மணிப்பிரவாள நடை
From Wikipedia, the free encyclopedia
மணிப்பிரவாள நடை என்பது தமிழோடு வடமொழியும் விரவி நடக்கும் தமிழ் உரைநடை. இது தமிழோடு 13 ஆம் நூற்றாண்டில் இணைந்தது. இரத்தினம்-பவளம் என்ற நேரடிப் பொருளுடைய மணிப்பிரவாளம் என்னும் சொல், தென்னிந்தியாவில் வடமொழி்யும், திராவிட மொழியொன்றும் கலந்து எழுதப்பட்ட ஒரு இலக்கிய நடையைக் குறிக்கும். மணியும், பவளமும் சேர்த்து உருவாக்கப்பட்ட மாலை போல இரண்டு மொழிகள் கலந்து உருவான இலக்கிய நடை என்பது இதன் பொருளாகும். மணிப்பிரவாள நடை என்பது தமிழோடு வடமொழியும் விரவி நடக்கும் தமிழ் உரைநடை.
சங்க காலத் தொகைநூல்களில் ஒன்று அகநானூறு. இது மூன்று பகுதியாகப் பகுக்கப்பட்டுள்ளது. அவற்றுள் ஒன்று ‘மணிமிடைப் பவளம்’. இப்பகுப்பில் உள்ள 180 பாடல்களும் நீலநிற மணியோடு செந்நிறப் பவளம் சேர்த்துத் தொடுத்தாற்போன்ற அமைதியினைக் கொண்டிருப்பதால் இதற்கு மணிமிடைப் பவளம் எனப் பெயர் சூட்டினர். இந்த ‘மணிமிடைப் பவளம்’ என்னும் சொல் நாளடைவில் ‘மணிப்பிரவாளம்’ என மருவி வழங்குகிறது.
பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் இயற்றிய திருவாய்மொழி நூலிலுள்ள பாடல்களுக்கு ஐந்து பேர் எழுதிய பழமையான ஈடு உரைகள் உள்ளன. திருவாய்மொழி ஈடு உரை மணிப்பிரவாள நடையில் அமைந்துள்ளது. திருவாய்மொழி வேதத்தின் சாரமாகவும், தத்துவக் களஞ்சியமாகவும் விளங்குகிறது. இவற்றை வெளிப்படுத்தும் வகையில் இதன் உரைகள் உள்ளன.
சோழப் பேரரசுக் காலத்திலும் அதன் பின்னரும், இன்றைய கேரளத்தையும் உள்ளடக்கியிருந்த தமிழ் நாட்டில் ஒருசில வட்டாரங்களில் வடமொழிச் செல்வாக்கு மிகுந்திருந்தது. வடமொழி உயர்வானதாகவும், இறைவனுடைய மொழியாகவும் கற்பிக்கப்பட்ட காலம் அது. தமிழில் வடமொழியைக் கலந்து எழுதுவது உயர் நடையாக அவ்வட்டாரங்களில் எண்ணப்பட்டது. ஆழ்வார்களுக்குப் பின்னர், அவர்களுடைய நூல்களுக்கு உரை எழுதிய இராமானுசருடைய ஆக்கங்கள் [மேற்கோள் தேவை] மணிப்பிரவாள நடையிலேயே அமைந்திருந்தன. சோழர்காலத்தில் வடமொழியின் வழி புகுந்த சமயக் கருத்துருக்களும், தமிழில் எழுந்த வடமொழித் தழுவல் நூல்களும் இத்தகைய போக்குக்கு வாய்ப்பாக அமைந்தன.
அன்றைய சேர நாட்டில், மணிப்பிரவாளத்தின் தாக்கம் கடுமையாக இருந்ததால் சேர நாட்டுத் தமிழ், இன்று மலையாளம் என அழைக்கப்படும் புதிய மொழியாக மாறிவிட்டது.