தொன்மம்
From Wikipedia, the free encyclopedia
தொன்மம் (myth) என்பது 'பழமை' என்று பொருள்படும். இலக்கியங்களில் பழமையான கருத்துகளைப் பயன்படுத்துவது அல்லது எடுத்தாள்வது தொன்மங்கள் ஆகும். பழமை என்பதை வடமொழியில் புராணம் என்று அழைக்கப்படுகிறது. தொன்மங்களைப் பற்றி ஆராயும் துறை தொன்மவியல் ஆகும். தொன்மை இலக்கியங்களுக்கு இராமாயணமும், மகாபாரதமும் சான்றுகளாக உள்ளன. தொல்காப்பியர் தொன்மங்கள் குறித்து 'தொன்மைதானே உரையொடு புணர்ந்த பழைமைமேற்றே' என்கிறார். எந்த ஒரு இலக்கியத்தில் தொன்மங்கள் அதிகமாக உள்ளதோ அது பழம்பெரும் இலக்கியம் எனக் கருதப்படுகிறது.
சில தொன்மக் கதைகள் உண்மைச் சம்பவங்கள் அல்லது வரலாற்று நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டவையாக அமைந்தாலும், காலப்போக்கில் அவை பல்வேறு திரிபுகளுக்கும் மாற்றங்களுக்கும் உட்பட்டு அந்த உண்மைச் சம்பவங்கள் நோக்கிய விடயத் தகவல்கள் அரிதாகி போவதுண்டு. மகாவலிபுரத்தில் இருந்ததாகக் கூறப்படும் ஏழு கோயில்கள் பற்றய கதைகளை இந்த வகைக்கு எடுத்துக்காட்டுகளாக அமைகின்றன.[1]
பல தொன்மக் கதைகள் மனிதர்களால் இலக்கிய ரசனைக்காகப் புனையப்பட்ட கதைகள். இவற்றில் தகவல் கூற்றுக்கள் இருந்தாலும் இவை மனிதர்களால் புனையப்பட்ட அல்லது கற்பனை செய்யப்பட்ட கதைகள். தமிழில் இளங்கோ அடிகளால் எழுதப்பட்ட சிலப்பதிகாரம் இவற்றுக்கு ஒரு எடுத்துக்காட்டு. வரலாற்று நிகழ்வுகளைப் பின்புலமாக வைத்து அண்மைக்காலத்தில் எழுதப்பட்ட பொன்னியின் செல்வனையும் சிலப்பதிகாரத்துடன் இந்த வகையில் ஒப்பிட்டு மேற்கூறிய கருத்தை மேலும் புரிந்துகொள்ளலாம்.
பொதுவாகத் தொன்மக் கதைகளில் மீவியற்கை நிகழ்வுகள் இருக்கும். மேலும் பல்வேறு கற்பனை உயிரினங்களும், சூழ்நிலைகளும், நிகழ்ச்சிகளும், செயல்களும் இருக்கும். இவற்றைத் தமிழ்ச் சூழலில் புராணங்கள் என்றும் குறிப்பிடுவர். இப்படியான கதைகளுக்கு விவிலியக் கதைகள் எடுத்துக்காட்டுக்கள் ஆகும்.