![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1a/StJohnsAshfield_StainedGlass_GoodShepherd_Face.jpg/640px-StJohnsAshfield_StainedGlass_GoodShepherd_Face.jpg&w=640&q=50)
பெரும் சமயப்பிளவு
From Wikipedia, the free encyclopedia
பெரும் சமயப்பிளவு (Great Schism) என்பது உரோமைப் பேரரசின் ஏற்கப்பட்ட திருச்சபையாக இருந்த கிறித்தவ சமூகம் கிரேக்க மொழி வழங்கிய கிழக்கு சபை என்றும் இலத்தீன் மொழி வழங்கிய மேற்கு சபை என்றும் இரு கிளைகளாக அறுதியாகப் பிரிந்துபோன நிகழ்வைக் குறிக்கின்றது[1]. இது சில வேளைகளில் "1054ஆம் ஆண்டு கீழை-மேலைப் பிளவு" (East–West Schism of 1054) என்றும் அறியப்படுகிறது. இவ்வாறு பிரிந்த இரு கிளைகளும் முறையே "கிழக்கு மரபுவழி திருச்சபை" (Eastern Orthodox Church) என்றும் "உரோமன் கத்தோலிக்க திருச்சபை" (Roman Catholic Church) என்றும் பெயர் பெற்றன.
உரோமை வழிபாட்டுமுறையை (Roman Catholic Rite) பின்பற்றாமல் கீழைத் திருச்சபை வழிபாட்டுமுறைகளை (Eastern Catholic Rites) பின்பற்றும் பல திருச்சபைகளும் கத்தோலிக்க திருச்சபையின் உள்ளடங்கும். இவை உரோமை ஆயராகிய போப்பாண்டவர் என்னும் திருத்தந்தையை அனைத்துலத் திருச்சபையின்மேல் முழு அதிகாரம் கொண்டவராக ஏற்கும் கிறித்தவ சபைகள் ஆகும்.