துளுவ மரபு
From Wikipedia, the free encyclopedia
துளுவ மரபு விஜயநகரப் பேரரசை ஆண்ட மூன்றாவது அரசமரபு ஆகும்.[1] இவர்கள் தொடக்கத்தில் கர்நாடகத்தின் கரையோரப் பகுதிகளில் குடித்தலைவர்களாக இருந்தனர். இம் மரபினர் ஆண்ட காலத்திலேயே விஜயநகரப் பேரரசு அதன் உச்சநிலையை எய்தியது. இவரது ஆட்சிக்காலம் கி.பி. 1491 முதல் 1570 ஆம் ஆண்டு வரை ஆகும்.[2]இக் காலப்பகுதியில் ஐந்து பேரரசர்கள் ஆண்டனர். இவர்களில் கிருஷ்ணதேவராயன் மிகவும் புகழ் பெற்றவர். இவர்களும் தமக்கு முன்னிருந்தவர்களைப் போலவே ஏறத்தாழத் தென்னிந்தியா முழுவதையுமே தமது ஆட்சிக்கு உட்படுத்தியிருந்தனர். கிருஷ்ண தேவ ராயர் காலத்திலும் அச்சுத ராயர் காலத்திலும் பேரரசு அதன் மிகப் பெரிய அளவை எட்டியது. இவர்கள் பேரரசின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்து ஆளுனர்கள், தலைவர்கள் ஆகியோருடனான தொடர்புகளை வலுப்படுத்தியதுடன், ஆங்காங்கே இருந்த புகழ் பெற்ற கோயில்களுக்கும் நன்கொடைகளை வழங்கினர்.
விசயநகரப் பேரரசு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
இக் காலத்திலே பேரரசு நிர்வாகம் தொடர்பில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டன. கிழக்கு மலைப்பகுதிகளைச் சேர்ந்த போர்மறவர்களான நாயக்கர்கள் பேரரசின் தமிழ்நாட்டுப் பகுதிகளில் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டனர். பாளையக்காரர் என அழைக்கப்பட்ட இவர்கள் பேரரசு சார்பில் தங்கள் பகுதிகளில் வரிகளை அறவிட்டனர். போர்க் காலங்களில் பேரரசுக்கு வேண்டிய வீரர்களையும், விலங்குகளையும் வழங்குவதும் இவர்கள் பணியாகும்.