங்களைக் காட்டிலும் கெடா சுல்தானகம் தான் மிகவும் பழைமையானது.[1]
மலாக்காவின் வரலாறு பரமேசுவரா காலத்தில் இருந்து தொடங்குகிறது. அந்த வகையில் மலாயா காலனித்துவ வரலாறும் மலாக்காவின் வரலாற்றில் இருந்து தான் தொடங்குகிறது. ஆனால் கெடா வரலாறு இவற்றுக்கு முன்னதாகத் தொடங்குகிறது.
கிமு 788 வாக்கில், கோலா மூடா மாவட்டத்தின், மெர்போக் (Merbok River) ஆற்றுப் படுகையின் வடக்குக் கரையில் ஒரு பெரிய குடியேற்றம் நிகழ்ந்து உள்ளது.
ஆசுத்திரோனீசியர்கள் (Austronesians) மலாய் தீவுக் கூட்டத்திற்கு (Malay Archipelago) சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன்னர் குடியேறத் தொடங்கினர். தைவான் நாடுதான் ஆசுத்திரோனீசிய மொழிகளின் தொட்டில் என்பது இப்போது பரவலாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்பு, ஆசுத்திரோனீசியர்கள் பிலிப்பைன்சுக்குக் குடியேறத் தொடங்கினார். பின்னர், அவர்களின் சந்ததியினர் சிலர் தெற்கு நோக்கி இந்தோனேசியாவிற்கும்; கிழக்கு நோக்கி பசிபிக் தீவுகளுக்கும் இடம்பெயரத் தொடங்கினர்.[2]
ஆசுதிரோனேசியர்கள் சிறந்த கடல் பயணர்கள். நியூசிலாந்து, ஹவாய் மற்றும் மடகாசுகர் (Madagascar) வரை சென்று அங்குள்ள பகுதிகளைக் காலனித்துவம் செய்து உள்ளார்கள். தவிர மலாயா போன்ற சில இடங்களில் அவர்கள் உள்ளூர் ஓராங் அஸ்லிப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டனர். அந்த வகையில் புலம்பெயர்-மலாயர்கள் (Deutero-Malays) ஆனார்கள்.
கிமு 4-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், ஆசுத்திரோனீசியர்கள் தங்கள் தயாரிப்புகளுக்கான புதிய சந்தைகளைத் தேடி மேற்கு நோக்கிப் பயணம் செய்யத் தொடங்கினர்.[3]
ஆசுத்திரோனீசியர்கள் மூன்று வகையான படகு அல்லது கப்பல்களைப் பயன்படுத்தியதாக வரலாற்று ஆசிரியர் பெரிப்ளசு (Periplus) கூறுகிறார். உள்ளூர் போக்குவரத்திற்காகச் சிறிய கரையோரப் படகுகள்; அதிகமான சுமைகளைச் சுமந்து செல்லும் கப்பல்கள்; மற்றும் பெரும் கப்பல்கள்.[4]
இடைக்காலச் சகாப்தத்தின் (Medieval Era) தொடக்கத்தில், இந்தியப் பெருங்கடல் வர்த்தகத்தில் ஒரு பெரிய சக்தியாக விளங்கிய ஸ்ரீ விஜய பேரரசின் ஒரு பகுதியாகக் கெடா மாறியது. இதுவே 9-ஆம் நூற்றாண்டு தொடங்கி 13-ஆம் நூற்றாண்டு வரையிலான தென்னிந்தியச் சோழப் பேரரசுடன் வணிகப் போட்டிகளுக்கும்; படையெடுப்புகளுக்கும் வழிவகுத்தன.
சோழர்கள் இந்தியப் பெருங்கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் சக்திவாய்ந்த வணிகக் கடல் படையைக் கொண்டு இருந்தனர். 11-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், சோழ மன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் (King Rajendra Chola I) கெடாவைத் தாக்க ஒரு பெரும் படையை அனுப்பினார்.
அப்போது கெடா, ஸ்ரீ விஜய பேரரசின் (Sri Vijaya) ஆளுமையின் கீழ் இருந்தது. சோழர்களின் கடற்படைகள் ஸ்ரீ விஜய பேரரசை வெற்றிகரமாகத் தோற்கடித்து, கெடாவைக் கைப்பற்றிச் சூறையாடினர்.
பண்டைய கெடாவில் பல நூற்றாண்டுகளாக ஒரு முக்கியமான இந்துக் குடியிருப்பு இருந்து உள்ளது. வரலாற்று அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. 1840-களில் அந்தக் குடியிருப்புச் சான்றுகளைக் கர்னல் ஜேம்சு லோ (James Low) என்பவர் வெளியுலகத்திற்குத் தெரியப் படுத்தினார்.
