எஸ். பி. பாலசுப்பிரமணியம்
கின்னஸ் உலக சாதனை, பத்மஸ்ரீ, பத்மபூஷண், பல தேசிய விருதுகள்..பெற்ற பன்மொழி, பல்துறை வித்தகர், S.P.B. / From Wikipedia, the free encyclopedia
எஸ். பி. பாலசுப்பிரமணியம் (S. P. Balasubrahmanyam; 4 சூன் 1946 – 25 செப்டம்பர் 2020), இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகரும், இசையமைப்பாளரும், நடிகரும், தயாரிப்பாளரும் ஆவார். இவர் எஸ்.பி.பி. (SPB) என்ற முன்னெழுத்துகளாலும் எஸ். பி. பாலு என்றும் பரவலாக அறியப்படுகிறார். இவர் தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி மற்றும் மலையாளத் திரைப்படங்களில் அதிகமாகப் பணியாற்றியுள்ளார்.[7] 1966 முதல் திரைப்படங்களில் பாடத் தொடங்கி, 40,000 இற்கும் அதிகமான பாடல்களை 16 இந்திய மொழிகளில் பாடியுள்ளார்[8] இவர் "பாடும் நிலா" என்று அழைக்கப்படுகிறார்.[9]
எஸ். பி. பாலசுப்ரமணியம் | |
---|---|
2013 இல், எஸ். பி. பாலசுப்ரமணியம் | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் |
பிற பெயர்கள் | பாடும் நிலா[1] |
பிறப்பு | (1946-06-04)4 சூன் 1946
[2] நெல்லூர், சென்னை மாகாணம் (தற்போது ஆந்திரப் பிரதேசம், இந்தியா)[3][4][5] |
இறப்பு | 25 செப்டம்பர் 2020(2020-09-25) (அகவை 74) சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
இசை வடிவங்கள் | பின்னணிப் பாடகர்[2] |
தொழில்(கள்) | பாடகர், பின்னணிப் பாடகர், பின்னணி பேசுபவர், நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், இசையமைப்பாளர் |
இசைத்துறையில் | 1966–2020[6] |
இணையதளம் | இணையத்தளம் |
இவர் கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் ஆறு சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்கான தேசியத் திரைப்பட விருதுகளையும்; ஆந்திர மாநிலத்தின் 25 நந்தி விருதுகளையும், மற்றும் பல கருநாடக, தமிழ்நாடு அரசு விருதுகளையும் பெற்றுள்ளார்.[10][11] அத்துடன், பிலிம்பேர் விருது, ஆறு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் ஆகியவற்றையும் வென்றுள்ளார்.[12][13] உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.[14][15][16][17] 2012 ஆம் ஆண்டில், இந்தியத் திரைத்துறைப் பங்களிப்புகளுக்காக என்.டி.ஆர் தேசிய விருது இவருக்கு வழங்கப்பட்டது.[18] 2016 ஆம் ஆண்டில் இந்தியத் திரைப்பட ஆளுமைக்கான வெள்ளி மயில் விருது வழங்கப்பட்டது.[19][20][21][22] இந்திய அரசு இவருக்கு பத்மசிறீ (2001), பத்ம பூசண் (2011) விருதுகளையும் வழங்கிச் சிறப்பித்தது.[23] சனவரி 2021இல் இவருக்கு இந்தியாவின் குடிமை விருதுகளில் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூசண் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.[24] நவம்பர் 2021இல் இவருக்கு பத்ம விபூசண் விருது இவரின் மறைவிற்குப் பின்பு இந்திய அரசால் வழங்கப்பட்டது.[25] இவரது மகன் எஸ். பி. பி. சரண் விருதினைப் பெற்றுக் கொண்டார்.
பாலசுப்பிரமணியம் 2020 செப்டம்பர் 25 இல் கோவிடு-19 தொற்றினால் பாதிக்கப்பட்டுக் காலமானார்.[26][27]