ஆழ்மயக்கம்
From Wikipedia, the free encyclopedia
ஆழ்மயக்கம் (Coma=கோமா) என்பது வலியை ஏற்படுத்தும் தூண்டல்களுக்கோ, ஒளி, அல்லது ஒலிக்கோ எந்த ஒரு எதிர்வினையும் காட்டாமல் இருப்பதுடன், தன்னிச்சையாக எந்தவொரு இயக்கத்தையோ / செயலையோ செய்ய முடியாமல், சாதாரணமாக உறங்கி, விழித்திருக்கும் வட்டத்தை இழந்து, ஆறு மணித்தியாலங்களுக்கு மேலாக, உணர்வுகளை இழந்து, விழித்தெழச் செய்ய முடியாத நிலையில் தொடரக்கூடிய ஒரு மருத்துவ நிலைமையைக் குறிக்கும்[1]. ஆனாலும் கிளாஸ்கோ ஆழ்மயக்க வரையறையின்படி (Glasgow Coma Scale) [2][3], குழப்பத்திலுள்ளவர்களையும் மிதமான ஆழ்மயக்கத்தில் உள்ளவர்களாகக் கொள்ளலாம்[4]. இந்த ஆழ்மயக்கமானது, உணர்விழந்த நிலை, உணர்விழந்த மயக்க நிலை, செயலிழந்த மயக்க நிலை, நினைவற்ற நிலை என பலவகையாக அழைக்கப்படும். இது ஆங்கிலத்தில் கோமா (Coma) என அழைக்கப்படும். கோமா என்பது ஆழ்ந்த உறக்கத்தைக் குறிக்கும் கிரேக்கச் சொல்லான κῶμα என்பதிலிருந்து பெறப்பட்டதாகும்.
இந்த ஆழ்மயக்கமானது பல்வேறு காரணங்களால் ஏற்படும். இக்காரணிகள் மைய நரம்பு மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்போது இந்நிலைமை தோன்றும். விதிமுறைகளை மீறிய, தவறான போதைப்பொருள் பாவனை, தவறான அல்லது அளவுக்கதிகமான மருந்துகளின் பாவனை போன்றவற்றால் ஏற்படும் நச்சூட்டுப் பாதிப்பு; வளர்சிதைமாற்றத்தில் ஏற்படும் அசாதாரண நிலைகள்; மைய நரம்பு மண்டல நோய்கள்; பக்கவாதம், குடலிறக்கம், இரத்தச் சர்க்கரைக் குறைவு போன்றவற்றால் ஏற்படும் தீவிரமான நரம்பியல் பாதிப்புகள்; வாகன விபத்து, உயரத்திலிருந்து விழுதல் போன்ற நிலைமைகளில் ஏற்படும் பேரதிர்ச்சிப் பாதிப்புகள் போன்றன ஆழ்மயக்கத்திற்கான காரணங்களாக அமைகின்றன. நிலசமயம், மூளையில் பேரதிர்ச்சி ஏற்பட்ட நிலையில், மூளையின் தொழிற்பாட்டை பாதுகாப்பதற்காகவும், சில நோய் நிலைகள், அல்லது காயங்களின் தாக்கத்தால் ஏற்படும் வலி அதிகமாக இருக்கும் வேளையில், அளவுக்கு மீறிய வலியிலிருந்து நோயாளியைப் பாதுகாப்பதற்காகவும், சில மருத்துவ சிகிச்சை முறைகளின் தீவிரத்தன்மையை நோயாளி தாங்க முடியாமல் இருக்கும் எனும்போதும், திட்டமிட்டு, சில குறிப்பிட்ட மருந்துகளை பயன்படுத்தி, இவ்வகையான ஆழ்மயக்கத்திற்கு நோயாளி கொண்டு செல்லப்படுவதும் உண்டு.