அதன் பின்னர் 1936 - 1937-ஆம் ஆண்டுகளில் எச்.ஜி. குவாரிச் வேல்சு (HG Quaritch Wales) என்பவரும்; அவருடைய மனைவி டோரதி வேல்சு (Dorothy Wales) என்பவரும்; பூஜாங் பள்ளத்தாக்கு பகுதிகள் இருப்பதை அகழ்வாராய்ச்சிகள் மூலமாகக் கண்டுபிடித்தார்கள். இவர்களுக்கு அல்சுதாயர் லேம்ப் (Alastair Lamb) எனும் வரலாற்று ஆய்வாளரும் உதவியாக இருந்தார். பின்னர் குவாரிச் வேல்ஸ் மூலமாக முழுமையான அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்றன.
டாக்டர் குவாரிச் வேல்சு, கெடாவைச் சுற்றியுள்ள முப்பதுக்கும் மேற்பட்ட தளங்களை ஆய்வு செய்தார். இந்தத் தளம் பல நூற்றாண்டுகளாக தென்னிந்திய, பௌத்த மற்றும் இந்துத்துவ செல்வாக்கின் கீழ் உள்ளவர்களால் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பில் இருந்துள்ளதாக அவர்களின் அகழாய்வு முடிவுகள் காட்டுகின்றன.[5]
அவர்களின் அகழ்வாராய்ச்சியின் போது நன்கு பாதுகாக்கப்பட்ட ஒரு பௌத்தக் கோயில் மெர்போக், பெங்காலான் பூஜாங் (Pengkalan Bujang) எனும் இடத்தில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.[6]
கி.மு. முதல் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தியாவில் இருந்தும் சீனாவில் இருந்தும் வந்த வணிகர்களும் குடியேற்றக்காரர்களும் வணிகத் துறைமுகங்களையும் நகரங்களையும் உருவாக்கினர். பிற்பகுதியில் கடாரம் எனும் கெடா; ஸ்ரீ விஜயப் பேரரசின் ஆட்சியின் கீழ் இருந்துள்ளது.
11ஆம் நூற்றாண்டில் சோழ அரசன் இராசேந்திர சோழன் கடாரம் எனப்படும் இடத்தைப் போரில் வென்றதற்கான வரலாற்று ஆதாரங்கள் காணப்படுகின்றன. அடுத்த 20 வருடங்களில் சுமத்திரா மற்றும் மலாயாத் தீபகற்பத்தில் சோழர்களால் தொடர்ச்சியான படையெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. சோழர்களின் வருகையும் போர்களும் ஸ்ரீ விசய ஆட்சியை வலுவிழக்கச் செய்தன.
2009-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆய்வுக் கழகத்தினரினர் (USM’s Centre for Global Archaeological Research); கெடா பூஜாங் பள்ளத்தாக்கு; சுங்கை பத்து எனும் இடத்தில் 1890 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கலைப் படைப்புகள் (Ancient Artifacts) இருப்பதைக் கண்டுபிடித்தார்கள்.[7]
இந்தக் கண்டுபிடிப்புகள் மலாக்கா வரலாற்றைப் பின்னுக்குத் தள்ளி விட்டன. ஏன் என்றால் மலாக்காவின் வரலாறு கி.பி.1400-ஆம் ஆண்டு தொடங்குகிறது. அதே சமயத்தில் கெடாவின் வரலாறு கி.பி.110-ஆம் ஆண்டு தொடங்குகிறது.
சுங்கை பத்து தொல்பொருள் தளம் 1 ஆம் - 3 ஆம் நூற்றாண்டுகளுக்கு முந்தைய பல இந்து - பௌத்த கோயில்களின் இடிபாடுகளைக் கொண்டுள்ளது. இருப்பினும் இந்தத் தளம் கி.மு. 535 முதல் இருந்து வருவதாகவும் நம்பப் படுகிறது.[8]
இங்கு கிடைக்கப் பெற்ற மண்பானை, மண்சட்டிகள், கப்பல் கம்பங்கள், கப்பல் தூண்கள்; 2600 ஆண்டுகள் பழைமையானவை என்று உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.[8]
சுங்கை பத்துவின் மண் சிதைவுகள்; கரியச் சிதைவுகளை மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அனைத்துலக தொல்பொருளியல் ஆய்வுத் துறை (Centre for Global Archaeological Research of Universiti Sains Malaysia (USM) ஆய்வுகள் செய்து உறுதிபடுத்தி உள்ளது.[7]
இரும்பு ஏற்றுமதியில் ஈடுபட்டு இருந்ததாக நம்பப்படும் வணிகக் கப்பல்கள் இந்தத் தளத்தில் 2000 ஆண்டுகள் புதைந்து கிடப்பதாகத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கடாரத்து நாகரிகம் தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப் பழைமையான நாகரிகம் என்றும் ஆசியாவின் பழைமையான நாகரிகங்களில் முதன்மையானது எனவும் அறியப்பட்டு உள்ளது. மலாக்காவின் வரலாறு; சிங்கப்பூர் வரலாறு; சுமத்திரா ஜாவா வரலாறு; ஆகிய வரலாறுகளைக் காட்டிலும் கடாரத்து வரலாறு முதல் வரலாறு என வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர்.[7]
கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட்; ஜாவாவில் உள்ள பொரோபுடுர் புராதன ஆலயங்களுக்கு முன்னரே கடார நாகரிகம் உருவாகி விட்டது என்று மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம்|மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தைச்]] சேர்ந்த பேராசிரியர் மொக்தார் சைடின் கூறுகிறார்.[7]
கெடா மாநிலத்தில் உள்ள இந்தச் சுங்கை பத்துவில் 4 km2 (1.5 sq mi) பரப்பளவில் அகழ்வாராய்ச்சிகள் செய்யப்பட்டன. அந்த இடங்களின் அகழ்வாராய்ச்சிக் கண்டுபிடிப்புகளின் மூலமாக, கி.மு. 788-ஆம் ஆண்டிலேயே வரலாற்றுக்கு முந்தைய ஒரு நாகரிகம் அங்கு இருந்தது தெரிய வருகிறது.[9]
சுங்கை பத்துவில் உள்ள தொல்பொருள் தளங்களின் கண்டுபிடிப்பு; அந்தக் காலக்கட்டத்தில் இரும்புத் தாது உருக்குதல்; மற்றும் வர்த்தகத்தில் ஒரு செழிப்பான நிலையில் இருந்ததற்கான சான்றுகளைக் காட்டுகின்றது.
