![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/59/MalaysianParliament.jpg/640px-MalaysianParliament.jpg&w=640&q=50)
மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம்
From Wikipedia, the free encyclopedia
மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் (இசா) என்பது (மலாய்: Akta Keselamatan Dalam Negeri, ஆங்கிலம்: Internal Security Act) மலேசியாவில் பயன்படுத்தப்படும் ஒரு தடுப்புக் காவல் சட்டம் ஆகும்.[1] 1957ஆம் ஆண்டு, பிரித்தானியர்களிடம் இருந்து மலாயா சுதந்திரம் பெற்றதும் இந்தச் சட்டம் இயற்றப்பட்டது. எவ்விதக் குற்றச்சாட்டுகளும் இல்லாமல், தனிமனிதர் ஒருவரைச் சந்தேகத்தின் பேரில், விசாரணை இல்லாமல் இரண்டு ஆண்டுகள் தடுத்து வைக்க இந்தச் சட்டம் வகை செய்கிறது.[2]
மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் | |
---|---|
![]() மலேசிய நாடாளுகன்றம் | |
மலேசியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பு; தடுப்புக் காவலில் வைத்தல்; அடிபணியச் செய்வதைத் தடுத்தல்; மலேசியாவின் குறிப்பிட்ட பகுதிகளில் நபர்கள் மற்றும் சொத்துக்களுக்கு எதிரான வன்முறையை ஒடுக்குதல்; மற்றும் அவை தொடர்பான விசயங்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்கான சட்டம். | |
சான்று | Act 82 |
நிலப்பரப்பு எல்லை | மலேசியா |
இயற்றியது | மக்களவை (மலேசியா) |
இயற்றப்பட்ட தேதி | 22 சூன் 1960 |
இயற்றியது | மேலவை (மலேசியா) |
சட்ட வரலாறு | |
சட்ட முன்வரைவு | உள்நாட்டு பாதுகாப்பு மசோதா 1960 (Internal Security Bill 1960) |
அறிமுகப்படுத்தியது | அப்துல் ரசாக் உசேன், மலேசிய தற்காப்பு அமைச்சர் |
இந்தச் சட்டத்தின் கீழ், தொழில்சங்கவாதிகள், மாணவர்த் தலைவர்கள், அரசியல்வாதிகள், கல்வியாளர்கள், மனித உரிமைப் போராட்டவாதிகள் போன்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்மைய காலங்களில் வலைப் பதிவாளர்களும் ஊடகவியலாளர்களும் தடுத்து வைக்கப்பட்டனர்.[3] 2013 ஆம் ஆண்டு ஜனவரி 31 வரை, 10,883 பேர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.[4] இவர்களில் பெரும்பாலோர் விடுவிக்கப்பட்டு விட்டனர்.
இந்த உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு புதிதாக, வேறு இரு சட்டங்கள் கொண்டு வரப்படும் என்று பிரதமர் நஜீப் துன் ரசாக் 2011 செப்டம்பர் 15ஆம் தேதி அறிவித்தார்.[5] குற்றச் செயல் பாதுகாப்பு (சிறப்பு காவல் நடவடிக்கைகள்) சட்டம் 2012 எனும் பெயரில் புதிய சட்டம் உருவாக்கப்பட்டு, நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றம் கண்டது. 2012 ஜூன் 18இல் மாமன்னரின் சம்மதத்திற்காகத் தாக்கலும் செய்யப்பட்டது.[6] ஆனால், இது நாள் வரையில் அந்தப் புதியச் சட்டம் அமல்படுத்தப்படவில்லை. அதன் தொடர்பாக, மலேசிய உள்துறை அமைச்சரும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.[7]