From Wikipedia, the free encyclopedia
அய்யனார் (Ayyaṉār) என்பவர் தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் போற்றப்படும் ஒரு தமிழ் நாட்டார் தெய்வமாகும். அய்யனார் வழிபாடு கிராமப்புறத் தமிழ் மக்களிடையே பரவலாக உள்ளது.[1][2][3] பழங்காலம் தொட்டே அய்யனார் வழிபாடு தமிழர் இடையே இருந்து வருகிறது. அய்யனார் வழிபாட்டைக் குலதெய்வ வழிபாடு என்றும் சமய ஆய்வாளர்கள் குறிப்பிடுவதுண்டு. தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான ஊர்களிலும் காவல் தெய்வம் ஆக இவரை வழிபடுகின்றனர்.[4] கடந்த காலங்களில் தென்கிழக்காசிய நாடுகளிலும் அய்யனாரை வழிபட்டிருக்கலாம் என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.[5] கிராமப்புறங்களில் உள்ள அய்யனாரின் கோயில்கள் பொதுவாக இவர் மற்றும் இவரது தோழர்கள் குதிரைகள் அல்லது யானைகளில் சவாரி செய்யும் பிரமாண்டமான மற்றும் வண்ணமயமான சிலைகளால் சூழப்பட்டிருக்கும்.[6][7]
பழந்தமிழர்களின் சமயக் கடவுள் ஆவார். இவர் கம்பீரமான தோற்றத்துடன் கையில் செண்டாயுதம் அரிவாள் வைத்திருப்பார். பெரிய பெரிய குதிரை சிலைகள் அய்யனார் கோவில்களில் இருக்கும். பொதுவாக வெட்டவெளியில், காட்டுக்குள் கோவில் அமைந்திருக்கும்.
அய்யனார் கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கி அமர்ந்திருப்பார். இளைஞரைப் போன்றவர். கிரீடம் அணிந்திருப்பார். வலது காதில் குழையும் இடது காதில் குண்டலமும் அணிந்திருப்பார் மற்றும் கடவுளுக்கான அனைத்து ஆபரணங்களையும் அணிந்திருப்பார். சந்தனம் பூசியிருப்பார். வலது கையில் தண்டம் அல்லது செண்டு வைத்திருப்பார். இடது கையை இடது காலின் மீது சார்த்தியது போல் வைத்திருப்பார், இடதுகாலை மடித்து பீடத்தின் மீது வைத்துக்கொண்டு வலது காலை கீழே தொங்கவிட்டிருப்பார். குதிரை மீதோ யானை மீதோ அமர்ந்திருப்பார்.
சிறப்பான காரண காரியங்கள் கருதி சில ஊர்களில் தேவியர்களுடன் சேர்ந்திருக்காமல், அய்யனார் தனித்தும் இருக்கிறார். அய்யனார் அருகில் உள்ள கையில் மலர் அல்லது செண்டாயுதம் பிடித்தபடியும், ஐயனாரின் அருகில் உள்ள காலை மடித்துப் பீடத்தின் மீது வைத்துக் கொண்டு மற்றொரு காலைக் கீழே தொங்கவிட்டபடியும் அமர்ந்திருப்பர்.
பொற்கலை என்றால் பூவைப் போன்ற பண்புடையவள் என்று பொருள். பூரணம் என்றால் நிறைவு, பௌர்ணமி என்று பொருள் எனவே, பூரணை என்றால் மனநிறைவானவள், முழுமதி போன்றவள், என்று பொருளாகும்.
இந்திரன், அக்னி, எமதர்மன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானியன் ஆகிய எட்டு திசை தெய்வங்களும், யோகிகள், சித்தர்கள், வித்யாதர்கள், கின்னரர்கள் முதலியோர் அய்யனாரை வணங்கியபடி இருப்பர்.
அய்யனாரின் பரிவார தெய்வங்களாக ஸ்ரீ பொந்துபுலி கருப்பசாமி,மதுரை வீரன்,கருப்பணசாமி, வீரபத்திரர், இடும்பன், நடுக்காட்டான், நடாள், ஆண்டி, நொண்டி, இருளப்பன், சின்னான், சன்னாசி, மூக்கன் மற்றும் சோணை முதலிய ஆண் தெய்வங்களும், செல்லியாய், காளி, நீலி, ராக்காயி, ராக்கச்சி, கருப்பாயி, சடைச்சி, இருளாயி, செகப்பி, மூக்காயி, பேச்சி, ஏழைகாத்த அம்மன் மற்றும் சப்த (ஏழு) கன்னியர்கள் முதலிய பெண்தெய்வங்களும் பரிவார தெய்வங்களாக உள்ளனர்.
காவல் தெய்வமான அய்யனாருக்கு சைவ உணவான சர்க்கரைப் பொங்கல் படைக்கப்படும். ஆனால் இவரது பரிவார தெய்வங்களுக்கு மதுபானங்கள் வைத்து ஆடு, கோழி போன்றவை பழியிடப்பட்டு படைக்கப்படும்.
கிராமத்தைக் காக்கும் கடவுள் அய்யனார் என்பதால் ஊரின் எல்லையிலேயே பரும்பாலும் அய்யனார் கோவில்கள் இருக்கும். அதிலும் குறிப்பாக ஆற்றங்கறைகளில், கண்மாய்க் கரையில் அல்லது மடைகளுங்கு அருகே இருக்கும். சில ஊர்களிலே நீர்நிலைகளின் அருகில் அல்லது காட்டிற்கு உள்ளே கோயில் இருக்கும். கோயிலின் நுழைவாயிலிலோ அல்லது கோவிலின் பின்னாலோ விநாயகரும் முருகனும் இருப்பர்.
