யாப்பருங்கலம்
From Wikipedia, the free encyclopedia
தொல்காப்பியத்துக்குப் பின்னர் செய்யுளுக்கு இலக்கணம் கூற எழுந்த நூல்களுள் சிறப்பானவையாகப் போற்றப்படும் நூல்களுள் யாப்பருங்கலம் என்னும் நூலும் ஒன்று. இதை இயற்றியவர் அமிதசாகரர் என்னும் சமண முனிவர். யாப்பருங்கலக் காரிகை என்னும் இன்னொரு யாப்பிலக்கண நூலை எழுதியவரும் இவரே. இந் நூலின் காலம் 11 ஆம் நூற்றாண்டு. இவர் இயற்றிய மற்றொரு நூல் அமுதசாகரம்.
இந்த நூலுக்கு மிக விரிவான விருத்தியுரை எழுதப்பட்டுள்ளது. இதை எழுதியவர் அமிதசாகரரின் மாணாக்கராகிய குணசாகரர் [1] என்று கூறப்படுகின்றது.யாப்பருங்கலம் என்பது யாப்பு என்னும் கப்பல். குணகடல் பெயரோன் (குணசாகரன்) அந்தக் கப்பலைக் கட்டித் தமிழ்க்கடலில் ஓட்டிச் சென்றான் என்று யாப்பருங்கல விருத்தியுரை [2] கூறுகிறது.[3]