பழைய பாபிலோனியப் பேரரசு
From Wikipedia, the free encyclopedia
பழைய பாபிலோனியப் பேரரசு, பண்டைய அண்மை கிழக்கின் மெசொப்பொத்தேமியாவின் தெற்குப் பகுதிகளை, பாபிலோன் நகரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு அமோரிட்டு மன்னர்கள் கிமு 2000 முதல் கிமு 1600 முடிய 400 ஆண்டுகள் ஆண்டனர். அமோரிட்டு மன்னர்களில் புகழ்பெற்றவரான மன்னர் அம்முராபி (கிமு 1792 – 1750) ஆட்சிக்காலத்தில், மெசொப்பொத்தேமியாவின் பிற இராச்சியங்களை வென்று பழைய பாபிலோனியப் பேரரசை விரிவாக்கினார். பேரரசர் அம்முராபியின் மறைவிற்குப் பின் 150 ஆண்டுகளில் பழைய பாபிலோனியப் பேரரசு மெல்ல மெல்ல வீழ்ச்சியடைத்துவங்கியது. கிமு 1595ல் இட்டைட்டுகளின் மன்னர் முர்சிலி என்பவர் பழைய பாபிலோனியப் பேரரசை கைப்பற்றினார்.[1]
பழைய பாபிலோனியப் பேரரசின் அம்முராபி ஆட்சிக் காலத்தில் சுமேரியம் மற்றும் அக்காதிய மொழிகளின் ஆப்பெழுத்துகளில் சமயம், கவிதை, அறிவியல் குறிப்புகள் தொகுக்கப்பட்டது. பழைய பாபிலோனியப் பேரரசர் அம்முராபியின் புகழ்பெற்ற சட்டத் தொகுப்புகள் குறித்தான கல்வெட்டு [2] ஒன்று பிரான்சு நாட்டின் இலூவா அருங்காட்சியகத்தில் உள்ளது.[3] மேலும் யூப்பிரடீஸ் மற்று டைகிரிஸ் ஆறுகளிலிருந்து கால்வாய்கள் வெட்டி வேளாண்மைக்கு நீர் ஆதாரங்களை பெருக்கினார். பாபிலோனில் பெரிய அரண்மனைகளை கட்டி, இரட்டை அடுக்குச் சுவர்களால் பாபிலோன் நகரத்தைச் சுற்றிலும் மதில் சுவர்களை எழுப்பினார்.