![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/6a/Holi_Festival_of_Colors_Utah%252C_United_States_2013.jpg/640px-Holi_Festival_of_Colors_Utah%252C_United_States_2013.jpg&w=640&q=50)
ஹோலி
From Wikipedia, the free encyclopedia
கோலி (Holi) அல்லது ஹோலி அல்லது அரங்கபஞ்சமி என்று அழைக்கப்படும் பண்டிகை இந்து மதத்தின் பிரபலமான இளவேனிற்காலப் பண்டிகையாகும். இந்தப் பண்டிகை இந்தியா, நேபாளம், வங்கதேசம், போன்ற நாடுகளிலும் சுரிநாம், கயானா, தென்னாப்பிரிக்கா, திரினிதாத், இங்கிலாந்து, மொரீசியசு மற்றும் பிஜி போன்ற இந்து மக்கள் பரவலாக வாழும் நாடுகளிலும் விரிவாகக் கொண்டாடப்படுகின்றது. இந்தியாவின் மேற்கு வங்காளம், வங்கதேசம் ஆகிய பகுதிகளில் தோல்யாத்திரை (தௌல் ஜாத்ரா) அல்லது வசந்த-உற்சவம் ("வசந்தகாலத் திருவிழா") என அழைக்கப்படுகின்றது. இது பெரும்பாலும் பிரஜ் சமூகத்தினரால் கடவுள் கிருஷ்ணனுடன் தொடர்புடைய மதுரா, பிருந்தாவனம், நந்தகோன், பர்சானா ஆகிய நகரங்களில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஹோலிப் பண்டிகை காலத்தில் அவை நடைபெறும் 16 நாட்களும் இந்த நகரங்கள் சுற்றுலாத்தளங்களாக இருக்கும்.[2]
ஹோலி வண்ணத் திருவிழா | |
---|---|
![]() ஹோலி கொண்டாட்டம் | |
கடைபிடிப்போர் | இந்துக்கள், உலகளவில் |
வகை | இந்து, கலாச்சாரம், இந்தியர் |
கொண்டாட்டங்கள் | இரவுக்கு முன்: ஹோலிகா தகனம் கோலி: மற்றவர் மீது நிறம் அடித்தல், நடனம், விருந்து, கொண்டாட்டம்[1] |
தொடக்கம் | பல்குனா பூர்ணிமா (பௌர்ணமி) அல்லது பூரன்மாசி (முழு நிலா நாள்) |
நாள் | Phalguna Purnima |
நிகழ்வு | வருடாந்தம் |
துல்ஹேதி, துலாந்தி அல்லது துலேந்தி எனவும் அழைக்கப்படும் ஹோலியின் முக்கிய நாளில் மக்கள், ஒருவர் மீதொருவர் வண்ணப் பொடிகளையோ அல்லது வண்ணம் கலந்த நீரையோ வீசிக்கொண்டு கொண்டாடுகின்றனர். அந்த நாளுக்கு முன்னதாக பெரிய நெருப்புகளை மூட்டுவார்கள். இது ஹோலிகா தகனம் (ஹோலிகாவை எரித்தல்) அல்லது சோட்டி ஹோலி (சிறிய ஹோலி) எனவும் அழைக்கப்படும். இரண்யகசிபுவின் சகோதரி அரக்கி ஹோலிகா இளம் பிரகல்லாதனை நெருப்பில் போட முயன்ற போது அதிலிருந்து வியக்கத்தக்க வகையில் அவர் தப்பித்ததன் நினைவாக நெருப்புகள் மூட்டப்படுகின்றன. ஹோலிகா எரிந்தாள். ஆனால் கடவுள் விஷ்ணுவின் மீது விடாப்பிடியான பக்தி கொண்ட பிரகல்லாதன், தனது அசைக்க முடியாத தெய்வபக்தியின் காரணமாக எவ்வித காயமும் இன்றி உயிர் பிழைத்தான். ஹோலிகா தகனம், ஆந்திர பிரதேசத்தில் காம தகனம் அல்லது காமன் எரிப்பு எனக் குறிப்பிடப்படுகின்றது.
ஹோலிப் பண்டிகை குளிர் காலத்தின் இறுதியில் பங்குனி (பிப்ரவரி/மார்ச்) (பங்குனிப் பெளர்ணமி) மாதத்தின் கடைசி முழு நிலவு நாளில் கொண்டாடப்படுகின்றது. இது பொதுவாக பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தின் இறுதியில் வரும். 2009 ஆம் ஆண்டில் ஹோலிப் பண்டிகை (துலாந்தி) மார்ச் 11 ஆம் தேதியன்றும் ஹோலிகா தகனம் மார்ச் 10 ஆம் தேதியன்றும் கொண்டாடப்பட்டது.
பஞ்சமிக்கு (முழு நிலவிற்கு பிறகு ஐந்தாவது நாள்) சில நாட்கள் கழித்து வருகின்ற அரங்கபஞ்சமியுடன் இவ் வண்ணப் பண்டிகை முடிவடையும்.