பாறை ஓவியம்
From Wikipedia, the free encyclopedia
பாறை ஓவியம்(Rock art) அல்லது பாறைச் செதுக்கல்கள்(Petroglyph)என்பது வரலாற்று-முற்கால மனிதர்களால் செதுக்கிச் செய்யப்பட்ட (அ) வரையப்பட்ட வரி-வடிவ ஓவியத்தைக் குறிக்கும்.[1] வரலாற்றுக்கு முற்பட்ட கால மக்கள் விட்டுச் சென்ற பொருள்கள் மற்றும் அவர்கள், தாங்கள் வாழ்ந்த இடங்களில் உள்ள பாறைகளிலும், குகைகளிலும் வரைந்து வைத்துள்ள ஓவியங்கள் ஆகியவை இவ்வகையுள் அடங்கும்.
உலகின் பல நாடுகளில் இத்தகைய பாறை ஓவியங்கள் கிடைத்துள்ளன. உதாரணமாகப் பிரான்சு, ஸ்பெயின், இத்தாலி, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைக் கூறலாம். இந்நாடுகளில் கிடைத்துள்ள வரலாற்றுக்கு முற்பட்ட பாறை ஓவியங்களைப் போலவே இந்தியாவிலும் பல இடங்களில் இப்பாறை ஓவியங்கள் கிடைத்துள்ளன. முதல் முதலாக உலகில் பாறை ஓவியமானது ஸ்பெயின் நாட்டில் அல்டமிரா என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல் இந்தியாவில் பீம்பேட்கா என்னுமிடத்திலும், தமிழகத்தில் மல்லபாடி என்னும் இடத்திலும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை ஐம்பது இடங்களுக்கு மேல் பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை அறிவதற்கு இத்தகு பாறை ஓவியங்கள் பெரிதும் பயன்படுகின்றன. இவைகளுள் பல்வேறு கண்டங்களையும் தாண்டிய சில பொதுவான பண்புகளுடன் விளங்குகின்றன என்பதை அறிஞர்கள் இந்த ஓவியங்களை வைத்து நிறுவியுள்ளனர்.[2][3]
பல்வேறு கண்டங்களிலும் கண்டறியப்பட்ட பாறை ஓவியங்களில், அவற்றின் தோற்றம், குறியீடுகள், அவை வெளிப்படுத்தும் சிந்தனைகள் ஆகியவை பொதுவானதாக அமைகின்றன."[4] இதன் மூலம் வரலாற்றுக்கு முற்பட்ட மக்கள் ஓவியங்கள் மூலம் தங்களுக்குள் கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தினர் என்பதை அறிய முடிகிறது.[5] ஜான் காலிங்வுட், ரொனால்டு மோரிஸ் ஆகியோர் இவ்வோவியங்கள் பற்றி ஆராய்ந்துள்ளனர்.[6]