அய்யனாருக்கு முன்னே ஒரு குதிரையோ அல்லது இரண்டு பக்கங்களிலும் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு பெரிய குதிரைகளோ இருக்கும். இவைகளுக்குச் சேமக்குதிரை என்று பெயர். இக்குதிரைகள் முன்னங்கால்களைத் தூக்கியபடியோ அல்லது தரையில் பாவியபடியோ இருக்கும். கால்களைத் தூக்கியவற்றின் கால்களைத் தங்களது தோள்களில் தாங்கியபடி ஒவ்வொரு குதிரைக்கும் இரண்டு பூதங்கள் நிற்கும். பெரும்பாலான கோவில்களில் இப்பூதங்களுக்கு நடுவே, குதிரைக்குக் கீழே காளி நிற்பாள்.
சிலவற்றைத் தவிர பொதுவாக தமிழக கிராம காவல் தெய்வம் கோவில்களில் பூணூல் அணிந்த பிராமணர் பூஜை செய்வதில்லை. அவை அந்தந்த கிராமங்களில் பரம்பரை பூசாரிகளால் பூஜை செய்யப்படுகின்றன. அவர்கள் அதிகபட்சம் வேளார் பட்டம் பெற்ற குயவர் இனத்தை சேர்த்தவராக இருப்பார். சில ஊர்களில் மிக சிறிய அளவில் வெவ்வேறு பிற்படுத்தப்பட்ட அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்த வேறு சாதியினர் பூஜை செய்வார்.
சிவராத்திரி அன்று அய்யனார் பிறந்தவர் என்பதால் அன்று வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன. அன்றைய தினம் அய்யனாரைக் குலதெய்வமாகக் கும்பிடுவோர் அனைவரும் அவரவர் குடும்பத்தினருடன் ஒன்றாகக் கூடிவந்து வழிபடுகின்றனர்.
எருதுகட்டுதல் என்ற விழாவில் ஊர் மக்கள் தங்களது ஆடுமாடுகளை அய்யனாருக்கு காணிக்கையாகக் கொடுக்கின்றனர்.
தைப்பொங்கலை அடுத்து வரும் மஞ்சுவிரட்டு சிவராத்திரித் திருவிழாவில் அய்யனார் கோயில் காளை மாடுகளையும், தங்களது வீட்டில் உள்ள மாடுகளையும் அவிழ்த்து விரட்டிவிடுகின்றனர். இவற்றை இளைஞர்கள் பிடிக்கின்றனர்.
புரவிஎடுத்தல் அன்று அய்யனார் கோவிலில் உள்ள சேமக்குதிரைகளைப் போலச் சிறிய மண்குதிரைகளைச் செய்து திருவிழா அன்று மக்கள் அனைவரும் அவற்றை எடுத்துச் சென்று கோயிலில் சேர்ப்பர். சிலர் நேர்த்திக்கடனாகவும் செய்கின்றனர்.
முளைப்பாரி எடுத்தல் என்ற விழாவில் அனைத்துத் தானியங்களையும் முளைகட்டிவைத்து, அவற்றைப் பெண்கள் தலைகளில் சுமந்து சென்று கோயிலில் வைத்து விழாக்கொண்டாடுகின்றனர். சில ஊர்களில் இவ்விழாவை அம்மன் கோயில்களிலும், சில ஊர்களில் இவ்விழாவை அய்யனார் கோயிலிலும் கொண்டாடுகின்றனர்.
மாசி மாதம் வரும் பௌர்ணமி அன்று திருவிழா கொண்டாடப்படும் அய்யனார் கோவில்கள் உண்டு.
அய்யனார் கோயிலில் திருநீற்றுடன் குங்குமம் பிரசாதமாக வழங்கப்படும். இவற்றுடன் சில கோவில்களில் சுத்தமான நீருடன் சந்தனம் வழங்கப்படும்.
அய்யனாரின் பரிவாரத் தெய்வங்களில் ஒன்றான கருப்பர் காவல் தெய்வமாவார். இவர் கையில் அரிவாள் அல்லது செண்டாயுதம் ஏந்தி வெள்ளைக் குதிரையில் ஏறி, நாய் உடன் வர, ஊரை வலம் வந்து காவல் செய்வார்.
சிவபெருமானுக்கும் மோகினி (பெண்) வடிவில் இருந்த மகாவிஷ்ணுக்கும் பிறந்தவர் ஐயப்பன்.
ஆனால் அய்யனார் ஒரு கிராம தெய்வம், சிவன் விஷ்ணு போன்ற பெருந்தெய்வங்களுக்கு தொடர்பு இல்லாதவர்.
அய்யனார் ஒரு காலத்தில் அதே கிராமத்தில் பிறந்து, வாழ்ந்து, பின் அவரது வீரம் தியாகத்தால் கடவுளாக வணங்கப்படுபவர். ஒவ்வொரு ஊர் அய்யனாருக்கும் ஒரு கதை இருக்கும். அய்யனார் சில இடங்களில் தனியாகாவும் சில இடங்களில் தேவியருடன் வீற்றிருப்பார்.
தமிழ் மொழி வழக்கின் படி அய்யனார் என்பதே சரியானாது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.