சுங்கை பத்துவின் நாகரிகம் என்பது பண்டைய பண்டைய ரோமாபுரி நாகரிகம் (Ancient Rome) நிறுவப் படுவதற்கு முந்தையது. அந்த வகையில் சுங்கை பத்துவின் நாகரிகம் தென்கிழக்கு ஆசியாவின் பழமையான நாகரிகமாக (Oldest civilization in Southeast Asia) மாறி உள்ளது.[10]
கெடா வரலாற்றை மேற்கோள் காட்டுவது கெடா வரலாற்றுப் பதிவேடுகள் (Kedah Annals). அதில் மாறன் மகாவம்சன் (Maaran Mahavamsan) எனும் மேரோங் மகாவங்சா (Merong Mahawangsa). கெடா இராச்சியத்தை உருவாக்கியவர் என்று சொல்லப் படுகிறது.
மாறன் மகாவம்சன் எனும் பெயர்தான் மேரோங் மகாவங்சா என்று திரிபுநிலை அடைந்தது. அந்த வகையில் கெடாவின் வரலாறு மாறன் மகாவம்சன் காலத்தில் இருந்து தொடங்குகிறது.
மாறன் மகாவம்சனுக்குப் பின்னர் கெடா மாநிலத்தை ஆட்சி செய்த இந்து சமய அரசர்கள் ஒவ்வொருவரும் ஸ்ரீ பாதுகா மகாராஜா (Sri Paduka Maharaja) என்ற இந்துப் பட்டத்தைப் பயன்படுத்தினர்.
இந்த ஆண்டு கணக்குகள் ஒவ்வொரு வரலாற்றுப் பதிவேட்டிலும் முரண்பாடுகளாக உள்ளன. ஆனால் கெடாவின் முதல் ராஜா தர்பார் ராஜா I (Durbar Raja I) (330–390) என்று கெடா சுல்தான்களின் கால வரிசையில் குறிப்பிடப் படுகிறது. (Source: Muzium Negeri Kedah, Alor Setar, Malaysia)
கெடா இராச்சியம் மதம் மாற்றம் அடைந்த பின்னர் கெடா சுல்தானகம் என பெயர் பெற்றது. 1920-களில் அல்-தாரிக் சலாசிலா நெகிரி கெடா தாருல் அமான் (Al-Tarikh Genealogy) அல்லது கெடா மரபியல் (Kedah Genealogy) எனும் ஓர் அரச வம்சாவளி தொகுக்கப்பட்டது.[11]
இதன் பின்னர் கெடா சுல்தானகம் உருவானது. அந்தச் சுல்தானகத்தில் வரும் சுல்தான்களின் பெயர்களின் பட்டியல்:[11]
1136-ஆம் ஆண்டில் கெடா, புக்கிட் மெரியாம் (Bukit Meriam) மலைப் பகுதியில் இருந்த மகா ராஜா தர்பார் ராஜா II-வின் (Durbar Raja II) அரண்மனைக்கு யெமன் நாட்டைச் சேர்ந்த சேக் அப்துல்லா பின் ஜாபர் குவாமிரி (Sheikh Abdullah bin Ja'afar Quamiri) என்ற முசுலீம் அறிஞர் வருகை புரிந்தார்.
முசுலீம் அறிஞரின் வருகைக்குப் பின்னர் மகா ராஜா தர்பார் ராஜா II, இசுலாத்திற்கு மதமாற்றம் அடைந்தார். அவர் முசபர் ஷா (Mudzaffar Shah) எனும் பெயரை ஏற்றுக் கொண்டு கெடாவின் சுல்தானகத்தை நிறுவினார். அதன் பின்னர் கெடாவில் சுல்தான் எனும் பட்டப் பெயர் பயன்படுத்தப்பட்டது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.