![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/4c/Dasa_Mahavidya.jpg/640px-Dasa_Mahavidya.jpg&w=640&q=50)
தச மகா வித்யா
பராசக்தியின் பத்துபெரும் சக்திகள் / From Wikipedia, the free encyclopedia
இந்து சமயத்தில் தச மகா வித்யா (Dasha-Mahavidya) என்பது ஆதிசக்தி (பார்வதி) தேவியின் பத்து உருவங்களை குறிக்கும். மகாவித்யா அல்லது தசமகாவித்யைகள் (பதின்பெருவித்தையர்) என்போர், பத்துத் தேவியரின் குழுமம் ஆகும். அளவற்ற கருணையும் எல்லையில்லாக் குரூரமும்[1] கொண்டவர்களாக, பெண்மையின் பெருந்தெய்வமாகிய பார்வதியின் அம்சங்களாக இவர்கள் விளங்குகின்றனர்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/4c/Dasa_Mahavidya.jpg/640px-Dasa_Mahavidya.jpg)
சின்னமஸ்தா, தூமாவதி, பகளாமுகி, மாதங்கி கமலாத்மிகா - பதின்பெருவித்தையர்
தச என்றால் பத்து வித்யா என்றால் அறிவு எனப் பொருள். இந்தப் பத்து தேவிகளும் பெண்மையின் சக்தியை தாய்மை முதல் கோபம் வரை அனைத்து வடிவிலும் காட்டுபவர்கள். தசமகா வித்யா தேவிகளின் வருகை சாக்த மார்க்கத்தில் பக்தி என்ற வழியை காட்டியது. உருவாவதும் பெண்ணால், அழிவதும் பெண்ணால் என நம்பும் சாக்தர்கள், இந்த பத்து தேவிகளையும் உளமார வழிபட்டனர். தேவி பாகவத புராணத்தின் கடைசி ஒன்பது அதிகாரங்களில் ஏழாவதான "சண்டி" சாக்தர்களின் "தேவி கீதை" ஆனது. இந்த பத்து தேவிகளில் சில தேவியர் தாந்திரிகர்களால் மட்டும் ஆராதனை செய்யப்படுவர்.
சாக்தத்தின் வரலாற்றில், பெருவித்தையரின் தோற்றமும் வளர்ச்சியும், கி.பி 17ஆம் நூற்றாண்டில் உச்சம் பெற்ற சாக்த பக்தி இயக்கத்தின் முக்கியமான மைல்கற்களாகும். கி.பி ஆறாம் நூற்றாண்டளவில் புராண காலத்தில் தோன்றிய இவ்வழிபாடு, முழுமுதற்கடவுளை, பெண்ணாகப் போற்றியதுடன், தேவி பாகவத புராணம் முதலான நூல்களில், முக்கியமான வழிபாடுகளில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சாக்தத்தின் மையநூலாக மாறிய "தேவி கீதை", இதே நூலின் ஏழாம் காண்டத்தின் இறுதி ஒன்பது அத்தியாயங்களே (31 முதல் 40 வரை) என்பது குறிப்பிடத்தக்கது. [2]